ராஜாஜி முதலமைச்சராக இருந்த சமயம். படித்த ஹரிஜன் இளைஞர்களுக்கு உத்யோகம் பண்ணி வைப்பதில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.
வகுப்பு வாரியாகச் சர்க்கார் உத்தியோகங்களைக் கொடுக்க வேண்டுமென்ற விதி ஒன்று ஏற்பட்டிருக்கிறதல்லவா? இந்த விதியானது ஒவ்வொரு சாதியாகத் தாண்டி ஹரிஜனங்களிடம் வரும்போது பயனில்லாமல் போய்விடுவது வழக்கம்.
அதாவது அந்த உத்யோகத்துக்குத் தகுந்த ஹரிஜன் அபேட்சகர் இல்லை என்று காரணம் சொல்லிவிட்டு, மேல் சாதிக்காரர்களுக்குக் கொடுத்து விடுவது வழக்கம்.
ஒரு சமயம் போலீஸ் டெபுடி சூபரின்டெண்ட் வேலைக்கு ஹரிஜன் வகுப்பின் உரிமை வந்தது. வழக்கம்போல் ‘ஹரிஜனர் ஒருவரும் இல்லை’ என்று ஒரு சாதி இந்துவுக்கு வேலையைக் கொடுக்க சிபாரிசு வந்தது.
ராஜாஜி அதை ஒப்புக் கொள்ளாமல் அப்போது சபாநாயகராக இருந்த திரு. சிவசண்முகம் பிள்ளையையும் இன்னும் சில ஹரிஜன் தலைவர்களையும் கூப்பிட்டனுப்பி விஷயத்தைச் சொல்லி தகுதியான ஆளைக் கூட்டி வரும்படிச் சொன்னார்.
அவ்விதமே ஹரிஜனத் தலைவர்கள் பி.ஏ. பாஸ் செய்த ஒரு ஹரிஜன் இளைஞரைக் கொண்டு வந்தார்கள். அவரைக் காரியாலயத்திற்கு வரச்சொல்லி அங்கேயே பரீட்சை செய்யும்படி சொன்னார்.