சுழலில் மிதக்கும் தீபங்கள்/11

விக்கிமூலம் இலிருந்து

11

ம்மா, தமிழா?

அசரீரி கேட்டாற் போலிருக்கிறது. பின்புறமாகத் திரும்பிப் பார்க்கிறாள். பஞ்சுப் பிசிறுகளாக நரைத்த முடி; காலம் உழுதுவிட்ட எண்ணற்ற கீற்றுக்களைத் தாங்கும். முகம், காவிச் சேலை; ரவிக்கை... உயர்ந்த வடிவம் கூனிக் குறுகவில்லை.

‘தமிழாம்மா?’

‘ஆமாம், பாட்டி...!’

‘எங்கேந்து வந்திருக்கே...?’

‘... ஊரெல்லாம் மதுரைப் பக்கம். இப்ப டெல்லில இருந்து வந்திருக்கிறேன்...”

‘நீ மட்டுமா வந்திருக்கே?’

‘தெரிஞ்சவாகூட வந்தேன்...அவங்கள்ளாம் இங்க முன்னமே வந்துட்டுப் போயிட்டா. இன்னிக்கு ஏதோ பூஜைன்னு ஹரித்துவாரத்தில் தங்கியிருக்கா. நான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்...நீங்க...இங்க வந்திருக்கிறீங்களா பாட்டீ?...’

மூதாட்டி பல்லில்லா வாயைக் காட்டிச் சிரிக்கிறாள்.

‘நான் இங்க வந்து அம்பது வருஷம்கூட இருக்கும். ! வருஷமெல்லாம் யார் கண்டது? கங்கை ஒடறா. வாழ்க்கை ஒடுறது...”

‘ஓ...?’ வியப்புத் தாளவில்லை.

‘நீங்க...அத்தனை வருஷத்துக்கு முன்னன்னா... எப்படி...’

‘எப்படின்னா...நேந்துடுத்து. அப்ப இங்கே சாமிஜி, இருந்தார். இப்பவும் ஆசிரமம் மேலே பெரிசா கட்டி, ரூமெல்லாம் தங்கக் கட்டியிருக்கா. மிஷன் நடக்கிறது. ஆனா...ஆதியில சாமிஜி வந்த நாள்ல இதோ இந்தக் குடில்ல தான் இருந்தார்...?’

‘நீங்க உங்களுக்கு எந்த ஊரோ...?’

‘எப்போதோ ஊர்... மதுரைப் பக்கம்னுதான் பேரு. இப்ப இதுதான் சொந்தம்.’

கிரிஜா மலைத்துப் போய் பார்க்கிறாள். அவளையொத்த வயசுகூட இருக்காது, அத்தனை ஆண்டுகளுக்கு முன்னால், அப்படியானால்...வாழ்க்கை நீரோட்டத்தை விட்டு விலகி, துறவறம் என்று இங்கே வந்து ஒதுங்க இவளுக்கு உந்து சக்தியாக இருந்தது எது? திருமணமாகாமல் அக்காலத்தில் இருந்திருக்கலாகாது. திருமணம் முடிந்து கைம்பெண்ணாக இருந்தால்...

‘ஏம்மா? உன்னைப் பார்த்தால் களைப்பாகத் தெரியறது. எதானும் சாப்பிட்டயோ?...’

கிரிஜா புன்னகை செய்கிறாள். ‘இப்பத்தானே பழம் சாப்பிட்டேன்?’

‘...பழம்தனே? சாதம் எதானும் சாப்பிட்டியோன்னு கேட்டேன்...’

‘இங்க எதானும் ஒட்டல் இருக்கா?’

‘ஒட்டல் கிடக்கட்டும். நீ உள்ளே வா, ஒருபிடி மோரும் சாதமாச் சாப்பிடு!’

கிரிஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

கெளரியம்மாள் பயணத்தில் இசைந்து ஃபிளாஸ்கைத் திறந்து காபி கொடுத்தாள். அதுவே அதிகமாக இருந்தது. இப்போது முன்பின்னறியாத இடத்தில், முன்பின்னறியாத மூதாட்டி, ‘உள்ளே வா, ஒருபிடி சாப்பிடு’ என்று கூப்பிடுகிறாள்.

‘முன்பின் அறியாதவர்கள் உணவுப் பொருளோ தின்பண்டமோ கொடுத்தால் சாப்பிடாதீர்கள். கீழே ஏதேனும் பார்சல், அல்லது சிறு பெட்டி போன்ற பொருள் இருந்தால் எடுக்காதீர்கள்...!’ இதெல்லாம் அண்மைக்கால எச்சரிக்கைகள். ஆனால், முன்பின் நினைத்திராத விதமாக, அவள் ஒரு சீரான ஒடுக்கத்திலிருந்து விடுபட்டு இந்த முடிவு தெரிவிக்க கரையில் நிற்கையில் இப்படி ஒர் அநுபவ மலர் எடுத்துக் கொள்’ என்று வருகிறது.

‘ஏம்மா? இவயாரோ, எதுக்குப் போகணும்னு பார்க்கறியா? தயங்க வேண்டாம், வா... நானொன்னும் ‘பஞ்சபட்ச பரமான்னம்’ வச்சிருக்கல. ஒரு மோரும் சோறும் ஊறுகாயும் தான்...’

‘...நீங்க சாப்பிட்டாச்சா...?’

‘நான். ஆயிட்டுது. உள்ள வா...’

கிரிஜா வாயிற்படியில் கிழவி தரும் செம்பு நீரால் கால்கை கழுவிக் கொள்கிறாள். நீள் சதுர ஒற்றைக்குடில். மூலையில் அவள் பார்த்தறியா மண் அடுப்பு சிறு அலுமினியம் வட்டையில் உள்ள சோற்றை ஒரு தட்டில் போட்டு குடுவை ஒன்றிலிருந்து கெட்டியான மோரை ஊற்றுகிறாள். உப்பும் எலுமிச்சை ஊறுகாயும், அந்த உணவை அவளுக்கு இது காறும் அநுபவித்தறியா சுவையுள்ளதாகச் செய்கின்றன.

திருமணமானபின் இத்தனை ஆண்டுகளில் பிரசவித் திருந்த நாட்களில் தாயும், மாமியாரும் சாப்பாடு போட்டிருக்கிறார்கள், ஆனால் அதுகூட இத்தகைய பரிவாய் சுவைத்ததில்லை.

‘பாட்டி, நான் இவ்வளவு ருசியுள்ள சாப்பாடு சாப்பிட்ட தேயில்லை. இது என் நாற்பத்தாறு வயசின் சொல்ல முடியாத நிறைவு தரும் அநுபவம்...’

‘...சில நாளில் இப்படித்தான் யாருக்கேனும் சாப்பாடு போடணும்னு தோணும். தோணினால் கூப்பிடுவேன். இன்னிக்கு என்னமோ, இந்தப் படியில் உட்கார்ந்திருந்தேன், நீ மேலே ஏறி வந்தது தெரிஞ்சது. சந்தோஷமாயிருந்தது...’

‘பாட்டி, நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க, நான் படிச்சுப் பட்டம் வாங்கி, எட்டு, பத்து வருஷம் போல டீச்சர் உத்தியோகம் பண்ணினேன். கல்யாணம் பண்ணிட்டு பதினேழு வருஷமாச்சு டில்லியில்தான் இருக்கிறேன்... மேலெழுந்தவாரியா பார்த்தால் ஒரு குறைவும் இல்லை. ஆனா...நான் அப்ப ஒரு சின்ன ஊரில நானாக ஒரு வேலை செய்து கொண்டு இருந்தபோது இருக்கும் ஒரு நிறைவு இதில் இல்லை. உங்களைப் பார்க்கிறப்ப, நீங்களே, என்னை வந்து பசியோட இருக்கே, சாப்பிடுன்னு சொல்வது எப்படி இயற்கையாகத் தோணித்தோ, அப்படி இதையும் சொல்லலாம்னு எனக்குத் தோணுது...பாட்டி, நீங்க எப்படி இந்தக் கரையில் வந்து ஒதுங்கினர்கள்? நம்மில் ஒராண் இப்படி குடும்பம் வேண்டாம்னு வந்துட முடியும். குடும்பம்ங்கறது அவனை எப்பவுமே பாதிக்கறதில்ல. அவன் செளகரியத் துக்காகத்தான் மனைவி, பிள்ளை, குட்டி, எல்லாம். அவர் அவன் செளகரியத்துக்கு இல்லேன்னா, உதறிடலாம். ஆனா. பெண்ணால அப்படி உதற முடியுமா? சொல்லுங்கோ, பாட்டி!’

“நீ சொல்றது சரிதான். ஆனா....சில சந்தர்ப்பங்கள் அப்படி ஒதுக்கிடும்மா. இங்கெல்லாம் கங்கையில் தீப ஆரத்தி எடுப்பாளே, அப்ப நான் குழந்தையாய் வேடிக்கை பார்ப்பேன். நடு ஒட்டத்திலேருந்து எப்படியோ கரையில வந்து மோதும் ஒவ்வொரு தீபம் சில சமயம், நம்மைப் போலன்னு அந்தக் காலத்தில் நினைச்சிப்பேன். எங்க பிறந்த வீடு நாகப்பட்டினத்துங்கிட்ட ரொம்ப ஏழை. நாங்க ஏழெட்டுப் பேர். நான் அஞ்சாவது பொண். என்ன செய்வா? மதுரைப் பக்கத்திலேருந்து வந்து மூணாந்தாரம்னு கேட்டா, கல்யாணமாயிட்டது. அப்ப ஒண்ணும் உலகமே தெரியாது. இங்கே வந்தால் மூத்தாள் பிள்ளைகள் ரெண்டு பேருக்குக் கல்யாணமாயிருக்கு. பெரிய குடும்பம். எங்க வீட்டில வயிற்றுக்கில்லைன்னாலும் ஒரு சுதந்தரம் உண்டு. எம்பாட்டுக்கு ஆற்றில் குளத்தில் குளிப்பேன், கோயிலுக்குப் போவேன். யாரானும் ஏதானும் வேலை சொன்னால் செய்வேன். இங்கே வாடி, போடின்னு அந்த மூத்தாள் பிள்ளை அதட்டுவான்...ஒண்ணும் சொல்லிக்கிறாப்பல இல்ல. அதோட, அவன் நடத்தை வேற எனக்குப் பயமாகிவிட்டது. புருஷரோ, கல்யாணம்னு பண்ணிண்டாரே ஒழிய, பகல்ல சாப்பாடு போடறப்ப பார்த்தாதான் உண்டு. சித்தப்பிரமை புடிச்சாப்பல இருப்பார். இப்படி ஒரு ரெண்டு மாசம் தானிருக்கும். அப்ப இந்த சுவாமி எங்க ஊரில் வந்து தங்கி, காலை வேளையில, பஜணை பண்ணிண்டு போவார். மூணு நாளைக்குமேல தங்கமாட்டாராம் இவர். அந்த சுவாமி கிட்ட ரொம்ப ஈடுபாடா, பிட்சைக்குக் கூட்டிண்டு வந்தார். அப்பதான் இங்க இந்த ஆசிரமம் கட்டறா. சாமிஜி இவரிடம் அங்க வந்து சிலநாள் தங்குங்கோன்னு சொன்னார்னு நினைக்கிறேன். என்னைக் கூட்டிண்டுதான் வந்தார். அப்ப, இங்கே பாதையே கிடையாது. இப்படி ஹரித்துவாரத்தில் வண்டியை விட்டிறங்கி, சத்திரத்தில் மூட்டையை வச்சிட்டு ஸ்நானம் பண்ணப் போனோம். கையைப் புடிச்சுட்டு ஸ்நானம் பண்ணுங்கோன்னா. அப்பிசி மாசம் தீபாவளிக்கு முன்னே இருகரையும் பெருகும்.கங்கை கை இழுத்தது.

ஆனா, நான் நல்ல பலசாலி. இழுத்துட்டேன். எல்லாருமாகக் கரையில் என்னையும் சேர்த்து இழுத்தா. இந்தப் பக்கத்தில் கங்கையில் யாரானும் நழுவிட்டாக் கூடக் காப்பாற்ற மாட்டாளாம். ‘கங்கா மாதா வே ஜாதா?’ன்னு அதையே பாக்கியமாச் சொல்லிடுவா...அப்ப என்னமோ இழுத்துட்டா. அவருக்கு மூச்சே இல்லை... போயிட்டார்...

உலக இயக்கங்களே நின்று, சந்தடியற்ற ஒரு சூழலுக்குள் முன்பின் தொடர்பற்று, அவளும் அந்தக் கிழவியும் மட்டும் இருப்பதாகத் தோன்றுகிறது.

பாட்டி சட்டென்று மெளனமாகிறாள். அந்த மெளனத் தைக் கலைக்க கிரிஜாவுக்கு மனமில்லை.

‘இதோ இங்க...ஓம்...ஔஷதாலயான்னு போட்டிருக்கே, பார்த்தியா?’

‘ஆமாம்?’

‘அங்கே...அவருக்குப் பிறகுதான் பவானந்தான்னு வச்சிட்டு பெரிய சாமிஜி இந்த ஆசிரமத்தில சேர்த்தார். அப்ப இருபது இருபத்திரண்டு வயசுப்பிள்ளை. தேசத்துக்காக புரட்சிப் பண்ணக் கிளம்பி, இப்படி ஒதுங்கினதாச் சொல்வார். அப்ப எனக்கு இருபத்தஞ்சு வயசு, எங்களை இழுத்துப் போட்டவர் அவர்தான்.இவருக்கு மூச்சுப் பேச்சில்லைன்ன உடனே, அவர்தான் சிகிச்சை எல்லாம் செய்தார். அடுப்பில் சூடுகாட்டி ஒத்தடம் குடுத்து, மூலிகைப் புகைகாட்டி... ம், ஒண்ணும் பிரயோசனம் இல்லை. கங்கைக் கரையில் உடம்பைப் போட்டிருப்பாளா?...எல்லாம் ஆயிட்டது, ஊருக்கு அப்புறம்தான் காகிதம் போட்டார்கள். அந்த நிலையில் மூத்தாள் பிள்ளை புறப்பட்டு வந்தான். அந்த...பிரும்மசாரி ஆசிரமத்துப் பிள்ளையைப் பார்த்து அவன் பேசின. பேச்சு...சிவ, சிவா, சொல்லக்கூடாது. அத்தோட என்னை அழைச்சிண்டு போக அவன் வந்திருந்தான். நான், அவன் கண்ணில் படாமல் இந்தக் கரையில் ஒளிஞ்சு ஒளிஞ்சு நடந்து, காடாயிருந்த 'இந்த இடத்துக்கு, வந்தேன். பெரிய சாமிஜியிடம் சொல்லி

‘நீ போக வேண்டாம். இங்கே இரு...!’ன்னார்.

அவ்வளவுதான் இங்கேயே இருக்கேன்...’ சொல்வது போல் இவ்வளவு எளிதா என்று கிரிஜாவுக்குத்தோன்றுகிறது.

‘இப்ப இந்த ஆசிரமத்தில் யாரும் இல்லையா? உங்கள்...தப்பாக நினைக்காதீர்கள் பாட்டி, நீங்கள் ரொம்பவும் தைரியசாலின்னு தோணறது. ஒர் இளம் வயசுப் பெண், இங்கே துறவிகளுடன், பிரும்மசாரிகளுடன் தங்குவது எளிதாக இருக்காதே? பிரச்சனை இருந்திருக்குமே? - ஸ்வாமிக்கே கெட்டபேர் வருமே?...’

பாட்டி சிரிக்கிறாள்.

‘வெள்ளம் பெருகும்போது, பெரிய பெரிய மரங்களைக் கூட வேரோடு சாய்ச்சிட்டுப் போறது தான். அந்தப் பாவி மூத்தாள் பிள்ளை என்னை அழைச்சிட்டுப் போய் தலையைக் கோலம்பண்ணி,மூலையில் வச்சுக் குலைக்கணும்னு . நினைச்சான். ஏன்னா, அவன் இஷ்டத்துக்கு நான் வளையல இல்லையா?...ஊரில் போய் என்னென்ன கதை கட்டினானோ? அதெல்லாம் என் காதிலவிழல...பெரிய ஸ்வாமி... நீ உக்காந்து இருந்தியே அங்கதான் நான் முதல்ல பார்க்கிறப்ப உட்கார்ந்திருந்தார். பெண்களை இப்படிப் பண்றது மகாபாவம். அதுக்கு எந்த சாஸ்திரத்திலும் உண்மையாக ஒப்புதல் கிடை யாது. சாஸ்திரம்ன்னு இவங்க சொல்றதெல்லாம் மனுஷன் பண்ணினது தானேம் பார். இவா ஆசிரமத்தில் நிறைய, பெண்கள் வந்து இந்த மாதிரி சேவைபண்ணத் துறவறம் வாங்கிட்டிருக்கா. ஆனால் நாந்தான் முதல். இந்த பிரும்மசாரி சொன்னேனே? அவர் ஆயுர்வேதம் படிச்சவர். மூலிகைகள் கொண்டு வந்து மருந்தெல்லாம் தயாரிப்பார். நானும் அவரும் இங்க சுத்தி இருக்கும் கிராமமெல்லாம் கால் நடையாவே போவோம். அநுபவத்தில் பலதும் கத்துண்டேன்.காச்சல், சொறி, சிரங்கு, பிரசவம், கண்வலி, காதுவலின்னு பார்க்கவும் மருந்து போடவும், பழகினப்ப ஜன்மாவில இதுக்கு மேல என்ன வேணும்னு தோணும். ராத்திரில பனிக்குளிரில், கணப்பைப் போட்டுண்டு இப்படீ உட்கார்ந்திருப்பேன். அவரை பிஷக்பாபான்னும் என்னை மாதாஜின்னும் சொல்லுவா, ஆசிரமத்துக்குப் பணக்காரர் ஏழை எல்லாரும் வருவா. இப்பப் போல, காரிலும் பஸ்ஸிலும் வந்து பாத்துட்டுப் போறதுக்கில்லாம, தங்கி அந்த அமைதியை அனுபவிக்க வருவா...’

‘இப்ப அந்த பிஷக் பாபா இல்லையா?...’

‘காலமாயிட்டார். எட்டு வருஷமாயிட்டது. இப்ப எங்கிட்ட மருந்து கேட்க வரா ஒண்னுரெண்டு கிராமத்துக்காரா. அவர்போனப்புரம் ஒண்ணு ரெண்டு வருஷம் அதை இதை நினைவு படுத்திண்டு எப்பவானும் யாரானும் கேட்டாச் சொல்லுவேன். இப்பதா மூலைக்கு மூலை டாக்டர் போர்டு இருக்கே?...’

‘நீங்க அப்புறம் தெற்கே போகவேயில்லையா?’

"ஏன் போகாம? கன்யாகுமரி வரையிலும் நடந்தே யாத்திரை போயிருக்கிறோம், ஆனா ஒண்னு சொல்றேன்: எனக்கு இங்கே கிடைக்கும் நிம்மதி எங்கும் இல்லை. இங்கயும் எங்க காலம், அந்த யுகம் போயிட்டுது. இப்ப சாமிஜி பேரில மிஷன்னு பெரிய அமைப்பா வச்சு நடத்தறா மேல பாரு பெரிய கட்டிடம், பிரார்த்தனை மண்டபம் எல்லாம் இருக்கு, இவா மிஷன் ஆஸ்பத்திரி கூட உள்ள டவுன்ல கட்டியிருக்கா. பெரிய பெரிய பணக்காரா, அக்கரையில் குடீர் கட்டி வச்சிருக்கா, அவாளுக்கு அப்பப்ப வந்து தங்க...எல்லாம் மாறிப்போயிட்டது. ஆனா...இப்பத்து நடைமுறைக்கும். அப்போதைய லட்சியத்துக்கும் சம்பந்தமே இல்லைம்மா...!’

கிரிஜா கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருக்கிறாள். ‘தனது பிரச்னையைப் பற்றி இந்த மூதாட்டியிடம் சொன்னால்...’

‘பாட்டி, படிச்சுப் பட்டம் வாங்கின எங்களை எல்லாம் விட நீங்கள் அறிவாளியாகப் பேசுகிறீர்கள்... நீங்க உங்களுக்கு இந்த அமைதிக்கரையில் கூட மனிதர் வந்து குலைச்சிட்டுப் போறதை நேராகப் பார்க்கிறீர்கள். இப்பத்து வீடுகள்: குடும்பங்கள் எப்படியிருக்குமோன்னு நினைச்சுப் பார்க்கறேளா?’

‘நினைச்சுப் பார்க்கிறதென்ன? லோகமே பணத்துல இருக்கு. அதனால, பெண்ணாகப் பிறந்தவள் அதிகம் கஷ்டப் படுகிறாள். இவளுக்குப் பணமும் சம்பாதிக்கணும்னு கடமை வந்து சுமக்கிறாள். இல்லாட்டா, அத்தனையும் சதையாக மாப்பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணிண்டு காரில போறா. இங்க ‘குடீரு’க்கு வர பணக்காராளைப் பார்ப்பேன். அப்பதோணும். ஏண்டி, பிறந்த வீட்டிலேந்து அது கொண்டு வரல. இது கொண்டு வரலேன்னு அடிச்சுத் துரத்தும் கொடுமை இன்னும் இருக்கு. கங்கையில் விழுந்து சாகிறதும் கூடத்தான் இத்தனை வருஷத்தில பார்க்காமலில்லை...’

‘பாட்டி, நான்...உங்ககிட்ட மனம் திறந்து சொல்றேன். இங்க நான் ஆறுதலுக்காக வந்தேன். குடும்பத்தில் இரண்டு பெண்ணும் ஒரு ஆணும் குழந்தைகள். பணம் வசதி இருக்கு. ஆனா, காலமேந்து ராவரை, உடம்பு உழைப்பு. மெஷின் போல. ஒரு பக்கம் கட்டுக்களே இல்லாமல் ஒடப்பார்க்கும். தலைமுறை. இன்னொரு பக்கம், ஸ்டவ் திரியை நனைத்து உலர்த்து என்று சொல்லும் மாமியார். இந்த இரண்டுக்கும் கட்டுப்பட்டுப் பூச்சியாகப் போயாச்சு. ஆனால், இப்ப, இந்தக் கூட்டில் மனுஷத் தன்மையே இல்லைன்னு புரியறது. என்னால் இருக்கமுடியல. நான் பதினைந்து வருஷம் படிச்சு, பத்து வருஷம் கற்பிச்சு, அறிவாளியாக என்னை மலர்த்திக் கொண்டவள். கல்யாணம் என்ற அமைப்புக்குள், கீழ்ப்படியும் ஒன்றைத்தவிர வேறு எதற்கும் உனக்கு இடமில்லை என்பது சரியா?...நான் எப்படி அங்கு இருக்க? நீங்கள் சொன்னிர்கள், ஒன்றும் தெரியாத நான், என் அநுபவத்தில் எத்தனையோ கற்றுக் கொண்டேன்னு. அன்றாட சமையல், சுத்திகரிப்பில் கூடக் காலத்துக்கும் வசதிக்கும் ஏற்ற புதிய வழக்கங்கள் வரக் கூடாது. பழைய மரபை சுமந்து கொண்டே இருக்க வேணும்னா, என்ன செய்ய? இந்த மாதிரி ஒரு பிரச்னையை நீங்கள் நினைத்திருப்பீர்களா?” வெயிலின் கடுமை மாற மேகம் மூடிக்கொள்கிறது.

பாட்டி அரைக்கண் மூடி அநுபவிப்பவளைப்போல அவள் பேச்சுக்களைச் செவியுறுகிறாள்.

“உன் பேரென்னவோம்மா, ஒண்னு சொல்றேன். பிரச்னை, பிரச்னைன்னு நினைச்சிண்டே இருந்தா குழம் பிண்டே இருக்கணும். சுவாமிஜி சொல்வார். பொறுக்கலன்னா எழும்பிப் போராடு; தெளிந்துகொள், இரண்டிலொன்னு முடிவு செய்துடனும், அந்த முடிவைப்பத்திப் பிறகு அலட்டிக்கப்படாது. அப்படி, பிரச்னை பிரச்னைன்னு, சிக்கலிலிருந்து விடுபட நமக்குச் சக்தி இருக்குன்னு தைரியமில்லாமலேயே உசிரை மாய்த்துக்கறதே, ரொம்பக் கோழைத் தனம் பார். அன்னிக்கு படிப்பும் அநுபவமும் இல்லாத எனக்கு திடீர்னு அவர் செத்ததும் பிரச்னைதான் வந்தது. அப்புறமா கேள்விப்பட்டு என் அத்திம்பேர் கூட வந்திருந்தார். சிறிசு, நீ வாழ்நாள் முழுக்க ஊரார் அவதூறுக்கு இப்படி இருப்பியா? வந்துடுன்னார். எல்லாத்துக்கும், அந்தப் பிரும்மசாரிதான் காரணம்ன்னார். அவரை எனக்கு அப்ப உள்ளும் புறமுமாத் தெரியாதுதான், அனாலும் ஒரு முடிவு. என்ன வந்தாலும் ஊருக்குப் போறதில்லை. பிறந்தகத்து இல்லாமை, புக்கத்துக் கொடுமை, எல்லாத்துக்கும் மேல புருஷனை இவளே கங்கையில் அமுக்கிக் கொன்னுட்டான்னு சொல்லப்போகும் நாக்குகள்...இதெல்லாம் தீர்மானமாகக் கிடுத்து...திரும்பிப் போறதாக முடிவு செஞ்சிருந்தாலும், ஏன் வந்தோம்னு பின்னால் நொந்துகொள்வதாக இருக்கக் கூடாதுங்கறதுதான் என் நிச்சயம்...’


வானம் கறுத்துக்கொண்டு வந்து தொங்குகிறது, கங்கையின் பரப்பும் மக்கள் கலகலப்பும் மங்கிப்போகின்றன. தான் உயிரை மாய்த்துக் கொள்ள வந்ததாக இவர் எண்ணி விட்டாரோ என்று நினைத்து அவள் உள்ளுர நானமடைகிறாள்.

‘மழை கொட்டும்போல இருக்கு. இங்க தங்கப்போறி யாம்மா...’

‘ஒ. இல்லை பாட்டி. நான் திரும்பிப் போகணும். ஒர் ஆறுதலுக்காக, தெளிவு தேட, பரபரப்பில் இருந்து விடுபட்டு வந்தேன். உங்களை மறக்கவே மாட்டேன். எனக்கு வெறும் வயிற்றுக்கு மட்டும் அன்னமிடல. கவி பாரதி சொன்னார். ஞான உணவும் தோள் வலியும்னு அது ரெண்டும் தான் நமக்கு தைரியம். நம்பிக்கை...அந்த ரெண்டும் எனக்கு உங்க்கிட்ட வந்ததில கிடைச்சிடும்னு கிளம்பிப் போறேன்...”

‘போயிட்டு வாம்மா...நம்மாலானது ஒண்ணுமில்லேன்னு நினைக்காம. நம்மாலும் ஆகும்னு நினைச்சிண்டு போ! அவளுக்குத் தெளிவு துலங்குகிறது.

பிரச்னை பிரச்னை என்று சிக்கிக் கொண்டதாக, யாரோ வந்து கரையேற்றவேண்டும், விடுவிக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? மாமியார், அவளும் ஒரு பெண். இந்த மடிக்கூடு வெறும் அர்த்தமற்ற போலிச் சடங்குகள். உள்ளும் புறமுமான மனிதத்துவத்தை விரட்டிவிடும் கொடுமைகள் என்று எடுத்துச் சொல்லேன். அந்த வீட்டில் உனக்கும் ஒரு உரிமை உண்டு. அவன் சொல்லியதால் மாற்றம் காண வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? உன் குழந்தைகளின் நல்ல மன வளர்ச்சியில் உனக்கு உரிமையும் பொறுப்பும் உண்டு... பின்னர்...

விடுவிடென்று இறங்குகிறாள், அவள் ஒரு முச்சக்கர ஊர்தியில் அமரும்போது மழை ‘சோ’ என்று கொட்டுகிறது. திரும்பி வருவதற்குக் கரையோர டெம்போக்களில் ஒன்றிலேயே அமர்ந்துவிடுகிறாள். மெழுகுச்சீலைத் திரையைத் தொங்கவிட்டிருக்கிறான். அப்படியும் மழைச்சாறல் உள்ளே வந்து சேலையை நனைக்கிறது. எட்டுப்பேர் நெருக்கி உட்காரக்கூடிய இருக்கைகளில், பதின்மூன்று பேர்களுக்கு இடம் கொடுக்க மழையின் நடுவே ஊர்தியை நிறுத்துகிறான்...மருந்துத் தொழிற்சாலை நிறுத்தத்தில், ஒர் இளம் பெண்ணும் அவள் கணவனும் ஏறுகிறார்கள். புதுமணத் தம்பதியாகத் தோன்றுகிறது. நெற்றிச் சிந்துாரமும், விரல் நுனிகளின் சாயமும், அரக்குச் சிவப்பில் சரிகை நூலால் பூவேலை செய்த சேலையுமாக, கதகதப்பாக இவளுடன் நெருங்கிக் கொள்ள, கணவன் அவளோடு ஒன்றிக்கொள்ள அமருகிறார்கள்.

பெண்ணின் கைப்பையோடு, அவன் வைத்துக்கொண்டிருக்கும் தினசரியும் இணைந்து அவள்மீது படுகின்றன. இந்தி தினத்தாள்தான். ஆனால், கொட்டை எழுத்துத் தலைப்பு அவள் கண்களைக் கவருகிறது.

விமானத்தில் தீப்பிடித்தது...! வியாழக்கிழமை பம்பாயில் இருந்து திருவனந்தபுரம் கிளம்பிய விமானம்...இதற்குமேல் மடிப்பில் தெரியவில்லை. கிரிஜாவினால் இதற்குமேல் எதுவும் சிந்திக்க முடியவில்லை. ‘அந்தப் பத்திரிகையை இப்படிக் கொடு...முழுசும் பார்த்துவிட்டுத் தருவேன்’ என்று சொல்ல நா ஒட்டங்கள் யாவும் அந்த எழுத்துக்களின் பின்னணியில் அழிந்துபோகின்றன. விமானத்தில் தீப்பிடித்து...

பம்பாய் சென்று அங்கிருந்துதானே திருவனந்தபுரம் செல்வதாகச் சொன்னான்!

ஓ! அவள் கிளம்பி வந்ததற்கு இப்படி ஒரு தண்டனையா? அங்கு குழந்தைகள்... ஆம். குழந்தைகளுக்கு அவளை விட்டால் யார் துணை?... ஏறத்தாழப் பதினெட்டு வருஷங்கள் அவனின் நிழலில் அண்டி அவனுக்குப் பணி விடைகள் செய்து, மூன்று மக்களைப் பெற்றிருக்கிறாள் இந்தப் பந்தம், அகன்று விடுமோ? ஏதேனும் ஆய்விடுமோ? ஆய்விட்டால்...? ஹரிகிபைரி வரும் வரையில் கிரிஜா விக்கித்துப்போய் உட்கார்ந்து இருக்கிறாள்.

மழைவிட்டு வானம் வெளிவாங்கி இருக்கிறது. முதலில் கிரிஜா இங்கே இறங்குவதாகத்தானிருந்தாள். ஆனால் இப்போது. அந்தத் தம்பதி இறங்குமிடத்தில் இறங்குவதாகத் தீர்மானிக்கிறாள்.

ரயில் நிலையத்துக்கருகில் அவர்கள் இறங்குகின்றனர். இறங்கும்போது, அந்தப் பத்திரிகையை அவள் அவர்களிடம் கேட்குமுன், அவன் கைப்பெட்டியை எடுக்கையில் அது விழுகிறது. கீழே விழுந்த அதைக் கிரிஜா சட்டென்று எடுக்கிறாள்.

‘...கொஞ்சம் பார்த்துவிட்டுத் தரட்டுமா?...’ அவர்கள் பதிலுக்குக் காத்திராமல் அவசரமாகப் பிரிக்கிறாள். விமானப் படம் போட்டிருக்கிறது. ஐந்து பேருக்கு லேசான காயம். விமானம் பழுதுற்றதை உடனே கண்ணுற்றுவிட்டதால் பம்பாய் விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் பெற்றது...

திருப்பிக் கொடுத்து விடுகிறாள். ‘தாங்க்யூ ...!’

‘நீங்கள் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் பஹன்ஜி!’

‘வேண்டாம்...ஒரு சிறு செய்தி பார்க்கவேண்டி இருந்தது. பார்த்துவிட்டேன்...’ தண்ணிர்பட்டுக் கரையும் ஒவியங் களாய் மனப்பரப்பில் இறுக்கங்கள் கலைகின்றன…

சிறிது நேரத்தில் அவள் ஆடிப் போனாள். இவளா தைரியசாலி? அன்பு, காதல், தெய்வீகம் என்றெல்லாம் கதைகளில், சினிமாக்களில் எப்படி மிகைப்படுத்துகிறார்கள்? அப்படி அவள் சாமுவை விட்டுப்பிரிய முடியாதபடி ஒன்றி விட்டாளா?... நிச்சயமாக இல்லை. திருமணம் செய்த நாளிலிருந்து, அவளுடைய சுதந்திரத்தன்மையைப் பிரித்த தனால், கூட்டுக்குள் அடைபட்டு, ஆளுமையை ஆணி வைத்து இறுக்கினாற்போல் குறுகிப் போயிருக்கிறாள். இதில் குழந்தைகளின் நிராதரவான தன்மைதான் இரக்கத்தினால் அவளை ஒட்ட வைக்கிறது... குழந்தைகளே இல்லை என்றால், அவள் விடுபட்ட பறவை...சாமுவின் மீது உள்ள கரிசனம் அல்லது அக்கறை, குழந்தைகளை முன்னிட்டதுதான்...

ஒருவாறு தேறியவளாக ஒரு தேநீர் கடையின் பக்கம் நின்று, தேநீர் கேட்கிறாள்.

இதெல்லாம், அவள் செய்யக்கூடாத செயல்கள். எளிய யாத்ரீகரும், கூலிக்காரர்களும் குழுமும் தேநீர்க்கடை. பெரிய வட்டையில் பூரி பொரித்து வைத்திருக்கிறான். மண் அடுப்பில் கணகணக்கும் ‘கொய்லா’ கரியின் சுவாலையில் இரும்புச் சட்டியில் பால்கோவாவுக்கான பால் காய்கிறது எண்ணெயும் மிளகாயும் மிதக்கும் கிழங்கு சப்ஜியை ஒரு வட்டையில் இருந்து எடுத்து பூரியில் ஊற்றி யாருக்கோ அழுக்குப்படிந்த துணி உடுத்திய ஆள்கொண்டு போகிறான். மாமியாருக்குத் தெரிந்தால்...?

‘சாய், மாதாஜி...!’

மாதாஜி என்ற சொல்லுக்குரியவள் தான்தான் என்று புரிந்ததும் சட்டென்று பார்க்கிறாள். புதிய மண் கிண்ணத் தில் ஆவி பறக்கும் தேநீரை நீட்டுகிறான்.

‘கித்னா..?’

‘ஸாட்... பைசே’...அறுபது பைசாவைக் கொடுத்துவிட்டு தேநீரை அங்கேயே ருசித்துப் பருகுகிறாள். நிறையச் சர்க்கரை போட்டிருக்கிறான்.

பாலங்கடந்து அப்பால் கங்கைக் கரையின் பக்கம் அமர்ந்து மாலை முழுவதையும் கழிக்கிறாள். மாலை மங்கி தீபங்கள் சுடர்பொரிய கங்கைக்கரை விழாக்கோலம் கொள்கிறது. எழுந்து வருகிறாள்.

‘...அடிம்மா? இன்னிக்கு முழுக்க எங்க போயிட்டே?... காலம வந்தாளே, அவா வாதபூஜை பண்ணா. பிட்சை பண்ணா. வகை வகையா எல்லாம் பண்ணிச் செலவழிச்சிருக்கா, எங்கிட்ட வந்து காலம உங்ககிட்ட நின்னுண்டிருந்தாளே ஒரு பொண்ணு, அவ எங்கேன்னு கேட்டா... தெரியுமே இங்கதா எங்ககூட தாஇருக்கான்னேன். ‘தெரியுமா உங்களுக்கு அவளை...!ன்னு கேட்டதுக்கு, ரொம்பப் பழக்கம் அசப்பில அவளாட்டம் இருந்தது. மறுபடி பார்த்துப் பேசறதுக்குள்ள போயிட்டா. பூஜையிலேயும் காணலை... ன்னா... இன்னொன்று கேட்டியாம்மா? இவருக்கு, அவா ஏதோ துரத்து உறவாம். பேசிண்டே இருக்கச்சே பூதப் பாடின்னு சொன்னா. யாரு, எவா, எங்க அம்மான் வழிப் பாட்டனார் ஊராச்சேன்னு விசாரிச்சால், அவர், இவருடைய மாமாவுக்கு மச்சினனின் அத்தானாம். உறவு கிடக்கட்டும், ஒட்டி ஒட்டிண்டு துளி கருவமில்லாமல் அவளே பந்தி விசாரிச்சு, அவ்வளவு நேர்த்தியா எல்லாம் பண்ணினா இப்பத்தான் காரில் போறா. ராத்திரி யாரோ வெளிநாட்டுக்கார்ன் வரானாம். டில்லில இருக்கணுமாம்...

கெளரி அம்மாள் வாயோயாமல் ரோஜாமாமியைப் புகழுகிறாள். வயிரங்களும் பட்டும். காரும், மினுக்கான பேச்சும், சிரிப்பும் எப்படி எல்லோாையும் மயங்க வைக்கின்றன?

‘நாளைக்குக் காலம கொண்டு பேரும் புறப்பட்டு அமெரிக்கா போறோம். பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயம் பண்றோம், இல்லாட்டா, நம்ம வீட்டில வந்து தங்கிட்டுப் போகணும்னு கூப்பிடுவேன். யார்யாரெல்லாமோ வந்து தங்கறான்னு ரொம்பச் சொன்னா. இன்னொருதரம் வரச்சே கண்டிப்பா இங்க வந்து தங்கணுமின்னு அட்ரஸ் எழுதிக் குடுத்திருக்கா...’

கிரிஜா அப்படியே நின்று கேட்கிறாள். ஒரு வகையில் நிம்மதியாக இருக்கிறது. காலை ஃபிளைட்டில் ஊருக்குப் போய் விடுவார்கள். இவள் ஊர் திரும்பும்போது, அவளும் வந்து ஏதும் கலவரம் நிகழாது...

பொழுது விடிந்ததும் காலை நீராடலும் உணவும் முடித்துக் கொள்கிறார்கள் கெளரியம்மாள் ஈரச்சேலையைக் கூட உலர்த்திக் கொள்கிறாள் கடையில் சென்று பேரம் பேசி, கங்கைச் செம்புகள். ஸிந்துாரம், அப்பளக் குழவி என்று அவள் வாங்கிக் கொள்ள கிரிஜா உதவி செய்கிறாள்.

‘பெற்ற பெண்ணைப்போல் பழகிட்டே. ஏதோ போன ஜன்மாவிலே விட்டகுறை தொட்ட குறை போல இருக்கு. நீயும் எங்க கூட வரத்தானே போறே?’

‘ஆமாம், மாமி, அஞ்சு நாள் லீவெடுத்தாச்சு ...’ என்று கிரிஜா சிரிக்கிறாள். ஒரு தெம்பும் தெளிவும் வந்ததற்கு இப்போது கூடியிருக்கிறது. இரவு ரயில் வண்டியிலேறி, விடியும் போது டில்லி சென்றால், வெளிச்சத்தில் வீடு செல்வது வசதி யாக இருக்கும் என்று கிரிஜா சொல்கிறாள்.

திரும்பும் பயணத்தில் கெளரி அம்மாளும் கிழவரும் உறங்கிவிடுவதால், பேச்சுக்கே இடமில்லை.