பக்கம்:சிந்தனை மேடை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

 பறந்து கொண்டு தவிப்போடு போய்ப் பார்ப்பதற்கு ஏராளமான திரைப்பட அரங்குகளும் இருப்பதாக நினைத்துக் கொண்டு மிதப்போடு திரிகிற மாணவ வாழ்க்கை எந்த விதத்தில் இந்த நாட்டுக்குப் பயன்தர முடியும்? இன்றும் நாளையும், என்றும் இந்தப் பாரத புண்ணிய பூமியும் இதைத் தொழுது போற்றுகிற மற்ற நாடுகளும் பெருமை யோடு நோக்கத் தக்க மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். நம்முடைய மாணவ வாழ்க்கையின் நோக்கங்கள் முற்போக்காக வளரலாம். ஆனால் ஒரு போக்கு மில்லாமல் தளர்ந்து சுருங்கிப் போய்விடக் கூடாது. ஓர் இந்திய மாணவனுடைய படிப்பு அவனுக்குச் சோறு போடுவதற்கு மட்டுமே பயன்பட்டு நின்றுவிடக் கூடியதன்று; அந்தப் படிப்பில்தான் அவனுடைய ஆன்மீக மலர்ச்சியே விளைய வேண்டும் என்ற அடிப்படையில்தான் பாரதத்தின் புராதனமான கல்வி முறையும், மாணவ வாழ்க்கையும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மனத்தின் ஒளி

சராசரி இந்திய மாணவனுடைய பள்ளிப் படிப்புக்கோ, கல்லூரிப் படிப்புக்கோ, இன்றைய நோக்கம் 'கிளார்க்' வேலையாக இருக்கலாம். ஆனால் நலிந்து போயிருக்கும் இந்த நாட்டின் இன்றைய சூழ்நிலையில் இலட்சிய மாணவர்களும் பலர் தோன்றி வளர வேண்டும். ஒவ்வொரு துறையிலும் நாளைய பாரதத்துக்கு வல்லுநர்கள் தேவை. அந்த வல்லுநர்கள் இன்றைய மாணவ வாழ்க்கையிலிருந்துதான் நாளைய பாரதத்துக்குக் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைக்க வேண்டுமானால் குழந்தைக்குத் தாய்ப்பால் வலிமை தருவதைப் போல் கல்வியோடு சேர்த்து நமது பண்பாடுகளையும், அவற்றின் மேல் நம்பிக்கை வளரும் வழிகளையும், கற்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களுடைய மாணவ வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள் என அவர்களுக்கே அதன் உரிமையைத் தருவதைக் காட்டிலும் இந்த நாட்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/75&oldid=1554813" இலிருந்து மீள்விக்கப்பட்டது