பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வும் பிற்காலத் தெழுந்த உலாக்களுள் குறிப்பிடத்தக்கனவாகும்.

அந்தாதி

ஒரு பாடலின் ஈற்றிலுள்ள எழுத்தோ, அசையோ சீரோ, அடியோ அடுத்த பாடற்கண் முதலாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை எனப்படும். நூல் முழுவதும் இத்தொடை அமையின் அஃது அந்தாதி எனும் நூல் வகையைச் சாரும்.

அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி எனக் கூறுகிறது யாப்பருங்கலக் காரிகை. இந்நூலை வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறையால் பாடுவர்.

காரைக் காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதியும், கம்பர் பாடிய சரசுவதி அந்தாதியும், சடகோபர் அந்தாதியும் சோழர் காலத்தில் எழுந்தவை: சைவ எல்லப்ப நாவலரின் திருவருணை அந்தாதி, பிள்ளைப் பெருமாளையங்காரின் திருவரங்கத்து அந்தாதி, அருணகிரி அந்தாதி முதலியன நாயக்கர் காலத்தைச் சாந்தவை. கலம்பகம், உலா, தூது முதலியவற்றின் பாடல்களும் அந்தாதித் தொடையில் அமைவதுண்டு.

தூது

அகப்பொருள் இலக்கியங்களுள் துாது எனும் சிற்றிலக்கியம் குறிப்பிடத்தக்கதாகும். பிரிவுத் துயரால் வருந்தும் தலைவி, தலைவனிடம் அன்னம், குயில், கிளி, மேகம், பாங்கி, குயில், நாகணவாய்ப்புள், நெஞ்சு, தென்றல், வண்டு முதலாய பொருள்களுள் ஒன்றனைத் தூதனுப்புவதாகப் பாடப்படும் நூல் துாது எனப்படும். முறையே தூது எனப்படும். இது தூதுப் பொருளையும் தலைவனையும், செல்லும் நெறியையும், தலைவனைக் காணும் நிலையையும் சிறப்பித்துக் கூறி இறுதியில் தலைவனின் மாலையை வாங்கி வருமாறு பாடுதல் தூதின் இயல்பாகும்.