மலர்தோறும் மலர்தோறும் சென்று வண்டு
மணம்சுவைத்துத் தேன்சுவைத்துச் சேர்த்து வைக்கும்; பலவாகும் சமயமெலாம் நீபு குந்து
பைந்தமிழை நுழைபுலத்தாற் சேர்த்து வைத்தாய், புலர்காலை எழுகதிரோன் உலகுக் கெல்லாம்
பொதுவெனல்போல் வெவ்வேறு சமய மாந்தர் பலர்சேர்ந்து வாழ்த்துகின்றார்; சமய மில்லேன்
பாமாலை கொண்டுன்னை வாழ்த்து கின்றேன்.
பல்வேறு சமயத்தார், சமயம் இல்லார்,
பன்மொழிகள் கற்றுணர்ந்தார், ஒன்று கற்றார், பல்வேறு கட்சியினர், கட்சி சாரார்,
பலபிளவுச் சாதியினர், சாதி வேண்டார், எல்லாரும் ஒன்றாகிப் போற்று கின்றார்;
இன்றமிழால் ஒன்றுபடும் காட்சி கண்டேன்; நல்லோர்தாம் பன்மையினாற் சிதறுண் ணாமல்
நலமிக்க ஒருமையினால் தமிழைக் காப்பர்.
குடியரசு நின்போலும் சான்றோர் தம்மைக்
கொண்டாடி விருதளிக்க மறந்த தேனும் முடியரசன் நின்பெருமை பாடு கின்றேன்
மூவேந்தர் மரபறிந்து வாழ்த்து கின்றேன்; மடியின்றிச் சுறுசுறுப்பால் தமிழைத் தேடும்
மாண்பால்அஞ் சிறைத்தும்பி என்று நின்னைப் படிஅழைக்க விருதளித்தேன்; என்பாற் செல்வம்
பாடலொன்றே அதையளித்தேன் பரிசி லாக.
மடி - சோம்பல், படி - பூமி