பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

தயாராக இருப்பதாக அவன் அவளுக்கு விடுத்த கடிதத்தில் குறிக்கவில்லையா ? — அதற்குத்தான் இப்போது பூவழகி விடை சொல்லுகின்றாளோ ? ‘என் காதலுக்கு ‘ஒ. கே.’ சொல்லத்தான் இப்போது இவள் நேரிலேயே பிரசன்னம் ஆகியிருக்க வேண்டும் !’ என்றும் அவன் அழுத்தமாக முடிவு கட்டினான்.

“பூவழகி, சாயா சாப்பிடுகிறாயா ?”

“சாப்பிடுகிறேனுங்க !”

“பேஷ் !...”

அவளுக்குச் சாயா வாங்கிக்கொடுத்தான்.

“உங்களுக்கு ?”

“நான் சற்றுமுன்தான் சாப்பிட்டேன் !”

“இல்லை, நீங்க என் முன்னாலே ஒரு ட்ரிப் சாப்பிடுங்க !”

“ஆல் ரைட் !”

அவன் பில்லுக்குப் பணம் கொடுக்கப் போனாஅன்.

அவள் சொன்னாள்: “உங்க சாயாவுக்கு நான் கொடுப்பேன். என் சாயாவுக்கு நீங்க கொடுக்கலாம் ! பரஸ்பரம் நம் அன்பான மனசுக்கு ஒர் ஆறுதல் பாகப்பிரிவினை ஆகுமுங்க !... ” அவன் அதற்கும் சம்மதித்தான்.

திரும்பினார்கள்.

“பின் சீட்டில் ஏறிக்க பூவழகி !”

“என்னை மன்னிச்சிடுங்க. நான் இனி உங்க பங்களாவுக்கு வரமுடியாது. அது உசிதமுமில்லேங்க. உங்ககிட்டே ஒரு நிமிஷம் பேசி, நீங்க எனக்காக எவ்வளவோ உடம்பாலவும் மனசாலவும் பாடுபட்டீங்களே — பாடுபடவும் நினைச்சீங்களே, அதுக்கெல்லாம் உங்களுக்கு என்னோட இதயபூர்வமான நன்றியை அள்ளி அள்ளிக் கொடுத்துட்டுப்போயிடணும்னுதான் வந்தேன். ஏழையாவும் தாய் தந்தை இல்லாத அனாதையாவும் பிறந்துவிட்ட இந்த அபலைப் பொண்ணுகிட்ட இருப்பதெல்லாம் இந்த அன்பும் நன்றி மனமும்தானுங்களே !... நான் உங்ககிட்டேயிருந்து விடை வாங்கிக்கிறேன் !... அனாதையாய்ப் பிறந்த எனக்கு அனாதை இல்லம் — அண்ணல் அனாதை இல்லம் — நிழல் தந்திடுச்சு. இடை நடுவிலே, ஒரு பாவிப்பயல் என்னோட கற்பைச் சூறையாட நினைச்சு ஏமாந்திட்டான். அந்தச் சமயம் என்னைக் காப்பாத்தினான் செங்கோடன். இதாலல்லாம்