சோழர் வரலாறு/பராந்தகன் மரபினர்

விக்கிமூலம் இலிருந்து

4. பராந்தகன் மரபினர்
(கி.பி. 953-985)

பராந்தகன் மரபினர் : திருவாலங்காட்டுச் செப்பேடு லீடன் பட்டயம் முதலியவற்றை ஆராய்கையில், பராந்தகனுக்குப் பிறகும் அவன் காலத்தும் அரசுரிமை தாங்கியவர் இவர் என்பது தெரிகிறது.

கண்டராதித்தன் (கி.பி. 949-957): இவனுக்கு முற்பட்ட வனான இராசாதித்தன் விட்டமையால், பராந்தகர்க்குப் பிறகு கண்டராதித்தனே பட்டம் பெற்றான். இவன் தந்தை இருந்தபொழுதே தன் பெயரால் கல்வெட்டுகளை

முதற் பராந்தகன்
கோக்கிழான் அடிகள்
மகன்
இராசாதித்தன்
கண்டராதித்தன் சேரன் மகள்
மகன்
அரிஞ்சயன்
உத்தம சோழன்
(மதுராந்தகன்)
(வைதும்பர் மகளான
கலியாணியை
மணந்தவன்)
இரண்டாம் பராந்தகன்
(சுந்தர சோழன்)
இரண்டாம் ஆதித்தன்
(பார்த்திவேந்திர கரிகாலன்)
முதலாம் இராசராசன்
(கி.பி. 985)

வெளியிட்டவன். இவன் இராசகேசரி யாவன். இவன் மழவரையன் மகளார் செம்பியன் மாதேவியார் என்பாரை மணந்து, உத்தமசோழன் (மதுராந்தகன்) என்பவனைப்பெற்றான். இவன் காவிரியின் வடகரையில் 'கண்டராதித்த சதுர்வேதி மங்கலம்’ எனத் தன்பெயரால் ஊர் உண்டாக்கி இறந்தனன். இவன் படிமத்தைக் கோனேரிராசபுரத்துக் கோவிலுட் காணலாம். இவனுக்கு வீர நாராயணி என்றொரு மனைவியும் இருந்தனள். இச்சோழ மன்னன் இராட்டிரகூட மன்னன் வென்ற தொண்டை நாட்டைக் கைப்பற்ற முனைந்தான், ஒரளவு வெற்றியும் பெற்றான் என்று நினைக்க இடமுண்டு.[1]

கண்டராதித்தன் சிறந்த சிவபக்தன். இவனே சிதம்பரத்தைப் புகழ்ந்து திருவிசைப்பா பாடியவனாதல் வேண்டும். அப்பாவில் பராந்தகன் பாண்டி நாட்டையும் ஈழத்தையும் வென்று, பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இவன் அந்தப்பாவில் தன்னைக் கோழிவேந்தன் (உறையூர் வேந்தன்), தஞ்சைக் கோன் என்று கூறியுள்ளான். இவனை மேற்கு எழுந்தருளிய தேவர் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள திருமழபாடி என்னும் தலத்திற்கு மேற்கே ஒரு கல்தொலைவில் உள்ள ‘கண்டராதித்த சதுர்வேதிமங்கலம்’ என்ற நகரம் இவன் அமைத்ததே ஆகும்.

இவன் மனைவியாரான செம்பியன் மாதேவியார் சிறந்த சைவப் பெண்மணியார். இவர் இராசராசன் ஆட்சியிலும் உயிரோடு இருந்தவர்; தம் கணவன், மகன், மருமகளார் பலர், சுந்தர சோழன் முதலிய எல்லாராலும் பாராட்டப்பட்டவர். இவர் தேவாரப்பாடல் பெற்றுள்ள பல கோவில்களைக் கற்கோவில்கள் ஆக்கினர்; பல கோவில்கட்கு ஆடை அணிகள் வெள்ளிப் பாத்திரங்கள் முதலியன அளித்தனர்; பல கோவில்கட்கு நிலங்களைத் தானமாக விட்டனர். இங்ஙனம் இவர் செய்துள்ள திருப்பணிகள் மிகப் பலவாகும். அவற்றை இறுதிப் பகுதியில் ‘சோழர் கோவிற் பணிகள்’ என்னும் தலைப்பில் விளக்கமாகக் காணலாம்.

அரிஞ்சயன் : (கி.பி. 956 - 957) இவன் கண்டராதித்தன் தம்பி. கண்டராதித்தன் மகன் மதுராந்தகன் குழந்தையாக இருந்ததால், இவன் தன் தமையனுக்குப் பின் பட்டம் பெற்றான்; ஆயின், சுருங்கிய ஆட்சி பெற்று மறைந்தவன். இவன் ‘பரகேசரி’ என்னும் பட்டம் பெற்றவன். இவனுக்கு மனைவியர் பலர் உண்டு. அவருள் வீமன் குந்தவ்வையார், கோதைப் பிராட்டியார் என்னும் இருவரும் நீண்டகாலம் இருந்து பல திருப்பணிகள் செய்தனர். வீமன் குந்தவ்வையார் கீழைச் சாளுக்கிய வீமன் மகள் என்பர் சிலர், அவ்வம்மையார் ‘அரையன் ஆதித்தன் வீமன்’  என்னும் சிற்றரசன் மகள் என்பர் சிலர். அரிஞ்சயன் மேல் பாடிக்கு அருகில் உள்ள ஆற்றுார் என்னும் இடத்தில் இறந்தான்.[2] அந்த இடத்தில் முதல் இராசராசன், இறந்த தன் முன்னோர்க்குப் பள்ளிப்படை (கோவில்) கட்டியதாகக் கல்வெட்டொன்று கூறுகிறது.[3] அரிஞ்சயன் தொண்டை நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுப் போர் நிகழ்த்தி, உயிர் இழந்தனன் போலும்! ‘இவன் பகைவராகிய காட்டுக்குத் தீயை ஒத்தவன்’ என்று திருவாலங்காட்டுப் பட்டயம் பகர்தலால், இவன் போர்த்திறம் பெற்றவன் என்பது தெளிவாகிறது. இவன் ஒரே ஆண்டு அரசனாக இருந்து இறந்தான்.

இரண்டாம் பராந்தகன் (கி.பி.956-973) இவன் அரிஞ்சயன் மகன்; வைதும்பராயன் மகளான கல்யாணிக்குப் பிறந்தவன்; இராசகேசரி என்னும் பட்டம் உடையவன்; இவன் ‘மதுரை கொண்ட இராசகேசரி’ எனப்பட்டான். இவ்வரசன் பட்டம் பெற்றதும், பாண்டிய நாட்டைத் தனித்து ஆட்சி செய்துவந்த வீரபாண்டியனை எதிர்த்தான். சேவூர் என்னும் இடத்திற் கடும்போர் நடந்தது. செந்நீர் ஆறாக ஓடியது; பல யானைகள் மடிந்தன. பராந்தகன் மகனான இரண்டாம் ஆதித்தன் சிறுவனாக இருந்தும், போரில் கலந்து கொண்டான், வீர பாண்டியனுடன் விளையாடினான்’ என்று லீடன் பட்டயம் பகர்கின்றது.[4] இச்செயலை மிகைப்படுத்தியே திருவாலங்காட்டுச் செப்பேடு ‘வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்தன்’ என்று கூறியுள்ளது.

சேவூரில் நடந்த போருக்குப் பின், சோழர் பக்கல் நின்று போரிட்ட கொடும்பாளுர்ச்சிற்றரசனான ‘பராந்தக சிறிய வேளார்’ என்பவன் பாண்டிய நாட்டிற்குள் படையொடு சென்று பாண்டியனைக் காட்டிற்குள் புகுமாறு விரட்டினான்; வீர பாண்டியற்குத் துணையாக வந்த இலங்கைப் படைகளைத் தாங்கிக் கொண்டே இலங்கைக்கும் சென்றான்; அங்குக் கடும்போர் செய்து, போர்க்களத்தில் கி.பி.959 -இல் மடிந்தான்.[5]

வீரபாண்டியனை எதிர்த்த ஆதித்த கரிகாலனுக்கு உறுதுணையாக இருந்தவர் சிலர். அவருள் முற்கூறிய வேளார். ஒருவன். ‘பூதி விக்கிரம கேசரி’ என்னும் கொடும்பாளுர்ச் சிற்றரசன் மற்றொருவன். இவனுக்குக் கற்றளிப் பிராட்டியார், வரகுணப் பெருமானார் என்னும் மனைவியர் இருந்தனர். இவருள் பின்னவர் சோழ அரசன் (ஆதித்தன்?) உடன் பிறந்தவர் என்று கல்வெட்டு கூறுகிறது. இவனுடைய மக்கள் இருவர்க்கும் ‘பராந்தகன், ஆதித்தவர்மன்’ என்னும் பெயர்கள் இடம்பெற்றிருந்ததையும் நோக்க, சோழ மன்னர் கொடும்பாளுர்ச் சிற்றரசரிடம் பெண் கொடுத்தும் கொண்டும் வந்தனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கமாதல் காண்க.

விக்கிரமகேசரி பல்லவனை வென்றதாகக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அச்சொல் வல்லபன் (இராட்டிரகூட அரசன்) என்றிருத்தல் வேண்டும் என்று அறிஞர் அறைவர். இரண்டாம் பராந்தகன் தன் தந்தை, பெரிய தாதை இவர்களைப் பின்பற்றித் தொண்டை நாட்டைக் கைப்படுத்த முயன்றான். அம்முயற்சியில் விக்கிரம கேசரியும் ஈடுபட்டானாதல் வேண்டும். இப்பராந்தகன், ஆதித்த கரிகாலன் இவர்தம் கல்வெட்டுகள் தொண்டை நாட்டில் மிகுதியாகக் கிடைப்பதையும், மூன்றாம் கிருஷ்ணனுடைய கல்வெட்டுகள் குறைந்து காணப் படலையும் நோக்க, முதற்பராந்தகன் இறுதிக் காலத்தில் இழந்த தொண்டை மண்டலம் அவன் மரபினனது இடைவிடா முயற்சியால் சிறிது சிறிதாகக் கைப்பற்றப் பட்டு வந்தது என்பது தெரிகிறது. இரண்டாம் பராந்தகன் காஞ்சிபுரத்தில் தனக்கென்று இருந்த அரண்மனையில் இறந்தான்; அதனால் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவர்’ எனப்பட்டான்.[6] இதனால், இவன் காலத்தில் முழுத் தொண்டை நாடும் சோழர் ஆட்சிக்கும் மீண்டும் உட்பட்டுவிட்டது என்பது விளங்குகிறதன்றோ?

இரண்டாம் பராந்தகன் மனைவியருள் குறிப்பிடத் தக்கவர் இருவர். இவரே தம் கணவனுடன் உடன் கட்டை ஏறினர்.[7] இவர் இறந்தபொழுது இராசராசன் குழந்தையாக இருந்தான் என்று திருக்கோவலூரில் உள்ள முதல் இராராசன் கல்வெட்டு உணர்த்துகிறது. மற்றவர் சேரன் மாதேவியார்.[குறிப்பு 1] வானவன் மாதேவியார்க்கு ஆதித்த கரிகாலன், இராசராசன், குந்தவ்வை என்னும் மக்கள் மூவர் இருந்தனர். இப்பேரரசன் காலத்திற்றான் வீரசோழியம் என்னும் இலக்கண நூல் புத்தமித்திரர் என்பவராற் செய்யப்பட்டது.[8] குந்தவ்வையார் பெற்றோர் படிமங்களைத் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலில் எழுந்தருளுவித்தார்.[9]

ஆதித்த கரிகாலன் (கி.பி. 956 - 969) . இவன் பட்டம் பெற்று ஆண்டிலன்; ஆயினும் தந்தைக்கு உதவியாக இருந்தனன்; தன் பெயரால் பல கல்வெட்டுகள் வெளிவரக் காரணமாக இருந்தான். இரண்டாம் பராந்தகன் உயிருடன் இருந்த பொழுதே இவன் கொலை செய்யப்பட்டான்.[10] இதற்குக் காரணம் என்ன? கண்டராதித்தன் மகனான உத்தம சோழன் (மதுராந்தகன்) தக்க வயதடையாததால், சிற்றப்பனான அரிஞ்சயன் நாட்டை ஆண்டான், பின்னர் அவன் மகனான இரண்டாம் பராந்தகன் அரசன் ஆனான்; அவனுக்குப் பின் பெரு வீரனான ஆதித்த கரிகாலனே பட்டம் பெறவேண்டியவன். அவன் பட்டம் பெற்றால் தான் தன் வாழ்நாளில் அரசனாதல் இயலாதென்பதை அறிந்த மதுராந்தகன் (ஆதித்தனது சிற்றப்பன்) ஏதோ ஒரு சூழ்ச்சியால் ஆதித்தனைக் கொலை செய்துவிட்டான். சோணாட்டுக் குடிகள் ஆதித்தனுக்குத் தம்பியான அருள்மொழித் தேவனையே (இராசராசனை) பட்டம் ஏற்குமாறு தூண்டினர். ஆயினும் இராசராசன் அதற்கு இணங்கவில்லை; தன் சிற்றப்புனான மதுராந்தகனுக்கு நாடாள விருப்பம் இருந்ததை அறிந்தான்; அவனை அரசனாக்கினான்; தான் அவனுக்கு அடங்கிய இளவரசனாக இருந்து நாட்டைக் கவனித்து வந்தான். அவனுக்குப் பின் தானே அரசனாவன் என்னும் ஒப்பந்தப்படி இச் செயலைச் செய்தான்.[11]

உத்தம சோழன் - மதுராந்தகன் (கிபி 969 - 986) இவன் கண்டராதித்தன் மகன். இவன் அரசு கட்டில் ஏறுவதற்கு முன்பே காஞ்சி வரையுள்ள தொண்டைமண்டலம் சோழர் ஆட்சிக்குட்பட்டு விட்டது. ஆதித்த கரிகாலனுடைய கல்வெட்டுகள் உத்தரமேரூர், காஞ்சிபுரம், தக்கோலம், திருவண்ணாமலை முதலிய இடங்களில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள் நிலவிற்பனை, அறச்செயல், திருப்பணி, அரசியல் தொடர்பானவையாகக் காணக்கிடத்தலின், ஆதித்தன் காலத்திலேயே தொண்டை நாட்டில் அமைதி உண்டாகி விட்டதென்பதை அறியலாம். உத்தம சோழன் காலத்திய கல்வெட்டுகள் பலவும் செப்பேடு ஒரு தொகுதியும் கிடைத்துள்ளன. இவன் பரகேசரி என்னும் பட்டம் பெற்றவன். பெயரின்றிப் ‘பரகேசரி’ என்பது மட்டுமே கொண்டுள்ள கல்வெட்டுகள் எல்லாம் இவன் காலத்தனவே என்று சில சான்றுகள் கொண்டு ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். சோழர் நாணயங்களில் இவன் காலத்ததுவே பழைமையானதாகும். இவன் காலத்ததான பொற்காசு ஒன்று கிடைத்தது. அதன் இருபுறங்களும் ஒருபடித்தாகவே இருக்கின்றன, நடுவில் ஒரு புலி உட்கார்ந்து கொண்டு வலப்புறமுள்ள மீனை நோக்குகிறது. நாணயத்தைச் சுற்றிலும் உத்தம சோழன் பெயர் கிரந்த எழுத்துகளிற் குறிக்கப்பட்டுள்ளது. அப்பொற்காசு 40 முதல் 60 குன்றிமணி நிறையுள்ளது என்று நாணய ஆராய்ச்சியாளரான எலியட் கூறியுள்ளார்.[12]

அரசியல் : உத்தம சோழன் செப்பேட்டுத் தொகுதியால் அக்கால அரசியல் முறையை நன்கு உணரலாம். இதன் விளக்கம் ‘அரசியல்’ என்னும் பகுதியிற் கூறப்படும். இவன் காலத்தில் அம்பலவன் பழுவூர் நக்கன் என்னும் உயர்தர அலுவலாளன் சோழர் அரசியலில் வேலை பார்த்து வந்தான். அவன் குவலாளம் (கோலார்) என்ற ஊரினன்; கொள்ளிடக்கரையில் அப்பராற் பாடப்பெற்ற விசைய மங்கலம் பழங்கோவிலைக் கற்கொண்டு புதுப்பித்தவன். உத்தம சோழன் அவனுக்கு ‘விக்கிரம சோழ மாராயர்’ என்னும் பட்டத்தை அளித்துப் பெருமைப் படுத்தினான். இதனால் உத்தம சோழன் ‘விக்கிரம சோழன்’ என்னும் பெயரையும் பெற்றிருந்தான் என்பது வெளியாகிறது. அவ்வலுவலாளன் இராசராசன் காலத்தில் ‘மும்முடிச் சோழமாராயர்’ எனவும் ‘இராசராசப் பல்லவராயன்’ எனவும் அழைக்கப்பட்டான்.

உத்தம சோழன் குடும்பம் : உத்தமசோழற்கு மனைவியர் பலர் இருந்தனர். அருள் - பட்டன் தான தொங்கி, மழபாடி தென்னவன் மாதேவியார், வானவன் மாதேவியார், விழுப்பரையன் மகளார், பழுவேட்ட ரையன் மகளார் குறிப்பிடத் தக்கவர். இவ்வைவரும் சேர்ந்து தம் மாமியாரான செம்பியன் மாதேவியாரது பிறந்த நாள் பூசனைக்காகச் செம்பியன்மாதேவி (கிராமம்)யில் உள்ள அவையாரிடம் காசு கொடுத்தனர் என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[13] பட்டத்து அரசியார் ‘உரத்தாயன் சொரப்பையார்’ (கன்னடப் பெயர்) என்பவர். இவர் ‘அக்கமாதேவியார்’ என்றும் ‘மூத்த நம் பிராட்டியார்’ என்றும் அழைக்கப்பட்டனர். இவர் ‘திரிபுவன[14]மகாதேவியார்’ என்றும் பெயர் பெற்றனர். உத்தம சோழன் மனைவியர் அனைவரும் தம் மாமியார் பெயர் கொண்ட (தஞ்சாவூர்க் கோட்டத்தில் உள்ள) ‘செம்பியன்மாதேவி’ என்னும் சிற்றூரில் உள்ள சிவன் கோவிலுக்கே பல தானங்களைச் செய்தனர். இதனால் இம்மரபினர் அப்பெருமாட்டியிடம் வைத்திருந்த அன்பு நன்கு விளங்குகிறதன்றோ? உத்தம சோழனுக்கு எத்துணை மக்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை. ஆயின், மதுராந்தகன் கண்டராதித்தர் என்பவன் ஒருவன் பெயர் மட்டும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அவன் இராசராசன் ஆட்சியில் கோவில்களை மேற்பார்த்து வந்தான்.

இதுகாறும் கூறப்பெற்ற அரசர் அனைவரும் மிகச் சுருங்கிய கால எல்லைக்குள் இருந்து மறைந்தோர் ஆவர். இவர்களது பெரு முயற்சியால் தொண்டை மண்டலம் மீட்கப்பட்டது. பாண்டிய நாடு சோழராட்சியிற் சேர்க்கப்படவில்லை. இவர்கட்குப் பின்வந்த இராசராச சோழனே சோழப் பேரரசன் விரிவாக்கி நிலை பெறச் செய்த பேரரசன் ஆவன்.


  1. K.A.N. Sastry’s ‘Cholas’, Vol. I. pp. 182-184
  2. 537. of 1920.
  3. S.I.I. Vol.3. No. 17.
  4. E.I. Vol. 22. Ieyden Grant, 25, 28.
  5. 302 of 1908.
  6. S.I.I. Vol. 3, p.288.
  7. 236 of 1902.
  8. ‘Cholas’ Vol. 190. 4.
  9. S.I.I. Vol II, Part 1, pp.69-70.
  10. 577 of 1920.
  11. Thiruvalangadu plates, S.I.I. iii.
  12. Vide his ‘coins of Southern India’ p. 132, No. 151.
  13. 494 of 1925.
  14. புதுவையை அடுத்துள்ள ‘திரிபுவனை’ என்னும் சிற்றூர் பழங்காலத்தில் இவர் பெயராற்றான் அமைக்கப்பட்டதென்று கூறுவர்.
  1. இவர் பெயரால் அமைந்த ஊரே இன்று ‘சேர்மாதேவி’ என வழங்குகிறது.