எனது நாடக வாழ்க்கை/தூத்துக்குடி கலவரம்

விக்கிமூலம் இலிருந்து
தூத்துக்குடி கலவரம்

திருநெல்வேலி நாடகம் முடிந்து தூத்துக்குடி சென்றோம். அந்த நாளில் அநேகமாக எல்லா ஊர்களிலும் ரெளடிகள் உண்டு. அவர்கள் நாடகக்காரர்களிடம் எப்போதும் தங்கள் கைவரி சையைக் காண்பிப்பது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஊரிலும் சில ரெளடிகளுக்கு ஒசி டிக்கட் கொடுத்துச் சரிப்படுத்துவதுண்டு. தூத்துக்குடியில் இப்படிப்பட்ட ரெளடிகள் அந்த நாளில் அதிகம். நாங்கள் துரத்துக்குடியில் நாடகம் துவக்கிய அன்று, சில் ரெளடிகள் கம்பெனி வீட்டுக்கு வந்தார்கள். நானும் மானேஜர் ஐயரும் திண்ணையில் உட்கார்ந்திருந்தோம். ஐயரிடம் அவர்கள் ஏதோ பேசினார்கள். எந்தக் கம்பெனி வந்தாலும் தாங்கள்தாம் நுழைவு வாயிலில் இருப்பது வழக்கமென்றும், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை தரவேண்டுமென்றும் சொன்னார்கள். ஐயர், வந்தவர்களிடம் பொறுமையோடு பேசவில்லை. பேச்சு வளர்ந்து தகராறு முற்றியது. வந்த ரெளடிகள், ‘இன்று நாடகம் நடப்பதைப் பார்க்கலாம்’ என்று போய் விட்டார்கள். ஐயர் கோபத்தோடு, “இது என்ன வெள்ளரிக்காய் பட்டணமா?” என்று முணுமுணுத்தார். கொட்டகையோ மூக்கமேஸ்திரியின் பழைய ஓலைக் கொட்டகை. துரத்துக்குடியைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். எனவே, இரவு நாடகத்தின் போது என்ன நேருமோவென்று நான் பயந்து கொண்டே இருந்தேன்.

முதல் நாடகம் அபிமன்யு சுந்தரி. நாடகம் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. வெளிவாயிலுக்குச் சுமார் ஐம்பதடி தூரத்தில்தான் அரங்கின் நுழைவாயில். கொட்டகை முழுதும் மெல்லிய மூங்கிற் பாயினால் போடப் பெற்றிருந்தது. நான் மூங்கிற் பாயின் இடுக்குகளின் வழியாகவெளிவாயிலைப்பார்த்துக் கொண்டிருந்தேன். குழப்பம் ஏதாவது நடக்கிறதாவென அடிக்கடி விசாரித்துக் கொண்டே நின்றேன். சுந்தரி, அபிமன்யுவுக்கு ஒலை எழுதியனுப்பும் காட்சியும் முடிந்தது. அடுத்து அபிமன்யு வரவேண்டிய காட்சி. நான் வேட்டைப் பாட்டுப் பாடியபடி மேடைக்கு வந்தேன். அவ்வளவுதான்.

வாயிலில் குழப்பம்

வெளியே வாயிலில் ஏதோ குழப்பம் நடப்பது நன்றாகத் தெரிந்தது. டிக்கட் விற்குமிடத்திலும் ஒரு கூட்டம் பாய்ந்தது. அடி, குத்து, வெட்டு என்றெல்லாம் பெருஞ் சத்தம் கேட்டது. பலத்த அடிதடி நடப்பதை மேடையிலிருந்தே பார்த்தேன் . எனக்குக் குலை நடுக்கம் எடுத்தது. இதில் பெரிய ஆச்சரியம் என்ன வென்றால், உள்ளேயிருந்த சபையோர் அப்படியொரு கலவரம் நடப்பதாகவே கருதியதாகத் தெரியவில்லை. அமைதியாக நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எவரும் இந்தக் குழப்பத்தைப்பற்றிச் சட்டை செய்யவில்லை. ஆணகள்தான் அப்படியென்றால் பெண்களும் வீராங்கனைகளாக இருந்தார்கள். யாரும் எழுந்திருக்கவில்லை. கலவரத்தைக் கவனிக்கவுமில்லை. எதுவும் நடவாததுபோல் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு இது புதிய அனுபவமாயிருந்தது. கூச்சலும், குழப்பமும் அதிகரித்தது. கலவரம் உச்சநிலையடைந்தது, முன் திரை விடப்பெற்றது. நான் அச்சத்தோடு பின்புறம் நின்று கொண்டிருந்தேன். ஆர்மோனியம் கிருஷ்ணமூர்த்திஐயர் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆர்மோனியம், மிருதங்கம் எல்லாம் அரங்கின் வலதுபுறத்தில்தான் இருக்கும். முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு ரசிகர்க்கு, நாடகத்தை நிறுத்தியது பிடிக்கவில்லை போலிருக்கிறது. நாடகத்தைத் தொடர்ந்து நடத்தும்படி சத்தம் போட்டார். அத்தோடு நிற்கவில்லை. தான் உட்கார்ந்திருந்த நாற்காலியைத் தூக்கி, ஆர்மோனியக்காரரின் மேல் வீசினார். நல்ல வேளையாக நாற்காலி அவர்மேல் விழவில்லை. முன் வீதித் திரையைக் கிழித்துக் கொண்டு, உள்ளே நின்ற என் காலடியில் வந்து வீழ்ந்தது.

அரங்கிற்குள் ஆர்ப்பாட்டம்

இந்தச் சமயத்தில் பெருங்கூச்சலுடன் மேடைக்குள் ஒரு கூட்டம் நுழைந்தது. “இதோ இருக்கிருண்டா” என்றது ஒரு குரல். அடுத்த வினாடி யாருக்கோ பலமான- அடி விழுந்தது. ஐம்பது அறுபது பேர் தாக்கினார்கள் ஒருவரை. அடிப்பட்டவர் “நானில்லே, நானில்லே’ என்று கதறினார். அந்தக்குரல் எங்கள் சமையல் மாதவன் நாயருடைய குரல். நாங்கள் பதறினோம்; சிறுவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கி ஒருபுறமாக நின்றோம். வந்தவர்களில் ஒருவர், “டே, பையன்களை யாரும் ஒண்ணாம் செய்யாதீங்கடா” என்று தெய்வம்போல் குரல் கொடுத்தார். இதற்குள் சமையல் மாதவன் நாயரை உற்றுப் பார்த்த ஒருவர் “அடே, இவனில்லேடா, குத்தினவன் வேறு ஆளு. வாங்க வெளியே போய்ப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். அனைவரும் அவரைப்பின் தொடர்ந்தார்கள்.

சில நிமிடங்களில் கொட்டகையின் பின்புறமிருந்த மூங்கிற் பாயைக் கிழித்துக் கொண்டு ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. அவர் எங்கள் சிற்றப்பா. கலவரக்காரர்கள் அவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அவரைப் போய் விடுமாறு வேண்டிக்கொண்டோம். அவர், தான் அருகிலேயே இருப்பதாகவும், பயப்படாதிருக்குமாறும் கூறிவிட்டுமறைந்தார். இதற்குள் நாடகத்தை நடத்துமாறு சபையோர் சத்தம் போட்டார்கள். இத்தனைக்குழப்பத்திலும் நாடகம் பார்க்க வந்தவர்களில் யாரும் கலவரம் அடையவில்லை. இதுபோன்ற கலவரங்கள் பலவற்றை அவர்கள் அடிக்கடி பார்த்து பழகிவிட்டதுதான் காரணமென்று பின்னால் தெரிந்தது. நாடகம் தொடர்ந்து நடை பெற்று முடிந்தது. கம்பெனி வீடு அருகிலேயே இருந்தது. என்றாலும் எங்களுக்கு வெளியே போகப் பயமாகவே இருந்தது. பெரியவர்கள் சிலர் தைரியமாக நின்று அழைத்துச் சென்றார்கள். மறு நாள் பொழுது புலர்ந்த பிறகு, சிற்றப்பாவின் மூலம் நடந்த விபரங்கள் தெரிய வந்தன.

கண்டகோடரியும் கத்தி வீச்சும்

மானேஜர் ஐயரிடம் பயமுறுத்தி விட்டுப் போன ரெளடிகள் இரவு நன்றாகக் குடித்துவிட்டு, ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். சிற்றப்பாவும் மற்றொருவரும் வெளிவாயிலில் அவர்களைத் தடுத்திருக்கிறார்கள். சிற்றப்பாவுடனிருந்த மற்றொருவர், தாம் வைத்திருந்த கண்டகோடரியால் ஒருவரைத் தாக்கியிருக்கிறார். ரத்தக்காயம். ஏற்பட்டதும் கலவரம் வலுத்து விட்டது. பிறகு சிற்றப்பா, தம் கையிலிருந்த நீண்ட கத்தியால், பலபேரைக் குத்தியிருக்கிறார். கலவரம் வலுத்துவிடவே பையன்களுக்கு ஆபத்து வரக்கூடுமென்று அஞ்சிக் கூட்டத்திலிருந்து மறைந்து விட்டார். கண்டகோடரியால் தாக்கியவரும் தலை மறைவாய் போய்விட்டார். இருவரையும் தேடிக் கொண்டு தான் கலவரக்காரர்கள் அரங்கிற்குள் வந்திருக்கிறார்கள். இத்தகைய எதிர்ப்பைக் கலவரக்காரர்களும் எதிர்ப்பார்க்கவில்லை. குத்தியவரைத் தேடிப் பார்த்துவிட்டு, வேறு எதுவும் செய்யத் தோன்றாது அவர்கள் திரும்பிச் சென்றிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

சமாதானம்

சுவாமிகளின் நண்பரும், பரதவர் சமூகத்தில் மிகுந்த செல்வாக்குள்ளவருமான அலங்காரப்பரிசு என்பவர் கலவரச் செய்தியறிந்து கம்பெனி வீட்டுக்கு வந்தார். கலவரம் செய்தவர் களையும் சிற்றப்பாவையும் ஒன்றாக வைத்துப்பேசிச் சமரசம் செய்து வைத்தார். இரண்டாவது நாடகத்திற்குக் கலவரம் செய்தவர்களே வெளிவாயிலில் இருக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனார். கலவரம் செய்த ரெளடிகளே பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின் கலவரம் நடக்குமா? அதன் பிறகு நாடகங்கள் அமைதியாக நடை பெற்றன. இவ்வளவு குழப்பத்திலும் போலீஸார் யாரும் தலையிடாதது எங்களுக்குப் பெரும்வியப்பாக இருந்தது. கலவரம் விளைவதற்குக் காரணமாயிருந்த மானேஜர் காமேஸ்வர ஐயர், வெளிவாயிலில் அடிதடி விழுந்ததுமே ஓடிப்போனவர் மறுநாள் தான் கம்பெனிவீட்டிற்கு வந்துசேர்ந்தார். தூத்துக்குடி நாடகங்கள் முடிந்து, சாத்துாருக்குப் புறப்பட்டோம்.

காசிப்பாண்டியனின் கலை ஆர்வம்

சாத்துரரில் எட்டையபுரம் இளையராஜா காசிப் பாண்டியன் தினமும் நாடகம் பார்க்க வந்தார். நடிகர்களுக்குப் பெரும் பரிசுகள் வழங்கினார். தம் புதல்வர்கள் காதில் போட்டிருந்த வைரக் கடுக்கன்களைக் கழற்றி, எனக்கும், சின்னண்ணாவுக்கும் போட்டார். தம் கையில் போட்டிருந்த வைர மோதிரங்களையும் பரிசாகக் கொடுத்தார். மற்றொரு நாள் திடீரென்று தம் மனைவி கழுத்திலிருந்த கெம்பு அட்டிகையைக் கழற்றிச் சின்னண்ணா கழுத்தில் போட்டார். இவற்றையெல்லாம்விட அவர் செய்த மற்றொரு செயல் எங்களைப் பிரமிக்க வைத்தது. ஒருநாள் மனோஹரா நாடகத்தின் போது சின்னண்ணா உடுத்தியிருந்த புடவை அவருடைய மனத்திற்குத் திருப்தியளிக்கவில்லை. வசந்த சேனை இம்மாதிரிப் புடவையையா உடுத்திக் கொள்வது என அவருக்குத் தோன்றியது போலிருக்கிறது. தம் மனைவியின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார். அந்த அம்மையார் காருக்குச் சென்று, மற்றொரு சாதாரணப் புடவையை உடுத்திக் கொண்டு திரும்பி வந்தார். அவர்கள் முதலில் உடுத்தியிருந்த விலையுயர்ந்த பட்டுப்புடவை, சின்னண்ணாவுக்குப்பரிசாக வழங்கப் பெற்றது. அடுத்த காட்சியில் அதை உடுத்திக் கொண்டு வரும் படியாகக் கட்டளையும் பிறந்தது. இளையராஜா காசி விஸ்வநாத பாண்டியனையும், அவரது கலையார்வத்தையும் எண்ணாம்போது இனி அப்படியொருவர் தோன்றுவாரா என்றே வியப்பாக இருக்கிறது. சாத்துார் முடிந்து திருச்சிக்குப் போனோம்.

திருச்சியில் எங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. திண்டாடினோம் என்றே சொல்லவேண்டும். திருச்சியில் பிரண்டு ராமசாமி கம்பெனிக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவரது பெற்றோர் யாரென்றே அவருக்குத் தெரியாது. மலையாள மொழி அவருக்குத் தெரிந்திருந்ததால் கேரளத்தில் எங்கோ பிறந்திருக்க வேண்டுமென்பது மட்டும் புரிந்தது.