எனது நாடக வாழ்க்கை/ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா

விக்கிமூலம் இலிருந்து
ஸ்ரீ பால ஷண் முகானந்த சபா

திருவனந்தபுரம் ஆரிய சாலைத் தியேட்டரில், உள்ளேயே சில வீடுகள் இருந்தன. அங்கே வந்து தங்கி, சொந்தக் கம்பெனி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்தோம். மாமா செல்லம்பிள்ளை பல இடங்களுக்குப் போய், புதிய பையன்களைக் கொண்டு வந்து சேர்ந்தார். எஸ். எஸ். சங்கரன் நன்றாகப் பாடக் கூடியவர். அவரைத் திருநெல்வேலியிலிருந்து அழைத்து வந்தார்கள். அவருக்குக் கோவலன் பாடம் கொடுக்கப்பெற்றது. கம்பெனிக்கு, ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா எனப் பெயர் சூட்டப் பெற்றது. திருவனந்தபுரத்தில்தான் கம்பெனியைத் துவக்கினோம். என்றோலும், மதுரை நகரத்தின்பால் எங்களுக்கு ஏற்பட்டிருந்த பற்றுதலினல் ‘மதுரை ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா’ என்றே பெயர் வைத்தோம். நாடகங்கள் வேகமாய்த் தயாராயின.

விளையும் பயிர் முளையிலே

மாமா நாகர்கோவிலிலிருந்து நாலைந்து பையன்களைக்கூட்டி வந்திருந்தார். அவர்களில் ஒருவருடைய சாரீரம், மகரக் கட்டு வந்து, தேறிய சாரீரம் போல் கனமாகவும் கம்பீரமாகவும் இருந்தது. புதிய பையன்களுக்குப் பாட்டுகளைச் சொல்லி வைக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பெற்றது. புதிதாக வந்த நான்கு பேரையும் உட்கார வைத்து நான், ‘மூல மந்திர மோன நற்பொருளே’ என்னும் சுவாமிகளின் பாடலைச் சொல்லிக் கொடுத்தேன். ஐந்தாறு முறை சொல்லிக் கொடுத்து விட்டுத். தண்ணிர் குடிக்கச் சென்றேன். மீண்டும் மாடிக்கு வரும்போது, புதிதாக வந்தவர்களில் கனமான சாரீரமுடையவர், மற்ற மூன்று பேருக்கும் அந்தப் பாடலைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு ஒரே வியப்பாக இருந்தது. “இந்தப் பாட்டு உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று அவரைக் கேட்டேன். “நாகர்கோவிலில் உங்கள் நாடகம் நடைபெற்றபோது நான் அடிக்கடி வந்து பார்த்திருக்கிறேன். பால பார்ட்டுகள் இந்தப் பாடலைத் தினமும் பாடுவதைக் கேட்டிருக்கிறேன்” என்றார். எனக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. “சரி, நீயே சொல்லிக் கொடு” என்று சொல்லி விட்டு, நான் வேறு வேலையைக் கவனிக்கச்சென்றேன். பாடம் சொல்லிக்கொடுத்த முதல் நாளே ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர் யார் தெரியுமா? அவர்தாம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன். விளையும்பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். அதைப்போல என். எஸ். கிருஷ்ணன், வருங்காலத்தில் மகோன்னதமாக விளங்கப்போகிறார் என்பதை அவரது இளம் பருவச் செயல்கள் காட்டின.

விளையாட்டுத் திறன்

மாதம் பதிமூன்று நாடகங்கள் நடந்துகொண்டிருந்த காலமாதலால் எங்களுக்கு நிறைய ஒய்வுண்டு. ஒய்வுநேரங்களில் பலீன் சடுகுடு, கிளிதட்டு, நொண்டி, பிள்ளையார் பந்து முதலிய பலவிதமான விளையாடல்களை நாங்கள் ஆடுவோம். எந்த விளையாட்டுக்கும் இரண்டு கட்சி உண்டல்லவா? கட்சி பிரிக்கும் போது ஒவ் வொருவரும், என். எஸ். கிருஷ்ணன் எந்தக் கட்சியில் இருக்கிறாரோ, அந்தச் கட்சியில் சேரவே விரும்புவார்கள். ஏன் தெரியுமா? என். எஸ். கிருஷ்ணன் இருக்கும் கட்சி கண்டிப்பாய் வெற்றி பெறும். நான் எப்போதும் என். எஸ். கே. கட்சியில் தான் சேருவேன்.

‘கிளித்தட்டு’ என்பது ஒரு நல்ல விளையாட்டு, அதில் ஒவ்வொரு கட்சியிலும் கிளியாக இருப்பவருக்குச் சில தனி உரிமைகள் உண்டு. கட்டத்தைச் சுற்றி வரவும், குறுக்கே தாண்டியடிக்கவும் கிளிக்கு மாத்திரம் உரிமையுண்டு. இந்த ஆட்டத்திலும் வழக்கமாக என். எஸ். கே. கட்சிதான் வெற்றி பெறும். அவர் கிளியாக நின்று அற்புதமாக விளையாடுவார். வழக்கமாக அவர் கட்சி ஜெயிப்பதைக் கண்டதும், நாங்கள் எல்லோரும் அவரை இரு கட்சியாருக்கும் பொதுக் கிளியாக இருக்க வேண்டுமென்று சொல்வோம். அவ்வாறே அவர் பொதுக்கிளியாக இருந்து, ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் தம் கட்சிக்கு வெற்றியைத் தேடிக் கொடுப்பார்.

விளையாட்டுகளில் இவ்வாறு முதன்மை பெற்றிருந்தாலும் நாடகங்களில் சிறிய பாத்திரங்களையே தாங்கி வந்தார். அவர் கோவலனில் பாண்டியன், சாவித்திரியில் சத்தியவானின் தந்தை துயுமத்சேனன், மனோஹரனில் பெளத்தாயணன் இவைதாம் என். எஸ். கிருஷ்ணனுக்குத் துவக்கத்தில் கிடைத்த வேடங்கள்.

எஸ். ஆர். ஜானகி நாடகம்

திருவனந்தபுரம் ஆரிய சாலையில் எங்கள் கம்பெனி தொடங்கிய நேரத்தில், ஓவியர் பொன்னுசாமிப் பிள்ளை கம்பெனியார் அங்கே நாடகங்கள் நடத்தி வந்தார்கள். அவர்களும் எங்களுடனேயே தியேட்டருக்குள் குடியிருந்தார்கள். அவர்களுடைய நாடகங்கள் சிலவற்றைப் பார்க்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கம்பெனியில் எஸ். ஆர். ஜானகி அம்மாள் கதாநாயகனாக நடித்து வந்தார். கதாநாயகி எஸ். என் இராஜலட்சுமி, ஜானகியம்மாள் மிக நன்றாக பாடுவார். அவரது குரல் கெம்பீரமாக இருக்கும். வேடம் புனைந்து, மேடைக்கு வந்துவிட்டால் பெண் என்ற நினைவே சபையோருக்கு ஏற்படாது, தோற்றம், நடை, பாவனை எல்லாம் ஆண் போலவே இருக்கும். அவர்கள் நடித்த நாலைந்து நாடகங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்ததும் எங்களுக்கெல்லாம் அவர்கள் மீது பற்றுதல் உண்டாகி விட்டது. நாங்கள் எங்கள் அன்னையாருடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையிலேயே தங்கியிருந்தோம். எஸ்.ஆர். ஜானகியம்மாள் எங்கள் தாயாருடன் நெருங்கிப் பழகினார்கள். அங்கு, சிலநாட்கள் ஒன்றாகக் குடியிருந்து விட்டு, அவர்கள் பிரிந்து சென்றபோது எங்களுக்கு வருத்தமாக இருந்தது.

நாடகத் துவக்கம்

1925 பிப்ரவரி 15 ஆம் நாள் சின்னையாபிள்ளை கம்பெனியை விட்டு விலகினோம், ஒன்றரை மாதத்திற்குப் பின் 1925 மார்ச்சு 31ஆம் நாள், ஆரியசாலைத் தியேட்டரில், எங்கள் சொந்தக் கம்பெனியின் முதல் நாடகம் அரங்கேறியது. ஆரம்ப நாடகம் கோவலன்.

நாடகக் கம்பெனி தொடங்குவதற்காய் நாங்கள் செலவிட்ட பணம் சுமார் ஐநூறு ரூபாய். சின்னையாபிள்ளை கம்பெனியிலிருந்து பல நடிகர்கள் எங்கள் கம்பெனிக்கு வரத் தயாராக இருந்தார்கள். என்றாலும், அம்மா யாரையும் சேர்த்துக் கொள்ளக் கூடாதென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். கோவலனாக நடித்த எஸ். எஸ். சங்கரன் முன்பே நாடகங்களில் நடித்தவர். மற்ற நடிகர்கள் அனைவரையும் புதிதாகவே சேர்த்துக் கொண்டோம். நகைச் சுவை நடிகர் எம். ஆர். சாமி நாதன் ஒருவர் மட்டும் சின்னையாபிள்ளையிடமிருந்து விலகிப் பிடிவாதமாக வந்து எங்களிடம் சேர்ந்து கொண்டார். அவருடைய வேண்டுகோளை அம்மாவாலும் தடுக்கமுடியவில்லை.

முதல் நாடகத்தில் தம்பி பகவதி பபூனாக நடித்தான். சுவாமிகளின் அருமையான நகைச்சுவைப் பாடல்களை அவன் பாடியபோது, சபையோர் வெகுவாக ரசித்தார்கள். இரண்டாவதாக மனோஹரா நடைபெற்றது. மொத்தம் ஆறு நாடகங்களே தயாராகியிருந்தன. அவற்றை நடித்துவிட்டு நாகர்கோவிலுக்குச் சென்றோம்.

செய்கு தம்பிப் பாவலர் தீர்க்க தரிசனம்

நாகர்கோவிலிலும் இதே ஆறுநாடகங்கள் நடைபெற்றன. கோவலன் நாடகத்திற்குப் பெரும் புலவரான கோட்டாறு சதாவதானம் செய்குதம்பிப் பாவலர் வந்திருந்தார். ஒழுகினசேரி சரஸ்வதி ஹாலில் நாடகங்கள் நடைபெற்றன. என். எஸ். கிருஷ்ணன் ஒழுகினசேரியைச் சேர்ந்தவராதலால், அங்குள்ள சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து, என். எஸ். கிருஷ்ணனுக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசளித்தார்கள். அந்தப் பதக்கத்தைப் பாவலரைக் கொண்டு, வாழ்த்திக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். செய்கு தம்பிப் பாவலர் இன்று நம்மிடையே இல்லை. அவர் பெரும் புலமை வாய்ந்தவர். புத்தேரி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை யவாகள், பாவலர் மறைந்தபோது பாடிய ஒரு உருக்கமான பாடல், அவரது பெரும் புலமைக்குச் சான்றாக நிற்கின்றது.

"ஒரும் அவதானம் ஒருநூறு செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதனைச்-சீரிய
செந்தமிழ்ச் செல்வன, செய்குதம்பிப் பாவலனை
எந்தகாள் காண்பேன் இனி?"

இத்தகைய பெரும் புகழ்படைத்த முஸ்லீம் பெரியார், அன்று மேடையேறி, பாண்டியன் வேடத்தில் நின்ற என். எஸ். கிருஷ்ணனை வாழ்த்திப் பரிசளித்தார்.

“நம் நாஞ்சில்நாட்டு இளஞ்சிறுவன் என்.எஸ். கிருஷ்ணன் வருங்காலத்தில் மகா மேதையாக விளங்கப் போகிறான். இவனுடைய புகழால் நம் நாஞ்சில்நாடு மட்டுமல்ல; தமிழ்நாடே பெருமையடையப் போகிறது.”

எனச் செய்குதம்பிப் பாவலர்தம் செந்தமிழ்த் திருவாயால் வாழ்த்தியது என் நினைவில் இருக்கிறது. அப்பெரியாரது தீர்க்க தரிசனத்தை எண்ணி, இப்போதும் நான் பெருமையடைகிறேன். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் எத்தனையோ முறை இதைப் பெருமையோடு சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.

யார் உரிமையாளர்?

கம்பெனி திருநெல்வேலிக்கு வந்தது. கொல்லத்தில் நாங்கள் விலகியபின் சின்னையாபிள்ளை மிகவும் சிரமப்பட்டதாக அறிந்தோம். எப்படியோ தட்டுத் தடுமாறி அவரும் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார். எங்கள் கம்பெனி மனோரமா தியேட்டரிலும், சின்னையாபிள்ளை கம்பெனி கணபதி விலாஸ் தியேட்டரிலும் நடைபெற்றது. பல நடிகர்கள் போய் விட்டதால் அவருடைய கம்பெனி தள்ளாடிக் கொண்டிருந்தது.

சகோதரர்கள் நாங்கள் நால்வரும் சிறுவர்களாய் இருந்ததால் மாமா செல்லம்பிள்ளை, தம் பெயரையும், சிற்றப்பா பெயரையும் உரிமையாளர் ஸ்தானத்தில் போட்டார். இதைப் பார்த்த சிற்றப்பா யாராவது ஒருவர் பெயர் இருந்தால் போதும்’ என்றார், உடனே மாமா, தம் பெயரை எடுத்து விட்டார். ‘டி. எஸ்.செல்லம்பிள்ளை உரிமையாளர்’ என்று சிற்றப்பா பேரே விளம்பரப் படுத்தப் பட்டது. இந்த நிலையில் நாங்கள் சொந்தக் கம்பெனி தொடங்கிய விஷயம் தெரிந்து, பழைய மானேஜர் காமேஸ்வர ஐயர் வந்து சேர்ந்தார். கருப்பையாபிள்ளை கம்பெனி அதற்குள் கலைந்து விட்டதால் சும்மா இருந்த ஐயரை அவரது விருப்பத்தின்படி எங்கள் கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம். அவருடைய போக்கு எங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் நல்ல நிருவாகத் திறமையைக் கருதி, இடமளித்தோம். மானேஜர் ஐயர் வந்து சேர்ந்தவுடன் இரண்டாம் நாளே ஒரு மாறுதல் செய்தார். உரிமையாளர் ஸ்தானத்திலிருந்த சிற்றப்பா பெயரை நீக்கி விட்டார். இரண்டு நாடக விளம்பரங்களில் எந்தப்பெயரும் இல்லாதிருந்தது. சிற்றப்பாவுக்குக் கோபம் வந்து விட்டது. ஐயரைக் கடுமையாகக் கண்டித்தார். ஐயர் ஏதோ சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஒன்றும் சரிப்படவில்லை. கடைசியாகச் சிற்றப்பா பெயர் மறுபடியும் ஒழுங்காக விளம்பரங்களில் போடப் பெற்றது.