எனது நாடக வாழ்க்கை/மதுரை மாரியப்ப சுவாமிகள்

விக்கிமூலம் இலிருந்து

கட்டபொம்மன் சீமை

முடிமன்னுக்குச் சுமார் மூன்று அல்லது நான்கு மைல் தொலைவில் பாஞ்சாலங்குறிச்சி இருப்பதாகப் பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். அந்த மண்ணாக்கே ஒரு தனி வீரமென்றும், முயல் நாயைத் துரத்தும், பாம்பு கீரியைத் துரத்தும் என்றெல்லாம் கதை கதையாகப் பேசுவார்கள். அந்தப் பாஞ்சாலங்குறிச்சி மண்ணை யாரும் எடுத்துப் போகாதபடி வெள்ளைக்காரர்கள் காவல் போட்டிருப்பதாகக் கூடப் பேசிக் கொண்டார்கள்.

எங்களுக்கெல்லாம் அந்த வீரம் செறிந்த பாஞ்சாலங்குறிச்சியைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. என்ன செய்வது? யாராவது அழைத்துப் போனால்தானே? அன்று அந்தப் பிரதேசத்தின் பெருமைக்குரிய வரலாறு எங்களுக்குத்தெரியாது. இன்று அதைப்பற்றி எண்ணாம் போதெல்லாம் எனக்கு உள்ளத்தில் ஒரு தனி மகிழ்ச்சியுண்டாகிறது. வீர சிதம்பரனார் பிறந்த ஒட்டப்பிடாரத்திற்கு அருகில் ஐம்பத்தொரு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் நாடகம் நடித்திருக்கிறோம் வீரபாண்டிய கட்டபொம்மன் சீமையில் எங்கள் கலைப்பணி நடந்திருக்கிறது! ஆஹா, எண்ணாம் போதே உள்ளம் பூரிக்கிறது!


ஒற்றையடிப் பாதை

இந்த இடத்தில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டியது என் கடமையெனக் கருதுகிறேன். போலிநாய்க்னுாரில் நாடகம். முடிமன்னிலிருந்து நாங்கள் எல்லோரும் நடந்தே செல்ல வேண்டும். சப்பாத்திக் கள்ளிகளும், முட்புதர்களும் நிறைந்த கரடுமுரடான ஒற்றையடிப் பாதை. இரவு ஏழு மணி சுமாருக்கு முடிமன்னிலிருந்து புறப்படுவோம். மங்கலான வெளிச்சமுள்ள ஓர் அரிக்கன் விளக்கைப் பிடித்துக் கொண்டு முன்னால் ஒருவர் போவார். நாங்கள் எல்லோரும் அவரை நெருங்கியபடி நடந்து செல்வோம். நாடகம் முடிந்து திரும்பும்போது எங்களில் சிலருக்குக் குலை நடுக்க மெடுக்கும் சில சமயங்களில் அருகில் ‘புஸ்’ ஸென்று சத்தம் கேட்கும். புதர்களுக்கிடையே ஏதோ ஒடுவது போலத் தோன்றும். பக்கத்தில் வரும் பெரியவர்களைக் கட்டிக் கொள்ளுவோம். சில நேரங்களில் சமையல் அப்பாஜிராவ் என்னைத் தூக்கிக் கொள்வார்.

ஒருநாள் வழக்கம்போல் நாடகம் முடிந்து திரும்பி வரும் போது, புதர்களின் மறைவிலிருந்து திடிரென்று, ஐயா, ஐயா, என்று ஒரு குரல் கேட்டது. எல்லோரும் சட்டென்று நின்றார்கள். எனக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. முன்னால் சென்றவர், விளக்கை முகத்திற்கு நேரே பிடித்தபடி, “யாரையா?” என்று அதட்டிக் கேட்டார். இருளின் வலிமையை இன்னும் அதிகப் படுத்திக் காட்டும் அந்த மங்கிய வெளிச்சத்தில் கரிய நிறமுடைய ஒரு மனித உருவம் நிற்பது தெரிந்தது. பெரிய ஆஜானுபாகு வான தோற்றம்: முழுதும் வெண்மை நிறமுடைய கிருதா மீசை; வலது கையில் நீளமான ஒரு வேல் கம்பு. அந்த உருவத்தைப் பார்க்கவே பயமாக. இருந்தது.

“சங்கர தாஸ்சாமி கூட வருகளா? அவங்களைப் பாக்கணும் செளகரியமாய்ப் பேசணும்”.

அந்த உருவம் இவ்வாறு பேசியது. உடனே எங்களில் ஒருவர், “சாமிங்களுக்கு ஒடம்புசரியில்லே, நாளைக்குவெள்ளென முடிமன்னுக்கு வாங்க பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு நடந்தார். நாங்களும் அவரைத் தொடர்ந்தோம்.

உண்மைதான். முடிமன்னுக்கு வரும்போதே சுவாமிகள் உடல்நலம் குன்றியிருந்தார். இரவில் நாடகக் கொட்டகைக்கு வருவதில்லை. ஒருதனி வீட்டில் தங்கியிருந்தார். மறுநாள் பொழுது புலர்ந்ததும் நானும் மற்றும் சில நடிகர்களும் சுவாமிகள் இருந்தவீட்டிற்குச்சென்றோம். இரவு கண்டது பேயா, மனித உருவமா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.

ஏட்டுச் சுவடிகள்

மனிதன்தான், ஐயமில்லை. அதே பெரியவர், கைத்தடியை ஊன்றியபடி இருமிக்கொண்டே வந்து, சுவாமிகள் அருகில் உட்கார்ந்தார். சுவாமிகளுக்கும் பெரியவருக்கும் நீண்ட நேரம் பேச்சு நடந்தது. பெரியவர் கூறியதன் சுருக்கம் இதுதான்.

கட்டபொம்மு ஊமைத்துரையைப் பற்றியும்’ தாகுப்பதிப் பிள்ளை, பகதூர் வெள்ளை இவர்களைப் பற்றியும் பலப்பலப்பொய்க் கதைகள் கட்டிவிடப்படுகின்றன. வெள்ளையருக்குப் பயந்து

உண்மையான செய்திகளைச் சொல்ல மக்கள் அஞ்சுகிறார்கள். என்முன்னோர்கள் வெள்ளையத்தேவர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் வீட்டில் ஒருபழைய ஏட்டுச் சுவடிக் கட்டு இருக்கிறது. அதில் நடந்தது நடந்தபடியே செய்யுட்களாக அந்தக் காலத்தில் எங்கள் பெரியவர்களால் எழுதிவைக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் பெரிய நாடகாசிரியரென்றும், மறக் குலத்தில் பிறந்தவரென்றும் கேள்விப் பட்டேன். அந்தச் சுவடிகளை உங்களிடம் கொடுத்துவிடுகிறேன். அவற்றை வைத்துக் கொண்டு இப்போதில்லாவிட்டாலும் எப்போதாவது ஒருகாலத்தில் இந்த உண்மை நிகழ்ச்சிகளை மக்கள் தெரிந்து கொள்ளும் முறையில் நாடகமாக்கி நடிக்கவேண்டும்.”

இவ்வாறு கூறி விட்டுத் தம்மோடு கொண்டு வந்திருந்த ஒரு சிறு மூட்டையை அவிழ்த்தார். கந்தல் துணியில்சுற்றியிருந்த சில சுவடிக் கட்டுகளைச் சுவாமிகளிடம் கொடுத்தார். இதைச் சொல்லும்போது அவர் கண்கள் சிவப்பேறின. குரல் தழுதழுத்தது. சுவாமிகள் அதை வாங்கி இரண்டொரு ஏடுகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, “அருமையான நடை” என்று பாராட்டினார். “இதற்காக உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் சுவாமிகள். ஒன்றும் வேண்டாம், எங்கள் முன்னோர்களின் சிறப்பை ஒரு காலத்தில் உலகம் அறிய வேண்டும். அதுதான் என் ஆசை” என்றார் பெரியவர்.

அதற்குமேல் அவர்கள் பேச்சு எங்களுக்குச் சுவையளிக்காததால் நாங்கள் போய் விட்டோம். அதன்பின் இரண்டொரு நாட்கள் கம்பெனி வீடு முழுவதும் கட்டபொம்மன் பேச்சுத்தான். பெரியவர்கள் ஒவ்வொருவரும் அவ்வீரனைப்பற்றித் தாங்கள் அறிந்திருந்த கதைகளையெல்லாம் சொன்னார்கள். சுவாமிகள் கட்டபொம்மன் நாடகத்தை விரைவில் எழுத உத்தேசித்திருப்பதாகவும் பேசிக் கொண்டார்கள்.

நிழற் படங்கள்

எதிர்பாராதபடி சென்னைக்குக் கம்பெனியைக் ‘கண்ட்ராக்டு’ பேச ஒருவர் வந்தார். பேச்செல்லாம் முடிவடைந்து அடுத்தபடியாகச் சென்னைக்குப் போவதென்று தீர்மானிக்கப் பட்டது. அதுவரையில் கம்பெனிக்குப் புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை. சென்னைக்குப் போவதென்று முடிவானதால் புகைப்படம் எடுப்பதற்காக மதுரையிலிருந்து ஒருவரை அழைத்து வந்தார்கள். நாடகமில்லாத ஒருநாள், போலிநாயக்கனூர் கொட்டகையில் சில புகைப் படங்கள் எடுக்கப்பட்டன. அப்போதுதான் நான் முதன் முதலாகப் படமெடுத்துக் கொண்டேன். முதல் படம் என்ன தெரியுமா?... . நாரதர்.

ராஜா எம். ஆர்

அருகில் குமாரபுரம் என்றொரு சிற்றுார். முடிமன்னிலிருந்து சுமார் ஆறு மைல்கள் இருக்கலாம். ராஜா எம். ஆர். கோவிந்த சாமிப் பிள்ளையின் நாடகம் நடப்பதாகக் கேள்விப்பட்டோம். பிள்ளையவர்கள் சுவாமிகளின் அபிமானத்திற்குரிய மாணவர். சுவாமிகளை அவர், “அப்பா” என்றுதான் அழைப்பார். முன்பே மதுரையில் புட்டுத்தோப்பில் இருந்தபோது அவரை ஒருமுறை பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பிள்ளையவர்கள் மிகப் பிரசித்திபெற்ற நடிகர். “சந்தச் சரப சங்கீத சாகித்ய ராஜ போஜ ராஜா எம். ஆர். கோவிந்தசாமி” என்றுதான் அவரைக் குறிப்பிடுவார்கள்.

ஒருநாள் நல்லதங்காள நாடகம் நடப்பதாக அறிந்தோம். சுவாமிகள் எங்களை அழைத்துப் போய் வரும்படி ஆணையிட்டார்கள். தந்தையாருடன் நாங்கள் நாடகம் பார்க்கச் சென்றோம். நல்லண்ணகை வந்த ராஜா எம். ஆர். ‘கழுகு மாமலை முருகா’ என்று தொடங்கும் ஒரு பாடலைப் பாடிக்கொண்டு மேடைக்கு வந்தார். என்ன அற்புதமான சாரீரம்! இடையிடையே பேசிப் பேசி, அவர் பாட்டைத் தொடங்கும்போதெல்லாம், மக்கள் மகிழ்ச்சியோடு கைதட்டி வரவேற்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

நாடகமேடையில் நின்ற நிலையில் சொந்தமாகவே கவி பாடும் புலமை பெற்றவர் ராஜா எம். ஆர். அந்த நாளில் தென்பாண்டிப் பகுதி முழுமைக்கும் நாடக மேடைக்கு அவர் ராஜாவாகவே விளங்கினார்.

புதியம்புத்துார், முடிமன், குமாரபுரம் முதலிய ஊர்களெல்லாம் அப்போது எட்டையபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்தவை. எட்டையபுரத்தை ஆண்டு வந்தவர் ராஜா ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பன் அவர்கள். ராஜா எம். ஆர். கோவிந்தசாமிப்பிள்ளை எட்டையபுரம் மன்னரின் செல்லப்பிள்ளையாக விளங்கினார். அவர் மேடையில் புனைந்து வந்த ராஜ உடைகளெல்லாம் மன்னரால் பரிசளிக்கப்பெற்றவை யெனத் தந்தையார் மூலம் அறிந்தோம். எங்கள் தந்தையார் அவரோடும் பல நாடகங்களில் கதாநாயகியாக நடித்தவராதலால் எம். ஆர். எங்களை அன்புடன் வரவேற்றார், வெளியே நெருக்கடியான கூட்டம், நாங்கள் மேடையிலேயே ஒரு பகுதியில் உட்கார்ந்து நாடகம் பார்த்தோம். நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாடகம் முடிந்ததும் எம். ஆர். எங்களை விட வில்லை. தந்தையாரும் அவரும் நீண்ட நேரம் பழங் கதைகளை யெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் உறங்கி விட்டோம். பொழுது புலர்ந்ததும் வண்டியேறி முடிமன்னுக்கு வந்து சேர்ந்தோம்.