எனது நாடக வாழ்க்கை/சென்னை மாநகரம்

விக்கிமூலம் இலிருந்து
சென்னை மாநகரம்

சென்னைக்குப் போவது உறுதி செய்யப்பட்டதால் முடிமன் நாடகம் முடிந்ததும் எல்லோரும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். சங்கரதாஸ் சுவாமிகளின் உடல்நிலை சரியில்லாததால் அவர்கள் மட்டும் தூத்துக்குடிக்குப் புறப்பட்டார்கள். உடல் நிலையைச் சரிசெய்து கொண்டு தாம் சென்னைக்கு வருவதாகவும் கம் பெனியைச் சென்னைக்குப் போகும்படியாகவும் சுவாமிகள் சொன்னதாக அறிந்தோம்.

மதுரைக்கு வந்தபின் ஒருவார காலம் சென்னைப் பயண ஏற்பாடுகள் கோலாகலமாக இருந்தன. எங்களுக்கெல்லாம் ஒரே குதுகலம். பட்டினத்தைப் பார்க்கப் போகிறோம் என்பதில் பெருமகிழ்ச்சி. நாள், நட்சத்திரம், யோகம், சூலம் இராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்த்துப் புறப்பட்டார்கள். 1921 செப்டம்பர் மாதம் மதுரையிலிருந்து இரயிலேறிச் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.

எழும்பூரில் இரயிலே விட்டிறங்கியதும் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. பெருந்திகைப்பாக இருந்தது. இரயில் நிலையமும், மக்கள் கூட்டமும், இதர சூழல்களும் எங்களுக்கு புதுமையாகக் காட்சியளித்தன. மதுரை, திருச்சிராப்பள்ளி இரயில் நிலையங்களெல்லாம் இன்று இருக்கும் அளவு பெரியதாக அப்போது இல்லை. எனவே, அன்றையச் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் பிரம்மாண்டமானதாகத் தோன்றியது. நடிகர்களை அழைத்துப் போகக் காண்ட்ராக்டர்கள் கார்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லோரும் கார்களில் ஏறிப் புறப்பட்டோம். வழியில் டிராம் வண்டிகளைப் பார்த்தபோது ஒரே வியப்பு! இரயில் வண்டி தெருக்களிலேயே போவதாக எண்ணினோம். பிறகு தந்தையார். “இது மின்சாரத்தால் ஒடும் டிராம் கார்” என்று அதைப் பற்றி விளக்கியபோது, புரிந்துகொண்டது போல் தலையசைத்தோம். வேறென்ன செய்வது? மின்சாரம் என்றாலே என்னவென்று புரியாத எங்களிடத்தில் மின்சார வண்டியைப் பற்றிச் சொன்னல் எப்படிப் புரியும்?

மனிதர்கள் வண்டியிழுப்பதை நான் அதுவரையில் பார்த்ததில்லை. மாடு, குதிரை ஆகிய மிருகங்கள் இழுப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். நாகரீகம் மிகுந்த பெரிய பட்டினத்தில் மனிதர்கள் இழுக்கும் ரியக்‌ஷா’ வண்டிகளைப் பார்த்தபோது அந்தச் சின்னஞ்சிறு வயதிலே கூட எனக்குக் கஷ்டமாகத்தானிருந்தது. இந்த அதிசயங்களேயெல்லாம் பார்த்துக்கொண்டே ‘கிராண்ட் தியேட்ட'ருக்கு வந்து சேர்ந்தோம்.

கிராண்ட் தியேட்டர்

சென்னையில் இப்போது முருகன் டாக்கீஸ் என்ற பெயரால் பட மாளிகை ஒன்று இருக்கிறதல்லவா? அதே கொட்டகைதான் அப்போது கிராண்ட் தியேட்டராக விளங்கியது. நாங்கள் வந்து இறங்கியது காலை நேரமானதால் எல்லோரும் பல் துலக்கிக் கொண்டு சிற்றுண்டியருந்த மேடையில் உட்கார்ந்தோம். எல்லோருக்கும் பூரி மசால் பரிமாறப் பட்டது. நான் அதுவரை யில் பார்த்தறியாத புதிய உணவு பூரி. இட்டளி, தோசை, புட்டு, இடியாப்பம், முதலிய பலகாரங்களையே சாப்பிட்டு வந்த எனக்கு, பூரி. மசால் என்னவோ போலிருந்தது. அது வட இந்தியாவில் பிரசித்தமான உணவு என்று சொன்னார்கள். எனககுப் பிடிக்கவில்லை. பிறகு தந்தையார் இட்டளி வர வழைத்துக் கொடுத்தார்.

சிற்றுண்டி முடிந்ததும் கம்பெனியார் அனைவரும் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். நாங்கள் பெற்றோருடன் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் குடியேறினோம்.

ஞாயிற்றுக்கிழமை நாடகம்

கிராண்ட் தியேட்டரில் நாடகம் தொடங்கியது. முதல் நாளன்றே கூட்டம் குறைவாக இருந்தது. அதுவரையில் கியாஸ் விளக்குகளில் நாடகம் நடித்து வந்த நாங்கள் அன்று தான் முதன் முதலாக மின்சார விளக்கில் நாடகம் ஆடினோம். என்றாலும், வசூல் இல்லாததால் எங்களுக்கு உற்சாகம் ஏற்பட வில்லை.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நாடகம் என்றதும் எங்களுக்கு வியப்பாக இருந்தது. அதற்குமுன் எந்த ஊரிலும் ஞாயிறன்று நாடகம் போட்டதில்லை. அதுவும் மாலை நேரத்தில் நடித்ததேயில்லை. செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மட்டும் இரவு 6.30 மணிக்கு நாடகம். ஆக வாரத்திற்கு மூன்று நாடகம் என்றிருந்தது போய் சென்னைக்கு வந்தபின் வாரத்திற்கு நான்கு நாடகங்கள் ஆயின. ஞாயிற்றுக்கிழமை நடந்த மாலை நாடகத்துக்கு வசூலும் மற்ற நாட்களைவிட அதிகமாக இருந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சென்னையில் வசூலாகும் என எங்கள் தந்தையார் கூறினார்.

நோயும் சிகிச்சையும்

நாடகம் தொடர்ந்து நடைபெற்றது. நானும் என் தமையன் மார்களும் நோயில் படுத்தோம். சென்னைக்குப் புதிதாக வருபவர்களுக்கெல்லாம் ஒரு திடீர் காய்ச்சல் வருவது வழக்கமாம். அந்தக் காய்ச்சல் எங்களையும் பீடித்ததால் மிகவும் தொல்லைப் பட்டோம்.

இது ஒரு புது விதமான காய்ச்சல். நாடகம் நடந்த செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில்தான் இந்தக் காய்ச்சல் எங்களை அதிகமாகப் பீடித்தது. முறை ஜூரம் என்றார்கள் சிலர்: மலைரியா ஜுரம் என்றார்கள் வேறு சிலர். பகல் உணவு அருந்தும் வரையில் ஒன்றும் இருப்பதில்லை. பிற்பகல் மூன்று மணிக்குமேல் சகிக்க முடியாதபடி குளிர் எடுக்கும். ஒரு மணி நேரத்திற்குப் பின் காய்ச்சல் அடிக்கும். மறுநாள் காய்ச்சல் விட்டுவிடும்.

அண்டை அயலில் இருந்தவர்கள் சொல்லிய மருந்துகளை யெல்லாம் எங்கள் அன்னையார் கொடுத்துப் பார்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. எங்கள் தாயார் இக்காலத்துப் பெண்டிரைப் போன்றவர்கள் அல்லர். எடுத்ததற்கெல்லாம் டாக்டரைத் தேடியோடும் நிலையில் அவர் எங்களை வளர்க்கவில்லை குழந்தைகளுக்கு வரக்கூடிய நோய்களும், அதற்குரிய மருத்துவ சிகிச்சை முறைகளும் அன்னையாருக்கு நன்றாகத் தெரியும். சென்னைக்கு வரும் வரையில் நாங்கள் டாக்டரைச் சந்தித்ததே யில்லை. எந்த நோய் வந்தாலும் அன்னையாரே ஏதாவது கஷாயம் போட்டுக் கொடுப்பார்கள். இரண்டொரு நாளில் குணமாய் விடும். இப்பொழுது எங்களைப் பீடித்தது, பட்டணத்திற்கே உரிய புதுக் காய்ச்சலாக இருந்ததால், அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.

புதிய மருந்து

தந்தையார் இரண்டு வாரங்கள் ஏதேதோ மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார். நோயினல் நாடகம் தடைப்படவில்லை. அது தொடர்ந்து நடைபெற்று வந்தது. நாங்கள் ஜுரத்துடன் மிகவும் போராடி எப்படியோ நடித்தோம். இறுதியாகத் தந்தையார் தமது சொந்த மருந்தையே கொடுக்கத் தொடங்கினார். குளிர் நின்று காய்ச்சல் வந்ததும் நாடகத்திற்குப் புறப்படும் நேரத்தில் கொஞ்சம் பிராந்தியை ஊற்றி எங்களுக்குக் குடிக்கக் கொடுப்பார். இதைக் குடித்ததும் தேகத்தில் ஒரு புதிய தெம்பு ஏற்படும். நோயினால் உண்டாகும் தளர்ச்சி தெரியாமல் நாங்கள் நடித்து விடுவோம். காய்ச்சல் உண்டாகும் நாட்களில் எல்லாம் இவ்வாறு பிராந்தியே எங்களுக்கு மருந்தாக இருந்து வந்தது. நாடகம் முடிவடையும் நேரத்தில் நாங்கள் உணர்வற்ற நிலையில் இருப்போம். எங்களை வண்டியில் போட்டுத்தான்.வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பது வழக்கம்.

தோழி கதாநாயகியானாள்

ஒருநாள் சத்தியவான் சாவித்திரி நடந்து கொண்டிருந்தது. நந்தவனக் காட்சி. சின்னண்ணா தோழியாக நடித்தார். ஒரே ஒரு வசனம்தான் தோழிக்கு உண்டு. சாவித்திரி ஒரு நீண்ட வசனத்தைப் பேசி முடித்ததும் தோழி,

“ஆம் அம்மா, இங்குள்ள கிளிகள் உன்சொற்களைக் கேட்டும், அன்னங்கள் உன் நடையை மதித்தும், மயில்கள் உன் சாயலைக்கண்டு வெட்கியும் அங்கங்கு பதுங்கி நாண முறுகின்றன பார்!”....

என அதற்கு விடை பகருகிறாள். சின்னண்ணா திரு டி. கே. முத்துசாமி இந்த வசனத்தை நடிப்புணர்ச்சியோடு பேசியதும் சபையில் பெருத்த கரகோஷம் ஏற்பட்டது. சாவித்திரியைவிடத் தோழி நன்றாயிருப்பதாய்ச் சபையோர் பேசிக்கொண்டார்கள். சின்னண்ணாவுக்கு யோகம் அடித்தது; இரண்டாவது முறை சாவித்திரி நாடகம் போட்டபோது, சின்னண்ணாவே சாவித்திரி யாக நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து பல நாடகங்களில் கதாநாயகி வேடம் இவரைத் தேடி வந்தது.

சென்னைக்கு வந்தவுடன் தந்தையார் ஒரு நாதசுர வித்துவானை எங்களுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார். அந்த வித்துவானிடம் சிரத்தையோடு இசை பயின்றவர் சின்னண்ணா ஒருவர்தான். நோய், நொடி இவற்றினிடையேகூட விடாமல் இசைப் பயிற்சியில் முழு அக்கரை செலுத்தியதால் மிக விரைவில் சின்னண்ணா நன்றாகப் பாடவும் பழகிக் கொண்டார். எல்லா நாடகங்களிலும் கதாநாயகியாக நடித்து நல்ல புகழைப் பெற்றார்.

திடுக்கிடும் செய்தி

ஒருநாள் திடீரென்று வந்த தந்தி எங்கள் எல்லோரையும் திடுக்கிட வைத்தது.

“சுவாமிகள் வாத நோயால் பீடிக்கப்பட்டார்; வாய்பேச முடியவில்லை. வலது கையும், இடது காலும் முடங்கி விட்டது. படுக்கையில் இருக்கிறார்”.

எதிரிகளும் இரக்கம் கொள்ளத்தக்க இச்செய்தியை அறிந்ததும், கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான பழனியா பிள்ளை தூத்துக்குடிக்கு விரைந்தார். சென்னையிலேயே வைத்து, சிகிச்சை செய்யும் நோக்கோடு சுவாமிகளை மிகவும் சிரமப்பட்டு, சென்னைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

நாங்கள் கம்பெனி வீட்டிற்குச்சென்று சுவாமிகளைப் பார்த்தோம். எல்லோருடைய கண்களிலும் நீர் பொங்கி வழிந்தது. எத்தனை எத்தனையோ நடிகர்களைப் பேச வைத்த பேராசான் இன்று பேச முடியாமல் ஊமையாகக் கிடந்தார். எண்ணற்ற நாடகங்களை எழுதிக் குவித்த வலக்கரம் செயலற்ற நிலையில் முடங்கிக் கிடந்தது. ஏறுபோல் நடமாடிய அவரது கால்கள் பிறர் உதவியின்றி எழுந்திருக்க இயலாத நிலையில் அடங்கிக் கிடந்தன; பார்த்தோம், பரிதவித்தோம்!

சென்னையில் யார் யாரோ புலவர் பெருமக்கள், நடிக நடிகையர், சுவாமிகளை வந்து பார்த்தார்கள். பல்வேறு சிகிச்சை முறைகளைக் கூறினார்கள். மருத்துவர்கள் பலர் வந்தார்கள். சிகிச்சை செய்தார்கள். ஒன்றும் பயனில்லை. சுவாமிகளின் பணி விடைக்காகத் தனியாக இருவர் நியமிக்கப் பெற்றார்கள். உரிமையாளர்கள் உண்மையான சிரத்தையோடு சுவாமிகளுக்குச் சிகிச்சை செய்து வந்தார்கள்.

கட்டபொம்மன், ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியத்தும் ஆகிய இருநாடகங்களையும் சுவாமிகள் விரைவில் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். எனக்கு ஜூலியத் பாடம் கொடுக்கப் பெற்றிருந்தது. இந்தச் சமயத்தில் எதிர்பாராத நிலையில் சுவாமிகள் நோயுற்றது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. விரைவில் குணப்பட்டு விடுவார்; புதிய நாடகங்களைத் தயாரிப்பார் என்றெல்லாம் உரிமையாளர்கள் எண்ணினார்கள். நம்பிக்கையோடு சிகிச்சை செய்து வந்தார்கள்.

எம்பிரஸ் தியேட்டர்

சுவாமிகளின் பழைய நாடகங்கள் சில பாடம் கொடுக்கப் பெற்றன. வள்ளி திருமணம், அல்லியர்ஜுனா, குலேபகாவலி முதலிய நாடகங்களை நடித்தோம். இந்த நேரத்தில் சென்னை கண்ட்ராக்டு முடிவடைந்து விட்டது. மீண்டும் ஒரு மாத காலம் சென்னையிலே சொந்தமாக நாடகம் நடத்த முடிவு செய்தார்கள். கிராண்டு தியேட்டரில் தொடர்ந்து நடத்துவதைவிட வேறொரு தியேட்டருக்குப் போவது நல்லதென்று எண்ணி, திருவல்லிக்கேணி எம்பிரஸ் தியேட்டரில் நடத்த ஏற்பாடாயிற்று.

இப்போது ஸ்டார் டாக்கீஸ் என்னும் பெயரோடு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வருகிறதல்லவா? இதுதான் அந்த நாளில் எம்பிரஸ் தியேட்டராக விளங்கியது. தியேட்டர் மாறியதும் கம்பெனி வீடும், எங்கள் வீடும் திருவல்லிக்கேணிப் பகுதிக்கு மாற்றப்பட்டன.

திருவல்லிக்கேணிக்கு வந்ததும் எங்களுக்கு நோய் இன்னும் அதிகமாயிற்று. அம்மா, அப்பா, தம்பி பகவதி, தங்கை சுப்பு எல்லோருமே காய்ச்சலில் படுத்துவிட்டார்கள். நாடகங்களுக்கு வசூல் இல்லாததால் செலவுக்குப் பணம் கிடைப்பது கூடக் கஷ்டமாகிவிட்டது.

பாட்டியார் மறைவு

இந்த நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து எங்கள் பாட்டி இறந்து போனதாக ஒருநாள் தகவல் வந்தது. அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஒத்துப் போகாததால் பாட்டி தம்இளைய மகனுடன் திருவனந்தபுரத்தில் இருக்க நேர்ந்ததாக முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த மரணச்செய்தி வந்த அன்று இரவு, நாடகம் வைக்கப் பெற்றிருந்தது. உரிமையாளர்களில் ஒருவரான சின்னையா பிள்ளை காலையில் வந்த கடிதத்தை இரவு ஏழு மணிக்குக் கொண்டு வந்து தந்தையாரிடம் கொடுத்தார். இருவரும் ஏதேதோ பேசினார்கள். எல்லோரும் காய்ச்சலோடு குளித்துவிட்டு நாடகத்தில் நடிக்கச் சென்றோம். ஊருக்குப் புறப்படும் எண்ணம் கைவிடப்பட்டது. வீட்டுச் செலவுக்குக் கம்பெனியிலிருந்து சரியாகப் பணம் கிடைப்பதில்லை. எல்லோரும் நோயுற்றதால், வீட்டில் யாரும் சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லாதிருந்தது. ரொட்டியும், காபியும்தான் எல்லோருக்கும் உணவு. இப்படியே நாட்கள் ஓடின. நாடகமும் ரூ. 50, 60 வசூலில் நடந்து கொண்டிருந்தது.

காமேஸ்வர ஐயர்

உரிமையாளர்களில் இருவர் ஊருக்குப் போய்ச்சேர்ந்தார்கள். பழனியாப்பிள்ளை, கருப்பையாபிள்ளை, இருவர் மட்டுமே இருந்து நிர்வாகத்தை நடத்தி வந்தார்கள். கம்பெனி தள்ளாடியது. இந்தச் சமயத்தில் திரு. காமேஸ்வர ஐயர் என்ற ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் கருப்பையாபிள்ளையின் நண்பர். அவர் தாமாகவே கம்பெனி நிர்வாகங்களில் தலையிட்டுக் கம்பெனியை வேலூருக்குக் கொண்டுபோக ஏற்பாடுகள் செய்தார். அவருடைய முயற்சியால் எல்லோரும் சென்னையை விட்டு வேலூருக்கு வந்து சேர்ந்தோம்.

வேலூர் தோட்டப்பாளையம் கொட்டகையில் நாடகங்கள் தொடங்கின. நாடகங்களுக்கு வசூல் நல்ல முறையில் இருந்து வந்தது. அப்போது தோட்டப்பாளையம் கொட்டகைக்குச் சொந்தக்காரராக இருந்தவர் திரு க. மாணிக்க முதலியார். இவரைக் கழுதை மாணிக்க முதலியார் என்றே இரசிகர்கள் கூப்பிடு வார்கள். இவர் அந்த நாளில் ஒரு சிறந்த ‘ராஜபார்ட்'டாக விளங்கினார். இவருடைய நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். வடபகுதி மாவட்டங்களில் மிகவும் பெயர் பெற்ற நடிகர் இவர். நன்றாகப் பாடக் கூடியவர். பெயருக்குமுன் வந்த தலையெழுத்து ‘க’ வாக இருந்ததால் குறும்புத்தனமான இரசிகர்கள் இவருக்கு கழுதை மாணிக்கம் என்ற ப்ட்டத்தைச் சூட்டி விட்டார்கள்.

மறக்க முடியாத மசால்வடை

சென்னைக்கு வந்தபின் நாடகத்தின் நடுவில் சில நிமிடங்கள் இடைவேளை விடுவது வழக்கமாகி விட்டது. வேலூரில் அந்த வழக்கம் தொடர்ந்தது. இடைவேளைக்காக கொட்டகைக்கு உள்ளேயிருந்த சிறிய ஒட்டலில் உப்புமா, மசால்வடை போடுவார்கள். மிக அற்புதமாக இருக்கும். மறக்கமுடியாத மசால் வடை. எங்கள் தந்தையார் வாங்கிக்கொண்டு வந்து அன்போடு கொடுப்பார். அந்த மசால் வடையின் சுவை இன்னும் நினைவை விட்டு அகலவில்லை.

வேலூருக்கு வந்த பின்னும் எங்கள் காய்ச்சலுக்கு விடிவு ஏற்படவில்லை. அடிக்கடி வந்து தொல்லை கொடுத்துக் கொண் டிருந்தது.

வள்ளி திருமணம்

ஒரு நாள் வள்ளி திருமணம். சின்னண்ணா வள்ளி வேடம் தாங்குவது வழக்கம். இரண்டு நாட்களாக அண்ணாவுக்குக் கடுமையான காய்ச்சல். வேறு நடிகர் இல்லாததால் முதல்நாள் காய்ச்சலோடு நடித்தார். வள்ளி திருமணத்தன்று அவரால் எழுந்து நிற்கவே முடியவில்லை . இரவுக்குள் சரியாகிவிடுமென்ற நம்பிக்கையோடு ஏதேதோ வைத்தியம் செய்தார்கள்.

இரவு மணி எட்டு. வழக்கம்போல் எல்லோரும் வேடம் புனைவதற்காகக் கொட்டகைக்கு வந்துவிட்டோம். 9.30 மணிக்கு நாடகம் தொடங்க வேண்டும். முதலாளிகளும் எங்கள் தந்தை யாரும் சின்னண்ணாவைச் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள்.

“என்ன முத்து! நடிக்கமுடியுமா?” ......இது முதலாளியின் கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதிலே கிடைக்கவில்லை. அண்ணாவால் பேசவே முடியவில்லை. கேள்விக்கு விடையாக ஒருமுறை வாந்தியெடுத்தார். அன்று அவரை வள்ளி வேடம் போட்டு நாடகம் நடத்த இயலாதென்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்த யோசனை?...

“ஏண்டா பசங்களா! யாராவது வள்ளியாக நடிக்கிறீங்களாடா? இல்லேன்ன நாடகத்தை நிறுத்த வேண்டியதுதான்...” அடிக்கடி இப்படி யாருக்காவது உடல் நலமில்லாது போனால் அடுத்த வேடத்தைப் புனைய ‘நான் முந்தி நீ முந்தி’ என்று நடிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வருவது வழக்கம். எல்லோரும் அநேகமாக எல்லா நாடகப் பாடங்களையும் ஒரளவுக்குக் கேள்வியிலேயே நெட்டுருப் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால், இன்று முதலாளியின் கேள்வி, பலர் வாயிலாகமீண்டும். மீண்டும் எதிரொளித்ததே தவிர யாரும் நடிக்க முன்வரவில்லை.

யார் வள்ளி?

மணி 9 ஆகிவிட்டது. நாடகத்திற்கு அன்று நல்ல வசூல். நடிகர்கள் எவரும் தாமாக முன்வராததால், சில நடிகர்களை. அணுகி வள்ளியாக நடிக்கும்படி முதலாளிகள் வற்புறுத்தியும் பார்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை.

அப்போது குழுவில் இருந்தவர்களில் நான் மிகச் சிறுவன். எனவே என்னை யாரும் கேட்கவில்லை “நான் வேண்டுமானல், நாரதராக நடிக்கிறேன்” என்றார் ஒரு நடிகர். ஏற்கனவே ஒரு தடவை நான் நோயுற்றிருந்தபோது நடித்தவர் அவர். இன்னும் சிலரும் நாரதராக நடிக்க முன்வந்தார்கள். நான்தான் எப்பொழுதும் நாரதராக நடிப்பது வழக்கம்.

பல நாரதர்கள் முன் வந்ததும், “சண்முகம் வள்ளியாக நடிக்கட்டுமே” என்றது ஒரு குரல்.

“ஆ! சரியான யோசனை! அவன் நடித்துவிடுவான் அண்ணா. முதல் மணியை அடிக்கச் சொல்லுங்கள். சண்முகம்தான் வள்ளி” என்றது மற்றொரு குரல். முதலாளிகள் என்னை நெருங்கினார்கள். வானளாவப் புகழ்ந்தார்கள். தைரியம் கூறினார்கள். “நீதான் நடிக்க வேண்டும்” என்றார்கள். நான், “எனக்குக் கொஞ்சம் கூடப் பாடமில்லையே” என்றேன்.

வள்ளியின் பாடல்களையெல்லாம் நான் அடிக்கடிசின்னண்ணாவுடன் போட்டி போட்டுப் பாடிக் கொண்டிருப்பது என் தந்தையாருக்குத் தெரியும். அவர் என் அருகில் வந்து,

“டே, பயலே! சும்மா போடுடா. நான் பின்னலேநிண்ணா பாடிட்றேன்” என்றார்.

மந்திரம் ஒதினார்

பாடம் சொல்லித் தருவதாகச் சிலர் உற்சாகப் படுத்தி -னார்கள். நான் தயங்கிக் கொண்டே நின்றேன். முதலாளிகளில் ஒருவரான கருப்பையாப்பிள்ளை என்னை ஒருபுறமாகத் துாக்கிக் கொண்டு போனார், காதில் ஒரு மந்திரத்தைச் சொன்னார். அவ்வளவுதான்; நான் நடிப்பதாக ஒப்புக் கொண்டேன்.

நாடகம் நடந்தது. நான் வள்ளியாக நடித்தேன். உளறிக் ’கொட்டாமல் ஒழுங்காகவே நடித்தேன். எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். என்னை நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளச் செய்த அந்த மந்திரம்...! முதலாளி கருப்பையா பிள்ளை என் காதில் ஒதிய அந்த மந்திரம்-என்ன தெரியுமா?

“டே பயலே! நீ இன்னிக்கு வள்ளியாக நடிச்சா உனக்கு முழுசா அஞ்சு ரூபாய் இளும் தருகிறேன்” என்பதுதான்.

முதலாளி கருப்பையாபிள்ளை என் காதில் சொன்ன ஐந்து ரூபாய் ரகசியம் நாடகம் முடியுமுன் நடிகர்களுக்கெல்லாம் தெரிந்து விட்டது. பலர் என்னைப் பார்த்து கேலி செய்யத் தொடங்கினார்கள். அஞ்சு ரூபாய் வள்ளி: அஞ்சு ரூபாய் வள்ளி’ என்று என் காதில் விழும்படிக் கிண்டல் செய்தார்கள். நான் அவற்றையெல்லாம் இலட்சியம் செய்யவேயில்லை. நாடகம் முடிந்ததும் எனக்கு ஐந்து ரூபாய்கள் கொடுத்தார் முதலாளி கருப்பையா பிள்ளை.

அந்த ஊரிலேயே சில நாட்களில் எங்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டது. சின்னண்ணு கம்பெனியின் பிரதம நடிகராய் விட்டதால் அவரது சம்பளம் மாதம் எட்டு ரூபாய்களிலிருந்து இருபத்தி ஐந்து ரூபாய்களாக உயர்ந்தது. எனக்கும் அதே சம்பளம் போடப்பட்டது. தொடக்கத்தில் எங்கள் எல்லோருக்கு மாக மொத்தச் சம்பள வரவு தொண்ணுாற்றி எட்டு ரூபாய்கள். இப்போது மொத்தம் எல்லோருக்கும் நூற்றி நாற்பது ரூபாய்கள் சம்பளம் கிடைத்தது.

ஆசிரியர் குப்புசாமி நாயுடு

வேலூரில் திரு. கே.ஜி.குப்புசாமிநாயுடு கம்பெனிக்கு ஆசிரியராக வந்து சேர்ந்தார். இவர் சுவாமிகளின் மாணாக்கர்களில் ஒருவர். மிகச் சிறந்த பெண்வேடதாரியென்று பலரும் புகழுவார்கள். "தாராச சாங்கம்" நாடகத்தில் ‘தாரை'யாக நடிப்பதில் சிறந்து விளங்கியதால் தாரை குப்புசாமி நாயுடு என்றே இவரைக் குறிப்பது வழக்கம். கம்பெனிக்கு வந்து சேர்ந்த சமயத்தில் இவர் வேடம் புனைவதை நிறுத்திவிட்டு நாடகாசிரியராகவே பணி புரிந்து வந்தார். ஒருநாள் இவர் சுவாமிகளைப் பார்க்க வந்திருந்தார். வந்த இடத்தில் சுவாமிகளுடைய விருப்பத்தின்படி கம்பெனியில் இருக்க ஒப்புக்கொண்டார். கே. ஜி. குப்புசாமி நாயுடு சேர்ந்தபின் மற்றுஞ் சில புதிய நாடகங்கள் தயாராயின. அவற்றில் முக்கியமான நாடகம் ஞானசெளந்தரி, வேலூர் முடிந்ததும் பிரஞ்சிந்தியாவைச் சேர்ந்த பாண்டிச்சேரிக்குப் பயணமானோம்.

ஞானசெளந்தரி நாடகம்

பாண்டிச்சேரியில் எனக்கு ஞானசெளந்தரி பாடம் கொடுக்க பெற்றது. சின்னண்ணாவுக்கு ஞானசெளந்தரியின் சிற்றன்னை ‘லேனாள்’ பாடம் கொடுத்தார்கள். பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே அவசர அவசரமாக இந்தப் புது நாடகத்தை அரங்கேற்ற முயற்சியெடுத்துக் கொண்டார்கள். பாடத்தை நெட்டுருப் பண்ணுவதற்குக்கூட நாட்கள் போதாது. மிகவும் துரிதப் படுத்தினர்கள். ஞானசெளந்தரி மிகப் பெரிய பாடம். பாடத்தைப் பார்த்தவுடனேயே எனக்குப் பயமாக இருந்தது. நாடகத்தில் ‘லேனா'ளின் சூழ்ச்சியால் ஞானசெளந்தரியின் இருகைகளும் வெட்டப்படுகின்றன. பாதி நாடகம் முழுதும் ஞானசெளந்தரி கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டே நடிக்கவேண்டும். இந்த விஷயத்தைக் கேட்டவுடன் எனக்கு மேலும் பயம் அதிகரித்தது. பாடம் கொடுத்தவுடனேயே நாடகத்திற்குத் தேதியும் குறித்து விட்டார்கள். ஒத்திகைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

கடுக்கன் பரிசு

நாடக அரங்கேற்றத்திற்கு இன்னும் இரண்டே நாட்கள். நான் சரியாகப் பாடத்தை நெட்டுருப் பண்ணவில்லை. முதலாளி கருப்பையாபிள்ளை எங்கள் வீட்டுக்கு வந்தார். ஒரு ஜதைக் கடுக்கன்களை என்னிடம் கொடுத்தார். அதன் விலை பத்து ரூபாய், அப்போது பாண்டிச்சேரியில் ஒரு பவுனின் விலையே பதின்மூன்று ரூபாய்கள்தான். அரைப் பவுனில் செய்யப்பட்டிருந்த அந்த ஐந்து கல்பதித்த கடுக்கனைக் கண்டதும் எனக்கு மிகவும் ஆசை உண்டாயிற்று. வாங்கித் தரும்படி அப்பாவிடம் வற்புறுத்தினேன். உடனே கருப்பையாபிள்ளை “ஞானசெளந்தரி பாடத்தை நாடகத்தன்று சரியாக ஒப்பித்து விட்டால் இதை உனக்கு இனமாகவே கொடுத்து விடுகிறேன்” என்றார்.

வேலூரில் வள்ளி நாடகத்தின்போது ஐந்து ரூபாய்கள் செய்த அற்புதத்தைப் பார்த்தாரல்லவா? இம்முறையும் அவருடைய யோசனை பலித்தது. கடுக்கன் போட்டுக்கொள்ளவேண்டு மென்ற ஆசையில் ஒரே மூச்சாக உட்கார்ந்து ஞானசெளந்தரி பாடத்தை நெட்டுருப் போட்டு விட்டேன். வாக்களித்தபடி கடுக்கனைப் பரிசாகப் பெற்றேன்.

முதல் நாடகத்தன்று பிலேந்திரன் ஞானசெளந்தரியைக் காட்டில் சந்தித்து அழைத்துப் போகும் காட்சியில், ஞாபக மில்லாமல் பின்னல் கட்டிக் கொண்டிருந்த கைகளை வெளியே எடுத்து விட்டேன். சபையோர் கொல் வென்று சிரித்து விட்டார்கள். இரண்டாவது நாடகத்திலிருந்து முன் ஜாக்ரதையாக என் கைகள் வெட்டப்பட்டவுடன், கைகளிரண்டையும் பின்புறமாகச் சேர்த்து வைத்து, நாடா போட்டுக் கட்டி விட்டார்கள்.

சுவாமிகளின் நாடக ஆர்வம்

பாண்டிச்சேரியில் சுவாமிகளின் உடல்நிலை சுமாராக இருந்தது. அவரும் அடிக்கடி நாடகங்களுக்கு வருவார். உள்ளே பக்கத் தட்டிக்கருகே அவருக்காக ஒரு கான்வாஸ் சேர் போடப் படும். சுவாமிகள் அதில் படுத்துக்கொண்டு கடைசிவரை நாடகத்தைப் பார்த்துக்கொண்டேயிருப்பார். நடிகர் யாராவது பாடம் உளறில்ை சுவாமிகள் அவர்களை எளிதில் விடமாட்டார். காட்சி முடிந்தவுடன் உளறிய நடிகர் சுவாமிகள் இருக்கும் பக்கம் போகவே பயப்படுவார். நடிகரைக் கூப்பிட்டு அவர் பாடம் உளறியதைச் சைகையாலேயே சுட்டிக் காட்டுவார். சில சமயங்களில் அடிக்கவும் முயலுவார். கை கால்கள் சரியாக விளங் காத நிலையில் இருந்ததால் நடிகர்கள் அடிவிழாமல் தப்பித்துக் கொள்ளுவார்கள். எல்லா நாடகங்களும் சுவாமிகளுக்கு மனப் பாடம். நாடகப் புத்தகத்தை வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கும் வழக்கமேயில்லை.

உளறலும் பாராட்டும்

ஒரு நாள் பாதுகா பட்டாபிஷேகம் நாடகம் நடந்தது. சின்னண்ணா டி. கே. முத்துசாமி பரதனாக நடித்தார். கேகய நாட்டில் பரதன் தீயகனாக் கண்டு, அதைத் தம்பி சத்துருக்கனனிடம் சொல்லும் காட்சியில், ‘தம்பி சத்துருக்கனா’ என்பதற்குப் பதிலாகத் “தம்பி லட்சுமணா” என்று சொல்லிவிட்டார். சபையோர் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

இலங்காதகனம், கலோசனசதி ஆகிய நாடகங்களில் சின்னண்ணா ராமராகவும், நான் லட்சுமணனுகவும் நடிப்பது வழக்கம். பாதுகா பட்டாபிஷேகத்திலும் எனக்கு லட்சுமணன் வேடந்தான் கொடுக்கப்பட்டிருந்தது. சின்னண்ணா பரதனாக நிற்பதை மறந்து, ராமர் வேடம் போட்டுப் பேசிய பழக்கத்தில் “தம்பி லட்சுமணா” என்று தவறுதலாகச் சொல்லி விட்டார். ஆனால் அந்தத் தவறை உடனே புரிந்து கொண்டு,

“தம்பி சத்ருக்கனா! எப்போதும் அண்ணன் ராமச்சந்திரனையும், தம்பி லட்சுமணனையும் என் மனம் நினைத்துக் கொண்டே யிருப்பதால் வாய் தவறி உன்னையும் லட்சுமணாவென்றே அழைத்து விட்டேன்” என்று பேசிச்சமாளித்தார். அண்ணாவுக்கு அப்போது வயது பன்னிரெண்டு இந்த இளம் வயதில் இவ்வளவு சாதுரியமாகச் சமாளித்ததற்காகச் சபையோர் அனைவரும் கரகோஷம் செய்து பாராட்டினார்கள். காட்சி முடிந்து உள்ளே வந்ததும் சுவாமிகள் சின்னண்ணாவைக் கூப்பிட்டார். அவருக்குப் பயந்தான். தன்னுடைய தவறுதலுக்காகச் சுவாமிகள் கோபித்துக் கொள்வாரென்றெண்ணி நடுங்கிக்கொண்டே வந்து நின்றார், சுவாமிகள் அண்ணாவை அருகில் அழைத்து, கண்களில் மகிழ்ச்சிப் பரவசத்துடன் இடது கையால் தட்டிக் கொடுத்தார்.

‘ரம்’ செய்த ரகளை

பாண்டிச்சேரியில் காமாட்சியம்மன் கோயில் தெருவில் நாங்கள் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுக்கு அடுத்தாற்போல் ஒரு பிரபல வழக்கறிஞர் வசித்து வந்தார். அவருக்கு நாடகக்காரர்கள் என்றாலே பிடிப்பதில்லை, நாங்கள் அடிக்கடி பாடிக் கொண்டிருப்போம். எங்கள் வீட்டுச் சுவரையொட்டினாற் போலிருந்தது அவரது படுக்கையறை. அந்த வழக்கறிஞர், நாடக மில்லாத நாட்களில் இரவு நேரங்களில் நாங்கள் பாடும்போதெல்லாம் ஏதாவது முணு முணுத்துக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் எங்கள் தந்தையார் ‘ரம்’ என்னும் ஒரு புது வகையான மதுவைக் குடித்து விட்டு வந்திருந்தார். போதை தலைக்கேறி விட்டது; ஒரே குஷி, இரவு ஒன்பது மணி: தமது கெம்பீரமான குரலையெழுப்பிப் பாடத் தொடங்கினார். அவரது பாட்டைக் கேட்டவுடன் வழக்கறிஞருக்குப் பிரமாதக் கோபம் வந்து விட்டது. ஆங்கிலமும், தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில் ஏதேதோ ஏசத் தொடங்கினார். இரவு ஒன்பது மணிக்குமேல் “இப்படிக் கழுதைபோல்கத்தினால் நாங்கள் எப்படித் துரங்குவது?” என்று சத்தம் போட்டார். வீட்டு வாசவில் ஒரே குழப்பம். எங்கன் தாயார் வழக்கறிஞரைச் சமாதானம் செய்தனுப்பினார்.

நள்ளிரவில் கச்சேரி

தந்தையார் பாடுவதை நிறுத்திவிட்டு, அவசரமாக வெளியே சென்றார், நாங்கள் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் வீட்டிலேயே முத்துக் கன்னி மேஸ்திரி என்ற கம்பெனியின் தையல்காரரும் தம் மனைவி யோடு குடியிருத்தார். மேஸ்திரி அப்பாவுக்கு நண்பர். எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் வெளியே போய்வருவது வழக்கம். அன்று மேஸ்திரியும் நல்ல குடிபோதையில் இருந்தார். அப்பா மேஸ்திரியை வீட்டுக்குக் காவல் வைத்து விட்டுத் தனியாக வெளியே சென்றதால் எங்களுக்கு மேலும் வியப்பாக இருந்தது. பதினைந்து நிமிடங்களில் இரண்டு புஷ் வண்டிகள் வந்து வாசலில் நின்றன. அவற்றில் ஆர்மோனியம் திரு வைத்திலிங்கம் பிள்ளையும், மிருதங்கம் திரு துரைசாமி நாயுடுவும், கம்பெனியில் அப்போது மிகவும் பலசாலியென எல்லோராலும் கருதப் பெற்ற திரு கோபால பிள்ளையும் வந்து சேர்ந்தார்கள்.

புஷ்வண்டி என்பது ரிக்‌ஷாவைப் போன்று மனிதர்கள் இழுக்கும் வண்டிதான். ரிக்‌ஷாவை முன்னால் நின்று இழுத்துச் செல்வார்கள். இது நாலு சக்கிர வண்டியாதலால் பெரும்பாலும் பின்னல் நின்று தள்ளிச் செல்வது வழக்கம். வண்டியில் உட்கார்ந்திருப்பவர்களே தம் கையில் முன்னாலுள்ள கம்பியைப் பிடித்துக் கொண்டு வண்டியைச் செலுத்த வேண்டும். இந்தப் புஷ் வண்டி அப்போது, பாண்டிச்சேரியிலும் கடலூரிலும் காணப்பட்டது. இப்போது நான் பார்த்ததாக நினைவில்லை.

புஷ் வண்டிகளில் ஆர்மோனியம் மிருதங்கத்துடன் இவர்கள் எல்லோரும் வந்ததும் என்ன நடக்குமோவென நாங்கள் பயந்து விட்டோம். இரவு மணி பத்திருக்கும். வீட்டுக்குள் கச்சேரி தொடங்கியது. தந்தையார் தம்மால் முடிந்த மட்டும் மேலே குரலெழுப்பிப் பாடினார். வைத்திலிங்கம் பிள்ளையும் துரைசாமி நாயுடுவும் அவரோடு சேர்ந்து வாசித்தார்கள். முத்துக்கன்னி மேஸ்திரியும், கோபால் பிள்ளையும் வீட்டு வாயிற் படியில் கையில் தடியோடு காவல் புரிந்தார்கள்.

வழக்கறிஞரின் மன்னிப்பு

வழக்கறிஞர் வெலவெலத்துப்போய்விட்டார். அவர் ஆர்ப் பாட்டமெல்லாம் அடங்கி விட்டது, சண்டைக்குக் கச்சை கட்டி நிற்பதைக் கண்டதும், அவர் குரல் கீழே இறங்கிவிட்டது. உள்ளே நடக்கும் கச்சேரியைக் கேட்க வீதியில் ரசிகர்கள் கூடிவிட்டார்கள். பிறகு வழக்கறிஞர், முத்துக்கன்னி மேஸ்திரியிடம் வந்து சமாதானமாகப் பேசினார்.முதலில் தாம் ஏசிப் பேசியதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். எப்படியாவது இந்தக் கச்சேரியை, நிறுத்தினால் போதும் என்றாகி விட்டது அவருக்கு. கோபாலபிள்ளை ஒருவாறு எல்லோரையும் சமாதானப்படுத்தினர். கச்சேரியை நிறுத்தச் செய்தார். ஆர்மோனியம், மிருதங்க வித்துவான்களை வீட்டுக்கழைத்துச் சென்றார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு வழக்கறிஞர் எந்த வம்புக்கும் வருவதேயில்லை.

தங்கை பிறந்தநாள்

1921ஆம் ஆண்டு டிசம்பர் கடைசி நாள். அன்று அபிமன்யு சுந்தரி மாலை நாடகம்; நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அன்னயார் எல்லோருக்கும் உணவு பரிமாறினார்கள். இரவு ஒரு மணியளவில் உறங்கினோம். ஏதோ சலசலப்புக் கேட்டு விழித்தோம். இரவு மூன்று மணிக்கு, எங்களுக்கு இரண்டாவதாக ஒரு தங்கை பிறந்திருப்பதை அறிந்தோம்; மகிழ்ந்தோம்.

காமாட்சியம்மன் கோயில் தெருவில் குடியிருந்தால் தங்கைக்குக் காமாட்சி எனப் பெயரிடப் பெற்றது தங்கை பிறந்த இரண்டாம் நாள் முதன் முதலாக வீடு பெருக்குவதற்கு ஒரு வேலைக்காரியை நியமித்ததாகத் தந்தையார் தமது நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். எனவே ஏழு குழந்தைகளுக்குத் தாயாகும் வரையில் எங்கள் வீட்டில் வேலைக்காரி வைக்க வேண்டிய அவசியமே இல்லாதபடி அன்னையாரே யாவற்றையும் கவனித்து வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

எங்கள் அன்னையார் ஒர்.அபூர்வப்பிறவி. அவர்கள் காலையில் எழுந்திருப்பதையும் இரவில் உறங்குவதையும் நான் பார்த்ததே யில்லை. நாங்கள் விழித்தெழுந்தவுடன் வெந்நீர் தயாராயிருக்கும். அவர்களேதாம் குளிப்பாட்டி விடுவார்கள். எங்கள் எல்லோருக்கும் தலைமுடி நீளமாக யிருக்கும். எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் நாட்களில் பெரியண்ணாவுக்கும் தாயார் தாம் தலை தேய்த்து விடுவார்கள். அவர்கள் எப்பொழுது ஒய்வு எடுத்துக் கொள்வார்களோ எங்களுக்குத் தெரியாது. இயந்திரம் போல் சதா வேலை செய்து கொண்டே யிருப்பார்கள். அவர்கள் பிரசவ அறையிலிருந்த நாட்களில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். தையல் வேலை முத்துக்கன்னி மேஸ்திரி எங்களுடன் குடியிருந்தா ரென்று குறிப்பிட்டேனல்லவா? அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது மனைவியார் எங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தார்.

பாண்டிச்சேரியில் நாடகங்களுக்கு நல்லவரவேற்பிருந்தது . பாண்டிச்சேரி முடிந்து திண்டிவனம் சென்றோம். அங்கும் நல்ல வசூல். சென்னையில் வசூல் இல்லாமல் கஷ்டப்பட்ட நிலை மாறி விட்டது. தொடர்ந்து வேலூர், பாண்டிச்சேரி, திண்டிவனம் ஆகிய மூன்று ஊர்களிலும் நல்ல வசூலாயிற்று. கருப்பையா பிள்ளை மற்ற முதலாளிகளை விடக்கொஞ்சம் தாராளமான மனம் உடையவர்: நுணுக்கம் தெரிந்தவர். அவரும் காமேசுவர ஐயரும் தாம் இப்போது கம்பெனியை நிருவகித்து வந்தார்கள். உழைப்புப் பங்காளியான பழனியாப் பிள்ளை ஒன்றுஞ் செய்யத் தோன்றாது அவர்களோடு பேருக்கு ஒத்துழைத்தார்.

ஏ. கே. சுப்பிரமணியன்

திண்டிவனத்தில் பாட்டா இராமகிருஷ்ணன், கம்பெனியை விட்டுப் போய்விட்டார். அவருடைய ஸ்தானத்தை அருப்புக் கோட்டை ஏ. கே. சுப்பிரமணியன் பெற்றார். சுப்பிரமணியன் மிகச் சிறந்த பாடகர், நல்ல வளமான சாரீரம்; இயற்கையாகவே அவருடைய குரலில் ‘பிருகா’ பேசும். சென்னைக்கு வந்தவுடனேயே பல நாடகங்களில் சுப்பிரமணியன் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி விட்டார், இப்பொழுது பாட்டா இராம கிருஷ்ணன் போய்விட்டதால், எல்லா வேடங்களும் அவருக்கே கொடுக்கப் பெற்றன. சுப்பிரமணியன் நடித்த சத்யவான், கோவலன், வள்ளி நாடகத்தில் வேலன் - வேடன் - விருத்தன் முதலிய பாத்திரங்களில் அவர் பாடிய பாடல்கள் இன்னும் என் நினைவை விட்டு அகலவில்லை. விருத்தங்கள் பாடும்போது அவர் ரசிகர்களிடத்தில் கரகோஷம் பெறுவார். இளம்பருவத்தின்றாகிய சுப்பிரமணியனின் அபாரமான இசைத் திறமை அந்த நாளில் எல்லோராலும் பாராட்டப் பெற்றது.

திண்டிவனத்தில் கண்டம்

திண்டிவனத்தில் எனக்கு ஒருபெரிய கண்டம் ஏற்பட்டது. ஒருநாள் ‘இலங்காதகனம்’ நாடகம் நடந்து கொண்டிருந்தது. தான் முதலில் இலட்சுமணனுகவும் கடைசியில் அட்சய குமாரனாகவும் நடிப்பது வழக்கம். அந்த நாளில் தனியே உட்கார்ந்து ஒருவரோடு ஒருவர் அரட்டையடிப்பது இல்லை. பெரும்பாலும் வேடம் புனையாத நேரங்களில் பக்கப் படுதாவின் அருகே நின்று நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம்.

அன்று கடல் காட்சியைப் போட்டுக்கொண்டிருந்தார்கள் முன்னல் காட்டுத் திரை விடப்பட்டிருந்தது. அனுமார் வானரங் களுடன் பாடிக் கொண்டிருந்தார்.நான் இலட்சுமண வேடத்தை கலைத்துவிட்டு, வெறும் உடம்போடு மேடையின் நடுவே நின்று காட்சி அமைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது திண்டிவனத்தில் மின்சார விளக்குகள் இல்லை. கியாஸ் விளக்கு கள்தான் போடப்பட்டிருந்தன. மேடையில் காட்சி அமைப்பைப் பார்த்துக் கொண்டிருந்த என் தலைக்கு நேராக ஒரு கியாஸ் விளக்குக் கட்டப்பட்டிருந்தது. கடல் தாண்டும் ‘அட்டை அனுமாரை அங்குமிங்குமாக இழுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் சுவையோடு அந்தக்காட்சியை ரசித்துநின்றேன்.

யாரோ ஒரு காட்சி யமைப்பாளர் மேடையின் நடுவே: தொங்கிக் கொண்டிருந்த கியாஸ் விளக்கை மேலே தூக்கிக் கட்ட முயன்றிருக்கிறார், விளக்கோடிருந்த நூல்கயிறு பரண்மீது எங்கோ மூங்கிலில் சிக்கித் தேய்ந்து போயிருக்கிறது. அவர் விளக்கை வெட்டி இழுத்ததும் கயிறு அறுந்து போய்விட்டது. பெரிய கியாஸ் விளக்கு அப்படியே நேராகக் கீழேநின்ற என்மேல் விழுந்தது. நான் ‘அம்மா’ என்றலறிக் கீழேசாய்ந்தேன். விளக்கு. சுக்கல் சுக்கலாக உடைந்துவிட்டது.

தந்தையின் ஆவேசம்

என் அலறல் சத்தத்தைக் கேட்டதும் தந்தையார் ஓடி வந்தார். மேலே கட்டப்பட்டிருந்த கியாஸ் விளக்கு என்மேல் அறுந்து விழுந்து விட்டதையும், நான் கீழே கிடப்பதையும் கண்டார். ஆவேசம் கொண்டார். அதற்குள் சிலர் ஓடி வந்து என்னைத் துளக்கிச் சென்றார்கள். தந்தையார் தம்மையே மறந்து விட்டார். பவுடர் போடுமிடத்திலும் வெளியேயும் போடப் பட்டிருந்த கியாஸ் விளக்குகளைத் தம் கையாலேயே அடித்து உடைத்தார். அவரைப் பிடித்து நிறுத்தச் சிலர் பெரும் பாடுபட் டார்கள். எனக்குப் பெரிய அபாயம் ஏதுமில்லை யென்பதை விளக்கினார்கள்.

கியாஸ் விளக்கு என் தலையோடு உராய்ந்து கொண்டு இடது தோளில் விழுந்தது. விளக்கின் அடியிலிருந்த கம்பி ஆழ மாக என் தோளில் காயத்தை உண்டாக்கியது; இரத்தம் பீறிட் டது. நான் மூர்ச்சித்து விட்டேன். மேடையில் காற்றில்லாத தால் என்னை வெளியே தூக்கிவந்து கொட்டகையின் பிரதான வாயிலருகே ஒரு கட்டிலில் படுக்க வைத்தார்கள். அன்று நாடகம் பார்க்க வத்திருந்த ஒரு டாக்டர் எனக்குச் சிகிச்சை செய்தார். காயம் விரைவில் ஆறிவிடுமென்றும் பயப்பட வேண்டாமென்றும் என் தந்தைக்கு ஆறுதல் கூறினார்.

நான் மூர்ச்சை தெளிந்தபோது வெளியே கட்டிலில் படுத் திருந்தேன். நாடகம் பார்க்க வந்த ஜனங்களில் பலர் என்னைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள் நாடகம் நடந்து கொண் டிருத்தது. எனக்குப் பதிலாக அட்சயன் வேஷத்தை யாரோ ஒரு நடிகர் போட்டார். படுக்கையில் கிடந்த எனக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. நான் எழுந்து பார்த்தால் மேடை நன்றாகத் தெரியும். ஆனால் தந்தையார் என்னை எழுந்திருக்க விடவில்லை. நாடகம் முடியும் வரை அப்படியே படுத்திருந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் அன்னையார் எனக்குத் ‘திருஷ்டி’ சுற்றிப் போட்டார்கள். மயிலம் முருகப் பெருமான வேண்டிக் கொண்டார்கள். காயம் ஆறுவதற்கு ஒரு வாரம் ஆயிற்று. அம்மாவோடும் அப்பாவோடும் அருகிலிருந்த மயிலத்திற்குச் சென்று முருகப் பெருமானைத் தரிசித்து வந்தோம்.

வண்டிப் பாளையம்

திண்டிவனத்தில் இரண்டு மாத காலம் நாடகம் ஆடிய பின் திருப்பாதிரிப்புலியூருக்கு அருகிலுள்ள வண்டிபாளையம் சென்றாேம். வண்டிப்பாளையத்தில் நல்ல வசூல் இல்லை. திருப்பா திரிப்புலியூரிலேயே நாடகம் நடிக்க முதலாளிகள் முடிவு செய் தார்கள். அவ்வாறே உடனடியாகத் திருப்பாதிரிப்புலியூரில் நாடகம் துவக்கப்பட்டது. நல்ல வருவாயும் ஏற்பட்டது. அங்கு வீடு கிடைக்காததால் நாங்கள் வண்டிப்பாளையத்திலேயே இருப்தோம். நாடகத்திற்குப் போய் விட்டு, குதிரை வண்டியில் வண்டிப்பாளையம் திரும்புவோம். இப்படியே தொடர்ந்து நடை பெற்று வந்தது.

ஒருநாள் எங்கள் தந்தையாருக்கும், மானேஜர் நிலையி லிருந்த காமேஸ்வர ஐயருக்கும் பெரிய சச்சரவு ஏற்பட்டது. காமேஸ்வர ஐயர் ஏதோ தவருகப் பேச, தந்தையார்கொட்டகை யில் போட்டிருந்த பந்தல் காலைப் பிடுங்கிக்கொண்டு அவரை அடிக்கப்போக, ஒரே குழப்பம் ஏற்பட்டு விட்டது. ஐயரை எப்படியும் அடித்தே தீருவது என்று அப்பாவும் முத்துக்கன்னி மேஸ்திரியும் பலமுறை முயன்றார்கள்.

சின்னையா யிள்ளை வருகை

காமேஸ்வர ஐயர் நடிகர்களிடமும், ஏனைய தொழிலாளர் களிடமும் நடந்து கொண்டவிதம் தந்தையாருக்குப் பிடிக்க வில்லை.

உரிமையாளர்களும் இதில் போதிய கவனம் செலுத்த வில்லை. கம்பெனியின் முக்கிய பங்குதாரரான சின்னையாபிள்ளை சென்னையிலிருந்தது போனவர் திரும்பி வரவே இல்லை, காமேஸ் வர ஐயரின் நடத்தையைப் பற்றியும் அவர் தொழிலாளர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றியும் தந்தையார் மதுரையி லிருந்த சின்னையாபிள்ளைக்குக் கடிதம் எழுதினார். கடிதத்திற்குப் பதில் இல்லாததால் ஒரு நாள் மதுரைக்கே நேரில் சென்று விவரங்களே எடுத்துரைத்தார். தந்தையார் மதுரைக்குச் சென் நிருப்பதை அறிந்ததுமே காமேஸ்வர ஐயர் கம்பெனியிலிருந்து விலகிவிட்டார். சகல விவரங்களையும் தந்தையாரின் மூலம் அறிந்த சின்னையாபிள்ளை சில நாட்களில் திருப்பாதிரிப்புலியூர் வந்து கம்பெனியின் நிருவாகத்தை ஏற்றுக் கொண்டார்.

திருப்பாதிரிப்புலியூரில் வசூல் இல்லாததால் மீண்டும் வேலூருக்கு முகாம் மாற்றப்பட்டது. வேலூரிலும் இம்முறை வசூலாகவில்லை. காஞ்சிபுரம் போவதென்று முடிவு செய்தார்கள். காஞ்சிபுரம் வந்தோம். கருடசேவைப் பெருவிழா, நகரில் பிர மாதமாக நடக்கும் சமயம். ஆடிசன்பேட்டை கொட்டகையில் நாடகம். வெளியே ஊரெங்கும் ஒரே ஜனத்திரள். நாடகத்திற்கு மட்டும் வசூல் மிகவும் மோசமாக இருந்தது. சின்னையா பிள்ளை வந்ததும் இந்த நிலை ஏற்படவே எல்லோரும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லையென்று பேசிக் கொண்டார்கள்.

மலேரியாவுக்கு மருத்துவம்

காஞ்சிபுரத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு சித்த மருத்துவர் குடியிருந்தார். சென்னையில் எங்களைப் பீடித்த காய்ச்சல் காஞ்சிபுரத்திலும் தலை காட்டியது. அந்த மருத்துவர் வந்து பார்த்தார். அவரிடம் நாங்கள் நீண்ட காலமாக உபாதைப் படும் நிலையைத் தந்தையார் எடுத்துச் சொன்னார் அவர் நன்கு சிந்தித்து ஏதோ ஒரு பச்சிலையை அரைத்துப் பெரிய உருண்டைகளாக்கி, நாள் ஒன்றுக்கு மூன்று வேலை சாப்பிடும் படியாக மூன்றுநாட்கள் தொடர்ந்து கொடுத்தார். காய்ச்சல் நின்றது. அன்று நின்றதோடு மட்டுமல்ல; இன்று வரை அந்த வேதனைக்குரிய மலேரியாக் காய்ச்சல் எனக்கு வருவதேயில்லை யென்பதை மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன். சித்தமருத்து வத்தில் நம்பிக்கையில்லாத நண்பர்கள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டுகிறேன்.

காஞ்சிபுரத்தில் நாடகம் தொடர்ந்துநடைபெற்று வந்தது. திடீரென்று ஒருநாள் முக்கிய நடிகனக இருந்த ஏ. கே சுப்பிரமணியன் சொல்லாமல் ஒடிப்போய் விட்டார். நாடகம் நிறுத்தப் பட்டது. அவருக்குப் பதிலாக மீண்டும் எங்கிருந்தோ பாட்டா இராமகிருஷ்ணன அழைத்து வந்தார்கள். மழையும் அடிக்கடி பெய்ததால் சில நாட்கள் நாடகம் நிறுத்தப்படவும் நேர்ந்தது. காஞ்சிபுரம் யாருக்குமே வசூலாகாத ஊரென்று சிலபேர் ஊரின் மேல் பழி சுமத்தினார்கள்.

வசூல் இல்லாத நிலையில் நாடகங்கள் நடைபெற்று வந்தன. இந்தச் சமயத்தில் அப்பாவுக்குக் கால் பெருவிரலில் ஒரு விஷக்கல் குத்தியதால் சிறு காயம் ஏற்பட்டது. அதை அவர் அலட்சிய மாய் கவனியாது விட்டு விட்டார். சில நாட்களில் அந்தக் காயம் ரணமாகிச் சீழ் வடிய ஆரம்பித்தது. ரண வைத்தியர் ஒருவர் காயத்தைச் சோதித்துப் பார்த்தார். காயம் பட்ட இடத்திலிருந்த துவாரத்தில் ஒரு சிறு கம்பியைச் செலுத்தினார். அந்தக் கம்பி குதிங்கால் வரை வலியே யில்லாமல் உள்ளே போயிற்று பாதம் முழுதும் புறையோடி இருப்பதாகத் தெரிந் தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்பா வலி பொறுக்க மாட்டாமல் படுக்கையில் கிடந்து சில நாட்கள் கஷ்டப்பட்டார். இதற்குள் காஞ்சீபுரம் நாடகம் முடிந்து விட்டதால் வைத்திய ரிடம் மருந்து வாங்கிக் கொண்டு சைதாப்பேட்டைக்குப் பயணப் பட நேர்ந்தது.

சைதாப்பேட்டை

கம்பெனி சைதாப் பேட்டைக்குப் போன மூன்று நாட் களுக்குப் பிறகு நாங்களும் சைதாப் பேட்டைக்கு வந்து சேர்ந் தோம். முதல் நாடகத்தன்று பெருமழை பெய்தது. நாடகம் நடைபெறவில்லை. மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் நாடகம் துவக்கப் பெற்றது. வசூல் சுமாராக இருந்தது. எங்கள் ஒப் பந்தம் தீர்ந்து விட்டதால் மறுபடியும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென உரிமையாளர்கள் வற்புறுத்தினார்கள். அப்பாவுக்கும் உழைப்புப் பங்காளியான பழனியாபிள்ளைக்கும் சிறு சிறு தகராறுகள் ஏற்பட்டுக் கொண்டே யிருந்ததால் மறு ஒப்பந்தம் எழுதுவது தடைப்பட்டது. பாட்டியின் முதல் ஆண்டுத் திதி அடுத்து வந்ததால் அதற்குக்குடும்பத்துடன் திருவனந்தபுரம் போய் வரவேண்டுமென்றும், அதன் பிறகு ஒப்பந்தம் எழுதிக் கொள்ளலாமென்றும் அப்பா கூறி விட்டார். அந்த நிலையில் எங்களை ஊருக்கு அனுப்ப சின்னையாபிள்ளை இசையவில்லை.

பால மனோகர சபை

சென்னை ராயல் தியேட்டரில் அப்போது திரு தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலரின் பால மனோகர சபையார் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். ராயல் தியேட்டர் என்பது அப்போது சென்னையில் இருந்த எல்லா நாடகக் கொட்டகை களிலும் சிறந்த ஒன்முகக் கருதப் பட்டது. ஆனைக்கவுனிக்கு மேற்புறமுள்ள பாலத்திற்குக் கீழ்ப்பக்கம், சால்ட்கொட்டகைக்கு அருகில் அமைந்திருந்தது. மிகப் பெரிய நாடக அரங்கம்.

அந்தக் காலத்தில் ஒரு கம்பெனியிலிருந்து. மற்றொரு கம்பெனிக்குப் பையன்களைக் கடத்திக் கொண்டுபோவது சாதாரணமாக நிகழ்ந்து வந்தது. இந்தத் திருப்பணிக்கென்றே சில தரகர் களும் நிரந்தரமாக இருந்து வந்தார்கள். நாங்கள் சைதாப் பேட்டைக்கு வந்த நாளிலிருந்தே பாவலரின் தரகர்கள் எங்களுக்கு வலைவீசத் தொடங்கினார்கள். ஒரு நாள் எங்களுக்கு நாடகமில்லாத நாளில் அப்பாவுடன் சென்னைக்குப் போய் பாவலர் கம்பெனியின் நாடகத்தைப் பார்த்து வந்தோம். பாவலர் குடிப்பழக்கம் உள்ளவர். எங்கள் தந்தையாரோ கேட்கவே வேண்டியதில்லை. இருவரும் மிக விரைவில் தோழமை கொண்டு விட்டார்கள்.

வலை வீசும் படலம்

‘பாவலர் கம்பெனிக்குப்போக வேண்டும்’ என்ற எண்ணத்தைத் தந்தையார் அன்னையாரிடம் தெரிவித்தார். அன்னையார் இந்த எண்ணத்தை வண்மையாக எதிர்த்தார். சுவாமிகள் வாய் பேச இயலாத நிலையில் படுக்கையிலிருக்கும் நேரத்தில் கம்பெனியை விட்டும் போவது நல்லதல்லவெனக் கண்டித்தார். தாயாரின் இந்த எண்ணத்தைப் பாவலர் அறிந்ததும், “தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் எனக்கும் குருவைப் போன்றவர். அவரையும் நானே சென்னைக்கு அழைத்து வந்து வேண்டிய சிகிச்சைகளைச் செய்கிறேன். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சமாதானம் கூறினார்.

ஒரு நாள் மாலையில் தந்தையார் சென்னைக்குச் சென்றார். எனக்கும் சின்னண்ணாவுக்கும் மட்டும் மாதம் இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம் தருவதாகப் பாவலர் ஒப்புக் கொண்டார். 250 முன் பணமாகவும் கொடுத்தார். பெரியண்ணாவுக்கு அந்தச் சமயம் ‘மகரக் கட்டு’ வந்து சாரீரம் சரியில்லாதலால் அவரை வேடம் புனைய அப்பா அனுமதிக்கவில்லை. அப்போது சென்னையில் பாவலர் கம்பெனியில் பின் பாட்டுப் பாடும் வழக்கம் இல்லை. அதனால் அப்பாவுக்கும் வேலையில்லை. எங்கள் நால்வருக்கும் அப்பாவுமாகச் சேர்த்து 140 ரூபாய்கள் இங்கே சம்பளம். பாவலர் கம்பெனியில் எனக்கும் சின்னண்ணாவுக்குமே 250 சம்பளம்.

நூற்றிப் பத்து ரூபாய்கள் அதிக வரவு; எங்கள் வளர்ச்சியிலுள்ள ஆர்வம் எல்லாமாகச் சேர்ந்து தந்தையார் பாவலர் விரித்த வலையில் விழுந்து விட்டார். ஒருநாள் இரவு சைதாப் பேட்டையில் ‘சுலோசனா சதி’ நாடகம் முடிந்ததும் இரவு மூன்று மணி சுமாருக்கு பாவலர் அனுப்பியிருந்த காரில் நாங்கள் எல்லோரும் புறப்பட்டோம். சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள பாவலர் வீட்டுக்கு வந்து இரவோடிவராகக் குடியேறினோம். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையிலிருந்து 1922 ஆகஸ்டு 3 ஆம் நாள் இரவு பாவலரின் பால மனோகர சபாவுக்கு வந்து சேர்ந்தோம்.

பாவலரின் திறமை

நாங்கள் வந்த இரண்டாம் நாள் ‘கதரின் வெற்றி’ நாடகம் வைக்கப்பட்டிருந்தது. அன்றைய நாடகத்திற்குச் சர்க்காரின் அனுமதி கிடைக்கவில்லை. பாவலர் காலையிலிருந்து படாத பாடு பட்டார். முன்னாள் இரவே டிராம் வண்டிகளில் பிரமாதமாக விளம்பரங்கள் கட்டப்பட்டுப் புறப்படத் தயாராய் இருந்தன. பாவலர் நேராகக் கவர்னரிடமே சென்றார். அப்போது ராஜதானியின் கவர்னராக இருந்தவர் லார்டு வெலிங்டன். பாவலர் சாரணர் படையில் ஒரு தளபதியாக இருந்தார். அந்தச் சலுகையில் எப்படியோ கவர்னரிடமே விசேஷ அனுமதி பெற்று வந்து விட்டார். பகல் 12மணிக்கு மேல் விளம்பரம் செய்யப் பட்டது. கதரின் வெற்றி நாடகம் சிறப்பாக நடைபெற்றது. அமோகமான வசூல். பாவலரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அன்று நடைபெற்ற கதரின் வெற்றி நாடகத்தில் நாங்கள் நடிக்கவில்லை.

புதிய நாடகங்கள் தயாரான வேகம்

மறுநாள் சுவாமிகளின் ‘சதியனுசூயா’ நாடகம் பாடம் கொடுக்கப்பட்டது. தந்தையாரும் பெரியண்ணாவும் எல்லாப் பாடங்களையும் எழுதிக் கொடுத்தார்கள். நடிகர்கள் மிகவிரைவில் நெட்டுருப் பண்ணிவிட்டார்கள். நாங்கள் வந்து சேர்ந்த ஒன்பதாவது நாள் சனி, ஞாயிறு இரு நாட்களிலும் ‘சதியனுகுயா’ நாடகம் நடத்தப் பெற்றது. ஒரு புதிய நாடகத்தை ஒன்பதே நாட்களில் அரங்கேற்றுவதென்பது வியப்புக்குறிய செய்தி யல்லவா? எங்களுக்கே வியப்பாகத்தான் இருந்தது. அந்த நாளிலிருந்த நடிகர்களின் நினைவாற்றலை எண்ணி அதிசயிக்கவேண்டியதாக இருக்கிறது. இந்த நாளில் குறைந்த பட்சம் பதினைந்து நாட்களாவது ஒத்திகை நடைபெற்றால்தான் சில நடிகர்களுக்குப் பாடமே நெட்டுருவாகும். அந்தக் காலத்தில் நடிகர்களுக்கு. நாடகம், நடிப்பு, வேடம் இவற்றைப்பற்றியே சிந்தனை. இந்தக் காலத்தில் நடிகர்களுக்கு எத்தனை எத்தனையோ சிந்தனைகள்! என்ன செய்ய முடியும்?

பர்த்ருஹரி

அப்போது சென்னையில் ‘பர்த்ருஹரி’ என்னும் ஒரு மெளனப்படம் ஒடிக்கொண்டிருந்தது. பாவலர் அந்தக் கதையை நாடகமாக நடிக்க விரும்பினார். நாலைந்து இரவுகள் சிரமப்பட்டு நாடகத்தை எழுதி முடித்தார். எல்லோருக்கும் பாடம் கொடுத்தார். எனக்கு விக்ரமன் பாடமும், சின்னண்ணா டி. கே. முத்துசாமிக்கு மோகன பாடமும் கொடுக்கப்பட்டது. நடிப்புப் பயிற்சி யளிப்பதற்குக்கூடப் போதிய நாட்கள் இல்லை. நடிகர்கள் எல்லோரையும் ஒரு நாள் படம்பார்க்க அழைத்துப்போனார். ஏறத்தாழப் படக்கதையை யனுசரித்தே நாடகமும் எழுதப்பட்டிருந்ததால் பாவலர் எங்கள் அருகில் இருந்து படத்தில் நடிப்பவர்களைப் போலவே நடிக்கவேண்டும் என்று கூறினார். நாங்களும் உன்னிப்பாக அந்த ஊமைப் படத்தைப் பார்த்தோம். ஒரே நாள் ஒத்திகை நடந்தது. சதியனுகுயா நடைபெற்ற. ஆறாவது நாள் பர்த்ருஹரி நாடகம் அரங்கேறியது. அப்போது சென்னையில் பர்த்ருஹரி படமும் ஒடிக்கொண்டிருந்ததால் ஊமைப் படத்தைவிட நாடகத்திற்கு அமோகமான வருவாய்’ ஏற்பட்டது. எல்லோரும் பாவலரின் அபாரமான ஆற்றலை வியந்து புகழ்ந்தார்கள்.

தேசீயப் புரட்சி நாடகம்

‘கதரின் வெற்றி’ ஒரு தேசியப்புரட்சி நாடகம். தமிழ்: நாட்டில் முதன் முதலாக நடைபெற்ற தேசீய சமூக நாடகம். அந்த நாடகத்தில் சின்னண்ணாவுக்குக் கதாநாயகி மரகதம்: வேடமும், எனக்கு வக்கீல் வேடமும் கொடுத்தார்கள். சின்னண்ணா கைராட்டையைச் சுற்றிக்கொண்டு பாடும் ஒரு பாடல் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

சீரான இந்தியாவில் பேர்போன
தொழில் களெல்லாம்
செத்துக் கிடக்கும் இந்த
சீர்குலைந்த கானவிலே

சேர்ந்த ராட்டின் பெருமை
செப்புவேன் கேளருமை
தீருமே நம் வறுமை..."

பாவலரின் இந்தப் பாடலைச் சின்னண்ணா மரகதமாக வந்து பாடும்போது சபையோர் நீண்ட நேரம் கைதட்டிக் கொண்டே யிருப்பார்கள். நாடகத்தில் இரண்டொரு பாத்திரங்களைத் தவிர எல்லோரும் கதராடைகளையே புனைந்து வருவார்கள். நாடகம் முழுதும் கதர் பிரசாரமாகத்தான் இருக்கும்.

பாவலரின் அவதானம்

பாவலர் அபாரமான நினைவாற்றலுடையவர். மிகச் சிறந்த முறையில் அவதானம் செய்யக் கூடியவர். ‘சதாவதானம் பாவலர்’ என்றே அவரைக் குறிப்பிடுவார்கள். எட்டுப்பேருடைய கேள்விகளுக்கு விடை சொல்லுபவரை ‘அட்டாவதானி’ என்றும், பத்துப் பேருக்கு விடை சொல்லுபவரைத் ‘தசாவதானி’ என்றும், பதினாறு பேருக்கு விடை சொல்லுபவரைச் ‘சோடசாவதானி’ என்றும், நூறு பேருக்கு விடை சொல்லுபவரைச் ‘சதாவதானி’ என்றும், குறிப்பது வழக்கம். இக்கலையில் தேர்ச்சி பெற்றோர் இப்போது மிகக் குறைந்துவிட்டார்கள். பாவலர் இந்தக்கலையை நன்கு பயின்றிருந்தமையாம் நாங்கள் எல்லோரும் அவரை அவதானம் செய்து காண்பிக்குமாறு வேண்டினோம். சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள கம்பெனி வீட்டில் ஒருநாள் வேடிக்கையாகத் தசாவதானம் நடைபெற்றது. நான் பாவலரின் முதுகின் பக்கமாக இருந்து உளுந்தம்பருப்பை ஒவ்வொன்முக அவரது முதுகில் எறியும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். சின்னண்ணா எதிரிலிருந்த கதவைப் பூட்டித் திறக்கும் பணியை ஏற்றுக்கொண்டார். மற்றும் பல நடிகர்கள் பலவிதமான பொறுப்புக்களை ஏற்றார்கள். சுமார் ஒருமணி நேரம் அவதானம் நடைபெற்றது. நான் எத்தனை உளுந்துகள் முதுகில் எறிந்தேன் என்பதையும், சின்னண்ணா எத்தனை முறை பூட்டுத் துவாரத்தில் சாவியைப் புகுத்தினார் என்பதையும், பாவலர் சரியாகச் சொன்னபோது எங்களுக்கெல்லாம் பெரு வியப்பாக இருந்தது. இதைப் படிப்பவர்களில் சிலருக்கு அவதானம் என்றாலே என்னவென்று புரியாதென நினைக்கிறேன். அதை விரிவாக விளக்குவது கடினம். அவதானத்தின் இலக்கணத்தைப் பற்றிச் சரவணப்பெருமாள் கவிராயர் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.அந்தப் பாடலின் ஒரு பகுதியை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.

“மாறாமல் வாய்வேலு

மயிலுமென

வேசொல்ல, வாசகம்

கைகள் எழுத,

வருகணக் கொருபுறம்

தீர, மற்றொரு

புறம் வரைந்திடும்

இலக்க மாற”

வளைத் திரைக் குட்சிறிது

கல்லனி

வகுக்கின்ற வன்கணக்

கினிது பகர,

மருவு சொக் கட்டானும

விளையாட,

மறைவாக வைத்த

சதுரங்க மாட ....’

இப்படியே இன்னும் பலவகையான அற்புதச் செயல்களையெல் லாம் நினைவாற்றலோடு செய்ய வேண்டும். அவதானம் செய்வோர் சபைக்குத் தக்கவாறு தம் செயல்களை மாற்றிக் கொள்வதும் உண்டு. இது ஒர் அபூர்வமான கலை, காகர்கோவில் ஆறுமுகம்பிள்ளை தசாவதானம் செய்வதை நான் இருமுறைபார்த் திருக்கிறேன். அபாரமான திறமை, நினைவாற்றல் இவற்றோடு கடவுளின் திருவருளும் இருந்தால்தான் இந்தக் கலையில் வெற்றி பெற முடியும் என்பது என் நம்பிக்கை.

சிந்தாதிரிப்பேட்டையில் கம்பெனி வீட்டோடு இருந்தது எங்கள் தாயாருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் கொஞ்சம் வைதீக மனப்பான்மை உள்ளவர்கள். வேறு தனி வீட்டுக்குப் போக வேண்டுமெனப் பிடிவாதம் செய்தார்கள். வேறு வழியின்றி ஆனைக்கவுணி யருகில் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் ஒரு தனிவீடு பார்க்கப்பட்டது. நாங்கள் அந்த அந்த வீட்டில் குடியேறியதும் பாவலரும் கம்பெனி வீட்டை மாற்றிக்கொண்டு ஆனைக் கவுணிக்கே வந்துவிட்டார். எங்களை அதிக தூரத்தில் தங்கவிடக் கூடாதென்பது அவர் எண்ணம்போல் தோன்றியது.

மனோஹரா

ஆனைக்கவுணி வீட்டுக்கு வந்ததும் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் ‘மனோஹரா’ நாடகம் பாடம் கொடுக்கப்பெற்றது. எனக்கு மனேஹரன் பாடமும் சின்னண்ணாவுக்கு வசந்தசேன பாடமும் கொடுத்தார்கள். தொடர்ந்து ஒத்திகை நடைபெற்றது. பாவலர் மிகச்சிறந்த முறையில் எனக்கு நடிப்புப் பயிற்சியளித்தார். அவர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் சென்னை சுகுண விலாச சபையில் சில காலம் நடிகராக இருந்தவர். முதலியாரவர்கள் மனேஹரனாக நடித்தபோது பாவலர் ராஜப்பிரியனாக நடித்திருக்கிறார்.

மனோஹரா ஒத்திகை நடந்துகொண்டிருக்கும் பொழுதே சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகம் பாடம் கொடுக்கப் பெற்று அரங்கேறியது. அந்நாடகத்தில் என் நடிப்பைப் பார்த்த பாவலர் என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார். மனோஹரன் நாடகத்திற்கு மிகப் பெரிய சுவரொட்டிகள் அச்சிட்டு, சென்னை நகரெங்கும் ஒட்டச் செய்தார். பிரமாதமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. முதல் நாடகத்திற்கு மனோஹரா நாடகத்தை எழுதிய பம்மல் சம்பந்த முதலியார் அவர்களையே தலைமை தாங்கச் செய்தார். தொடர்ந்து ஒத்திகை நடைபெற்று வந்ததால் நாடகத்தன்று எனக்குத் தொண்டை கட்டிக்கொண்டது. பாவலர் என்னைத் தட்டிக் கொடுத்துப் பயப்படாமல் நடிக்கச் சொன்னார்.

நாங்கள் வேடம் புனைந்து கொண்டிருக்கும்பொழுது பம்மல் சம்பந்த முதலியார் அவர்களையும் அவருடன் கதாநாயகியாக நடிக்கும் திரு. ரங்கவடிவேலு முதலியாரையும் பாவலர் உள்ளே அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். நாங்கள் பெருமகிழ்ச்சி யடைந்தோம். எனக்கும், அன்று விஜயாளாக வேடம் புனைந்த தருமலிங்கத்திற்கும் ரங்கவடிவேலு முதலியார் பக்கத்தில் நின்று ஒப்பனை செய்வதில் உதவி புரிந்தார். பம்மல் சம்பந்தனார் பாராட்டுரை

1922 அக்டோபர் 7-ஆம் நாள் மனோஹரன் நாடகம் பம்மல் சம்பந்த முதலியார் தலைமையில் சிறப்பாக அரங்கேறியது. மஞேஹரனில் முக்கிய கட்டமான சங்கிலி அறுக்கும் காட்சி முடிந்ததும் பாவலர் ஓடிவந்து, கீழே கிடந்த என்னைத் தூக்கி முத்தமிட்டுப் பாராட்டினார். தலைமை தாங்கிய பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் கீழ்வருமாறு ஆக்கிலத்தில் பேசினார்.

“சீமாட்டிகளே, சீமான்களே! நான் எழுதிய நாடகங்கள் யாவற்றிலும் ‘மனேஹரா’ மிகவும் உயர்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந் நாடகத்தைச் சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாக எங்கள் சுகுண விலாச சபையில் நானே மனோஹரனாக வேடம் பூண்டு நடித்துவருகிறேன். சிறந்த நடிகர்கள். பலர் மஞேஹரனாக வேடம் தரித்து நடிப்பதையும் நானே நேரில் பார்த்திருக்கிறேன். எனக்கோ வயதாகி விட்டது. முதுமைப் பருவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். வீர மனோகரனக நடிப்பதற்குரிய வலிமை குறைந்து வருகிறது. நான் நாடகத் துறையிலிருந்து ஒய்வு பெறும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றிரவு மாஸ்டர் டி. கே. ஷண்முகம் மனோகரனாக நடித்ததைப் பார்த்ததும் என்மனதிற்குச் சாந்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. நான் வெகுநாட்களாக ஆவலோடு எதிர்ப்பார்த்திருத்த ஓர் உத்தமநடிகர் தோன்றிவிட்டார் என்பதை இந்த இளஞ்சிறுவருடைய நடிப்பு வெளிப் படுத்தியது. கடவுள் இச்சிறியவருக்கு நீண்ட ஆயுளையும் நாடகக் கலைத்துறையிலும் மேன்மலும் வளர்ச்சியையும் சிறப்பையும் தருவாராக.”

நாடகப் பேராசிரியர் பேசியதை யெல்லாம் பாவலர் தமிழில் மொழி பெயர்த்து எனக்குச்சொன்னார். முதலியார் அவர்கள்பேசி முடித்து உள்ளே வந்ததும்நான் அவரது பாதங்களில்பணிந்தேன். பேராசிரியர் என்னை மகிழ்வோடு கட்டிக்கொண்டு உச்சிமோந்து வாழ்த்தினார்.

போட்டாப் போட்டி

அப்போது ஒற்றைவாடைத்தியேட்டரில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் பாவலர் கம்பெனியில் ‘அதிரூப அமராவதி’ நாடகம் நடத்தி முடித்து விட்டு நாங்கள் எல்லோரும் ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனியின் சதியனுசூயா நாடகம் பார்க்கச்சென்றோம். செவ்வாய், வியாழக் கிழமைகளில் நடைபெறும் நாடகங்களைப் பாவலர் நடிகர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுவார். சில நாட்களில் நாடகம் மிக விரைவில் முடிந்துவிடும். ‘சரச சல்லாப உல்லாச மனேரஞ்சனி’ என்று ஒரு நாடகம் நடந்தது. அதில் நான் மனோரஞ்சனியாக நடித்தேன். நடிகர்களே திட்டமிட்டு நடத்தும் இந்த நாடகங்களுக்குப் பெரும்பாலும் நல்ல வசூலானதில்லை.

நாங்கள் மனோகரா நாடகம் போட்ட அன்று ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலும் மனோகரா நடைபெற்றது. அப்போது அங்கு மனோஹரனாக நடித்தவர் எம். ஜி. தண்டபாணி. அவர் 1920ல் சுவாமிகள் கம்பெனியில் எங்களோடு இருந்தவர். அவருக்கு என்னைவிட நாலைந்துவயது அதிகமிருக்கலாம். ‘வெங்கலத்வனி’ எம். ஜி. தண்டபாணி- பால மனோகரன்’ என்று ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனுயார் விளம்பரம் செய்தார்கள். உடனே பாவலர், யார் பால மனோகரன்? பால மனோகரா சபா எது?” என்ற கேள்வியுடன் ஒரு விளம்பர அறிக்கை விட்டார் அதில், “பால மனோகர சபாவின் நிகரற்ற பால மனோகரன் மாஸ்டர் டி. கே. ஷண்முகம்” எனக் குறிப்பிட்டார். இரு கம்பெனியாருக்கும் விளம்பர அறிக்கைகளிலேயே விவாதம் நடந்தது. மனோகரா போட்டாப் போட்டி நாடகமாக விளங்கியது. மறுவாரம் நடை பெற்ற மனோஹரா நாடகத்தில் பம்மல் சம்பந்தமுதலியார் எனக்கு ஒரு தங்கப்பதக்கம் பரிசளித்தார். இந்து, சுதேசமித்திரன் இரு பத்திரிகைகளிலும் ‘தங்கப் பதக்கம் பரிசளிப்பு’ என்ற தலைப்பில் இச்செய்தி பிரமாதமாக வெளியிடப் பெற்றது. நாங்கள் பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்தோம்.

சுவாமிகளின் நிலை

நாங்கள் சைதாப்பேட்டையிலிருந்து இரவோடிரவாகச் சென்னைக்கு வந்த மறுநாள், செய்தி எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இரண்டு நாட்கள் நாடகம் நடைபெறவில்லை. தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை தள்ளாடியது. பிறகு வேறு யார் யாரையோ எங்களுக்குப் பதிலாக போட்டு நாடகத்தை தொடர்ந்து நடத்தினார்கள். வசூல் மிகவும் மோசமாகப் போய் விட்டது. கம்பெனியின் நிலையைக் கண்ட மற்றுஞ் சில நடிகர்கள் கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார்கள். உரிமையாளர்களில் ஒருவரான சின்னையாபிள்ளை பணம் கொண்டுவருவதாகச் சொல்லி மதுரைக்குப் போப்விட்டார். பழனியாபிள்ளை எப்படியோ சமாளித்து ஆசிரியர் கே. ஜி. குப்புசாமிநாயுடுவின் உதவியால் கம்பெனியைச் சைதாபேட்டையிலிருந்து பூவிருந்தவல்லிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். பூவிருந்தவல்லியில் நாடகம் நடத்தினார்கள். அங்கும் வசூல் இல்லை. நிலைமை மிகவும் நெருக்கடியாய்விட்டது. அன்றாடச் சாப்பாட்டுக்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். எதிர்பாராத இச் சிரமங்களால் சுவாமிகளின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவரைக் கவனிப்பதிலும் அசிரத்தை ஏற்பட்டது. அவ்வப்போது சுவாமிகளைக் காண வந்த பெரியவர்கள் சிலரிடம் அவர் தமது கைகளால் சாடைகாட்டி, இரண்டு பையன்கள் இருந்தார்கள்; அவர்கள் ஓடிப்போய் விட்டார்கள்; அதனால் வசூல் இல்லை, கஷ்டப்படுகிறேன்” என்று மனம் நொந்ததாக அறிந்தோம்.

அன்னையின் வெற்றி

ஆனைக்கவுணிக்கு வீடு மாறி வத்தபின் குப்புசாமி நாயுடுவின் மனைவியார் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வரத்தொடங்கினார்கள். அவர்கள் மூலம் இச்செய்திகளையெல்லாம் அறிந்தோம். சுவாமிகளின் நிலையைத் தெரிந்ததும் எங்கள் தாயார் மிகவும் வேதனைப்பட்டார்கள். எண்ணத்தை வாய்விட்டுச் சொல்ல முடியாத நிலையில் சுவாமிகளின் மனம் எவ்வளவு வேதனை யடையும் என்பதை எண்ணி யெண்ணி உருகினார்கள். ஒருநாள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதுபற்றிப் பலத்த விவாதம் நடந்தது. பாவலர் கம்பெனியில் நாங்கள் பெரும் புகழுடன் சீரும் சிறப்புமாக இருந்து வருவதை அப்பா எடுத்துக் கூறினார். மீண்டும் பழைய கம்பெனிக்குப் போய்ச் சிரமப்பட வேண்டுமா?’ என்று கேட்டார். அப்பாவின் எந்தச் சமாதானமும் அம்மாவைத் திருப்திப் படுத்தவில்லை. “என் குழந்தை களுக்குக் குரு சாபம் பிடித்துவிடும், பொருள் புகழ் இல்லாது போனாலும் குழந்தைகளுக்கு எதுவும் நேராதிருக்க வேண்டும். உடனே எப்படியாவது சுவாமிகள் கம்பெனிக்கே போய்விட வேண்டும்’ என்று சொல்லி, அம்மா அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்பாவின் எண்ணமும் மாறியது. தாய்மை யுணர்ச்சி. வெற்றிபெற்றது. நாயுடுவின் மனைவியாரிடம் மீண்டும் கம்பெனிக்கு வந்துவிடுவதாகத் தகவல் சொல்லியனுப்பினார் தந்தையார். குப்புசாமி நாயுடு பெரு முயற்சி செய்து பூவிருந்த வல்லியிலிருந்து கம்பெனியைத் தம் சொந்த ஊராகிய பாண்டிச்சேரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். எங்கள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு கம்பெனியார் காத்திருந்தார்கள்.

அப்பா எங்களையும் அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் போய் வர வேண்டுமென்று பாவலரிடம் விடுமுறை கேட்டார். அத்தோடு சுவாமிகள் மிகவும் அபாயமான நிலையில் இருப்பதால் அவரையும் பார்த்து வரவேண்டுமெனக் கூறினார். கம்பெனியில் புகழும் பொருளும் ஓங்கி உச்ச நிலையடைந்திருக்கும் அந்த நேரத்தில், நாங்கள் போகக் கூடாதென்று பாவலர் கண்டிப்பாக மறுத்துவிட்டார். முன் பணமாகக் கொடுத்த 250 ரூபாய்களைக் கழித்துக் கொள்ளாமலேயே மாதச் சம்பளத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வந்தார். ஜனவரி மாதம் முடிந்தபின் விடுமுறை அளிப்பதாயும் அப்போது ஊருக்குப் போய் வரலாமென்றும், மேலும் பணம் தேவைப்பட்டால் கொடுப்பதாகவும் கூறி விட்டார். அப்பாவின் நிலை தருமசங்கடமாகி விட்டது.

பாவலர் கம்பெனி நடிகர்கள்

பாவலர் கம்பெனியில் அப்போது இருந்த சில முக்கிய நடிகர்களைப்பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கதாநாயகர்கள் இரண்டுபேர் இருந்தார்கள். ஒருவர் ஏ. என். ராஜன், மற்றொருவர் டி. எம். மருதப்பா. இவ்விருவரும் இரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்கள். ஏ. என். ராஜன் அருமையாகப் பாடக் கூடியவர். டி. எம். மருதப்பா திறமையாக நடிக்கக் கூடியவர். பர்த்ருஹரி நாடகத்தில் ஏ. என் ராஜன் பர்த்ருஹரியாக நடிப்பார். மனோகரன் நாடகத்தில் டி. எம். மருதப்பா புருஷோத்தமனக நடிப்பார். கதரின் வெற்றி யில் கதாநாயகன் சுந்தரம் வேடத்தை இருவரும் திறம்பட நடிப்பார்கள்.

தருமலிங்கம் என்ற ஒருவர் இருந்தார். அவருக்கு என்னுடைய வயதுதான் இருக்கும். அபிமன்யு சுந்தரியில் சுந்தரி யாகவும், மனோஹரனில் விஜயாளாகவும் அற்புதமாக நடிப்பார். நல்ல இசை ஞானமுடையவர். இனிமையான குரல். அருமையாகப் பாடுவார். சில ஆண்டுகளுக்குப் பின் நாங்கள் சொந்தக் கம்பெனி நடத்திய பொழுது, தருமலிங்கம் எங்கள் கம்பெனியிலும் சில காலம் இருந்திருக்கிறார்.

கொண்டிக் கை சுவாமிநாதன்

சுவாமிநாதன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். அவரை ‘கொண்டிக் கை சுவாமிநாதன்’ என்றுதான் எல்லோரும் குறிப்பிடுவார்கள். அவருடைய கைகளில் ஒன்று கொஞ்சம் ஊனமா யிருந்தது. இவருடைய உடன் பிறந்த தமையனார் திரு பக்கிரி சாமிப் பிள்ளை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில்சிறந்த நகைச் சுவை நடிகராக விளங்கினார். சகோதரர்கள் இருவரில் ஒருவர் பாய்ஸ் கம்பெனியிலும், மற்றொருவர் பாவலர் கம்பெனியிலுமாக இருந்தது, அப்போது எங்களுக்குப் புதுமையாகத் தோன்றியது. நொண்டிக் கை சுவாமிநாதன் மேடைக்கு வந்தவுடனேயே சபையோர் சிரித்து விடுவார்கள். அவர் செய்வதெல்லாம் கொனஷ்டையாகவே இருக்கும். கதரின் வெற்றியில் இன்ஸ் பெக்டராக வந்து அவர் செய்யும் அட்டகாசங்களே இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

ஒரு நாள், கதரின் வெற்றி நீதிமன்றக் காட்சியில் நொண்டிக்கை சுவாமிநாதன் இன்ஸ்பெக்டராக வந்து வாக்கு மூலம் கொடுத்தார். நான் கோடம்பாக்கத்தில் என்று அவர் பேசத் தொடங்கியதும், மூக்கில் சொருகியிருந்க கம்பிமீசை கீழே விழுந்துவிட்டது. வக்கீலாக நின்ற எனக்குச் சிரிப்புத் தாங்க வில்லை, சபையோர் கைதட்டிச் சிரித்தார்கள். அதற்காக அவர் ஒன்றும் பதற்றமடைய வில்லை. இன்ஸ்பெக்டர் எவ்வித பரப் பரப்பும் இல்லாமல் சாவாசமாகக் குனிந்தார். கீழேகிடந்த மீசையை எடுத்தார். கைக்குட்டையால் அதைத் தட்டினார். மீண்டும் மூக்கில் சொருகிக் கொண்டு பேசத் தொடங்கினார். வேறு எவ்வித உணர்ச்சியையும் அவர் காட்டாமல் அமைதியாக இதைச் செய்ததால் சபையோரின் சிரிப்பு அடங்க வெகு நேர மாயிற்று. மனோகரன் நாடகத்தில் வசந்தனாக அவர் நடிப்பார். “கல்லாசனத்தின் கீழே உட்கார்ந்து, முதுகு வளைந்து போய் விட்டது” என்று வசந்தன் சொல்லும்போது உண்மையாகவே முதுகு வளைந்து போனதுபோல் நடித்துக் காட்டுவார். அவர் உடம்பு, சொல்லுகிறபடி யெல்லாம் வளையும்.

பாயாசமும் பார்த்த சாரதியும்

துரைக்கண்ணு என்று மற்றொரு இளம் ஹாஸ்ய நடிகர் இருந்தார். அவர் கதரின் வெற்றியில் வேலையாளாக நடிப்பார். அவரைப் ‘பாயாசம்’ என்றே சபையோர் குறிப்பிடுவார்கள். பாயாசப் பைத்தியம் பிடித்த வேலைக்காரனாக அவர் நடிப்பதை மக்கள் பெருமகிழ்வோடு பாராட்டுவார்கள் எந்த நாடகத்தில், என்ன வேடத்தில், அவர் வந்தாலும் ஜனங்களில் சிலர் ‘பாயாசம், பாயாசம்’ என்று அவருக்குப் பட்டம் சூட்டிக் கூப்பிடுவது வழக்கம்.

மற்றொரு நடிகர் பார்த்தசாரதி. இவர் பெண் வேடம் பூண்டு நடிப்பவர். பெரும்பாலும் சோகச் சுவைப் பாத்திரங்களிலே தோன்றித் திறமையாக நடிக்கக் கூடியவர்.மனோஹரனில் பத்மாவதியாக நடிப்பார். பார்த்தசாரதி பிற்காலத்தில் பல அரசியல் கட்சிகளிலும் பத்திரிக்கைத் துறையிலும் இருந்தபோது பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இப்போது இவர் திராவிட முன் னேற்றக்கழகத்தில் இருந்து வருகிறார்.

பாவலரின் சந்தேகம்

தந்தையார் விடுமுறைக் கேட்டது முதல் பாவலருக்கு எங்கள் மேல் சந்தேகம் உண்டாகிவிட்டது. எங்களோடு ஒட்டுக் குடித்தனத்திலிருந்த சிலரிடம் நாங்கள் திடீரென்று எங்காவது புறப்பட்டால் உடனே தகவல் கொடுக்கும்படியாக ரகசியமாகச் சொல்லிவைத்தார். இது தந்தையாருக்குத் தெரிந்துவிட்டது. அந்த வீடு வசதியில்லையென்றும் வேறு வீடு பார்க்கவேண்டு மென்றும் தந்தையார் எல்லோருடைய காதிலும் விழும்படியாக அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு வாரத்திற்குப் பின் செங்காங்கடைப் பக்கம் ஏதோ வீடு கிடைத்து விட்டதாகச் சொன்னார். நாங்கள் நாடகத்திற்குப் போனபின் பெரியண்ணா அம்மாவையும் அழைத்துக்கொண்டு புது வீட்டுக்குப் போய்விட வேண்டுமென்றும், தாம் நாடகம் முடிந்து நேரே புது வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் சந்தேகப்படாத முறையில் சொல்லிவிட்டுத் தந்தையார், எங்களையும் அழைத்துக் கொண்டு ராயல் தியேட்டருக்கு வந்தார்.

பாண்டிக்கு ஒடினோம்

1922 அக்டோபர் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை. அன்று ‘அபிமன்யு சுந்தரி’ மாலை நாடகம். சர் சி. பி. இராமசாமி ஜயர் தலைமை தாங்கினார். அவர் அப்போது கவர்னரின் நிருவாக சபையில் முதல் மெம்பராக இருந்தார். சர் சி. பி. நாடகத்தைப் பாராட்டிப் பேசினார். பாவலர், சி. பி. கையால் எனக்கு ஒரு தங்கப் பதக்கம் பரிசளிக்கச் செய்தார். நாடகம் சிறப்பாக நடந்து முடிந்தது. தந்தையாரின் முன்னேற்பாட்டின்படி பெரியண்ணா அம்மாவுடன் சூளையிலுள்ள கே. ஜி. குப்புசாமி நாயிடுவின் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று விட்டார். நாடகம் முடிந்ததும் நாங்கள் நேராகச் சூளை வீட்டிற்குச் வந்து சேர்ந்தோம். இரவு உணவுக்குப்பின் எல்லோரும் காரில் சைதாப்பேட்டைக்கு வந்து, அங்கிருந்து ரயிலேறி மறுநாள் காலை பாண்டிச்சேரியை அடைந்தோம்.

சுவாமிகளைக் கண்டோம்

மறுநாள் காலை கம்பெனி வீட்டிற்குச் சென்று சுவாமிகளைக் கண்டோம். கீழே விழுந்து வணங்கினோம். சுவாமிகளின் கண்கள் கலங்கின. சிறிது நேரம் அமைதியாக நின்றோம். எங்களுக்கும் அழுகை வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டோம். சுவாமிகள் ஏதேதோ சொல்ல விரும்பினார். வாய் பேச இயலாத நிலையில் அவரது கண்கள்தாம், எண்ணங்களை வெளிப்படுத்தின. நீண்ட நேரத்திற்குப் பின் சுவாமிகள் புன்முறுவல் செய்தார்.

இரண்டு நாட்களில் பாண்டிச்சேரியில் நாடகம் தொடங்கியது. வருவாயும் சுமாராக இருந்தது. விளக்கு அணையும்போது ஒளி விடுவது இயற்கையல்லவா? அதைப்போலச் சுவாமிகளுக்கு ஒரு நாள் திடீரென்று, பக்கவாதத்தினால் முடக்கப்பட்டிருந்த காலும் கையும், நிமிர்ந்து நின்றன. ஒரு சில நிமிடங்கள்தான். மீண்டும் பழைய நிலையையே அடைந்தார். இறுதி நாட்களில் சுவாமிகள் பட்ட கஷ்டத்தை எடுத்துச் சொல்வதே கடினம். எல்லாம் படுக்கையிலேதாம் நடைபெற்றன. கோட்டயம் கோபாலபிள்ளையும், பாண்டிச்சேரி குப்புசாமியும் ஒரு குழந்தையைக் காத்துப் பராமரிப்பது போல் சுவாமிகளுக்கு அன்புடன் பணிவிடை செய்து வந்தார்கள். அவ்விரு பணியாளர்களின் உண்மையான சேவையை எல்லோரும் புகழ்ந்தார்கள்.

பருவுடல் மறைந்தது.

1922 நவம்பர் 13 ஆம் நாள், சுவாமிகளின் நிலை நெருக்கடி யாய் விட்டது. எல்லோரும் பதறினார்கள். அன்று திங்கட்கிழமை. சுவாமிகளுக்கு மிகவும் பிடித்தமான புனித நாள். வழக்கம் போல் பஜனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு, சுவாமிகளின் ஆவி அமைதியாகப் பிரிந்தது.

தமிழ் நாடகத்தாய் பெறற்கரிய புதல்வனை இழந்தாள்; தமிழ் நடிகர்கள் தங்கள் தந்தைக்கொப்பான பேராசிரியரை இழந்தனர்; கலையுலகம் ஓர் ஒப்பற்ற மாமேதையை இழந்து கண்ணிர் வடித்தது.

தமிழ் நாடக உலகின் தலைமையாசிரியராகவும், நாடக ஆசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராகவும் விளங்கிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் தமது பருவுடலை விட்டுப் புகழுடம்பை யடைந்தார். 1867ஆம் ஆண்டில் தூத்துக்குடியிலே பிறந்த அப் பெருமகனார், 1922-இல் பாண்டிச்சேரியிலே சமாதியடைந்தார்.

மறுநாள் காலை சுவாமிகளின் சடலத்துடன் புகைப்படம் எடுக்கப் பெற்றது. குழுவினரோடு எடுத்த படத்தில் தம்பி பகவதி நிற்கப் பயந்து மறுத்து விட்டான். அப்போது பகவதிக்கு நான்கு வயதிருக்கும். பிறகு பூஜைக்குரிய முறையில் சுவாமிகளைத் தனியாக எடுத்தார்கள். அப்போது திடீரென்று பகவதிக்குத் தைரியம் வந்து விட்டது. “நானும் படத்தில் நிற்கிறேன்” என்றான். புகைப்படக்காரர் “ஒரே ‘நெகட்டிவ்’ தானிருக்கிறது” என்றார். தம்பி அழ ஆரம்பித்தான். பிறகு அவனைச் சமாதானப் படுத்திக் கையில் மலர்களைக் கொடுத்து, சடலத்தின் பக்கத்தில் நிற்கச் செய்து படமெடுத்தார்கள்.

புலவர்களின் கண்ணிர்

சுவாமிகள் மறைந்த செய்தி நாடெங்கும் அறிவிக்கப் பட்டது. தமிழ் நாட்டில் அப்போது வாழ்ந்த நாடகப் புலவர்களெல்லாம் இரங்கற் பாக்கள் பாடி அனுப்பியிருந்தார்கள். சுவாமிகளோடு நெருங்கிய தோழமை கொண்டவர் உடுமலை சக்தச் சரபம் முத்துச்சாமிக் கவிராயர். அவர் சுவாமிகளோடு சக மாணவராகப் பழனி தண்டபாணி சுவாமிகளிடம் பாடம் கேட்டவர். கவிராயர் அவர்கள் அனுப்பியிருந்த இரங்கற் பாக்கள், மனத்தை உருக்குவதாக அமைந்திருந்தன. ஒரு பாட்டை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

"சுந்தரராவ் முதலாகத் துலங்கணக்தன்
    வரைவகுத்துச் சொல்லுங் காலை
எந்தகா டகத்லைவர் நீயின்றி
    நடனவரங் கேறி நின்றார்?
அந்தமார்க கண்டனுக்கன் றரனளித்த
    வரமுனக்கிண் டருமை யாச்சோ?
சந்தமார் சங்கரதாஸ் சாமிநினை
    யாங்காணும் தருண மென்றே!"

பாவலர் நோட்டிஸ்

பாவலர் கம்பெனியில் நாங்கள் இரண்டரை மாதங்களே இருந்தோம். ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் நடிப்புத் துறையில் நாங்கள் பெற்ற பயிற்சி மிகச் சிறப்பானது. அப் பயிற்சி நாடகத் துறையில் முன்னேறுவதற்கு எங்களுக்குப் பெருந்துணையாக இருந்தது என்பதை மகிழ்வோடு குறிப்பிட வேண்டியது என் கடமை. 

பாவலர் கம்பெனியிலிருந்து நாங்கள் வந்த பின் அவர் ஏதேதோ முயற்சிகள் செய்தார். எங்கள்மீது குற்றம் சாட்டி நோட்டீஸ் விட்டார். தந்தையாரும் ஒருவக்கீலைக் கலந்து பதில் நோட்டீஸ் கொடுத்தார். சில நாட்கள் இவ்வாறு நோட்டீஸ்களிலேயே வாதம் நடந்தது. கடைசியில் பாவலர் தமது முயற்சியைக் கைவிட்டார்.

சுவாமிகள் மறைவோடு வசூலும் குறைந்து போனதால் சில ஸ்பெஷல் நாடகங்களை நடத்தத் திட்டமிட்டார்கள். பாலாமணி அம்மாள் குழுவினரைக் கொண்டு டம்பாச்சாரி நாடகம் போடச் செய்தார்கள். இக்குழுவினர் அனைவரும் சுவாமிகளிடம் பாசமும் பக்தியும் கொண்டவர்கள்.

அப்போது பாலாமணி அம்மாள் மிகவும் வயதுமுதிர்ந்தவர். அவர்தாம் குழுவின் உரிமையாளர். எனக்கு முதன் முதலாகப் பவுடர் பூசிவிட்ட சி. எஸ். சாமண்ணா ஐயர், குழுவின் மானேஜராக இருந்தார். இந்தக் குழுவில் அதிகமான பெண்கள் இருந்தார்கள். ‘டம்பாச்சாரி’ நாடகம் போடுவதில் இந்தச் சபையார் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தார்கள். பாலாமணி அம்மையார் இளமைப் பருவத்தில் மிகச் சிறந்து விளங்கினராம். கும்பகோணத்தில் பாலாமணி அம்மையார் கதாநாயகியாகவும் பாலாம்பாள் அம்மையார் கதாநாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்திற்கு, ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்ற பெயரால் ஒரு ரயிலே விடப்பட்டதாம், பாலாமணிச் சாந்து, பாலாமணிப் புடவை என்றெல்லாம் வியாபாரிகள் விளம்பரப்படுத்துவார்களாம். இவற்றையெல்லாம் என் தந்தையார் மூலம் அறிந்தேன்.

டம்பாச்சாரி உதவி

பாலாமணி அம்மையாரே டம்பாச்சாரியாக நடித்தார். கதாநாயகி மதனசுந்தரியாக வடிவாம்பாள் நடித்தார். சி. எஸ். சாமண்ணா ஐயர் முதலிலிருந்து முடிவு வரை மொத்தம் பதினொரு வேடங்களில் தோன்றினார். அற்புதமாக நடித்தார். அவரை ‘இந்தியன் சார்லி சாப்ளின்’ என்றே அக்காலத்தில் குறிப்பிட்டார்கள். இந்தப் பட்டம் அப்போது சென்னை கவர்னராக இருந்த லார்டு வெல்லிங்டன் அவர்களால் இவருக்கு வழங்கப் பட்டது. பதினொரு வேடங்கள் என்று குறிப்பிட்டேனல்லவா? ஒப்பனை முறைகளெல்லாம் நன்கு வளர்ச்சி பெறாத அந்த நாளில் சாமண்ணா ஐயர் பல்வேறுபட்ட குணங்களையுடைய இந்தப் பாத்திரங்களைத் தாங்கி நடித்ததுதான் மிகவும் வியப்புக்குரியது. பாத்திரங்களின் பெயர்களைக் கேட்டால் நீங்களே வியப்படைவீர்கள். நாவிதர், தவசிப்பிள்ளை, டாபர் மாமா, எஞ்சினியர், தமிழ்ப்புலவர், கோமுட்டி செட்டியார், ஷேக்மீரா லெப்பைடு அமீனா, வக்கில், அப்பர்சாமிகள், சட்டிப்பரதேசி ஆகிய இவ் வேடங்கள் அனைத்தையும் புனைந்து அந்தந்தப் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு அவர் பேசி நடிப்பது பிரமிக்கத் தக்கதாக இருக்கும். தமிழ், தெழுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் முதலிய பல்வேறு மொழிகளைச் சரளமாகப் பேசத் தெரிந்தவர் அவர். சாமண்ணா ஐயரின் இந்த அபாரமான திறமையை எல்லோரும் பாராட்டினார்கள்.

டம்பாச்சாரி நாடகம், தமிழகத்தில் தன் முதலாக நடிக்கப் பெற்ற சமுதாய நாடகம். இந்த நாடகத்தின் கதை உண்மையாகவே நடந்த ஒரு செல்வச்சீமானின் கதை. தாசியின் மையலில் சிக்கிச் சீரழிந்த ஒருவரின் வரலாறு. இதைப் போன்ற கதைகள் மக்களின் உள்ளத்தில் இன்றுவரை நீங்காது இடம் பெற்றிருப்பதை நாம் பார்க்கிறோம், கடம்பாச்சாரி முதல் “இரத்தக் கண்ணிர்” வரை எத்தனையோ நாடகங்கள் இந்த அடிப்படையிலே எழுதி நடிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

டம்பாச்சாரி நாடகத்திற்கு நல்ல வசூலாயிற்று. அந்த உதவியுடன் எங்கள் நாடக சபை திருப்பாதிரிப்புலியூருக்கு வந்து சேர்ந்தது. சுவாமிகள் காலமானபோது வந்திருந்தவர்களில் முதலாளி சின்னைய்யாபிள்ளை மீண்டும் மதுரைக்குப் போய் விட்டார். கருப்பையாபிள்ளையும், காமேஸ்வர ஐயரும் கம்பெனியிலே மீண்டும் இடம் பெற்றார்கள். பழனியாபிள்ளையின் உதவியுடன் அவர்களே கம்பெனியை நடத்தி வந்தார்கள். வசூலும் சுமாராக ஆயிற்று. கம்பெனியிலிருந்து விலகிய பல நடிகர்கள் மீண்டும் வந்து சேர்ந்தார்கள். மனோகரா நாடகம் நடத்தினோம். புதிய நாடகமாதலால் பிரமாதமான வரவேற்புக் கிடைத்தது.

மனோஹரன் நாடகத்தில்

திருப்பாதிரிப்புலியூரில் ஒருநாள் மனோஹரன் நாடகம் நடந்து கொண்டிருந்தது. மனோஹரனில் முக்கியமான காட்சி; சங்கிலிகளால் கட்டப்பெற்று ஆவேசங் கொண்ட நிலையில் நிற்கிறான் மனோகரன். “என் மைந்தனா நீ?” என்கிறார் தந்தை புருஷோத்தமர். உடனே மனோஹரன், “என்ன சொன்னீர்?” என்று ஆக்ரோஷத்தோடு சங்கிலிகளை அறுத்துக் கொண்டு எதிரே நிற்கும் காவலனின் வாளை உருவி, தந்தையைக்கொல்லப் பாய்கிறான்.

புருஷோத்தமன் பேச்சு முடிந்தது. மனோஹரனாக நின்ற நான். “ஆ, என்னசொன்னீர்?” என்று கர்ஜித்தபடி சங்கிவிகளைப் பிணைத்திருந்த சுருக்குக் கயிற்றை இழுத்தெறிந்து விட்டு அதாவது சங்கிலிகளை அறுத்தெறிந்து விட்டு, எதிரே நின்ற காவலனின் உடைவாளை உருவிக்கொண்டு, சிம்மாதனத்தில் வசந்த சேனையுடன் வீற்றிருந்த புருஷோத்தமரை நோக்கிப்பாய்ந்தேன்.

பரிதாப நிலை

சபையில் ஒரே சிரிப்பொலி, எவ்வளவு ரசனைக் குறைவான சபையாயிருந்தாலும் சிரிக்கக் கூடிய கட்டமல்ல அது. எதிரே சிம்மாசனத்தில் வீற்றிருந்த புருஷோத்தமர் உதடுகளிலும் புன்னகை தவழ்ந்தது.வசந்தசேனை வேடத்திலிருந்த சின்னண்ணாவும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஒரு விடிை எனகொன்றும் புரியவில்லை ...பிறகு, உண்மையை உணர்ந்தேன். என் உயிரே போய்விடும்போல் இருந்தது வீர தீர மனோஹரனுடைய அப்போதைய நிலைமை மிகப் பரிதாபகரமானது... . . ... விஷயம் என்ன தெரியுமா? காவலனிட மிருந்து நான் உடைவாளை உருவியபோது, என் கையோடு வந்தது, கத்தியின் கைப்பிடி மட்டும்தான். கத்தி, பிடியிலிருந்து விடுபட்டு வெளியே வராமல் காவலனின் உறைக்குள்ளேயே தங்கி விட்டது. எனக்கிருந்த உணர்ச்சி வேகத்தில் நான் இதைக் கவனிக்கவில்லை. வெறும் கைப்பிடியோடு நின்ற மனோகரனின் நிலையைக் கண்டு யார்தான் சிரிக்கமாட்டார்கள்?

எனது நடிக நண்பர்களுக்கு இதைப் போன்ற பரிதாப நிலை ஏற்படாதிருக்குமாக! எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காகவே இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டேன்.

அப்பாவுக்கு நோய் அதிகப்பட்டது

திருப்பாதிரிப்புலியூரிலிருந்து சில சிற்றுரர்களுக்குச் சென்று சிதம்பரம் வந்து சேர்ந்தோம். அப்போது அண்ணாமலைப் பல்கலை கழகமும், அண்ணாமலை நகரும் இல்லாத காலம். சிதம்பரத்தில் ஒடுகள் வேய்ந்த ஒருகொட்டகையில் நாடகங்கள் நடைபெற்றன. நல்ல வசூலாயிற்று. தம்பி பகவதி, தொடக்கப் பள்ளியில், சேர்க்கப்பட்டான். காஞ்சீபுரத்தில் தந்தையாருக்குக் காலில் விஷக்கல் குத்தி நோய் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டேனல்லவா? அந்த நோய் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியது. அடிக்கடி உடல் நலமில்லாமல் சிரமப்பட்டார். திடீரென்று ஒருநாள் மயக்கம் வந்துவிட்டது. தமக்கு இறுதி நாள் நெருங்கிவிட்ட தென்ற எண்ணம் அவரது உள்ளத்தில் தோன்றி விட்டது. குடும்பத்தோடு, பிறந்த ஊருக்குப் போகவேண்டுமென முதலாளிகளிடம் பிடிவாதம் செய்தார். எங்களை மட்டும் விட்டுப் போகும்படி உரிமையாளர்கள் ஏதேதோ சொன்னார்கள். அப்பா ஒப்பவில்லை.

“தான் திடீரென்று இறந்துபோக நேரலாம். பிறந்த ஊரில் சுற்றத்தார் முன்னிலையில் இறக்க விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்குப் பின் ஊருக்குப் போவதால் பிள்ளைகளையும் அவசியம் அழைத்துப் போகவேண்டும். ஒரு வாரத்தில் அவர்களை அனுப்பி விடுகிறேன். நான் சில மாதங்கள் தங்கியிருந்து உடல் நிலை சுகமடையுமானால் வருகிறேன்” என்று கூறினார். வேறு வழியின்றி முதலாளிகளும் இசைந்தார்கள். தூரப் பயணமாதலால் துணைக்காகக் கோட்டயம் திரு கோபாலபிள்ளையையும் அழைத்துக் கொண்டு, எல்லோரும் குடும்பத்துடன் பிறந்த ஊராகிய திருவனந்தபுரத்திற்குப் பயணமானோம்.

பிறந்த நகரம்

திருவனந்தபுரத்திற்குப் போகிறோம் என்பதில் எங்களுக்கெல்லாம் பெரு மகிழ்ச்சி. நானும், என் தமையன்மார்கள் இருவரும் திருவனந்தபுரத்தில்தான் பிறந்தோம். சின்னஞ் சிறு வயதில் நான் தவழ்ந்து விளையாடிய இடம். திருவனந்தபுரத்தில் இப்போது இருக்கும் பெரிய ரயில் நிலையம் அப்போது இல்லை. கடற்புரத்திற்கு அருகில் ஒரு சின்ன ரயில் நிலையம் இருந்தது. அதில் தான் இறங்கினோம். குதிரை வண்டிகள் பெட்டி வண்டிகளைப் போல் அழகாக இருந்தன. எனக்கு நினைவு தெரிந்தபின் நான், பிறந்த ஊரையே பார்த்ததில்லை. காணும் காட்சியெல்லாம் புதுமையாக இருந்தது. எல்லோரும் இரண்டு வண்டிகளில் ஏறியதும் ‘புத்தன் சந்தை’ என்ற இடத்திற்கு வண்டியை விடச் சொன்னார் தந்தையார்.

ஆம், புத்தன் சந்தையில்தான் எங்கள் உறவினார்கள் அதிகமாக இருந்தார்கள். நாங்கள் பிறந்த இடமும் அதுதான். தந்தையார் தம் தம்பிக்குக் கடிதம் எதுவும் எழுதாமல் திடீரென்று புறப்பட்டதால், அவர் தங்கியிருந்த இடம் தெரியாமல் தேடினார். கடைசியில் எப்படியோ ஒருவகையாக எங்கள் சிற்றப்பா செல்லம்பிள்ளை, தம் மனைவியுடன் குடியிருந்த வீட்டைக் கண்டு பிடித்தோம். சிற்றப்பா சர்க்காரில் ஏதோ ஒரு ‘பியூன்’ வேலையில் இருந்தார்.அடிக்கடி வெளியூர் போகவேண்டிய வேலை. நாங்கள் போன சமயம சிற்றப்பா வெளியூர் போயிருந்தார். அவர் அப்போதுதான் புதிதாகத் திருமணம் செய்திருந்தார். அக்கம் பக்கத்திலுள்ள உறவினார்கள் சித்தியை அம்மாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். சிற்றப்பா மிகுந்த வறுமை நிலையிலிருந்தார். அவர் குடியிருந்த வீடும் எல்லோரும் தங்குவதற்கு வசதியாக இல்லாதிருந்தது. அருகிலேயே வேறு வீடு பார்த்துக் குடியேறினோம். இரண்டு நாட்களில் சிற்றப்பா வந்து சேர்ந்தார். நீண்ட காலத்திற்குப்பின் சந்தித்த அப்பாவும், சிற்றப்பாவும் எதுவும் பேசாமல் கண்ணிர் விட்டுக் கொண்ட காட்சி, இன்னும் என் நினைவில் இருக்கிறது.

திருவண்ணாமலையில்

வாக்களித்தபடி ஒரு வாரம் கழிந்து விட்டது. கோபால பிள்ளையுடனும் பெரிய அண்ணாவுடனும், நானும் சின்னண்ணாவும் சிதம்பரம் வந்து சேர்ந்தோம். சிற்றப்பாவும் எங்களுடன் சிதம்பரம் வரை துணைக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டுத் திரும்பினார். கம்பெனி திருவண்ணாமலைக்கு இடம் மாறியது. திருவண்ணாமலையில் நாடகம் பிரமாதமான வசூலில் நடை பெற்றது. சத்தியவான் சாவித்திரி நாடகத்திற்கு நல்ல பேர். அந்த நாடகம் பலமுறை நடிக்கப் பெற்றது.

ஒரு நாள் பெரியண்ணாவுக்கு ஊரிலிருந்து தந்தி வந்தது. அந்தத் தந்தியைப் பார்த்த உரிமையாளர்கள், காவடிப் பிரார்த்தனை செலுத்த எங்களை ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டு மென்று எழுதப்பட்டிருப்பதாகவும், திருவண்ணாமலை முடிந்து ஊருக்குப் போகலாமென்றும் சொன்னார்கள். புத்தன்சந்தை, சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குக் காவடியெடுப்பதாக நேர்த்திக் கடன் இருந்ததால் நாங்களும் அதை நம்பி விட்டோம். அன்றிரவு, பவளக்கொடி நாடகம் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

மறுநாள் பகலில் மற்றொரு தந்தி வந்தது. அதைப் பார்த்த உரிமையாளர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அன்று ஒய்வு நாள். அப்போது விழுப்புரத்தில் திரு.கன்னையா கம்பெனியின் நாடகங்கள் நடைபெற்று வந்தன. அந்த நாடகத்தைப் பார்க்கவேண்டுமென நாங்கள் அடிக்கடி ஆசையோடு பேசிக் கொள்வோம். உரிமையாளர் கருப்பையா பிள்ளை எங்களிடம், “கன்னையா நாடகம் பார்த்து வரலாமா?” என்று கேட்டார். பெரியண்ணா ஒப்புக்கொண்டார். நாங்கள் மூவரும் கருப்பையாபிள்ளையுடன் மாலையில் பயணமானோம் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தது. இறங்கவில்லை. பயணம் தொடர்ந்தது. அண்ணா, கருப்பையாபிள்ளையிடம் காரணம் கேட்டார். சும்மா வேடிக்கையாகச் சொன்னதாகவும், காவடிக் கட்டுக்குத் திருவனந்தபுரம் வரும்படியாக வற்புறுத்தி இரண்டாவது தந்தியில் குறிப்பிட்டிருப்பதாகவும், திருவனந்தபுரம் போவதாகவும் சொன்னார். நாங்கள் சிந்தனையில் ஆழ்ந்தோம்.

புகைவண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. முதலாளி கருப்பையாபிள்ளை எங்கள் சிந்தனையைக் கலைக்க. ஏதேதோ பேசினார். பெரியண்ணா மட்டும் அவருடைய பேச்சில் ஈடுபடவில்லை. நானும் சின்னண்ணாவும் அவரோடு உரையாடிப் பொழுது போக்கினோம். நீண்ட நேரத்திற்குப் பின் கண்ணயர்ந்தோம்.

தங்தையை இழந்தோம்

மறுநாள் மாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தோம். வீட்டை நெருங்கியதும் அவலச் செய்தி எங்களுக்காகக் காத்திருந்தது. வெள்ளைப் புடவை யுடுத்தித் தலைவிரி கோலத்துடன் இருந்த அன்னையாரைக் கண்டதும், “ஐயோ” என்றலறினோம். “உங்களைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரேடா அப்பா” என்று அம்மாவின் அடிவயிற்றிலிருந்து எழுந்த குரல், நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

ஆம்; 1923 ஏப்ரல் 27ஆம் நாள் இரவு 12.30 மணிக்கு, நாங்கள் திருவண்ணாமலையில் பவளக்கொடி நாடகத்தில் நடித்து கொண்டிருந்த நேரத்தில் தந்தையார் இறைவனடி சேர்ந்தார். பவளக்கொடி நாடகத்தில் கிருஷ்ணன் மாயப் பெண்ணாகவும், அர்ஜுனன் கிழவனாகவும் வேடம் பூண்டு, பவளக்கொடியை ஏமாற்றி, வண்டு கடித்து இறந்ததுபோல் நடிப்பதுண்டல்லவா? அந்தக் காட்சியில் அர்ஜுனனப் படுக்கவைத்து, நான் மாயப் பெண்ணாக நின்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்த அதே நேரத்தில்தான், தந்தையார் இறந்திருக்கிறார்! இதையறிந்த போது இறைவனின் செயலை எண்ணி எல்லோரும் வியந்தார்கள். அப்போது பெரியண்ணாவுக்கு வயது பதினேழு. நிலைமையை அறிந்ததும் அவர் அழவேயில்லை. உள்ளே வந்து அம்மாவைப் பார்க்கவுமில்லை. அப்படியே வெளித்திண்ணையில் உணர்வற்று உட்கார்ந்து விட்டார். அவரது உள்ளத்திலிருந்த ஆயிரமாயிரம் எண்ண அலைகளால் ஏற்பட்ட உணர்ச்சியின் கொந்தளிந்பு கண்களில் தெரிந்தது. இரத்தச் சிவப்பேறி நின்ற அவரது கண்களைக் கண்டு எல்லோரும் பயந்தார்கள். அவரது அருகில் போய் உட்கார்ந்து ஆறுதல் கூறினார்கள். அம்மாவையும், ஐந்து தம்பி தங்கை மார்களையும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு, தம்மேல் சுமத்தப் பெற்றதையும், அந்த எதிர் கால வாழ்வையும் எண்ணி ஏங்கினார் போலிருக்கிறது.

எங்கள் நிலை

அப்பாவின் இறுதிச் சடங்குகள் நடந்தேறின. நாங்கள் போட்டிருந்த சில நகைகளையும், பரிசு பெற்ற தங்க மெடல்களையும் தவிர வேறு ஆஸ்தி எதுவும் இல்லை. எனவே அதற்கான குழப்பங்கள் ஒன்றும் ஏற்படவில்லை. அப்பாவின் அளவுக்கு மீறிய குடியினால் அவரது ஈரலில் துவாரங்கள் விழுந்து விட்டதாயும் அதனாலேயே விரைவில் மரணம் ஏற்பட்டதென்றும் மருத்துவர் கூறினார்.

பதினாறாவது நாள் சடங்கு முடியும் வரை முதலாளி எங்களோடு தங்கியிருந்தார். மறு நாள் திருவண்ணாமலைக்குப் புறப்பட முடிவு செய்தோம். சிற்றப்பா செல்லம்பிள்ளையும் எங்கள் தாயுடன் பிறந்த மாமா செல்லமபிள்ளையும் எங்களோடுவருவதாக அறிவித்தார்கள். அம்மாவும் அதை விரும்பினார். அவர்கள் இருவருக்கும் வெளி வேலைகள் ஏதாவது கொடுப்பதாகக் கருப்பையாபிள்ளை கூறினார். கைம்மைக் கோலம் ஏற்றதாயுடனும் சிற்றப்பா, மாமா, எல்லோருடனும் மறுநாள் புறப்பட்டுத் திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம்.