எனது நாடக வாழ்க்கை/கோல்டன் சாரதாம்பாள்

விக்கிமூலம் இலிருந்து
கோல்டன் சாரதாம்பாள்


முதன் முதலாக உடுமலைப்பேட்டையில் நாடகம் தொடங்கியது. ஸ்ரீபால ஷண்முகானந்த சபையின் பெயரால் நடத்தப் பட்டாலும் அது உண்மையில் கோல்டன் கம்பெனியின் நாடகமாகவே விளங்கியது. நாயுடுவின் மனைவியாக இருந்த சாரதாம்பாள் அம்மையார் கம்பெனியில் முக்கிய இடம் பெற்றார். இராமாயணம் நாடகத்திற்குப் புது மெருகு கொடுக்கப்பட்டது. சாரதாம்பாள் மிகச் சிறந்த நடிகையாதலால் புதிய நடிகர்களுக்குத் தினமும் முறையாக நடிப்புப் பயிற்சி கொடுத்து வந்தார். தொடக்கத்தில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன. நாங்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஒத்துழைத்தோம். எங்கள் நடிகர்களும் உள்ளன்போடு உண்மையாக உழைத்தார்கள். என்ன செய்தும் பயனில்லை. எங்களைப் பிடித்த ‘ஏழரை நாட்டான்’ நாயுடுவையும் பிடித்துக்கொண்டது போலும்!

கோல்டன் கம்பெனியார் ஒரு காலத்தில் இராமாயணம், மகாபாரதம், ஸ்ரீகிருஷ்ண லீலா முதலிய பெரிய நாடகங்களை யெல்லாம் பிரமாதமாக நடத்தியவர்கள். எனவே புதிதாக மகா பாரதம் பாடம் கொடுக்கப்பெற்றது. மகாபாரதத்தில் சாரதாம்பாள் அம்மையாரே துரோபதையாக நடித்தார்.

கம்பெனியின் எல்லாப் பொறுப்புக்களையும் நாயுடுவே கவனித்து வந்தார். எனவே, பெரியண்ணா, நடிகர்கள், ஏனைய, தொழிலாளர்களுக்குரிய சம்பளத் தொகையை ஒப்பந்தப்படி தாமே வாங்கிக் கொடுக்க விரும்பவில்லை. நேரடியாக நாயுடு விடமே எல்லோரும் சம்பளம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார். நாயுடுக்கு இந்த ஏற்பாடு மிகவும் செளகரியமாகப் போய்விட்டது. அவர் இதைப் பயன்படுத்திக் கொண்டு நடிகர் களையும்,தொழிலாளர்களையும் தமது வசப்படுத்திக் கொள்ள முற்பட்டார். உடுமலைப்பேட்டை வசூல் திருப்திகரமாக இல்லை. திருப்பூருக்குச் சென்றோம். அங்கும் வசூல் இல்லை. ஸ்பெஷலாகச் சில பெரிய நடிகர்களைப் போட்டு நடத்தினால் வசூலாகுமென்று நாயுடு எண்ணினார். நாங்கள் அவருடைய விருப்பத்துக்குச் சம்மதித்தோம்.

பி. எஸ். வேலுநாயர்

பிரசித்தி பெற்ற நடிகர் பி. எஸ். வேலுநாயரைக் கொண்டு சத்தியவான் சாவித்திரி, கோவலன் ஆகிய இரு நாடகங்கள் நடத்த ஏற்பாடாயிற்று. முதல் நாடகம் சத்தியவான் சாவித்திரி நடந்தது. பி. எஸ். வேலுநாயர் முற்பகுதியில் சத்தியவானாகவும் பிற்பகுதியில் எமதருமனுகவும் நடித்தார். சாரதாம்பாள் அம்மையார் சாவித்திரியாக நடித்தார். மற்ற எல்லா வேடங்களையும் எங்கள் நடிகர்களே ஏற்று நடித்தார்கள். நான் நாரதராக நடித்தேன். நாடகம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் இருக்கும்போதுதான் நாயர் அரங்கிற்குள் வந்தார். எல்லோரையும் அழைத்தார். “உங்கள் அனைவருக்கும் சுவாமிகளின் பாடம் தானே?” என்று கேட்டார். எல்லோரும் ‘ஆமாம்’ என்று தலை யசைத்தோம். நாயர் மகிழ்ச்சியோடு “அப்படியானால் கவலை யில்லை” என்றார்.

நாயரின் நாவன்மை

எங்கள் தந்தையார் வேலுநாயரோடு பெண்வேடம் தாங்கி நடித்தவர். தாயரின் பேச்சுத் திறமையைப் பற்றி அவரிடம் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். மிகுந்த வாதத் திறமையோடு பேசக்கூடிய சிறந்த பேச்சாளரென அவரை எல்லோரும் புகழ்வார்கள். கே. எஸ். அனந்த நாராயண ஐயரும், கோல்டன் சாரதாம்பாளும்தான் நாயருடைய பேச்சுக்கு ஒருவாறு ஈடு. கொடுக்கக்கூடியவர்கள் என்று நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். அவர் என்ன பேசுவாரோ வழக்கமான பாடத்தை விட்டு வேறு எதையாவது பேசினால் என்ன செய்வது? என்ற அச்சம் எங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் குடி கொண்டிருந்தது. நாயர் சத்தியவானக நடித்த முதல் பகுதியில் சுமாலியாக நடித்த என். எஸ். கிருஷ்ணனுடன் ஏதேதோ புதிய கேள்விகள் போட்டார். நகைச்சுவை நடிகரானதாலும், ஏற்கனவே சபையோரிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்ததாலும் என். எஸ். கே, ஒருவாறு சமாளித்தார். சாரதாம்பாள் அன்று மிகத் திறமையாக நடித்தார். வேலுநாயருக்கும், அவருக்கும் நடந்த உரையாடலை சபையோர் நன்கு ரசித்தார்கள். சத்தியவாகை நடித்த முற்பகுதி முடிந்தது. அடுத்தது எமதர்மன் காட்சி. சித்திரகுப்தனிடம் விசாரணை நடந்தது. சத்தியவான் உயிரைக் கவர்ந்து வரக் கிங்கரர்கள் அனுப்பப் பட்டார்கள். அடுத்து நாரதர் வர வேண்டிய கட்டம். நான் வந்தேன். வேலுநாயர் நாங்கள் வழக்கமாகப் பேசும் வசனங்களையே பேசினார். சுவாமிகளின் பாடத்தை அவர் ஒழுங்காகப் பேசியது எனக்கு வியப்பாக இருந்தது.

வாக்கு வாதம்

சத்தியவான் உயிரைக் கவராதிருக்கும்படி நாரதர் எம தருமனை வேண்டுகிறார். இருவருக்கும் வாதம் நடைபெறுகிறது. முடிவில் எமன் கோபம் கொள்கிறார். “எட்டி நில்லும் நாரதரே” என்னும் பாட்டு; இதன் பிறகு நாரதர் சபதம் செய்து கொண்டு உள்ளே போகவேண்டும். நாரதருக்கும் எமனுக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. வழக்கப்படி பேசும் சுவாமிகளின் பாடங்களையே நாயர் பேசி வந்தார். நானும் ஒழுங்காகப் பேசினேன். சுவாமிகளின் பாடம் முடிந்தது. எமன், “என்ன சொன்னீர்?” என்று கூறிப் பாட்டைத் தொடங்க வேண்டும். நாயர், நான் எதிர்பாராதபடி மேலும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வதெனத் தோன்றவில்லை.

நாரதரின் திணறல்

இம்மாதிரி ஸ்பெஷல் நாடகங்களில் பேசி நன்கு பழக்கமில்லாததால் நான் திணறினேன். நாரதர் திணறுவதைப் பார்த்த நாயர், மேலும் சிரித்துக் கொண்டே பேசினார். எமன் கோபப்பட்ட பிறகு பேச வேண்டிய ஒரே ஒரு வசனம் மட்டும் பாக்கியிருந்தது. ‘ஏ மறலீ! முன்பு மார்க்கண்டனுக்காகச் சிவபெருமானிடம் உதை வாங்கி அவமானப்பட்டதை மறந்து விட்டாயா?” என்ற வசனம் அது. வேறு வழியின்றி எமன் கோபப்படாத நிலையிலேயே, அதையும் பேசி முடித்தேன். எமனாக நின்ற நாயர் அதன் பிறகும் கோபம் கொள்ளவில்லை. “என்ன நாரதரே! அரியும், அயனும் காண்பதற்கு அரிதான எம்பெருமான் திருவடி என் மீது பட்டதையா அவமானம் என்று சொல்கிறீர்? ஆஹா, அதற்கு நான் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்?” என்று மேலும் சிரித்துக்கொண்டே பேசினார். எனக்கு எதுவும் தோன்றவில்லை. எமன் கோபப்பட்டாலல்லவா நாரதரும் கோபத்தோடு சபதம் செய்ய முடியும்? சிரித்துப் பேசும் எமனிடம் எப்படிக் கோபம் கொள்வது? திணறினேன்; ஏதேதோ குளறினேன். கடைசியாக என்னுடைய பரிதாப நிலைக்கு இரங்கி நாயர் கோபம் கொள்வது போல் நடித்த பிறகுதான் நாடகம் நகர்ந்தது. நானும் பாட்டுப் பாடிச்சபதம் செய்துவிட்டுத் தப்பித்தோம், பிழைத்தோம் என்று உள்ளே வந்து சேர்ந்தேன். ஒருவாறு நாடகம் முடிந்தது. மற்றொரு நாடகத்தையும் நடித்துவிட்டு வேலுநாயர் போய் சேர்ந்தார். அந்த இரு நாடகங்களுக்கும் எதிர்பார்த்தபடி வசூலாக வில்லை. பாட்டுக்கு அதிகமான மதிப்பு இருந்த காலமாதலால் பேச்சிலும், நடிப்பிலும் வல்லவரான வேலுநாயரைப் பொது மக்கள் அவ்வளவாக விரும்பவில்லை.

மகாபாரதம்

மகாபாரதத்தில் பெரியண்ணா துரியோதன்னாக நடித்தார். நான் துச்சாதன்னாகத் தோன்றினேன். வீட்டில் ஒத்திகை நடை பெற்றது. இன்னின்னவாறு செய்ய வேண்டுமென்று சாரதாம்பாள் அம்மையார் சுருக்கமாகச் சொன்னார்கள். துகிலுரியும் காட்சியைப் பற்றிய குறிப்பு எதுவும் விளக்கமாகத் தெரிந்து கொள்ள என்னால் முடியவில்லை. இதைப்பற்றி அவர்களிடம் கேட்க என் மனம் கூசியது. துச்சாதனனாக நடிக்க நேர்ந்த என் துர்ப்பாக்கியத்தை எண்ணி வருத்தினேன். நாடகத்தன்று கம்பெனி வீட்டில் ரோஜாப்பூ வர்ணத்தில் தோய்த்துப் பலசேலைகளை உலர்த்தியிருந்தார்கள். இந்த சேலைகளையெல்லாம் துகிலுரியும் காட்சியில் அம்மையார் உடுத்திக் கொள்வார்கள் என்று சொல்லப்பட்டது. நாடகம் தொடங்கியது. துகிலுரியும் காட்சியும் வந்தது. என் உள்ளம் ஏனோ பதறியது. கை, நடுங்கின. துரியோதனனாக நடித்த பெரியண்ணாவின் மனநிலை என்னைவிட மோசமாக இருந்திருக்கவேண்டும்! அவருடைய முகத்தில் இனம் தெரியாத ஒரு பீதி குடிகொண்டிருந்தது.

சேலையைக் களையுமாறு துரியோதனன் ஆணையிட்டார். நான் கை நடுக்கத்துடன் துரோபதையின் சேலைத் தலைப்பைப் பிடித்தேன். சாரதாம்பாள் அம்மையார் அப்போது தடித்த அற்புதமான நடிப்பை விவரிக்க இயலாது. “கிருஷ்ணா, கண்ணா, கோபாலா, மாதவா” என்று கதறிக்கொண்டு அவர்கள் இரு கரங்களையும் மேலே உயர்த்திக் கும்பிட்டதும், சுழன்று சுழன்று உடுத்தியிருந்த சேலைகள் லாவகமாக விட்டுக் கொடுத்ததும் எல்லாம் உண்மையிலேயே மாயா ஜாலம்போல் விளங்கின. உண்மையாகவே நாங்கள் பிரமித்துவிட்டோம். அந்தக் காட்சி முடிந்த பிறகுதான் எனக்கு உயிர் வந்தது.

வசந்தனின் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் மனோஹரா நாடகம் நடைபெற்றபோது ஒரு சுவையான சம்பவம் நடந்தது. என். எஸ்.கிருஷ்ணன் மனேஹராவில் வசந்தனாக நடித்தார். பெரும்பாலான நாடகங்களில் அவர் பவுடர் போடும் வழக்கம் இல்லை. இதற்கு விதிவிலக்காக இரண்டொரு நாடகங்கள் உண்டு. அவற்றில் ஒன்று மனோஹரா. நகைச்சுவை நடிகர்களில் அநேகர் உச்சிக் குடுமி வைத்துக்கொண்டிருந்த காலம். நகைச்சுவைக்கும் உச்சிக் குடுமிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அந்த நாளில் கருதப்பட்டு வந்தது. என். எஸ். கிருஷ்ணனும் அப்போது உச்சிக் குடுமி வைத்துக் கொண்டிருந்தார். மனோஹராவில் மட்டும் வசந்தனுக்கு ஒரு பழைய ‘டோப்பா’ (பொய்ச் சிகை) வைத்துக் கொள்வது வழக்கம்.

நாடகம் நடந்து கொண்டிருந்தது. வசந்தன் புருஷோத்தம மஹாராஜாவின் ஆடையாபரணங்களையெல்லாம் புனைந்து கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சி நடந்தது. கலைவாணர் ஒவ்வொரு மனோஹராவின் போதும் புதிது புதிதாக ஏதாவது கற்பனை செய்து நடிப்பது வழக்கம். எனவே பக்கத் தட்டிகளின் மறைவில் நடிகர்கள் கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். புருஷோத்தம ராஜாவின்ஆடை யாபரணங்களுடன் வசந்தன் அவையில் புகுந்தார். ‘திரிலோக மும் புளுகும் சுந்தர திர விர சூரன் நானே” என்ற பாடல் முழங்கியது. தூங்கிக்கொண்டிருந்த விகடனை எழுப்பி, தேச விசாரணை நடத்தினார். புதிய கற்பனைகளை உதிர்த்தார். எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு. கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தோம்.

சிற்றெறும்பின் திருவிளையாடல்

என். எஸ். கே. முகத்தில் திடீரென்று ஏதோ மாறுதல் ஏற்பட்டது. தலையிலிருந்த ரேக்கு ஒட்டிய தகரக் கிரீடத்தை அடிக்கடி எடுத்து, சரிப்படுத்திக்கொண்டார். ஏதோ அவஸ்தைப் படுவதுபோல் அவருடைய முகம் தோற்றம் அளித்தது. வசந்தனின் அட்டகாசம் வழக்கத்திற்குமேல் அதிகமாக இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

“விகடா, எனக்கு ரொம்ப அவசரம். நான் அதிக நேரம் இங்கே நிற்க முடியாது. என்னால் தாங்க முடியவில்லை. நான் உள்ளே போகிறேன். பிறகு வந்து பேசிக்கொள்கிறேன்”.

என்று சொல்லி, அவசர அவசரமாக உள்ளே வந்தார். கிரீடத்தைத் தூக்கி எறிந்தார். தலையில் போட்டிருந்த டோப்பா வைக்கையில் எடுத்தார். “ஆ...ஆ...உஸ்...” என்றெல்லாம் அரற்றினார். விஷயம் விளங்காமல் என்னமோ ஏதோ என்று திகைத்தோம், “என்ன, என்ன?” என்று எல்லோரும் சூழ்ந்து கொண்டோம். “ஒண்னுமில்லேப்பா, சிற்றெறும்பின் திருவிளையாடல்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

நடந்தது இதுதான். நாடகத்தின் முற்பகுதி முடிந்து, டோப்பாவைக் கழற்றியபோது ஒப்பனையாளரிடம் “ஏம்பா, இதுக்கு தேங்கா எண்ணெய் போட்டு, கொஞ்சம் சரிப்படுத்தி வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டிருக்கிறார். அவருடைய ஆணையை உடனே நிறைவேற்றிய ஒப்பனையாளர், எண்ணெய் போட்டு, டோப்பாவைச் சரிப்படுத்தித் தனியே பத்திரமாக ஓரிடத்தில் வைத்துவிட்டார். டோப்பா வைத்த இடத்தில் எறும்புகள் ஏகாந்தமாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. எண்ணெய் மணத்தில் டோப்பாவைத் தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்ட சிற்றெறும்புகள் கலைவாணரின் உச்சிக்குடுமித் தலையை நன்றாகப் பதம் பார்த்துவிட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நீண்ட காலம் வரையில் கலைவாணர் டோப்பா வைக்கும் போதெல்லாம் சிற்றெறும்புகள் செய்த இந்தத் திருவிளையாடல்களைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்.