எனது நாடக வாழ்க்கை/எங்கள் நாடக அரங்கம்

விக்கிமூலம் இலிருந்து
எங்கள் நாடக அரங்கம்

நாடகவாழ்க்கையில் பல ஆண்டுகள் உழன்று தட்டித் தடுமாறி வந்த நாங்கள் எங்கள் நாடக அரங்கு என்று உரிமை யோடு சொல்லிக் கொள்ளத்தக்க வகையில் ஷண்முகா அரங்கம் உருவாகியிருப்பது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

சொந்தத் தியேட்டரில் முதல் நாடகமாக 11- 11. 47இல் ஒளவையார் நாடகம் நடைபெற்றது. சுதத்திரம் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர் திரு. ஆர். கே. சண்முகம் செட்டியார் அன்று தலைமை தாங்கினார். மனம் திறந்து பாராட்டினார்.

கே. ஆர். சீதாராமன் ஒளவையார்

பில்ஹணன் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், இரவில் நாடகத்திலும் பகலில் படத்திலுமாக நடித்து வந்தேன். அடிக்கடி தொண்டை கட்டிக்கொண்டு நாடகம், படம் இரண்டுக்கும் இடையூறு ஏற்படும்போல் தோன்றியது. இரவில் படப்பிடிப்பை வைத்துக் கொள்வதற்கும் முடியாமலிருந்தது. ஒளவையாருக்கு நல்ல வசூலாகியதால் அதனை நிறுத்தவும் விரும்பவில்லை. எனவே எங்கள் குழுவின் நீண்டகால அனுபவம் பெற்றநடிகரான கே. ஆர் சீதாராமனை ஒளவையாராக நடிக்க வைக்கலாம் என்று முடிவுசெய்தேன். 19.11.47 முதல் கே ஆர். சீதாராமன் ஒளவையாராக நடித்தார். மாலை 6மணிக்குமேல் நான் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட நேர்ந்ததால் நாடகத்தைப் பார்க்க இயலவில்லை. படப்பிடிப்பு ரத்து செய்யப் பட்டதால் அதைப்பயன் படுத்திக் கொண்டு ஒருவருக்கும் சொல்லாமல் சபையில் இருந்து நாடகத்தைப் பார்த்தேன். தம்பி சீதாராமன் ஒளவையாராக மிக அருமையாக நடித்தார். அற்புதமாகப் பாடினார். தொடர்ந்து அவரே ஒளவையாராக நடிக்கலாம்

என்ற உறுதி எனக் கேற்பட்டது. நாடகம் முடிந்ததும் உள்ளே சென்று சீதாராமனைப் பாராட்டி உற்சாகப் படுத்தினேன்.

ஔவை ஆசிரியருக்குக் காணிக்கை

ஒளவை நாடகத்தின் உரிமையை திரு. பி. எதிராஜூ அவர் களிடம் நாங்கள் பெற்றபோது அவருக்கு ஒரு சிறு தொகை தான் அன்பளிப்பாகக் கொடுக்க முடிந்தது. எனவே ஆயிரக் கணக்கில் வசூலாகும் கோவையில் அவருக்குக் காணிக்கையாக. ஒரு நாடகம் நடத்திக் கொடுக்க விரும்பினோம். 30.11-47 இல் நடைபெற்ற ஒளவையார் நாடகவசூல் ரூ.1619.8.0ஆசிரியருக்குக் காணிக்கையாகக் கொடுக்கப் பெற்றது. ஒளவையார் முழுவதை யும் பார்த்து, நாடகத்தின் தமிழ்ச்சுவையை நன்முக ரசித்து, நாடகத்தின் மங்களப் பாடலும் தமிழ் மொழி வாழ்த்தாக இருக்க வேண்டுமென்று விமர்சனம் வரைந்த தலைவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் திருக்கையாலேயே இந்தக்காணிக்கையை ஒளவை ஆசிரியருக்கு அளிக்கச்செய்தோம். ஆம்; அன்று சிலம்புச்செல்வர்தான் தலைமை தாங்கி வாழ்த்தினார்.

சிலம்புச் செல்வரோடு மேலும் தொடர்பு

1946இல் கோவையில் இருந்த போது, திரு ம. பொ. சி. அவர்கள் நடத்தி வந்த திங்கள் இதழைத் தொடர்ந்து படித்து வந்தேன். 1946 ஆகஸ்டு இதழில் “கண்ணகிக்குக் கோயில் உண்டா?” என்னும் தலைப்பில் சிலம்புச்செல்வர் எழுதியிருந்த சிறிய கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு பெரிய ஆராய்ச்சிக்குத் தோற்றுவாயாக அக்கட்டுரை அமைந்திருந்தது. தமிழ்ப் பேராசிரியர்கள் பலரும் செய்யாத ஒரு சிறந்த ஆராய்ச்சிக்கு வித்திட்டது போன்றிருந்தது அக்கட்டுரை. அவரது கட்டுரையினை பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். இக்கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு மேலும் நன்கு. ஆராய்ந்து ஒரு நூல் எழுதுமாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து கடிதங்கள் மூலமே எங்கள் உறவு வளர்ந்தது.

1947 நவம்பரில் நடைபெற்ற தமிழரசுக்கழக மாநாட்டிற்கு 100 ரூபாய்கள் நன்கொடை அனுப்பினேன். அதன் காரணமாக நட்புறவு மேலும் வளர்ந்தது. நவம்பர் முன்றாவது வாரத்தின் தலைவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. உடல்நலம் மிகவும் குன்றி யிருப்பதாகவும், வயிற்று நோய் அதிகரித்திருப்பதாகவும், எங்காவது பத்து நாட்கள் சென்னையைவிட்டு வெளியே போய் ஒய்வு பெற விரும்புவதாகவும் எழுதியிருந்தார். கோவை இராமனத புரத்தில் படப்பிடிப்பை முன்னிட்டு ஒரு பெரிய வீட்டில் தங்கி யிருப்பதாகவும், விரும்பினல் எங்கள் இல்லத்திலேயே தங்கிப் பூரண ஒய்வு பெறலாமென்றும் பதில் எழுதியிருந்தேன். தலைவர் அவர்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டார். 1947 நவம்பர் கடைசி வாரத்தில் கோவைக்கு வந்து எங்களோடு தங்கிளுர், ஒய்வு பெறும் நோக்கத்தோடு தான் வந்தார். ஆனால் நண்பர்கள் அவரை ஒய்வுபெறவிடவில்லை. தினமும் யாராவதுவந்து அவருக்கு அன்புத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். திங்கட்கிழமை எனக்கு ஒய்வு நாள். அன்று நானும் தலைவரும் திரைப்படம் பார்க்கச் செல்வோம். திரைப்படத்தில் அவருடைய கவனம் அதிகமாகச் செல்லுவதில்லை, வேறு ஏதாவது இலக்கியங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். 30-11-47இல் அவர் எங்களோடிருந்தால் அவரையே இந்தக் காணிக்கையை அளிக்கப் பயன்படுத்திக் கொண்டோம்.

சி. ஏ. அய்யாமுத்துவின் கஞ்சன் படம்

மறுநாள் 1-12-47இல் இருவரும் கஞ்சன் படம் பார்த்தோம். எனது பெருமதிப்புக்குரிய நண்பர் கோவை சி. ஏ. அய்யாமுத்து அவர்களால் எழுதப் பெற்ற கதை அது. வசனம் பாட்டு அனைத்தையும் அவரே அருமையாக எழுதியிருந்தார். தமிழர் காட்டிலே தமிழர் ஆட்சியே தழைத்திடச் செய்யடா தமிழா ! என்று படத்திலே ஒரு பாடல் வருகிறது. இந்தப் பாடலே மிக உணர்ச்சியோடு பாடியிருந்தார் என் அருமைத் தோழர் எம். எம், மாரியப்பா. பாட்டு மேலும் தமிழர்களுக்குத் தணிக்கொடி வேண்டு மென்றும் முழக்கி முடிகிறது. இந்தப் படத்தைப் பார்த்ததில் தலைவருக்கும்எனக்கும் அளவற்றமகிழ்ச்சி.திரு சி.ஏ.அய்யாமுத்து அவர்களைப் பாராட்டி மறு நாள் கடிதம் எழுதினேன். கஞ்சன் படத்தில் சிறிதும் கஞ்சத்தனம் செய்யாமல் கருத்தை விளக்கமாகப் பாடல் மூலம் முக்கியதற்காக அவரைப் பாராட்டினேன்.

ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம்

பகல் நேரங்களில் பில்ஹணன் படப்பிடிப்புக்குத் தலைவர் அடிக்கடி என்னோடு வந்தார். அங்கும் இலக்கியப் பேச்சுத்தான். வ்ந்த இடத்தில் வேடிக்கையாக படப்பிடிப்பைப் பார்த்துக் கொண்டிருக்கலாமல்லவா? ஸ்டூடியோவுக்குள் வந்தும் அங்கு நடைபெறும் வினோதங்களைப் பார்க்காமல் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. 9.12.47 இல் நடைபெற்ற முள்ளில் ரோஜா முதல் நாடகத்திற்கும் ம. பொ. சி தலைமை தாங்கினார். நாடாகாசிரியர் ப.நீலகண்டன் அவர்களை மனமாரப் பாராட்டினார். அன்று காலை கோவைக்கு அருகிலுள்ள பேரூருக்குச் சென்றிருந்தோம். ஆலயத்திலுள்ள அழகிய சிற்பங்களைக் கண்டு ம. பொ. சி. அதிசயப்பட்டார். தலைவர் எங்களோடு தங்கியிருந்த பதினேந்துநாட்களும் எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. எங்கள் பெரியண்ணா திரு டி.கே.சங்கரன் ஒர் அதிசய மனிதர் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். ஒழுக்கத்தின் உறைவிடம் அவர். அதிகமாக யாரோடும் பேச மாட்டார். அவரை எப்படியோ கவர்ந்து விட்டார் தலைவர் டி. பொ. சி. ஒய்வு நேரங்களில் தலைவரும் பெரியண்ணாவும் தனியேயிருந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். 10. 12. 47இல் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு சிலம்புச் செல்வர் சென்னைக்குப் புறப்பட்டபோது எங்களுக்கெல்லாம் வருத்தமாக இருந்தது அவர் தங்கயிருந்த நாட்களில் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டதால் எங்கள் நட்புறவு மேலும் வளர்ந்தது.

உயிரோவியம் அரங்கேற்றம்

திரு. நாரணதுரைக்கண்ணன் அவர்கள் திருச்சிக்கு ஒளவயா ரைப் பார்க்க வந்திருந்தபொழுதே அவரது உயிரோவியம் நாவலை நாடகமாக்கித் தர வேண்டினோம். கோவை முகாமில் நாடகத்துக் கான காட்சிகளுக்குக் குறிப்புகள் எடுத்தோம். நாடகத்தை உயரியமுறையில் அமைத்துத்தந்தார் ஆசிரியர். கவினார். கு. சா. கிருஷ்ணமூர்த்தி உயிரோவியத்திற்கான பாடல்களை எழுதினார். உயிரோவியத்தைப் பற்றிய பல்வேறு சிறப்புக்களை இரண்டாவது பாகத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமெனக் கருது கிறேன். தமிழ்க் காதலை உயர்ந்த முறையில் விளக்கும் ஓர் ஒப்பற்ற நாடகமாக உயிரோவியம் அமைந்தது. மூன்று நாட்கள் தொடர்ந்து மேடை ஒத்திகைகள் நடைபெற்றன. இலண்டன் மாநாகரத்திலிருந்து டிம்மர் செட் ஒன்று வரவழைத்திருந்தோம். எட்டு அடி சமசதுரமுள்ள ஒரு சிறிய இரும்புக் குழாய் மேடை யுடன் அது வந்திருந்தது. அதனை எவ்வாறு இயக்குவது என்பது: புரியவில்லை. எங்கள் கம்பெனி மின்சார நிபுணர் டி.வி. ஆறுமுகம் தாம் அதை இயக்குவதாகக்கூறி, சில மணி நேரங்களில் வெற்றி கரமாக இயக்கிக் காட்டினார். உயிரோவியம் நாடகத்தில் உள் நாடகக் காட்சி ஒன்று வருகிறது. துரோபதை என்னும் நாடகம் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது. நாடகத்தின் லட்சிய முடி வினைச் சூசனையாகச் சுட்டிக்காட்டும் உள் நாடகம் துரோபதை. இந்த நாடகக்காட்சிக்கு அந்த எட்டடி மேடையை நல்ல முறை. யில் பயன்படுத்திக் கொண்டோம். வெளியிலுள்ள விளக்குகள் முழுவதையும் அணைத்துவிட்டு டிம்மர் செட் டின் துணையோடு: உள்மேடையில் துரோபதை நாடகம் நடைபெறுவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். 14. 1. 48ல் உயிரோவியம் கோவை ஷண்முகா அரங்கில் அரங்கேறியது. கோவைக்கிழார் சி. எம். ராமச்சந்திர செட்டியார் அவர்கள் நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். அன்றைய நாடக வசூல் ரூ. 1259. 14.0 ம். நாடக ஆசிரியர் திரு. நாரண துரைக்கண்ணன் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றது.

இரண்டாவது நாள் நடைபெற்ற நாடகத்தில் மாறுங் காட்சியின்போது எனக்கு முகத்தில் பலத்தஅடிப்பட்டது. மூக்குக் கண்ணாடிக்காக ‘பிரேம்’ மாத்திரம்போட்டிருந்தேன். அடிப்பட்ட போது அந்த பிரேம் அப்படியே என் கண்களுக்கு அடிப்பகுதியில் பதிந்து ரத்தக் காயம் உண்டாக்கி விட்டது. கண்ணாடி இருந்தால்: அது உடைந்து கண்களே. ஊறுபடுத்தியிருக்கும், ‘பிரேம்’ மட்டும் போட்டிருந்ததால் கண்கள் பிழைத்தன. எல்லோரும்: நாடகத்தால் ஏற்பட்ட கண் திருஷ்டி என்றார்கள். நாடகம் முடிந்ததும் நேராக எங்கள் நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் சென்று மருந்து போட்டுக் கொண்டேன்.