நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/புன்சிரிப்போடு குழந்தை வளர்ந்தது

விக்கிமூலம் இலிருந்து

1. புன்சிரிப்போடு குழந்தை வளர்ந்தது

பெருமானார் அவர்களின் குழந்தைப் பருவம், பாட்டனார் முத்தலிப் அவர்களின் ஆதரிப்பில் இருந்தது.

அப்துல் முத்தலிப் அவர்களின் உடல் முதுமையால் நலிந்து, தளர்ந்தது.

தாம் உயிரோடிருக்கும் பொழுதே, குழந்தையைத் தக்க பாதுகாப்பில் விட்டு விடக் கருதினார். அதற்காகத் தம்முடைய புதல்வர்களை அழைத்து ஆலோசித்தார்.

அப்பொழுது, முதலாவதாக அபூலஹப், அக்குழந்தையின் பராமரிப்பைத் தாம் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.

“நீயோ பணக்காரன், கடின உள்ளம் உடையவன்; தாய் தந்தையற்ற இக்குழந்தையை மகிழ்வோடு வளர்க்க உன்னால் இயலாது” என்று கூறிவிட்டார் அப்துல் முத்தலிப்.

ஹலரத் அப்பாஸ் தாம் வளர்ப்பதாகக் கூறினார்.

“உனக்குக் குழந்தைகள் அதிகம். அவற்றோடு இக்குழந்தையை எவ்வாறு ஆதரிக்க இயலும்?” என்று கூறிவிட்டார்.

இறுதியாக, அபூதாலிப் அவர்கள்,”நான் பணக்காரன் அல்லன் எனினும், இக்குழந்தையை வளர்க்கும் நற்காரியத்துக்கு நான் தகுதியானவன் என்று நீங்கள் கருதினால், நான் மனப்பூர்வமாக அப்பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்” என மிகப் பணிவோடு வேண்டிக் கொண்டார்.

அதைக் கேட்டதும்,”இதற்கு நீ பொருத்தமானவன் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆயினும் அந்தக் குழந்தையே அதைத் தீர்மானிக்கட்டும்”, என்று கூறி, பெருமானார் அவர்களை அருகில் அழைத்து, “அருமைக் கண்மணியே! எனக்கோ வயதாகி விட்டது. உடலும் தளர்ந்துவிட்டது. இனி அதிக நாட்கள் உயிரோடு இருக்க மாட்டேன். ஆகவே, நம் குடும்பத்தவர்களான, இவர்கள் உம்மைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கத் தயாராயிருக்கின்றனர். இவர்களில் எவருடன் இருக்க, நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார் முதியவர்.

புன்சிரிப்புத் தவழ, அபூதாலிப் அவர்கள் மடியில் போய் உட்கார்ந்தார்கள் பெருமானார்:

உடனே அப்துல் முத்தலிப் கண்களில் நீர் தளும்ப, தம் மகனை நோக்கி,” அபூதாலிபே! தாய் தந்தையற்ற இக்குழந்தைக்குப் பெற்றோரின் அன்பும், பாசமும் இன்னது என்று தெரியாது. ஆகையால், இக்குழந்தையை, ஒரு குறையும் இன்றி, மகிழ்வோடு வளர்த்து வருவாயாக!” என்றார்.

அதன்பின் சில நாட்களில் அப்துல் முத்தலிப் மனஅமைதியோடு காலமானார்கள்.