நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/யூதர்களைத் தாக்கப் புறப்படுதல்

விக்கிமூலம் இலிருந்து

141. யூதர்களைத் தாக்கப் புறப்படுதல்

ஹிஜ்ரீ ஏழாவது ஆண்டு, கத்பான் கூட்டத்தினரையும், யூதர்களையும் முறியடிப்பதற்காகப் பெருமானார் அவர்கள் மதீனாவை விட்டுப் புறப்பட்டார்கள்.

அவர்களுடைய பிராட்டியார்களில் உம்மு ஸமா அவர்கள் மட்டும் உடன் சென்றார்கள். பெருமானார் அவர்களுடன் சென்ற படைகளின் எண்ணிக்கை ஆயிரத்து அறுநூறு. அவற்றில் இருநூறு குதிரைப்படையும் மீதி காலாட் படையுமாயிருந்தன.

நடைபெற்ற சண்டைகளில் சிறிய கொடிகளையே கொண்டு போவது வழக்கம். இப்பொழுது மூன்று பெரிய கொடிகள் கொண்டு செல்லப்பட்டன.

படை புறப்பட்டுச் செல்லும் போது, பிரபலமான அரபுக் கவிஞர் ஒருவர் அரபுப் பாடலைப் பாடி படையினருக்கு உற்சாகமூட்டினார்.

“அல்லாஹ்வே! நீ வழி காட்டாவிட்டால், நாங்கள் ஒரு போதும் நேர் வழியை அடைந்திருக்க மாட்டோம்.

நோன்பு வைத்திருக்கவும் மாட்டோம்.

தருமம் செய்திருக்கவும் மாட்டோம்.

தொழுது இருக்க மாட்டோம்.

நாங்கள் உனக்கு அர்ப்பணமாகிறோம்.

எங்களுடைய வணக்கத்தில் ஏற்படும் குறைகளைப் பொறுத்து அருள்க.

எங்களுக்கு அமைதியைக் கொடுத்து அருள்க.

உதவிக்காக நாங்கள் அழைக்கப்பட்டால், நாங்கள் சேர்ந்து கொள்வோம்.

நியாயமற்ற காரியங்களுக்கு எங்களை யாரேனும் அழைத்தால் நாங்கள் அதை மறுப்போம்.

நாங்கள் சண்டை செய்வதாயிருந்தால், எங்களுடைய கால்கள் நிலைத்து நிற்குமாறு அருள் புரிவாயாக.

உன்னுடைய கருணையை விட்டு நாங்கள் விலகி இருக்க மாட்டோம்”

மேற்காணும் பாடலைப் பாடிக் கொண்டு, புறப்பட்டுச் சென்றுார்கள். போகும் வழியில் அவர்கள் பெரிய மைதானத்தை அடைந்தார்கள்.

தோழர்கள் “அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர்” என்று பெரு முழக்கம் செய்து கொண்டு சண்டைக்குக் கிளம்பினார்கள்.

அதைக் கவனித்த பெருமானார் அவர்கள், “மெதுவாகச் சொல்லுங்கள். ஏனெனில், உங்களிலிருந்து தொலைவில் இருக்கும் ஒருவனையோ, அல்லது காது கேளாத ஒருவனையோ நீங்கள் அழைக்கவில்லை. நீங்கள் யாரைக் கூப்பிடுகிறீர்களோ, அவன் உங்களுக்கு நெருக்கமாகவே இருக்கிறான்,” என்று அறிவுறுத்தினார்கள்.