நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/தீயவனின் தீங்கான எண்ணம்

விக்கிமூலம் இலிருந்து

192. தீயவனின் தீங்கான எண்ணம்

ஸகஸ் என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கூட்டம, பெருமானார் அவர்களைக் காண வந்தது. அக்கூட்டத்தின் தலைவர்களில் ஆமீர் என்பவனும் அர்பத் என்பவனும் முக்கியமானவர்கள்,

ஆமிரும், அர்பத்தும் பெருமானார் அவர்களைக் கொன்று விட வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, தூதர்களுடன் மதீனாவுக்கு வந்தார்கள்.

ஒரு நாள், ஆமீர் பெருமானார் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவர்களை வெட்டி விடுமாறு, அர்பத்துக்கு முன் கூட்டியே சொல்லியிருந்தான்.

அர்பத் பெருமானார் அவர்களை வெட்டுவதற்காக, அருகில் வந்து கையை உயர்த்த முற்பட்டான். ஆனால், அவன் கையோ அசையவில்லை. கண்கள் இருளடைந்து விட்டன. திகில் அடைந்து மரம் போல் அப்படியே நின்று விட்டான்.

அதன்பின் ஆமிர், பெருமானார் அவர்களிடம் தனிமையில் பேச வேண்டும் என்று சொன்னான்.

“நீர் ஒரே ஆண்டவன்மீது விசுவாசம் கொள்வதாக உறுதி கூறும் வரை, உம்மோடு நான் தனித்துப் பேச முடியாது” என்று பெருமானார் அவர்கள் கூறினார்கள்.

உடனே ஆமிர், “நீங்கள் எதிர்த்துச் சண்டை செய்ய முடியாத படி பெரிய சேனையைக் கொண்டு வந்து உங்களைத் தாக்குவேன்” என்றான். -

அப்போது பெருமானார் அவர்கள், “ஆண்டவனே! ஆமிருக்கு எதிராக, நீயே போதுமானவன்” என்று சொன்னார்கள். உடனே ஆமிர், அர்பதைக் கூட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டான்.

அப்போது, பெருமானார் அவர்கள், “ஆண்டவனே! இவர்களுடைய தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்று” என்று பிரார்த்தனை செய்தார்கள்.

வழியில், ஆமிருக்குக் கழுத்தில் நெறி கட்டி, “பிளேக்” போன்ற நோய் வந்தது.

குதிரை மீது தன்னைத் தூக்கி வைக்கும்படி தன் கூட்டத்தாரிடம் சொன்னான். குதிரை மீது நெடுந்தொலைவு போக முடியவில்லை. பனூ ஸலுல் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் அவனை இறக்கினார்கள். அங்கேயே அவன் இறந்தான்.

அவனுடன் வந்தவர்கள் எல்லோரும் இஸ்லாத்தைத் தழுவி, தங்கள் நகருக்குப் புறப்பட்டார்கள்.