நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/முன் அறிவிப்பும் திறவுகோலும்

விக்கிமூலம் இலிருந்து

159. முன் அறிவிப்பும், திறவுகோலும்

பெருமானார் அவர்கள், கஃபாவின் பாதுகாவலரான உதுமான் இப்னு தல்ஹா என்பவரை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்கள்.

அவர் வந்ததும், அவரிடமிருந்த திறவு கோலைப் பெருமானார் அவர்கள் வாங்கி, கஃபாவைத் திறந்து, உள்ளே சென்று இரண்டு 'ரக்அத்' தொழுதார்கள், தொழுகை நிறைவேறியதும் வெளியே வந்து, கதவைப் பூட்டி, திறவு கோலை உதுமானிடம் கொடுத்து, “இது எப்போதும் உம்மிடமும், உம்முடைய சந்ததியாரிடமும் இருக்கும்” என்று கூறினார்கள்.

பெருமானார் அவர்களின் திருவாக்குப்படி, அந்தத் திறவு கோல் இன்று வரை அந்த வம்சத்தாரிடமே இருந்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன், பெருமானார் அவர்கள் கூறிய முன் அறிவிப்பானது இப்பொழுது நிறைவேறியது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில், பெருமானார் அவர்கள் கஃபாவுக்குள் செல்லும் போது எல்லாம், அவர்களைக் குறைஷிகள் துன்புறுத்திக் கொண்டிருப்பார்கள். -

ஒரு சமயம், பெருமானார் அவர்கள், உதுமான் இப்னு தல்ஹாவுடன் கஃபாவுக்குள் செல்லும் போது, குறைஷிகள் இடையூறு செய்தார்கள். அப்பொழுது பெருமானார் உதுமானிடம், "இந்தத் திறவுகோல் ஒரு நாள் என் கையில் இருக்கும். அப்போது அதை நான் யாரிடம் கொடுக்க விரும்புகிறேனோ, அவரிடம் கொடுப்பேன்” என்று கூறினார்கள்.

அதைக் கேட்டதும், உதுமான், “குறைஷிகள் அன்றைய தினத்திலிருந்து தாழ்வடைந்து நாசமாவார்கள்” என்று சொன்னார். அதற்குப் பெருமானார் அவர்கள், “அல்ல; அவர்கள் அன்று முதல் மேன்மை அடைவார்கள்” என்று கூறினர்கள்.

பெருமானார் அவர்கள் திறவு கோலைக் கொடுக்கும் போது உதுமானிடம் முன் அறிவிப்பைப் பற்றி நினைவு படுத்தினார்கள்.

பெருமானாரின் பெருந்தன்மையான உள்ளத்தைக் கண்டு, உதுமான் அப்பொழுதே இஸ்லாத்தைத் தழுவினார்.

அடுத்து, பெருமானார் அவர்கள் தங்களின் பெரிய தந்தையான அப்பாஸ் அவர்களை அழைத்து, “யாத்திரிகர்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்” என்று கூறினார்கள்.

அதன் பின்னர், மக்கா நகரம் முழுவதும், பெருமானார் அவர்கள் கீழ்க்காணும் விஷயத்தை அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அது வருமாறு: “ஒரே நாயன் மீதும் நியாயத் தீர்ப்பு நாளின் மீதும் யார் விசுவாசம் உள்ளவரோ, அவர் தம் வீட்டிலுள்ள விக்கிரஹத்தை துண்டு துண்டாக்காமல் இருக்க மாட்டார்".