நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மதீனாவைத் தாக்க முயற்சி

விக்கிமூலம் இலிருந்து

75. மதீனாவைத் தாக்க முயற்சி

மதீனாவைத் தாக்குவதற்காகக் குறைஷிகள் பெரிய ஆரவாரத்தோடு புறப்பட்டு விட்டார்கள்.

அச்செய்தி பெருமானார் அவர்களுக்குத் தெரிந்தது. உடனே தோழர்களை எல்லாம் அழைத்து, செய்தியைச் சொன்னார்கள்.

அபூபக்கர் முதலானவர்கள் தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராயிருப்பதாகத் தெரிவித்தார்கள்.

பெருமானார் அவர்கள் அன்சாரிகளின் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள்.

அப்பொழுது கஸ்ரஜ் கூட்டத்தின் தலைவர் எழுந்து பெருமானார் அவர்களிடம், “தாங்கள் கட்டளையிட்டால், நாங்கள் கடலில் கூட விழுந்து விடுவோம்” என்று கூறினார்.

அடுத்து, மற்றொருவர் எழுந்து, "நாங்கள் எல்லோரும் உங்களுக்கு வலது புறமாகவும், இடது புறமாகவும் முன்னும் பின்னும் நின்று சண்டை செய்வோம்” என்றார். இவற்றை எல்லாம் கேட்டதும் பெருமானார் அவர்கள் மகிழ்ச்சியால் பூரித்தார்கள்.

குறைஷிகளை எதிர்ப்பதற்குத் தீர்மானித்தார்கள்.

ஆண்டவனிடமிருந்து அவர்களுக்கு அனுமதியும் கிடைத்தது.

ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு ரம்லான் மாதம் 12ந்தேதி, பெருமானார் அவர்கள் முஸ்லிம்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள்.

மதீனாவிலிருந்து ஒரு மைல் தூரம் வந்தவுடன், சேனைகளைச் சரி பார்த்தார்கள்.

இளம் பிள்ளைகளுக்கு, ஆபத்தான சந்தர்ப்பத்தில் வேலை இல்லை என்று கருதி, அவர்களை எல்லாம் திரும்பிப் போகுமாறு கூறினார்கள்.

மதீனாவை மேற்பார்வை செய்யுமாறு, அபூ லுபாபா என்பவரைப் போகும்படி சொன்னார்கள்.

தங்களுக்கு முன்னே இரண்டு உளவாளிகளை அனுப்பி, குறைஷிகளின் வருகையை அறிந்து முன்னெச்சரிக்கையாகத் தெரிவிக்குமாறு ஏற்பாடு செய்தார்கள்.

பத்ரு என்னும் பள்ளத்தாக்கு மதீனாவிலிருந்து எண்பது மைல் தூரத்தில், ஷாம் தேசத்துக்குப் போகும் வழியில் உள்ளது.

பத்ரு பள்ளத்தாக்கு வழியாகக் குறைஷிகள் வருவதாகத் தெரிந்ததும், அந்தப் பக்கமாக முன்னேறிச் சென்றார்கள்.

பத்ரு பக்கம் போனதும், பத்ரின் மற்றொரு பக்கம் குறைஷிகள் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதை உளவாளிகள் மூலம் அறிந்து, அந்த இடத்திலேயே நின்று கொண்டார்கள்.

முஸ்லிம்கள் சிறிய படையுடன் வந்திருந்தனர். குறைஷிகளோ ஏராளமான சேனையுடன் வந்திருந்தார்கள். குதிரைப் படையும் ஏராளமான தளவாடங்களும் அவர்களிடம் இருந்தன. குறைஷிகளின் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆனால், அபூலஹப் வரவில்லை.