நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உயர்வான பண்பு

விக்கிமூலம் இலிருந்து

74. உயர்வான பண்பு

குறைஷிகள் யுத்தத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் செய்தி பெருமானார் அவர்களுக்குத் தெரிய வந்தது. உடனே, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷூ என்பவரையும், அவருடன் பன்னிருவரையும் உளவு பார்த்து வருவதற்காக, நக்லா என்ற ஊரின் பக்கமாக அனுப்பினார்கள்.

பெருமானார் அவர்கள் மேற்படி அப்துல்லாஹ்விடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு அதைத் திறந்து பார்க்குமாறு சொல்லி அனுப்பி இருந்தார்கள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்துல்லாஹ் அந்தக் கடிதத்தைத் திறந்து பார்த்தபோது, "நீர் நக்லாவில் தங்கி இருந்து, குறைஷிகளின் நடவடிக்கைகளை அறிந்து தெரிவிக்க வேண்டியது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அப்துல்லாஹ் போகும் போது, தற்செயலாக வழியில் ஷாம் தேசத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு வந்த குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தினர் எதிர்ப்பட்டனர். அப்துல்லாஹ் அவர்களைத் தாக்கினார். அவர்களுள் சச்சரவு ஏற்பட்டு, இப்னுல் ஹல்ரமி என்னும் குறைஷி கொல்லப்பட்டார். மற்றும் இருவர் சிறை பிடிக்கப்பட்டார்கள். அப்துல்லாஹ்விடம் ஏராளமான பொருள்களும் அகப்பட்டன.

அவர் மதீனாவுக்கு வந்து, பெருமானார் அவர்களிடம் நடந்தவற்றை விவரித்து, தாம் கொண்டு வந்த பொருள்களையும் சமர்ப்பித்தார்.  பெருமானார் அவர்கள் அப்துல்லாஹ்விடம் “இவ்வாறு செய்வதற்கு உமக்கு நான் அனுமதி தரவில்லையே?" என்று. கூறி, அவர் சமர்ப்பித்த பொருள்களை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

பெருமானார் அவர்கள் கட்டளைக்கு மாறாக அவர் செய்ததை, மற்ற தோழர்களும் கண்டித்தார்கள்.

அப்துல்லாஹ் சண்டை செய்ததும், இப்னுல் ஹல்ரமி கொல்லப்பட்டதும் எதிர்பாராமல் நிகழ்ந்ததாகும். அதில் பெருமானார் அவர்களின் தூண்டுதல் எதுவும் இல்லை.

எனினும், இப்னுல் ஹல்ரமி உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறைப பிடிக்கப்பட்ட இருவரும் குறைஷிகளிடம் செல்வாக்குள்ளவர்கள்.

இவற்றால் குறைஷிகளுக்கு, பெருமானார் அவர்களிடம் ஏற்கனவே உள்ள பகைமை அதிகமாயின.