நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பகைவர்களை ஒழிக்கத் திட்டங்கள்

விக்கிமூலம் இலிருந்து

73. பகைவர்களை ஒழிக்கத் திட்டங்கள்

பெருமானார் அவர்கள் மதீனாவில் உள்ள முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக, இரண்டு விதமான திட்டங்களை உருவாக்கினார்கள்.

தங்கள் வியாபார வளர்ச்சியினால் குறைஷிகள், ஏராளமான செல்வத்தைச் சம்பாதித்து வந்தார்கள்.

முஸ்லிம்களுக்குத் தீங்கு புரிவதற்கு, அவர்களுடைய செல்வப் பெருக்கே காரணமாக இருந்தது. ஆதலால், குறைஷிகளின் வியாபாரப் பொருள்கள் அயல்நாட்டுக்குப் போவதைத் தடுத்து, அதன் மூலம் அவர்களைச் சமாதான வழிக்குக் கொண்டு வருவது முதல் திட்டமாகும்.

ஒரு வேளை, அவர்கள் சமாதான வழிக்கு வராமல் சண்டை செய்வதாயிருந்தாலும், அதற்கு முன்னெச்சரிக்கையாக முஸ்லிம்களுக்குச் சரியான பக்க பலத்தைச் சேகரித்துக் கொள்வதற்காகச் சுற்றுப்புறத்திலுள்ள கூட்டத்தாரிடம் நட்புறவு உடன்படிக்கை செய்து கொள்வது, இரண்டாவது திட்டமாகும்.

முதல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, பெருமானார் அவர்கள் நூறு பேர் கொண்ட குழுவை, மக்காவின் பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். வியாபாரம் செய்யப் புறப்பட்டுச் செல்லும் குறைஷிக் கூட்டத்தினரைத் தடுத்துத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பதே அவர்களுடைய வேலை.

அக்கூட்டத்தாரின் உயிருக்கோ, பொருளுக்கோ சேதம் விளைவிக்கவில்லை. அவர்களுடைய பொருள்களையும் அபகரிக்கவில்லை.

குறைஷிகளின் வியாபாரத்துக்கு இடையூறு உண்டாக்கி, அவர்களைச் சமாதானத்துக்குக் கொண்டு வருவதே நோக்கமாகும்.

இரண்டாவது திட்டத்தை நிறைவேற்றுவதற்காகப் பெருமானார் அவர்கள் மதினாவிலிருந்து முப்பது மைல் தொலைவிலுள்ள 'ஜூஹைனா' என்ற கூட்டத்தாரிடம், "முஸ்லிம்-குறைஷிகள் ஆகிய இரு கட்சியினருக்கும் அக்கூட்டத்தார் உதவி புரிவதில்லை” என்பதாக ஓர் உடன்படிக்கை செய்தார்கள்.

பெருமானார் அவர்கள் எண்பது தோழர்களுடன் அவ்வருடம் அப்வா என்னும் இடத்துக்குப் போய், பனூ லம்ராக் கோத்திரத்தாரிடம் ஒர் உடன்படிக்கை செய்தார்கள்,

அதாவது: “இது முஹம்மதுர் ரஸூசிலுல்லாஹ், பனூ லம்ராக் கோத்திரத்தாருக்கு எழுதிக் கொடுத்த உடன்படிக்கை, அந்த மக்களுடைய உயிரும் பொருளும் பாதுகாக்கப்படும். பனூ லம்ராக் கூட்டத்தினருக்கு உதவி செய்யப்படும். ஆண்டவனுடைய நபி அவர்கள் உதவிக்காக எப்போது கூப்பிடுகிறார்களோ, அப்போது அவர்கள் வந்து உதவி புரியவேண்டும்.”

அடுத்து, பெருமானார் அவர்கள், பனூ லம்ராக் கூட்டத்தாரின் நண்பர்களான பனூ முத்லஜ் என்னும் கோத்திரத்தாரிடம் சென்று, மேலே கூறிய நிபந்தனைப்படி மற்றோர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.