நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பிராட்டியாரின் பிரதிநிதி

விக்கிமூலம் இலிருந்து

15. பிராட்டியாரின் பிரதிநிதி

கதீஜா பிராட்டியார் மக்காவின் கண்ணியமான குறைஷி இனத்தில் தோன்றியவர்.

இவர் இரு முறை திருமணம் செய்து கொண்டும் விதவையானார். மேன்மையான குணமும், ஒழுக்கமும் உள்ளவர். இதன் காரணமாகப் பரிசுத்தமானவர் என்னும் கருத்துக் கொண்ட 'தாஹிரா' என்னும் பட்டத்தால் அழைக்கப்பட்டார்.

சிறப்பு மிக்க குணங்களுடன் செல்வமும் நிறைந்தவர்.

மக்காவிலிருந்து வியாபாரத்திற்காக, வெளி நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளில் பாதி எல்லா வியாபாரிகளுடையதும், மறுபாதி கதீஜாப் பிராட்டியாருடையதும் ஆகும்.

பெருமானார் அவர்களின் உயர்வான பண்புகளைக் கேள்விப்பட்ட பிராட்டியார், அந்தப் பொறுப்பு மிக்க பதவியை நாயகத்துக்கே அளிக்கக் கருதினார்.

பிராட்டியார் தம் கருத்தைத் தெரிவிப்பதற்காகவும், மேலும், ஷாம் தேசத்துக்குக் கொண்டு செல்லும் வியாபாரப் பொருள்களை விற்பனை செய்து கிடைக்கும் இலாபத்தில், மற்றவர்களுக்குக் கொடுப்பதைக் காட்டிலும் இரு மடங்கு இலாபம் தருவதாகவும் கூறி, பெருமானார் அவர்களிடம் ஒருவரை அனுப்பினார்.

பிராட்டியாரின் கருத்தைப் பெருமானார் அவர்கள், தங்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களிடம் கூறி, சம்மதத்தைப்பெற்று, பிராட்டியாரின் வியாபாரப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஷாம் தேசத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அவர்கள் கொண்டு சென்ற சரக்குகள் அனைத்தும், அதிக இலாபத்துக்கு விற்பனை ஆயின. திரும்பி வந்த பெருமானார் அவர்கள் விற்பனைத் தொகையையும், வரவு செலவுக் கணக்குகளையும் பாக்கி சிறிதும் இல்லாமல், கதீஜாப் பெருமாட்டியாரிடம் ஒப்படைத்தார்கள்.

அதன் மூலம், பெருமானார் அவர்களின் உண்மை, நேர்மை, திறமை ஆகியன பிராட்டியாருக்கு முன்னிலும் அதிகமாகப் புலப்பட்டன!