நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பகைவர்களின் தாக்குதல்

விக்கிமூலம் இலிருந்து

31. பகைவர்களின் தாக்குதல்

ஒரு நாள் பெருமானார் அவர்கள், கஃபாவின் அருகில் தனியாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட குறைஷிகள் ஒரு கச்சையைக் கொண்டு அவர்கள் கழுத்தைச் சுற்றி முறுக்க முற்பட்டார்கள்.

அதனால், பெருமானார் அவர்கள் மூச்சுத் திணறி, மிகுந்த இன்னலுக்கு ஆளானார்கள்.

அப்பொழுது, தற்செயலாக அங்கே வந்த அபூபக்கர் அவர்கள், அதைக் கண்டதும், அந்தச் சதிக்கூட்டத்தின் மத்தியில் நுழைந்து, மிகுந்த கஷ்டத்தோடு பெருமானார் அவர்களைக் குறைஷிகளின் பிடியிலிருந்து விடுவித்தார்கள்.

ஆனால், குறைஷிகள் அனைவரும் அபூபக்கர் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். அதனால் அவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்து விட்டார்கள் அவர்கள் உணர்வற்றுக் கீழே கிடந்ததைக் கண்டதும் இறந்து விட்டதாகக் கருதி, குறைஷிகள் போய்விட்டனர்.

பிறகு வெகு நேரம் கழித்துத்தான், அபூபக்கர் அவர்கள் உணர்வு பெற்றார்கள்.