நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உடன்படிக்கை ஒழிந்தது

விக்கிமூலம் இலிருந்து

40. உடன்படிக்கை ஒழிந்தது

பெருமானார் அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் சுமார் மூன்று ஆண்டுகள் உணவு இல்லாமல் துன்புற்றுக் கொண்டிருந்தனர்.

இறுதியாக, குறைஷிகளிலேயே தயாள குணமும், நியாய உணர்ச்சியும் உள்ள சிலர், துன்ப நிலையைக் காணப் பொறுக்காமல், உடன்படிக்கையையும் மீறி உணவுப்பொருள்களை அனுப்பி வைத்தார்கள்.

நெருங்கிய உறவினரான ஹிஷாம் என்பவரும் இரகசியமாகச் சில வேளைகளில் தானியங்களை அனுப்புவார்.

அபூதாலிப் அவர்களின் சகோதரி மகனான ஸூபைரிடம் அவர் சென்று, “நீர் மட்டும் நன்றாக உண்டு சுகமாக இருக்கிறீர்! ஆனால், உம்முடைய மாமாவிடமோ ஒரு தானியம் கூட இல்லையே. அவர்கள் இப்படி துன்புற்றுக் கொண்டிருப்பது உமக்குச் சம்மதம்தானா?" என்று கேட்டார்.

அதற்கு ஸூபைர், “நான் ஒருவன் என்ன செய்ய முடியும்? என்னோடு ஒருவராவது சேர்வதாயிருந்தால், அந்த நியாயமற்ற உடன்படிக்கையை நானே கிழித்து எறிந்து விடுவேன்” என்றார்.

“நான் உம்மோடு சேருகிறேன்” என்றார் ஹிஷாம்.

இருவரும் முத்யிம் என்பவருடைய இல்லத்துக்குச் சென்றார்கள். வழியில் அவர்களோடு வேறு மூவரும் சேர்ந்தார்கள்.

எல்லோரும் ஆலோசித்துக் காலையில் கஃபாவுக்குப் போய் முடிவு செய்வதாகத் தீர்மானித்தார்கள். மறுநாள் காலையில் கஃபாவுக்குப் போனதும், அங்கிருந்த மக்களை நோக்கி, “மக்காவாசிகளே! நாம் அனைவரும் சுகமாகக் காலம் கழிக்கிறோம். பனூ ஹாஷிம் குடும்பத்தார், உணவும் தண்ணீரும் இல்லாமல் வாடுகின்றார்கள். ஆண்டவன் பேரில் சத்தியமாக இந்த அக்கிரமமான உடன்படிக்கையைக் கிழித்து எறியும் வரை நான் சும்மா இருக்கமாட்டேன்” என்றார் ஹூபைர்.

உடனே அபூஜஹில் எழுந்து, இந்த உடன்படிக்கையைக் கிழிக்க யாராலும் முடியாது” என்றார்.

அப்போது ஸம் ஆ என்பவர் எழுந்து, "நீ பொய் சொல்லுகிறாய்; இதை எழுதும் போது நாங்கள் யாருமே இதற்குச் சம்மதம் அளிக்கவில்லையே” என்றார்.

பின்னர் மூவரும் சேர்ந்து ஆயுதங்கள் சகிதமாய், பனூ ஹாஷிம்கள் இருக்கும் பள்ளத்தாக்குக்குச் சென்று அவர்கள் அனைவரையும் அழைத்து வந்துவிட்டனர்.