நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கொலையாளியின் மனமாற்றம்

விக்கிமூலம் இலிருந்து

58. கொலையாளியின் மனமாற்றம்

பெருமானார் அவர்களும் அபூபக்கர் அவர்களும் நான்காம் நாள் குகையை விட்டுப் புறப்பட்டார்கள்.

ஒரு நாள் இரவும் பகலும் பயணம் செய்தார்கள். மறுநாளும் பயணத்தை மேற்கொண்டார்கள். பகலில் வெப்பம் அதிகமாயிருந்ததனால், அபூபக்கர் அவர்கள் சிறிது நேரம் நிழல் உள்ள பகுதியில் பெருமானார் அவர்களை இளைப்பாறச் செய்து, ஆடு மேய்ப்பவரிடம் சென்று, பால் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து பெருமானார் அவர்களைப் பருகச் செய்து, தாமும் பருகினார்கள். அங்கே உணவு எதுவும் கிடைக்கவில்லை.

மீண்டும் பயணமானார்கள். அப்பொழுது மக்காவிலிருந்து தேடி வந்த ஸூராக்கா என்பவர் தூரத்திலிருந்தே அவர்களைக் கண்டுவிட்டார். அவர்களை நெருங்கத் தம் குதிரையை வேகமாக விரட்டினார். குதிரை கால் இடறிக் கீழே விழுந்தது.

பெருமானார் அவர்களைத் தாக்குவதற்கு எண்ணி, நாட்டு வழக்கப்படி அம்புக் குறி போட்டுப் பார்த்தார். “வேண்டாம்” என எதிர்க் குறியே வந்தது ஆயினும், நூறு ஒட்டகங்கள் கிடைக்குமே என்ற ஆசை அவரைத் தூண்டியது. மறுபடியும் குதிரை மீது ஏறிச் சிறிது தூரம் சென்றதும், மீண்டும் குதிரையின் கால்கள் பூமிக்குள் பதிந்து விட்டன. மறுபடியும் அம்புக் குறி போட்டுப் பார்த்தார். வேண்டாம் என்றே மீண்டும் வந்தது. அதனால் அவருக்குக் கலக்கம் உண்டாயிற்று. ஊக்கம் தளர்ந்தது. மாபெரும் சக்தி ஒன்று, தமக்கு எதிராக வேலை செய்வதாக எண்ணி பெருமானார் அவர்களின் முன்னிலையில் வந்து, நடந்தவற்றைக் கூறித் தம்மைக் காப்பாற்றுமாறும், அதற்கு எழுத்து மூலமான ஆதாரம் தருமாறும் வேண்டிக் கொண்டார்.

அவ்வாறே ஹலரத் அபூபக்கரைக் கொண்டு எழுதுவித்து, ஸூராக்காவுக்கு உறுதி கொடுத்தார்கள். உத்தமத் திருநபியவர்கள்.