நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/முதல் பள்ளிவாசல்

விக்கிமூலம் இலிருந்து

59. முதல் பள்ளிவாசல்

மதீனாவுக்கு மூன்று மைல் தொலைவிலுள்ள குபா என்னும் ஊரில் பெருமானார் அவர்களும், அபூபக்கர் அவர்களும் வந்து சேர்ந்தனர்.

அங்கே இருந்த அன்சாரிகள் (மதீனாவாசிகள்) பெருமானார் அவர்கள் வருகை தெரிந்ததும், மிகுந்த அன்போடு வரவேற்று அழைத்து வந்து உபசரித்தனர்.

மக்காவிலிருந்து அலி அவர்களும் குபாவில் பெருமானார் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

பெருமானார் அவர்கள் குபாவில் முதலாவதாக ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்கள்.

மற்றவர்கள் கட்டட வேலை செய்வதைப் போல நபி பெருமானாரும், பொருள்களை எடுத்துக் கொடுத்துக் கூட வேலை செய்வார்கள்.

“நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்: நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்” என மக்கள் சொல்வார்கள். அப்பொழுது பெருமானார் அவர்கள் சிறிது நேரம் சும்மா இருப்பார்கள். பிறகு மீண்டும் வேலையில் ஈடுபட்டு விடுவார்கள்.

கட்டட வேலை செய்தவர்களுள், அரபிக் கவிஞர் ஒருவரும் இருந்தார். வேலை செய்யும் சிரமம் தெரியாமல் இருக்கும் பொருட்டு, அந்தக் கவிஞர் பாடுவார். பெருமானார் அவர்களும் அவரோடு சேர்ந்து பாடுவார்கள். குடாவில் பெருமானார் அவர்கள் திங்கள் கிழமையிலிருந்து வியாழன் வரை தங்கியிருந்து, வெள்ளிக்கிழமை அதிகாலையில் புறப்பட்டு பனூ ஸலீமுப்னு அவ்பு இடத்துக்கு வந்தார்கள். ஜூம்ஆத் தொழுகை நேரம் வந்துவிட்டதால், வாதீ ரானூனா என்னுமிடத்தில் ஜூம்ஆத் தொழுகையை நிறைவேற்றினார்கள். மதீனாவில் அவர்கள் நடத்திய முதல் ஜூம்ஆத் தொழுகை இதுதான்.