நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பொய்யான வதந்தி

விக்கிமூலம் இலிருந்து

85. பொய்யான வதந்தி

சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் கொடியைத் தாங்கிக் கொண்டிருந்த முஸ்அபுப்னு உமைர் என்பவர் குறைஷி ஒருவரால் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்டவரோ, ஏறக்குறைய பெருமானார் அவர்களைப் போன்ற முகத் தோற்றம் உள்ளவர். அதனால், பெருமானார் அவர்கள் உயிர் துறந்து விட்டதாகக் குறைஷி வீரர்களில் ஒருவர் கூக்குரலிட்டார்.

அந்தச் சப்தத்தைக் கேட்டதும், முஸ்லிம்கள் அணியில் பரபரப்பும், குழப்பமும் மேலிட்டன. பெரிய வீரர்களின் கைகளும், கால்களும் நடுங்கத் தொடங்கின. இத்தகைய குழப்பத்தில், முன்னால் இருந்த அணியானது, பின்னால் இருந்த அணியின் மீது விழுந்து, பெரிய கலக்கம் அடைந்தது. பெருமானார் அவர்கள் திரும்பிப் பார்த்த போது, அணியின் ஒரு பகுதியில் பதினொருவர் மட்டுமே நின்றார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அலி அவர்கள், அபூபக்கர் அவர்கள் முதலானோர்.

இந்தக் குழப்பத்திலும் கலக்கத்திலும், பலர் தைரியத்தை இழந்து விட்டனர். வீரர்கள் பலர் சண்டை செய்து, அங்கங்கே விழுந்து கிடந்தார்கள்.

அலீ அவர்கள் வாளை வீசியவாறு, எதிரியின் அணியினுள் புகுந்தார்கள். ஆனால், பெருமானார் அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை.

அனஸ் இப்னு மாலிக் அவர்களின் சிறிய தந்தையான அனஸ் இப்னு நல்ரு சண்டை செய்து கொணடே முன்னேறிச் சென்றார்கள். அப்பொழுது உமர் அவர்கள் குழப்பத்தில், கையிலுள்ள ஆயுதத்தைக் கீழே எறிந்து விட்டிருப்பதைக் கண்டு, “இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

“இப்போது சண்டை செய்து என்ன பயன்? பெருமானார் அவர்களோ, உயிர் துறந்து விட்டார்களே?” என்று உமர் கூறினார்கள்.

“அவர்களுக்குப் பின் நாம் உயிருடன் இருந்து என்ன செய்யப் போகிறோம்?” என்று கூறிக் கொண்டே, படைக்குள் புகுந்து சண்டை செய்து நல்ரு உயிர் துறந்தனர். அவர்களின் உடலைப் பார்த்த போது வாள்களும், ஈட்டிகளும், அம்புகளும் பாய்ந்து எழுபதுக்கு மேற்பட்ட காயங்கள் காணப்பட்டன. அவர்களுடைய சகோதரியைத் தவிர எவரும் அவர்களை அடையாளம் காண இயலவில்லை. அப்பெண்மணி கூடத் தம் சகோதரரின் விரல்களை வைத்தே அடையாளம் சொன்னார்.