பாரதியின் இலக்கியப் பார்வை/மார்பு மணி

விக்கிமூலம் இலிருந்து

மார்பு மணி

சிலம்பு சிலப்பதிகாரத்திற்குக் ஒரு காரணக் கருவி. அத்துடன் அது கண்ணகியாரது வழக்காடலில் கண் காணும் சான்றுப் பொருளாகி வெற்றி தேடித் தந்தது இவ்வகையில் ஒரு முத்திரைக் கருவியும் ஆயிற்று. அம்முத்திரையை “மணி” தான் பதித்தது. எனவே, ‘சிலம்பு மணி’, சிலப்பதிகாரம் மணிமாலையாகச் சில மணிகளை வழங்கியதாகின்றது.

சிலம்பைத் தொடர்ந்து சிலப்பதிகார உள்ளீட்டிற்குத் துணை நின்றவை சில. சிலம்பின் உள்ளீடுகளில் கற்றத் திறம் ஒன்று. அது கண்ணகியாரின் கற்புத் திறம். அக்கற்புத் திறம் எவ்வாறு பளிச்சிட்டது? மதுரை மாநகரைத் தீயிட்ட நெருப்பாலன்றோ பளிச்சிட்டது! அந்நெருப்பை எழுப்பியதற்கு அடித்தள நிகழ்ச்சி கண்ணகியார் தமது இடது மார்பைத் திருகி எரிந்த செயல். இத்தொடர்பில் கண்ணகியாரது மார்பிடம் சிலப்பதிகார உள்ளீட்டிற்கு இன்றியமையாத ஒன்றாகின்றது.

மார்பைத் திருகி எறிவது என்பதோ, மார்பை அறுத்துக் கொள்வது என்பதோ மார்பைச் சிதைப்பது என்பதோ மங்கையரது கற்பு நிலைக்குத் தமிழக மகளிர் கைக்கொண்ட ஒன்று. அவ்வாறு திருகிப் பறித்து எறிவது என்பது எவ்வாறு நிகழும்?

மங்கையரது மார்பு என்னும் உறுப்பின் காம்புப் பகுதி தான் இவ்வாறு திருகிப் பறித்து எறியப்பட்டது. அதுதான் நிகழக் கூடியது. இனை அறிவிக்கும். இளங்கோவடிகளார்

“இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா, அலமந்து
மட்டார் மறுகின் மணி முலையை வட்டித்து
விட்டாள்; எறிந்தாள் விளங்கிழையாள்”
என்று பாடினார்

பறித்த மார்பிடத்தைக் குறிக்கும் அடிகளாரது சொல்“மணி முலை”. இதில் பறிக்கப்பட்ட இடத்தை அடையாளங்காட்டும் சொல் “மணி”. இங்கு ‘அழகு’ என்னும் பொருளில்இச்சொல் அமைக்கப்படவில்லை. ‘நீல மணி’ என்னும் பொருளில் அமைக்கப் பட்டுள்ளது.

மார்பிடத்தின் முலைப்பகுதி கருநீலநிறங்கொண்டதால் நீலமணிக்குறிப்பில் இங்கு “மணி” அமைக்கப்பட்டது.

சிலப்பதிகாரம் தெளிவுபடுத்தக் கொண்ட கற்புத் திறத்தின் நோக்கத்திற்கு வெற்றி தந்த கண்ணகியாரது மார்பிடத்தில் மணி அமைந்து சிலப்பதிகாரம் ஒரு மணி மாலையாவதற்கு ஒரு மணியை வழங்கியது. இவ்வழங்களையும் பாரதி நெஞ்சம் நோட்டமிட்டிருக்கலாம்.