பாரதியின் இலக்கியப் பார்வை/உரைத் திறவுகோல் பாரதி

விக்கிமூலம் இலிருந்து

உரைத் திறவுகோல் பாரதி

இலக்கியப் பார்வையில் உரைப்பார்வை ஓர் உள்ளீடு செய்யுளைப் படிப்பவர் . அதன் உள்ளீடான பொருளைக் கண்டுகொள்கின்றனர். கண்டுகொள்ள இயலாது பூட்டப் பட்டுள்ள பூட்டிற்கு உரைதான் திறவுகோல். இலக்கியத்தைப் படைப்போரும், கையாள்வோரும் இவ்வுரைத் திறவுகோளில் மனம் பற்றுவார்கள். எந்நேரத்திலுந் திறப்பதற்குத் திறவு கோலை இடுப்பில் செருகியிருப்பது போன்று உள்ளத்தில் செருகி வைத்திருப்பர்.

இத்திறவுகோலை இலக்கியப் படைப்பாளரே பயன்படுத்துவார். இலக்கிய ஆர்வலரும் பயன்படுத்துவார். இலக்கிய மேற்கோளாளரும்பயன்படுத்துவார். இப்பயன்பாடு முழு நூலுக்கும் அமையும். ஆங்காங்கே வேண்டப்படும் இடங்களில் துண்டு துண்டாகவும் அமையும்.

இவ்விரண்டு வகையிலும் பாரதியார் அமைந்துள்ளார். தாம் படைத்த “பாஞ்சாலி சபத”த்திற்குத் தாமே குறிப்புரை எழுதியுள்ளார். தமது கட்டுரைகளில் காட்டும் மேற்கோள் பாடல்களுக்கு வேண்டுமிடங்களில் உரை எழுதியுள்ளார்.

தம் செய்யுளுக்குள்ளேயே இவ்வேலையையும் செய்துள்ளார். “வந்தே மாதரம்” என்பது வடசொல் தொடர். அதனை அமைத்து,

“வந்தே மாதரம் என்போம் ”
-என ஒரு பாடலைத்

தொடங்கினார். ஓர் ஐயம் எழுந்தது. “வந்தே மாதரம்” வேற்றுமொழித் தொடர் ஆயிற்றே. எளிய மக்களுக்கும் புரிய வேண்டுமே பூட்டாக வைத்துவிடக் கூடாதே காதிற் பட்ட தொடராக இருந்தாலும் பொருள் புரியாமல் கத்துவதில் பயனில்லை என்று கருதியிருப்பார். இதற்குத் திறவுகோலும் உரையும் வைத்து விடுவது நல்லது என்று கருதினாரோ என்னவோ, அடுத்த அடியாக,

“மாநிலத் தாயை வணங்குது மென்போம்” என்று கருதினார். ‘மாதரம்’ என்றால் தாய்நாடு வந்தனை-வணங்குதல். சொற்பொருள் சொல்வதுபோன்று உரை வகுத்தார். ஒரு பாடலிலேயே அடுத்தடுத்து அமைந்த இதனை உரை என்னாது வேறு என்னவென்று சொல்வது? வேண்டுமானால் மொழிபெயர்ப்பு என்று சொல்லலாம். மொழிபெயர்ப்பும் ஒரு வகை உரைதான். இதுபோன்று அன்றித் தம் பாடலுக்கு உரைவிளக்கம்போன்று தமது கட்டுரையில் கருத்துகளை வடிக்கும் முறையையும் கையாண்டுள்ளார்.

கட்டுரைகளில் தாம் காட்டும் மேற்கோள் பாடல்களுக்கு இடச் சூழலுக்கு ஏற்ப உரை எழுதும் முறையையும் காணலாம். இவ்வாறு, உரைவகைகள் பலவற்றையும் அவர் கையாண்டுள்ள பாங்கு அவரது இலக்கியப் பார்வையின் செயற்பாடு எனலாம். வகைக்கொன்றையும் காண்பது இக்கருத்துக்குப் பொருந்துவதாகும்.

தமது பாஞ்சாலி சபதப் பாடல்களில் இன்றியமையா இடங்களுக்கு உரைக்குறிப்பை வரைந்துள்ளார். அவர் வரைந்துள்ள முறைப்படியே வருகின்றன:

பாட்டு 24-வரி 7: பால்வகை மன்னவர்.
பால்பகுதி, பல பகுதிகளாக வகுக்கப்பட்ட
அரசர் கூட்டங்கள்.
பாட்டு 27-வரி 2:வளமைகள்-(உலக வழக்கு);
பெருமைகள் என்பது பொருள்.”

இவ்வாறு குறிப்பிட்ட சொல்லுக்குப் பொருள் குறிப்பார். தனிச்சொல்லுக்குப் பொருள் குறித்துத் தொடர் விளக்கம் தருவார். இலக்கிய வழக்கு இல்லையென்று உலக வழக்கு என்று காட்டுவார்.

மேலும்,
பாட்டு 13-வரி 4: மலர்விழிக் காந்தங்கள்-
காந்தத்திற்குரிய கவர்ச்சித் தொழில்
செய்துகொண்டிருக்கும்(மாதர்) விழிகள்”
—என விளக்கி நயம்காட்டுவார். பழைய
உரையாசிரியர் சொல்லமைப்பில் பார்வையை வைத்து,
பாட்டு 196-வரி 6: பழி மக்காள்- பழிப் பிள்ளைகளே பழிக்கு இடமாகிய என்க.
—“என்க” என்னும் சொன்முறை

யைக் கையாள்வார்.

“பாட்டு 199-வரி 1: கெலித்திடல் - வெல்லுகல். இது திசைச்சொல், கிராமியம்”
—என இலக்கணம் குறிப்பார்.

நாட்டுப்புற வழக்கு என்பார்.

“பாட்டு 19:இது எண் சீர்; ஈற்றது மா”
-என யாப்பிலக்கணம்

குறிப்பார். இவ்வாறு பாஞ்சாலி சபதப் பாடல்களுக்கு உரை வகுத்துள்ளார்.

இது குறிப்புரை வகை.
‘பாஞ்சாலி சபத’ உரைப்பகுதியில்,
“பாட்டு 124 : “இப்பாட்டின் மொத்தக் கருத்து” என்றும்,
“பாட்டு 69,70 இப்பாட்டுகளின் கருத்து” என்று கருத்தும் கருத்து விளக்கமும் தருவார். இப்பகுதிகள்,
கருத்துரை வகையும்
விளக்கவுரை வகையும் ஆகும்.

இவைபோன்று தமது கட்டுரைப்பகுதிகளில் மேற்கோள் காட்டும் செய்யுள்களுக்கு இன்றியமையாத இடங்களில் கருத்துரையும், பொழிப்புரையும் சொற்பொருளும்வரைந்துள்ளமை எடுத்துக் காணத்தக்கவை.

தமிழ்நாட்டு நாகரிகம் என்னும் கட்டுரையில் “ஈதலறம்” என்னும் ஒளவையர் பாடலைக் காட்டி அதற்கு,

“இவ்வெண்பாவின் கருத்து யாதெனில், ஈதலாவது அருள் செய்தல் அல்லது கொடுத்தல் என்றும் பொருள்படும்” என்று கருத்துரை தந்துள்ளார்.

இக்கட்டுரையிலேயே,
“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள”
-என்று திருவள்ளுவர் பாடியிருக்கிறார்.

“காண்டல், கேட்டல், உண்டல், மோப்பு, தீண்டுதல் எனும் ஐவகை இந்திரியங்களையும் ஒருங்கே இன்புறுத்தும் இயல்பு ஒளிபொருந்திய வளையணிந்த இப்பெண்ணிடக் தேதானுள்ளது” என்பது அக்குறளின் பொருள்.

இதனைக் கூர்ந்து நோக்கினால் குறளின் சொல்லமைப்பு வரிசையிலேயே பொருள் கூறி முடிப்பதை அறியலாம்.

இது முறையான பொழிப்புரை:
யாற்றுநீர் பொருள்கோள்
“மாசற்ற கொள்கை” என்னும் ஒளவைக் குறள் ஒன்றைக் காட்டி அதற்கு
“அதாவது இருதயத்தின் சுத்தமான பயமற்ற கபடமற்ற குற்றமற்ற பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால், உடம்பில் தெய்வத்தன்மை அதாவது சாகாத் தன்மை (அமரத் தன்மை) விளங்கும் என்றும் பொருள்படுவது” என எழுதினார்.
இது சிறப்புரை

இவ்வாறு உரைப்பாங்கில் வைத்துப் பாரதியாரது இலக்கியப் பார்வையை எடைபோட்டால், இலக்கியத்தின் உள்ளீடுபற்றிய கவனமும், நோக்கும், ஆய்வும் அதன்வழித் தோய்வும் அவர்பால் இழைந்திருந்தன எனலாம்.