ஏழாவது வாசல்/பணம் கொண்ட பிராமணன்

விக்கிமூலம் இலிருந்து

பணம் கொண்ட பிராமணன்

ஒரு பிராமணன் இருந்தான். அவன் அடிக்கடி தட்சிணேசுவரத்துக்கு வருவான். மிக எளிமையானவன். எப்பொழுதும் வணக்கத்தோடுதான் பேசுவான். என்னை அடிக்கடி சந்திப்பான். சில நாட்களுக்குப் பிறகு அவன் வரவேயில்லை. எங்கே போயிருப்பான். என்ன ஆனான் என்பது தெரியவில்லை.

ஒரு நாள் நாங்கள் கொன்னாகர் என்ற ஊருக்குப் படகில் சென்றோம். அந்த ஊரையடைந்து படகிலிருந்து இறங்கிக் கரையில் ஏறினோம்.

கங்கைக் கரையில் அந்தப் பிராமணனைப் பார்த்தோம். பிரபுக்களைப் போல் அவன் ஆற்றங்கரையில் காற்று வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் அருகில் கடந்து செல்லும் போது என்னைப் பார்த்தான். “என்ன சுவாமி நலமா?” என்று அவன் கேட்டான்.

அவன் கேட்ட குரலில் முந்திய பணிவும் அடக்கமும் இல்லை. தேவையில்லாத ஒரு மிடுக்கு அந்தக் குரலில் கலந்தொலித்தது.

அந்த மாறுபாடு எனக்கு நன்கு புலப்பட்டது. கூட இருந்த இருதயனிடம், “பிராமணனுடைய குரலைப் பார்த்தாயா?” இவனுக்குக் கொஞ்சம் பணம் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. பணம் கிடைத்தவுடன் எப்படி மாறிவிட்டான் கவனித்தாயா?" என்று கேட்டேன்.

இருதயன் விலா வலிக்கச் சிரித்தான்.

பலபேர் புதிதாகப் பணம் கிடைத்தவுடன் மாறிப்போய் விடுகிறார்கள். பணத்தால் அவர்களுடைய நல்ல பண்புகள் மாறிவிடுகின்றன.