மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/2. இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்

விக்கிமூலம் இலிருந்து

2

இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மதனா சொன்ன

பாதாளக் கதை

இரண்டாம் நாள் காலை போஜனாகப்பட்டவர் பல்லைத் தேய்க்காமலே காபி குடித்துவிட்டு, காலைப் பத்திரிகையை எடுத்து ஒரு புரட்டுப் புரட்டிப் பார்த்துவிட்டு, அதற்கு மேல் குளித்து, ‘அடுத்த வீட்டுக்காரன் பூஜை செய்கிறானே!' என்பதற்காகத் தானும் தன் மனைவியையும், அவள் செய்து கொண்டிருக்கும் சமையலையும் நினைத்துக் கொண்டே பூஜை செய்து, முப்பத்திரண்டு தருமங்களில் ஒரு தருமத்தைக்கூடச் செய்யாமல், சம்பிரமமாகச் சாப்பிட்டு, தாம்பூலம் தரித்து, மிஸ்டர் விக்கிரமாதித்தரின் சந்நிதானத்துக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த காலையில், அவருடைய நண்பரான நீதிதேவனாகப்பட்டவர் அங்கே வர, இருவரும் சேர்ந்து 'மலையில்லா மலைச்சாலை'க்குச் செல்வாராயினர்.

அங்கே அவர்கள் ஏறிச் சென்ற 'லிப்ட்' இரண்டாவது மாடியை நெருங்கியதுதான் தாமதம். அந்த மாடியின் ரிஸ்ப்ஷனிஸ்டான மதனா விரைந்து வந்து, ‘நில்லுங்கள், நில்லுங்கள்’ என்று சொல்ல, ‘'சொல்லுங்கள், சொல்லுங்கள்?” என்று இருவரும் லிப்டை விட்டு இறங்கி, அவளை நோக்கிச் செல்வாராயினர்.

“எங்கள் விக்கிரமாதித்தருக்கு உள்ளது போல உங்களுக்குத் தயை உண்டா?”

"உண்டு."

"தாட்சண்யம் உண்டா?"

"உண்டு."

"இரக்கம் உண்டா?"

"உண்டு."

"ஈகை உண்டா"

"உண்டு."

"தவம் உண்டா?"

"உண்டு."

"தருமம் உண்டா?”

"உண்டு."

"பொறுமை உண்டா?”

"உண்டு."

"பெருமை உண்டா?”

"உண்டு."

இப்படியாகத்தானே அவள் ஒவ்வொரு குணத்தையும் குறிப்பிட்டு,"உண்டா, உண்டா?" என்று கேட்டுக் கொண்டே வர,"உண்டு, உண்டு" என்று சொல்லி அலுத்துப் போன போஜனும் நீதிதேவனும்,"உறுதி உண்டா, உண்டு; ஒழுக்கம் உண்டா, உண்டு; நெறி உண்டா, உண்டு; நீதி உண்டா, உண்டு; வீரம் உண்டா, உண்டு; விசுவாசம் உண்டா, உண்டு; சக்தி உண்டா, உண்டு; பக்தி உண்டா, உண்டு" என்று பாக்கியிருந்த அத்தனையையும் தாங்களாகவே ஒரே மூச்சில் சொல்லி முடிக்க, அசந்து போன வனிதாமணி மதனா,"எல்லாவற்றுக்கும்"உண்டு, உண்டு" என்று சொல்லி விட்டால் மட்டும் உங்களை நான் விட்டுவிடுவேனா? விட்டால் நான் ரிஸப்ஷனிஸ்ட் ஆவேனோ? உட்காருங்கள், கதையைக் கேளுங்கள்" என்று கதை சொல்ல ஆரம்பிக்க, போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக் கொண்டே கதை கேட்கலாயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு....

"கேளாய், போஜனே இந்த மலையில்லா மலைச் சாலைக்குத் தெற்கே 'பரங்கிமலை, பரங்கிமலை' என்று ஒரு பதி உண்டு. அந்தப் பதியிலே 'முருக்கமரம், முருக்கமரம்' என்று ஒரு முருக்கமரம் இல்லாவிட்டாலும் 'முருங்கை மரம், முருங்கை மரம்' என்று ஒரு முருங்கை மரம் உண்டு. அந்த முருங்கை மரத்தடியிலே "'காளி கோயில்" என்று ஒன்று இல்லாவிட்டாலும், 'பிள்ளையார் கோயில்' என்று ஒன்று உண்டு. அந்தப் பிள்ளையார் கோயிலுக்கு ஒரு நாள் மாலை ஒரு பிள்ளையாண்டான் வந்து, முறைப்படி மூன்று முறை சுற்றி, மூன்று தோப்புக்கரணங்கள் போட்டு, மூன்று முறை கன்னத்தில் போட்டுக் கொண்டு, மூன்று குட்டுக்கள் குட்டிக்கொண்டு, கை குவித்து, சிரம் தாழ்த்தி, 'ஐயா, விநாயகரே! அம்மாவைப்போல் பெண் கிடைக்காத வரை நான் கலியாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று நீர்தான் அரசமரத்தடியிலும், ஆலமரத்தடியிலும் உட்கார்ந்து அடம் பிடித்ததெல்லாம் போதாதென்று, இப்பொழுது முருங்கை மரத்தடியிலும் வந்து உட்கார்ந்து அடம் பிடித்துக் கொண்டிருக்கிறீர்! எனக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; என் பாட்டியைப் போல ஒரு பெண் கிடைத்தால் கூடப் போதும், பரம சந்தோஷமாகக் கலியாணம் செய்து கொண்டு விடுவேன். அதற்காக உமக்கு ஏதாவது வேண்டுமானால் தயங்காமல் கேளும், தாரளமாகக் கொடுக்கிறேன்! என்ன இருந்தாலும் நான் மனிதன்; பிறருக்காக ஒரு பைசா செலவழிக்கத் தயாராயில்லா விட்டாலும் எனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருப்பேன்!' என்று 'வேண்டு வேண்டு' என வேண்ட, அப்போது முருங்கை மரத்தின் உச்சாணிக் கிளையொன்றில் தலை கீழாகத் தொங்கியபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்த பாதாளசாமி என்னும் ஒர் அரைப் பைத்தியம், 'ஆயிரம் தேங்காய்களைக் கொண்டு வந்து சூறை விடு, அப்பனே! அடுத்த நாளே உனக்குக் கலியாணமாகும்!' என்று சொல்ல, அதை 'அசரீரி வாக்கு' என எண்ணி, அவனும் ஒரு வெள்ளிக்கிழமையன்று மாலை ஆயிரம் தேங்காய்களுடன் வந்து, ஒவ்வொரு தேங்காயாகச் சூறை விட்டுக் கொண்டே போய், தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது தேங்காய்களைச் சூறை விட்டுவிட்டு, ஆயிரத்தாவது காயை எடுத்துச் சூறை விடுவதற்காக ஓங்க, முருங்கை மரத்தின் மேல் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த பாதாளம் அதை 'லபக்'கென்று பிடுங்கிக் கொண்டு மறைய, 'நம்முடைய பிரார்த்தனைக்கு இப்படி ஒர் இடையூறா?' என்று பிள்ளையாண்டான் அண்ணாந்து பார்க்க, மேலே யாரும் இல்லாததைக் கண்டு, 'இது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லையே? தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றொன்பது காய்களைச் சூறை விடும் வரை என்னுடைய பிரார்த்தனைக்கு எந்த விதமான விக்கினமும் நேராமல் இருந்து விட்டு, ஆயிரத்தாவது காயைச் சூறை விடும் போதுதானா இந்த அக்கிரமம் நடக்க வேண்டும்? ஏ, அப்பமுப்பழும் அமுது செய்தருளும் தொப்பையப்பனே! இதனால் அடுத்த நாளே நடக்க வேண்டிய என்னுடைய கலியாணம் இப்போது தள்ளியல்லவா போய் விடும் போலிருக்கிறது? என்ன செய்வேன். இன்னும் எத்தனை நாட்கள் நான் ஒட்டலில் சாப்பிடுவேன்? ஊர் வம்பு கேட்காமல் இருப்பேன்? அவ்வப்போது அவள் செய்து வைக்கும் சாம்பார் ஸ்நானத்துக்கும், ரசம் ஸ்நானத்துக்கும் என் தலையைக் காட்டாமல் இருப்பேன்?' என்று பலவாறாகப் புலம்பிய பின் ஒருவாறு தெளிந்து, அருகிலிருந்த கடைக்கு அவசர அவசரமாக ஒடி, இன்னொரு தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து சூறை விடுவதற்காக ஓங்க, அதையும் அவனுக்குத் தெரியாமல் பாதாளம் பிடுங்கிக் கொள்ள, ‘விடா முயற்சி வெற்றி தரும்' என்று யாரோ ஒரு 'போணி’ ஆகாத தேங்காய்க் கடைக்காரன் எப்போதோ சொல்லி வைத்ததை நம்பி, அவன் ஒன்றன்பின் ஒன்றாகத் தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து சூறை விடுவதற்காக ஓங்க, அத்தனையையும் அந்த பாதாளம் ‘லபக், லபக்'கென்று பிடுங்கிக் கொள்ள, அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் அவன் விழித்துக் கொண்டு நின்ற போது, அங்கே வந்த ஒரு பெரியவர், ‘என்ன தம்பி, ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறாய்?' என்று கேட்க, அவன் நடந்ததைச் சொல்ல, ‘இந்த முருங்கை மரத்தின் மேல் பாதாளசாமி, பாதாளசாமி என்று ஒரு பைத்தியக்காரன் இருக்கிறான். அவன் இங்கே வருபவர்களுக்கு இப்படித்தான் ஏதாவது இடையூறு செய்து கொண்டே இருக்கிறான்' என்று பெரியவர் விளக்க, ‘இவ்வளவு பெரிய உலகத்தில் அவனைப் பிடித்து அடக்குவார் யாரும் இல்லையா?' என்று பிள்ளையாண்டான் புலம்ப, 'அவனைப் பிடித்து அடக்க இந்த உலகத்தில் இருவரே உண்டு. அவர்களில் ஒருவர் மிஸ்டர் விக்கிரமாதித்தர் ஏ டு இஸ்ட்; இன்னொருவர் அவருடைய காரியதரிசி சிட்டி!’ என்று பெரியவர் சொல்ல, பிள்ளையாண்டான் எங்கள் விக்கிரமாதித்தரைத் தேடி வந்து முறையிடலாயினன், முறையிடலாயினன், முறையிடலாயினன்....

அவன் குறை கேட்டார் எங்கள் விக்கிரமாதித்தர்; ‘நிவர்த்திப்போம்” என்றார். உடனே புறப்பட்டார் சிட்டியுடன். முருங்கை மரத்தை நெருங்கினார்; ஏறினார். பாய்ந்து பிடித்தார் பாதாளத்தை; இறங்கினார்.

அப்போது, 'உம்மைப் பார்க்க வரும் போஜனிடமும், நீதிதேவனிடமும் உம்முடைய ரிஸப்ஷனிஸ்ட்டுகள் கதை சொல்லும்போது, என்னைப் பிடிக்க வந்த உம்மிடம் மட்டும் நான் ஏன் கதை சொல்லக்கூடாது?’ என்று சாட்சாத் விக்கிரமாதித்தரிடமே அந்த பாதாளம் கேட்க, ‘சொல் அப்பனே, சொல்?’ என்றார் விக்கிரமாதித்தர்.

பாதாளம் சொன்னதாவது: