மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/13. பதின்மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சூரியா

விக்கிமூலம் இலிருந்து
13

பதின்மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சூரியா சொன்ன

மாண்டவன் மீண்ட கதை

"கேளாய், போஜனே! 'பசியெடுத்தான் பட்டி, பசியெடுத்தான் பட்டி’ என்று ஒரு கிராமம் உண்டு. அந்தக் கிராமத்திலே ‘குப்பன், குப்பன்’ என்று ஒரு குடியானவன் உண்டு. அவனுக்கு ஒரு தவமும் செய்யாமலேயே ஒன்பது குழந்தைகள் பிறந்தன. கொஞ்சம் வளர்ந்ததும் ஊருக்கு ஒன்றாகச் சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போனவை போக, பாக்கி இருந்தவை இரண்டு. அவற்றில் ஒன்று ஆண்; இன்னொன்று பெண். பையனின் பெயர் சப்பாணி; பெண்ணின் பெயர் வெள்ளரி. அந்த வெள்ளரி தாவணி போட ஆரம்பித்ததுதான் தாமதம், கிராமத்துக் காளைகள் அனைத்தும் அவளைச் சுற்றிச் சுற்றி வந்து வட்டமிட்டன. ‘இதென்னடா, வம்பு! இவளை எவன் கையிலாவது பிடித்துக் கொடுக்காதவரை இந்தத் தொல்லை தீராதுபோலிருக்கிறதே? இந்த வருஷமாவது நாலு தூறல் விழுந்தால் இருக்கிற இடத்திலே எள்ளாவது, கொள்ளாவது விதைத்துப் பார்க்கலாமென்று நினைத்தேன். ஒரு தூறல்கூட விழ வில்லை. நாடாள வரும் மந்திரிகளோ மழை பெய்தால் அதற்குக் காரணம் நாங்கள்தான் என்று மார் தட்டிச் சொல்கிறார்கள்! பெய்யாவிட்டாலோ அதற்குக் காரணம் யார் என்று சொல்லாமலே இருந்துவிடுகிறார்கள். இப்போது நாம் இந்தப் பெண்ணின் கலியாணத்துக்கு என்ன செய்வது?' என்றான் குப்பன். ‘கவலைப்படாதே, அப்பா! நான் பட்டணத்க்குப் போய் அதற்கு வேண்டிய பணத்தை சம்பாதித்துக் கொண்டு வருகிறேன்!' என்றான் சப்பாணி. ‘செய் மகனே, செய். எனக்கோ வயதாகிவிட்டது. இனி நீதானே இந்தக் குடும்பத்தின் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும்?’ என்றான் குப்பன். பையன் அன்றே பட்டணத்துக்குப் புறப்பட்டான்.

அவன் போன நாளிலிருந்தே அவனைப் பணத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த குப்பன், ஒரு நாள் வழக்கம் போல் அவனை எதிர்பார்த்துத் திண்ணைக்கு வந்து உட்கார, கையில் அன்றைய தினசரிப் பத்திரிகையோடு வந்த அந்த ஊர் கர்ணம் அவனை நோக்கிப் பரபரப்புடன் வந்து, ‘ஏண்டா, குப்பா! உனக்குச் சங்கதி தெரியுமா?’ என்று கேட்க, ‘என்ன சங்கதி?’ என்று அவன் அவரைத் திருப்பிக் கேட்க, அவர் தம் கையில் இருந்த பத்திரிகையைத் துக்கிப் பிடித்து, ‘பட்டினிச் சாவு! பரிதாபம்! அந்தோ, பரிதாபம்! ஏப்ரல் 1-இன்று காலை இருபது இருபத்திரண்டு வயது மதிக்கத் தகுந்த வாலிபன் ஒருவன், 'பசி! ஐயோ, பசி!' என்று அடி வயிற்றில் அடித்துக்கொண்டே சென்னை தங்கசாலை தெரு வழியாக வந்துகொண்டிருந்தான். அப்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. அவனுக்கு எதிர்த்தாற்போல் வந்துகொண்டிருந்தார். அவர், "ஸ், சத்தம் போட்டுச் சொல்லாதே! ரகசியமாகவாவது சொல்லித் தொலை!" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் மயங்கி கீழே விழுந்தான். அதற்குப் பிறகு பேச்சுமில்லை, மூச்சுமில்லை. அவனுடைய சட்டைப் பையிலிருந்து கிடைத்த ஒரு கடிதத்திலிருந்து அவன் பசியெடுத்தான் பட்டியைச் சேர்ந்தவனென்றும், பெயர் சப்பாணி என்றும் பிழைப்பதற்காகப் பட்டணத்துக்கு வந்தவனென்றும், அவனுடைய தகப்பனார் பெயர் குப்பனென்றும் தெரிகிறது’ என்று படிக்க, அதைக் கேட்ட குப்பன், 'ஐயோ, மகனே! போய்விட்டாயா?' என்று அலற, உள்ளே இருந்தபடி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த வெள்ளரி, 'ஐயோ அண்ணா! இதற்குத்தானா நீ பட்டணம் போனாய்?' என்று தன் தலையைச் சுவரில் மோதி அழுவாளாயினள்.

பார்த்தார் கர்ணம்; 'இனி அழுவதில் பிரயோசனம் இல்லை; பட்டணத்துக்குப் போய் அவனுடைய பிணத்தைக் கொண்டுவரப் பாருங்கள்!’ என்றார். 'அதற்கும் பாழாய்ப் போன பணம் வேண்டுமே, எங்கே போவேன்?’ என்றான் குப்பன்; 'அப்படியானால் ஒன்று செய். மொத்தம் இருந்த ஒன்பதில் ஏழு போக, பாக்கி இருந்தது இரண்டு. அந்த இரண்டிலும் ஒன்று போக, பாக்கி இருப்பது ஒன்று என நினைத்துக்கொள்!' என்றார் கர்ணம். அப்படியே நினைத்துக் குப்பன் தன் மகனை மறந்து, அவனுக்குரிய ஈமக்கடன்களை மட்டும் மறக்காமல் செய்து முடிப்பானாயினன்.

இது நடந்த இரண்டாம் நாள் இரவு யாரோ வந்து தன் வீட்டுக் கதவைத் தட்ட, ‘யார் அது?’ என்று குப்பன் உள்ளே இருந்தபடியே கேட்க, ‘நான்தான் அப்பா, சப்பாணி! கதவைத்திற, அப்பா!’ என்று வெளியே இருந்தபடி சப்பாணி குரல் கொடுக்க, அதைக் கேட்ட வெள்ளரி, 'ஐயோ, பிசாசு! அண்ணன் பிசாசா வந்து அலைகிறான், அப்பா!' என்று அலற, 'அடப் பாவி! செத்தும் உன்னை விடவில்லையா, இந்த வீட்டு ஆசை? போடா நாயே, போ!’ என்று குப்பன் உள்ளே இருந்தபடியே அவனைக் கொஞ்சம் செல்லமாக விரட்ட, 'இல்லை, அப்பா! நான் செத்துப் போகவில்லை; உயிரோடுதான் இருக்கிறேன். கதவைத் திற, அப்பா!' என்று சப்பாணி வெளியே இருந்தபடி கெஞ்ச, 'திறக்காதே, அப்பா! அது உள்ளே வந்து நம்மை என்ன செய்யுமோ, என்னவோ?’ என்று வெள்ளரி குப்பனைத் தடுக்க, 'நானா திறப்பேன்? செருப்பால் அடி, ஜோட்டால் அடி! காடு போன பிள்ளை உயிரோடு வீடு திரும்பி வந்தால்கூடச் சேர்க்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்களே, அது எனக்குத் தெரியாதா? நாளைக்கு ஆகட்டும், பூசாரி பொன்னப்பனைக் கூட்டி வந்து, பெரிய பூஜை போட்டு, இந்தப் பேயை ஒரேயடியாக ஒழித்துக் கட்ட ஏற்பாடு செய்கிறேன்!' என்று அவன் கருவ, சப்பாணி சிரித்து, 'ராத்திரியாயிருக்கவே இப்படிப் பயப்படுகிறீர்கள் போல் இருக்கிறது! நான் வேண்டுமானால் இந்தத் திண்ணையிலேயே படுத்துக் கொள்கிறேன். பொழுது விடிந்ததும் நீங்களாகவே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் - நான் பிசாசா, இல்லையா என்று!' என்பதாகத் தானே சொல்லி விட்டுத் திண்ணையில் படுக்க, 'ஏதேது, இந்தப் பேய் அவ்வளவு லேசில் இந்த வீட்டை விட்டுப் போகாது போலிருக்கிறதே!' என்பதாகத்தானே குப்பன் கதவைத் திறந்து கொண்டு கழியும் கையுமாக வெளியே வந்து, ‘போகிறாயா, இல்லையா?' எனச் சப்பாணியை அடித்து விரட்ட, அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் அந்த அரவம் கேட்டு ஆளுக்கொரு கழியுடன் அங்கே வந்து, 'போ, காட்டுக்குப் போ! வீட்டுக்கு வராதே, காட்டுக்குப் போ!’ என்று அவனை 'அடி, அடி' என்று அடித்து விரட்டுவாராயினர்.

வேறு வழியின்றிச் சப்பாணி ஓட, அதுகாலை நல்ல வேளையாக அந்த வழியே வந்த மிஸ்டர் விக்கிரமாதித்தர் அவனைக் கண்டதும் தம் காரை நிறுத்தி, 'என்ன சமாசாரம்?' என்று விசாரிக்க, 'முதலில் அவர்கள் கையிலுள்ள கோல்களைக் கீழே போடச் சொல்லுங்கள்; நான் என்னுடைய கதையைச் சொல்கிறேன்!' என்று அவன் சொல்ல, அவர் அப்படியே செய்துவிட்டு, 'அது என்ன கதை, சொல்?' என்று கேட்க, அவன் சொன்ன கதையாவது: