கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/அலை ஓசை

விக்கிமூலம் இலிருந்து
1. அலை ஓசை


‘கல்கி’

ராஜம்பேட்டைப் பட்டாமணியம் கிட்டாவய்யர் தம்முடைய மகள் லலிதாவுக்குத் திருமணம் செய்ய எண்ணி மணமகனைத் தேடினார். புதுடில்லியில் பெரிய வேலை பார்த்துவந்த செளந்தர ராகவன் எம். ஏ., லலிதாவைப் பெண் பார்க்க வந்த இடத்தில், பம்பாயிலிருந்து வந்திருந்த கிட்டாவய்யரின் தங்கை பெண் சீதாவைப் பார்த்து, அவளை மணக்க விழைந்தான். அவ்வாறே அவர்களுக்குத் திருமணம் நடந்தது. தேவபட்டணத்து வக்கீலின் மகன் பட்டாபிராமனுக்கு லலிதா வாழ்க்கைப்படுகின்றாள்.

லலிதாவின் சகோதரன் சூரியா காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்து நாட்டுப் பணியில் ஈடுபட்டான். ஹரிபுரா காங்கிரசிலிருந்து புதுடில்லிக்குப் போனான். 

செளந்தர ராகவனும், சீதாவும், சூரியாவும் ஆக்ராவுக்குத் தாஜ்மஹால் பார்க்கச் சென்ற பொழுது அங்கே செளந்தர ராகவனின் பழைய தோழியாகிய தாரிணியின் சந்திப்பு கிட்டுகிறது. தாரிணியும் சூரியாவும் நட்புரிமை கொண்டாடுகிறர்கள். ரஜனியூர் ஏரியில் படகிலிருந்து விழுந்து தத்தளித்து, இனம் புரியாத அலை ஓசையின் மருட்சியில் ஊசலாடிய சீதாவைத் தாரிணி காப்பாற்றினாள்.

சீதா இளமையில் பம்பாயில் வாழ்ந்த காலத்தில், ரஸியா பேகம் என்னும் பெண் ஒருத்தி மர்மமாக வந்து, அவளுக்கு ஒர் இரத்தின மாலையும் பணமும் கொடுத்துவிட்டுப் போனாள். அதே பெண் புதுடில்லியில் ஓர் இரவு ரத்தம் தோய்ந்த கத்தியுடன் வந்து சீதாவின் இல்லத்தில் ஒளிந்துகொண்டாள். அவள் தான் தாரிணியின் வளர்ப்புத்தாய் என்று சீதா அறிந்தாள்.

சூரியாவும் தாரிணியும் அன்புகொண்டிருப்பது கண்டு, செளந்தர ராகவனின் மனத்திடை பொருமைத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

ராகவன் தன் காதலை தாரிணியிடம் வெளியிட்டான்; அவள் அதனை உறுதியாக மறுத்துவிலக்கினாள்.

1942ஆம் ஆண்டு ஆகஸ்டுப் புரட்சி இயக்கத்தில் சூர்யா பிணைகிறான். இரகசியப் போலீஸ் தொடர்கிறது. சூர்யாவை மாறுவேடங்கள் அணைகின்றன.

தேசிய இயக்கத்தில் காட்டிய ஈடுபாடு காரணமாக,லலிதாவின் கணவன் பட்டாபிக்குச் சிறைத்தண்டனை கிடைக்கிறது.

புதுடில்லியில், சீதாவின் இல்லற வாழ்க்கை நாளுக்கு நாள் நரகமாகிறது. இதற்குக் காரணம் தாரிணிதான் என்பதாக அவளைச் சீதா வெறுக்கிறாள்.

தொடக்க நாளிலிருந்து மனம்தொட்டுப் பழகியவர்கள் சீதாவும் லலிதாவும். இருவருக்கிடையே தூதுப்பணி புரிந்த கடிதங்கள், சீதவுக்கு ஆறுதல் தருவனவாக அமைந்தன.

ஒருநாள் இரவிலே, சீதா கைத்துப்பாக்கி கொண்டு சுட்டுக்கொண்டு சாக முயற்சி செய்த வேளையில், சூர்யா வந்து அவளைக் காப்பாற்றுகிறான். தன்னால் இனிமேல் தன் கணவனுடன் வாழ முடியாதென்றும், தன்னை எங்கேயாவது அழைத்துச் செல்லும்படியும் அவள் சூர்யாவிடம் கெஞ்சுகிறாள். அவன், அவளது பேதை நெஞ்சத்திற்குப் புத்திமதி சொல்லுகிருன்.

சூர்யாவும் சீதாவும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதன் விளைவாக, ராகவனின் மனத்தில் கோளாறு விளைகிறது! சூரியாவைச் சட்டத்தின் கைகளிலே ஒப்படைக்கக் கங்கணம் கட்டுகிறான். 

சூர்யா-தாரிணி ஆகிய இருவரும் நாட்டு விடுதலைப் பணியில் இறங்கிப் பல இன்னல்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்கின்றனர்.

ஒரு முறை, தாரிணி என்று மயங்கி, சீதாவைக் கைப்பற்றிய முரடர்கள் சிலர், அவளைச் சுதேச மன்னர் அரண்மனை ஒன்றுக்குக் கொண்டு செல்கிறார்கள். தாரிணி ரஜனிபூர் இளவரசி என்னும் மர்மம் புலனாகிறது!

இதற்கிடையில் சீதா வேறு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்க் கைது செய்யப்படுகின்றாள். இவள் சிறைப்பட்ட விபரம் அறிந்தும், ராகவன் அவளைப்பற்றித் துளிகூட முயற்சி எடுக்கவில்லை.

காலம் ஓடுகிறது; சுவையான நிகழ்ச்சிகள் தொடர்கின்றன!...

சீதா, ராஜம்பேட்டைக்கு வருகிறாள். பட்டாபியும் சீதாவும் வெள்ளை உள்ளத்துடன் பழகுவதைக் காண, லலிதாவின் பெண்மனம் பேதலிக்கிறது. உயிருக்குயிராக மதித்தவளை ஏசுகிறாள். பின்னர் குழப்பங்கள் மறைகின்றன.

சீமைக்குச் சென்றிருந்த ராகவன் திரும்பினான். ரஸியா பேகத்தின் வரலாறும் தாரிணியின் கதையும் விளங்குகின்றன. கங்காபாய்- ரமாமணியின் விபரங்களையும் சூர்யா கூறுகிறான் ராகவனிடம். சீதாவின் தந்தையாகிய துரைசாமியின் வேடங்களும் அம்பலமாகின்றன. 

பழிகளையும் துர்ப்பாக்கியங்களையும் சுமந்து கொண்டு சீதா கல்கத்தாவுக்குச் செல்கிறாள். பொதுநலத் தொண்டு காரணமாக ராகவன் படுத்த படுக்கையாகிறான், அவனுக்குப் பணிவிடை புரிகிறாள். கணவனும் மனைவியும் குழந்தையுமாக அவர்கள் குடும்பவாழ்வு செம்மையுற நடக்கிறது.

அப்போது, மீண்டும் தெய்வ சோதனை நிகழ்கிறது. வகுப்புக் கலவரம் தலை விரித்தாடுகிறது. மகளைக் காப்பாற்ற மெளல்வி சாகிபு உருவத்தில் துரைசாமி வந்து, அவளைக் காப்பாற்றும்போது, அவள் ஆற்றில் சாய்கிறாள். சீதா இறந்துவிட்டதாக ராகவன் நினைத்தான்.

ஆனால் சீதாவோ பிழைத்துவிடுகிறாள். தன் தந்தை மூலம் தாரிணி தன் சொந்த அக்காள் என்ற உண்மையை அறிந்ததும், அவளை ஒருமுறை காண விரும்புகிறாள். சீதா தன் வீட்டில் நுழையும் பொழுது, தாரிணியும் ராகவனும் இருப்பதை அறிகிறாள். தாரிணி முகத்திரையுடன் காட்சி தருகிறாள். தாரிணியும் ராகவனும் தம்பதிகளாக வேண்டுமென்ற சீதாவின் கனவைப்பற்றி எடுத்துச்சொல்லி, அவளது அனுமதியைக் கோருகிறான் ராகவன். ஆனால் தாரிணி பொதுப்பணி காரணமாக, கை ஒன்று வெட்டப்பட்டு, கண் ஒன்றும் பறிபோய் நின்ற கோலத்துடன் காட்சிகொடுக்கிறாள். ராகவன் தடுமாறுகிறான். அவனுக்குப் பாமா மீது இப்போது நாட்டம்.

சீதாவின் சோக வரலாறு முற்றுப்புள்ளி
பெறுகிறது.

சூர்யா மனத்தூய்மையுடன் தாரிணியை
மணக்க இசைகிறான். அவள் அகமகிழ்கிறாள்.

ஆனால் முடிவோ வேறு வகையாகிறது.

தாரிணியை ராகவனும், பாமாவை சூர்யா
வும் கைத்தலம் பற்றுகின்றனர்!


ஆசியின் துணை:

‘உமா’ ஏட்டில், இலக்கியத் திறனாய்வுத் தொடரைத் தொடங்கியபொழுது, முதன்முதலாகப் “பாவை விளக்கு’’ என்ற நவீனத்தைக் குறிவைத்தேன். பிள்ளையார் சுழி போட்டுவிட்டு, நான் எழுதத் தொடங்கியவேளை, ‘கல்கி துணை’ என்ற துணைப்பிரிவை அமைத்து, அதில் இவ்வாறு எழுதினேன்: “உலகப் பேரறிஞர்களுள் ஒருவராக மதிப்புப்பெற்று, தமிழ் இலக்கிய வளத்துக்கு மாண்பு தரும் அமரர் கல்கி அவர்களின் ஆத்மார்த்தமான ஆசியின் துணைகொண்டு, கொண்டுசெலுத்த இப்பகுதியை ஆரம்பித்துள்ளேன்.”

ஆம்; தமிழ்ப்பேராசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின்மீதும், அவர்களின் எழுத்துக்களிலும் எனக்கு என்றைக்குமே ஓர் ஈடுபாடு உண்டு. பக்திபூர்வமான ஈடுபாடு. அத்தகையதோர் இணக்கக் குறிப்புக்கு ஓர் இலக்காகவே இப்பொழுது என் ‘கடமை’யை மேற்கொண்டிருக்கின்றேன்.

“பெண்மை வெல்க!”

சீதை, சாவித்திரி, தமயந்தி, திரெளபதை போன்ற பெண்குலத் திலகங்களின் வழியினரான நம் பெண்கள் நம் சமூகத்தில் எப்பொழுதுமே மதித்துப் போற்றப்பட்டு வந்திருக்கிறார்கள். இடைநிலவிய இருளை மறந்து, இன்று நிலவும் ஒளியைக் காணும்பொழுது, பெண்களின் தன்மை - அவர்களது தகுதி - அவர்களுக்குரிய கடன் - அவர்கள் ஆற்றிய தொண்டு முதலிய நற்பண்புகள், அவர்களுக்கு வாய்த்த சோதனைகளாகவும், சாதனைகளாகவும் உருக்கொண்டு, அவர்களின் மட்டிலா மாண்புகளைக் கோபுர தீபங்களாக்கி வருகின்றன. இப்படிப்பட்டதொரு சமூக மறுமலர்ச்சித் திரும்பு முனைக்கு மூலாதாரமாக நிலவிய ஒரு ஜீவன், அண்ணல் காந்தியடிகள். அவர் நடத்திய நேர்மைத்திறன் அமைந்த அரசியல் சமுதாய இயக்கங்கள், பெண் சமுதாயத்தைப் புடம்போட்டுப் பண்படுத்தக் கைகொடுத்துத் தோள்கொடுத்தன. அறத்தின்பால் அமைந்த அன்பு வழியினைக் கடைப்பிடிக்க ஆடவரைவிட பெண்களே மிகுந்த தகுதியுள்ளவர்கள் என்பதை காந்தி மகான் தம்முடைய ‘சமூகத்தில் பெண்கள்’(Womans Role in Society) என்ற நூலில் அழுந்தச் சொல்லியிருக்கிறார்.

நம் கவிஞர் பாரதிக்கு, பெண்மையின் வாழ்வில் எப்போதும் ஓர் அக்கரை, கவலை; கடமை! பெண்மை வாழ்கவென்றும் பெண்மை வெல்கவென்றும் கூத்திடுவார். உணர்ச்சிமயமான கவியல்லவா?

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா;
மானஞ்சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;

கலியழிப்பது பெண்க ளறமடா;
கைகள் கோர்த்துக் களித்துநின் றாடுவோம்!”

வணக்கத்துக்கும் வாழ்த்துக்கும் உரிய வகையில் உலவிய பெண்மணிகளின் தடத்தை ஒட்டி நடந்தும், ஒற்றி கடக்க முயன்றும் வருகிற புதிய பரம்பரையினருக்கு அமரகவியைப்போல தூண்டுதல் கொடுத்து முடுக்கிவிட வேறுயாரால் முடியும்?

கதம்பமணம் அற்புதம்!

நோபல்பரிசு பெற்ற எழுத்தாளர், எர்னஸ்ட் ஹெமிங்வே(Ernest Hemingway). அவர் தம்முடைய நோபல்பரிசுப் பேச்சின் சமயம், குறிப்பிட்டுப் பேசிய மையச்செய்தி ஒன்று என்கருத்தை ஈர்க்கின்றது. “எழுத்துத் துறையில் இதுவரை யாரும் செய்யாததை - அல்லது, செய்ய முயற்சி செய்து தோற்ற விஷயத்தை மனத்தில் பதித்து எழுத வேண்டியதே உண்மையான - சிந்தனைமிக்க எழுத்தாளனது கடமையாகவேண்டும்!”

முதுபெரும் எழுத்தாளர் ஹெமிங்வேயை எண்ணிக்கொண்டு, நம் அருமைத் தமிழ்மண்ணை எண்ணிப் பார்க்கிறேன்.

என் கவலைக்கு வைகறையாகிறது ஒருபெயர்; என் கனவுக்கு நனவாகிறது ஒருபெயர்.

‘கல்கி’ என்ற அம்மூன்றெழுத்துப் பெயர் களிதுலங்கக் காட்சி தருகிறது.

மற்றவர்கள் செய்யாததைச் செய்துகாட்டிய பெருமையும், ஒருசிலர் செய்ய முயற்சி செய்து வெற்றி பெறாமல் போகவே அத்துறையில் உழைத்து, வெற்றி ஈன்ற பெருமிதமும் ‘கல்கி’க்கு உரியன.

நாட்டுப் பாசத்தையும் பெண்களின் மகிமையையும் வெற்றிச்சங்கம் முழக்கிச் சொல்லி, வெற்றித்தூணாக விளங்கச் செய்தவை, ‘தியாக பூமி’ - ‘சேவாசதனம்!’

இவ்விரண்டையும் விட, ஒளிச்சிறப்பும் ஒலித் தெளிவும் கொண்ட பெரிய நவீனம், அலை ஓசை!

இது சாகித்திய அகாடெமியின் (Sahitya Academy) பரிசைப் பெற்று உயர்ந்தது.

சாகித்திய அகாடெமி, இதற்குப் பரிசைக் கொடுத்து உயர்ந்தது!

சீதா அபலைதான்.

ஆனால் அவளுக்குச் சேர்ந்திருக்கிற இலக்கிய அந்தஸ்து (Literary Merit) க்கு ஈடு ஏது, எடுப்பு ஏது?

“நான் எழுதிய நூல்களிலே ஏதாவது ஒன்று ஐம்பது, நூறு வருஷங்கள் வரை நிலைத்து நிற்கும் தகுதியுடைய தென்றல், அது அலைஓசைதான் என்ற எண்ணம் எனக்கு உண்டு!” என்று தம் முன்னுரையில் வரம்பறுத்துச் சுட்டுகிறார் ஆசிரியர். “அலைஓசையை நான் எழுதியதாகவே எண்ணக்கூடவில்லை. லலிதாவும் சீதாவும், தாரிணியும் சூரியாவும், செளந்தரராகவனும் பட்டாபிராமனும் சேர்ந்து பேசிக்கொண்டு அவரவர்களுடைய அந்தரங்க ஆசாபாசங்களையும் உள்ளக் கிடக்கைகளையும் ‘அலை ஓசை’ மூலமாக வெளியிட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் கற்பனை செய்யப்பட்ட பாத்திரங்கள் என்று எண்ண முடியவில்லை. நம்மைப்போலவே வளர்ந்து வாழ்க்கையின் இன்பதுன்பங்களை யெல்லாம் அனுபவித்தவர்களாகவே நிலவினார்கள்!” என்றும் நினைவுச்சரம் தொடுத்துப் பூமாலையை விரிக்கிறார்.

கதம்ப மணம் அற்புதம்!


அத்தங்காள்-அம்மங்காள்

பூவின் நினைவில் பூவை தோன்றுவா ளல்லவா?

பம்பாய்ப் பெருநகரின் ஒரு பகுதியான தாதரிலே, அடையாளங் கண்டுபிடிக்கமுடியாத சின்னஞ்சிறு வீடொன்றில் அடையாளம் கண்டு கொள்ளத்தக்க வகையில் சீதா பிறந்து வளர்ந்து, தன் ஆருயிர்த்தோழி லலிதாவுக்கு ராஜம்பேட்டைக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதவும் பழகியிருந்தாள். அத்துடன் எதிர்காலம் பசுமைக்கு ஒளியூட்டும் என்று தோன்றிய பாவனைகளில் கனவுகளைக் காணவும் பழகிக் கொண்டிருந்திருக்கவேண்டும்.

சீதாவின் தாய் ராஜம். அவள் தமையன் கிட்டாவய்யர். அவரிடம், “அண்ணா, இருபது வருஷமாய் உன்னை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இப்போது தொந்தரவு கொடுக்கிறேன். சீதாவுக்கு நீதான் கலியாணம் செய்து வைக்க வேன்டும். ஊருக்கு அழைத்துக்கொண்டுபோய் அந்தப் பகுதியிலேயே வரன்பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும்!” என்று இறைஞ்சுகிறாள்.

பம்பாயை ராஜம்பேட்டை கை தட்டி, கை ஏந்தி அழைக்கிறது. 

‘என் கண்ணே! இப்படியே நீயும் லலிதாவும் உங்களுடைய ஆயுள் முழுவதும் சிநேகமாயிருங்கள்!’ என்று தன் அன்னையின் ஆசியைச் சுமந்துகொண்டு சீதா புறப்பட்டு லலிதாவிடம் வருகிறாள்.

லலிதாவுக்கு ‘அத்தங்காள்’-அத்தை மகள்-முறை வேண்டும் சீதா.

சீதாவின் ‘அம்மங்காள்’-மாமன் மகள் லலிதா.

லலிதாவும் சீதாவும் தோழிகள். தோழமை என்றால், உயிரும் உயிரும் கலந்த ஒட்டுறவு போல;

சீதாவும் அவள் அம்மாவும் ரெயிலை விட்டிறங்கி, மாட்டு வண்டியில் பயணம் செய்யும் பொழுது, வண்டி குடை சாய்கிறது. “அம்மா...அம்மா!... இதோ, நான் வெள்ளத்தில் முழுகப்போகிறேன். என்மேல் அலை வந்து மோதுகிறது. யாராவது என்னேக் காப்பாற்றுங்கள்!” என்று செல்வக்குமாரி சீதா அலறுகிறாள். சாலையின் ஓரத்திருந்த நீரோடையில் விழுந்து காலையும் கையையும் அடித்துக்கொண்டு “அம்மா! அம்மா நான் முழுகிப் போகிறேன்!” என்று ஓலமிட்ட இளம்பெண்மீது சூர்யாவின் கவனம் செல்கிறது.

அன்பின் விட்டகுறை, இந்தச் சக்திப்பைத் தொடுகிறது; தொட்டகுறையாக ஆகிறது.

லலிதாவும் சீதாவும் சந்திக்கிறார்கள்.
பாசமும் பாசமும் ஆரத் தழுவிக்கொள்கின்றன.

லலிதாவைப் ‘’பெண் பார்க்க’ப் பட்டினத்துப்படித்த மாப்பிள்ளை வரப்போவதாகத் தாக்கல் வருகிறது. சீதா அவளைக் கேலி செய்யாமல் இருப்பாளா? 

லலிதா கெட்டிக்காரி. சீதாவின் அந்தரங்கத்தை அறிந்துகொண்டு அவளது எதிர்காலக் காதலனைப் பற்றியும், அவள் திருமணத்தைப் பற்றியும் அவள் வாய் மொழியாகவே சொல்லச் செய்கிறாள்.

சீதா பேசுகிறாள்: “... அம்மா சொன்னலும் சரி; அப்பா சொன்னலும் சரி; அவர்கள் விருப்பப்படி நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சம்மதிக்கமாட்டேன். எனக்குப் பிரியம் இருந்தால்தான் சம்மதிப்பேன். என்னைக் கல்யாணம் செய்துகொள்ளுகிறேன் என்று ஒருவன் வந்தால் உடனே ‘சரி’ என்று சொல்லிவிடுவேனா? ஒரு நாளும் மாட்டேன்!...” என்று தொடங்கி முடிக்கும்போது அவள் தன் இதயக் கனவுகளை தெள்ளத்தெளிய லலிதாவுக்கு மட்டுமல்லாமல், நமக்கும் சொல்லிவிடுகிறாள். இந்தக் கட்டம் அவளது குணத்துக்கு -குணசித்திரத்துக்கு (characterisation) ஓர் ஆரம்ப அடிப்படை.

தேவதரிசனமோ?

மாப்பிள்ளளை வந்துவிட்டான்!

மணப்பெண் கோலம் ஏந்தி, கையில் வெற்றிலை பாக்குத்தட்டும் ஏந்தி, தழையத்தழையக் கட்டிய புடவையுடனும், செழிக்கச் செழிக்கக் கட்டிய மனக்கோட்டையுடனும் லலிதா வருகிறாள். அவளது வற்புறுத்தலின் பேரில், அவள் தோழி சீதாவும் அவளைப் பின்பற்றுகிறாள்.

குனிந்த தலை நிமிராமல் லலிதா வருகின்றாள். 

குனிந்த தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள் சீதா. ‘இனம்’ கண்டு கொண்ட மாப்பிள்ளை, தன்னை ‘இனம்’ காணத் தவிப்பதுபோல தன்னையே விழி பிசகாமல்- விதி பிசகாமல் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததும், அவளுக்கு மயிர்ச் சிலிர்ப்பு உண்டாகிறது.

செளந்தர ராகவன் என்ற ராகவன் மாப்பிள்ளைக் கோலம் தாங்கி, கோலம் நிறை புன்னகை கோலம் வரைய நின்று, ஏன் அவன் அவ்வாறு அழகின் ஒயிலாகவும் கனவின் கனவாகவும் அவள்முன் காட்சி தந்தான்?

அவனா காட்சி தந்தான்?

ஊஹும்!

அவளல்லவா அவன் முன் தரிசனம் கொடுத்தாள். அது ‘தேவதரிசன’மோ?

இல்லையென்றால், அவன் மனம்மருகியிருப்பான? ‘தெய்வப் பெண்ணோ? மயிலோ? காதிற் குழை அணிந்த இக்கன்னி மனிதப் பெண் “தானா?” என் நெஞ்சம் மயங்குகிறதே?’ என்ற நிலை அவனது உள்ளத்தின் மடியில் தவழ, அந்தச் சுகத்தின் மடியில் தலைவைத்துச் சுகம் காண கனவு கண்டிருப்பானா?

ராகவன் புன்னகை புரிந்தான்! வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பொலபொலவென்று உதிர்ந்து உலகைச் சுடர் மயமாக்கின!-சீதாவின் இதயமாகிய உலகத்தைத் தான்!

மாணிக்கவாசகப் பெருமானர் தம்முடைய ‘திருக்கோவையா’ரின் கண் ஒரு நிகழ்ச்சியைப் பாவாக்குகிறார்.

“வளைபயில் கீழ்கடல் நின்றிட
மேல்கடல் வானுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
தில்லைத் தொல்லோன் கயிலைத்
கிளைவயின் நீக்கி இக் கெண்டையங்
கண்ணியைக் கொண்டுதந்த
விளைவைஅல் லால் வியவேன் நய
வேன்தெய்வம் மிக்கனவே!??”

நல்வினைப் பயனாகவும் விதிவசமாகவும் விட்டகுறை -தொட்டகுறையின் படைப்புச் சிக்கலின் விளைவாகவும் எதிர்ப்பட்டு, உள்ளம் கவர்ந்த தலைவன்-தலைவியின் பக்திநயக் காதற் பாட்டுக்கு ஓர் உதாரணமாகவும் இங்கே நாம் சீதாவையும் ராகவனையும் காண்கிறோம். ஆம்; சீதாவின் பேசும் கண்கள் ராகவனிடம் என்ன ‘அந்தரங்கம்’ செப்பினவோ? “மணந்தால் நான் சீதாவைத்தான் மனப்பேன்!” என்கிறான் ராகவன்.

அவன் தீர்ப்பு மனப்பந்தலை உருவாக்குகிறது.
கொட்டு மேளம் முழங்குகிறது.
இப்பொழுது சீதா, திருமதி ராகவன்!...

கிழக்கும் மேற்கும்

‘கிழக்கே சூரியன் மட்டும் தோன்றவில்லை. மனித நாகரிகமும் கிழக்கேதான் தோன்றிற்று.’-இதையொட்டிய மனிதகுலச் சரித்திரத்தில் மேற்கும் இடம் கண்டது. இப்படிப்பட்ட திசை மாற்றங்களும் திசைச் சந்திப்புக்களும் நமக்குப் புதிதாக இலங்கினாலும், வரலாறு காட்டுகிற ஆதி நாகரிகத்தினின்றும் முன்னேறி யுள்ள இன்றைய அணு யுகப் புது நாகரிகம் இருக்கிறது பாருங்கள், அதன் சரித்திரம் அந்தம் உடையது; அர்த்தமில்லாதது.

மோகக் கிறக்கத்தில் நாகரிகப் பித்தும் ஒன்று. இவ்வகையில் பார்க்கும்பொழுது, ராகவனுக்கு வெள்ளைக்கார நாகரிகம் என்றால் ஒரு பைத்தியம் (mania);

கிழக்கும் மேற்கும் சக்திப்பதென்பது வியப்புத் தான்!

‘இமிழ்கடல் வேலித் தமிழக’த்தில் பிறப்புக் கொண்டவன் ராகவன்.

அவன் ஒர் அதிசயப் பேர்வழி.

சென்னைப்பட்டினத்தில் பத்மாபுரம் என்றொரு பகுதி. ஊரையும் பேரையும் ஆராய்வதை விட, இப்போது, நம் தலைமைக் கதாநாயகனின் குணாதியங்களை ஆராய்வது நலம் பயக்கும்.

‘தேவிஸதனம்’ என்ற மனையில், பத்மலோசன சாஸ்திரிகளுக்கும் காமாட்சியம்மாளுக்கும் பிறந்தவன். இரண்டாவது புதல்வன். ‘ஸநாதன ஹிந்து தர்மத்தின் சுவட்டை மிதிக்க வேண்டிய பிள்ளையாண்டான், வடக்கத்திப் பெண்ணாகிய தாரிணி என்பாளைக் காதலித்தது ஒரு தனிக்கதை. நாகரிகப் பண்பாட்டில் திசை குறுக்கிடுவதில் தவறோ, தரக்குறைவோ, தகுதி மாற்றமோ இல்லையென்றால், நமக்குத் திக்குகளைப் பற்றித்தான் என்ன கவலை?

தாரிணி அழகி. விட்டகுறை-தொட்டகுறையென்னும் ‘சிருஷ்டிச்சிக்கலின் வேதாந்த ஈடுபாடு’ அவளுக்கு விருப்பமானது போலும். பிறப்புக்களின் முன்கதை— பின்கதைகளும் அவளுக்கு நிழல்தரும் தருக்களாகின்றன. அவள் கதைகூட விசித்திரமானது தானே!...

பீஹார்ப் பூகம்பத்தில் அலைக்கழிந்த ஆயிரமாயிரம் சகோதர சகோதரிகட்கு அவள் தொண்டு செய்யும் பேறு பெறுகிறாள். ‘அன்பு எதையும் கேட்காது, கொடுக்கவே செய்யும்’ என்னும் காந்திஜியின் மூதுரைப் பாடம் அவளுக்கு அத்துபடி. முஸாபர்பூரிலிருந்து தன் பழைய காதலனுக்குக் கடிதம் ஒன்று வரைகிறாள். தில்லியில் வெள்ளையர் ஆட்சியில் பொருளாதாரத் துறையில் உயர்ந்த பதவியிலிருக்கும் ராகவனுக்கு, தானும் அவனும் காதல் பூண்டு ஒழுகிய நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்டி, பழைய விஷயங்களையெல்லாம் கடமை ஒழுங்குடன் எழுதுகிறாள். தனக்கும் தாரிணிக்கும் ஏற்பட்ட நட்புறவு ஒரு மாயக்கனவு என்று திட்டமிட்டு, அதை எப்படியோ மறக்க முயன்றுகொண்டிருந்த அவனுக்கு, அவள் சமூகப்பணி குறித்தும் ஏதேதோ எழுதுகிறாள்!

தாரிணி நல்ல பெண். அவள் ஒருமுறை பத்மாபுரத்துக்கு வந்திருந்தபோது, காமாட்சி அம்மாள் அவளிடம் கெஞ்சிக் கதறி, தன் மகன் வாழ்வில் குறுக்கிடாமல், ஒதுங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டாள். தாரிணி நல்ல பெண். அவ்வாறே நடந்தாள். இப்பொழுது அவள் அவனுக்கு எழுதிய கடிதம் சலனத்தை உண்டாக்குகிறது. முடிவில் அவளுக்காக ‘இதுவா உன் கதி?’ என்று அவன் அனுதாபப்பட முடிந்ததுடன், தான் அவளை விட்டு விலக நேர்ந்ததுகூட நல்ல காலத்தினால்தான் என்று அமைதியுறவும் முடிந்தது! “ஜனக குமாரி பூமிக்குள் போனது போல் நானும் போய்விட விரும்புகிறேன்!” என்று அடிக்கடி தாரிணி சொல்வாளாம்! இப்போது, பூகம்பப்பணி இயற்றிய காலை தாரிணி பூமிக்கடியில் மாண்டுவிட்டதாக ராகவனுக்கு வந்த கடிதம் அவனது அனுதாபத்தையும் அமைதியையும் பெற்றுக்கொண்டது!

“எவ்வளவுதான் தங்களை நான் மறக்க முயன்றாலும், அது கைகூடவில்லை!” என்று தாரிணி மனம் திறந்து எழுதியிருந்ததைக் கண்டதும் நெகிழ்ந்த ‘கனி மனம்’, மேற்படி கடிதத்தின் இறுதிப் பகுதியைப் படித்ததும், கல்லாயிற்று.

அரசாங்க அலுவல், பெரிய சம்பளம், செளக்கியமான பங்களா, மோட்டார், டீபார்ட்டி ஆகிய இவற்றில் இன்பம் காண்பவன் அவன். இப்படிப்பட்ட கெளரவத்தை நாடும் அவன், தன்னைப்போன்ற ஒரு புத்திசாலி இந்தியா நாட்டில் இதுவரை பிறந்ததில்லை என்று பிரமாதமாக ‘மனப்பால்’ குடித்துவந்தான். அவன் வாழ்ந்த மண் அடிமைத்தளை பூண்டிருந்த லட்சணத்தில், எவ்வளவு லட்சணமான போக்குடன் ‘வெள்ளையர் தாசனாக’ அவன் உதவி வந்தான், தெரியுமா? என்ன பேச்சு, என்ன செருக்கு...

மானுடப் பிறப்புக்கே உரிய பலமும் பலவீனமுமாக அவன் உருக்காட்டினன்!

தில்லி வெளியினில்:

‘தில்லி வெளியினில் கலந்து கொண்டவர் திரும்பியும் வருவாரோ?’ என்று கவிஞர் கேட்ட வினாவை ராகவன் அறிந்திருக்க நியாயமில்லைதான். ஒருவேளை, சீதா அறிக் திருக்கக்கூடும். ஆகவே சீதாவுக்கு டில்லிமாநகரம் அடைக்கலம் தந்தது! தவறு. அவளுக்குத் தஞ்சம் தந்தவன் அவள் மணாளன் ராகவன். ஆங்கிலமோகம் கொண்டவன் அல்லவா ராகவன்? ஆகவே, அவளை ஆங்கிலேயர் ஹோட்டல் ஒன்றில் தங்கவைத்தான். டில்லிமாநகரம் கந்தர்வ லோகமாயிற்று! பிறகு, சீமைக்குப் புறப்பட வேண்டியவனானான். சீதாவுக்குச் சென்னை நிழலாயிற்று. பதினைந்து மாதங்களுக்குப் பிறகு ராகவன் தாயகம் திரும்பியதும், சீதா கணவனிடம் திரும்புகிறாள், குழந்தை வாஸந்தியோடு. அன்னை காமாட்சியம்மாளும் சேர்த்தி!

பெண்கள் வீட்டுக்குள்ளே இருந்து வாழ்க்கை நடத்துவதுதான் நியாயம்!-இது ராகவனின் கட்சி.

மீண்டும் புதுடில்லிக்குச் சீதா வந்துசேருகிறாள். அவளுடன் தொடர்ந்து ‘உம்மைப்பழவினை’யும் வருவதை அவள் எங்ஙனம் அறிவாள், பாவம்? புதுடில்லியில் அழகழகான சதுக்கங்களிலும் இடிந்த கோட்டைகளிலும் இடியாத அரண்மனைகளிலும் தன் தர்ம பத்தினியின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இன்பமாகப் பொழுதைக் கழித்தான் ராகவன். முதன்முதலில் சீதா வந்த தருணம் இவை கடந்தேறின. அம்மாதிரி இம்முறையும் சென்று கழிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள் சீதா. இயல்பு. ஈடேறவே செய்தது.

பிறவாவரம்!

பிறப்பறுக்க வேண்டித் தவம்கிடந்தார்கள், வாழ்வைத் துறந்தவர்கள். பிறவா வரம் வேண்டினார்கள் பெம்மானிடம். 

வாழ்வைத் துறந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல், வாழ்வைத் துறக்காதவர்களுக்கும்கூட ‘வாழ்வு’ அமைந்து விடுகிறது. இதுவேதான் சிருஷ்டிப் புதிராகவும், சிருஷ்டியின் தத்துவமாகவும் அமைகிறது.

வாழ்க்கையை விரும்பவோ, வெறுக்கவோ மானுடப் பிறப்புக்கு உரிமை இல்லை!

காரணம், வாழ்க்கை என்பது தவிர்க்க முடியாத - தவிர்க்கக்கூடாத ஒரு விபத்தாகவும், கழித்துத் தீர்க்க வேண்டிய-கழிக்காமல் தப்பமுடியாததொரு கடனுகவும் அமைவதுதான்!

படைத்தோனின் கடன் மனிதனின் சென்னியில் விழுகிறது.

உருவாக்கியவனின் கனவு, உருவாக்கப்பட்ட மானிடத்தில் நிழலாடுகிறது.

முற்பிறவியின் சாயலை இப்பிறப்பில் மனிதப்பிறவி எட்டி ஒதுக்க முடிவதில்லை.

விளைவு, சோதித்தவனே சோதனைப் பொருளாகவும் ஆகிறான்!...

விளைகிறது வினை; தொடர்கிறது வினைப்பயன்.

ஆசைகளும் பாசங்களும், கனவுகளும் களவுகளும் காதல் சேஷ்டைகளும் காமக் குரோதங்களும் மனிதனுக்குப் புதிர்களாகி விடுகதை போடுகின்றன. அதுபோலவே மேற்குறித்த மையப்புள்ளிகளின் பின்னே இந்த அப்பாவி மனிதனும் புதிராகி, விடுகதை போடுகிறான்!

இந்தப்புதிர் விடுவிக்கப் பெறுவதற்குள்ளே நிகழும் நிகழ்ச்சிகள் ஒன்றா, இரண்டா? 

ஆகவேதான், மனிதன் தனது வல்லமையின் துணையினால் பலவீனனாகவும், தன்னுடைய பலவீனத்தின் சார்பிலே வல்லவனாகவும் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து தவித்து, ஒன்றும் அறியாப் பரம்பொருளையும் தவிக்கச் செய்து வருகிறான்.

இப்படிப்பட்ட ‘மனித’னின் நேர்சந்ததி நம் கதாநாயகன்-தலையாய நாயகன்-ராகவன். அவனுக்கென்று ஒரு வீம்பு இருந்தது. அந்த வீம்பு ஆங்கில நாட்டிலிருந்து இறக்குமதியாகியிருந்தது. ‘ஒருமுறையாவது காதலிக்காமல் இருப்பவன் பைத்தியக்காரன்!” என்கிற மேலைநாட்டவரின் கீழ்ப்புத்தி இவனையும் தொற்றிக் கொண்டதில் தவறு ஏதும் இல்லை. தவறுதலுக்குமட்டும் ‘ஏது’ உண்டு. அது ’விதியின் பிழை’ என்று தான் கம்பநாடாழ்வாரை ஒட்டி நானும் சொல்லவேண்டியிருக்கிறது.

‘வாழ்வை நாணற்குழல்போல நேராக அமைத்துத் தா!’ என்று வேண்டிக்கொள்கிறார் வங்கக்கவி தாகூர்.

ராகவனுக்கோ தன் இல்வாழ்வைக்குறித்து துளியும் அக்கறையில்ல. அக்கரைப் பச்சைபோலத் தெரிகிற காதல் வாழ்வில்தான் குறி! சபலசித்தம் வாய்க்கப்பெற்ற இவன், சலனமனம்கொண்டு நிற்கிறான்.

ஆதலால்தான், தாஜ்மகாலில் தாரிணியை ‘உயிருடன்’ திரும்பச் சந்தித்ததும், ‘பழைய வாசனை’ அவனுக்குத் திரும்புகிறது. அவன் தாரிணியைக் கண்டவுடன் செய்வகை புலனாகமல், புலன்கள் அனைத்தும் செயலற்ற நிலையில் அப்படியே நிற்கிறான். உடன் நின்ற சீதாவையும் மறந்துபோகிறான். தாரிணி என்ற ஒரு நினைவுதான் அவனை ஆட்கொள்கிறது. ஆனால் தாரிணி ‘ஆட்கொல்லி’ யல்லள்!

தன் கணவனின் ‘மாஜிக்காதலி’ தாரிணி என்ற மர்மம் பிடிபடுகிறது சீதாவுக்கு. ‘யார் அவள்?’ என்று கேட்கிறாள், பதமாக. அவனே எரிந்து விழுகிறான். “இப்படி எரிந்து விழத்தான் உங்களுக்குத் தெரியும்! அன்பாக ஒரு சொல்கூடச் சொல்லத் தெரியாது!” என்று மெய்யுருகினாள். ‘மெய்’யும் உருகுகிறது.

‘தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ ?’

இல்லறப் பிணைப்பில் ஏற்பட்டிருந்த விரிசலைக் காணும் சூர்யாவுக்கு மேற்கண்ட வரிகள் தாம் நினைவில் எழுகின்றன. அவர்களது இன்பமயமான இல்வாழ்க்கையில் துளி விஷமாகத் தோன்றுகிறாள் தாரிணி.

தாரிணி ஹரிபுரா காங்கிரஸில் பங்கு கொண்டவள். பீஹார்ப் பூகம்பத்தின்போது, பொதுநலத்தொண்டு புரிந்தவள்.

இலட்சியவாதி சூர்யாவுக்கும் தாரிணி பழக்கம்!

இறைமையின் வாழ்வு !

னித மனத்தை வாழவும், வாழ்த்தவும் செய்யவல்ல வல்லமை-கடவுட்சக்தி எனும் மூலசக்தியிடமிருந்தே கிடைக்கிறது. இதனால் தான் அன்பு எனும் உயிர்நிலை நிலைக்கிறது; அறம் என்கிற நியதி காலூன்றுகிறது; தர்மம் வெல்கிறது. ஆகவேதான் இறைமையே வாழ்வாகவும், வாழ்வே இறைமையாகவும் சுழல்கிறது!... 

இதுவே உலகம்!...

சீதா-ராகவன்; சூர்யா-தாரிணி என்கிற நாற் கோட்டுருவத்தைச் சுற்றிவளைத்துச் செல்கிறது ‘அலை ஓசை’.

சீதாவின் தாய் ஒரு சமயம் கனவுகண்டாள். மகள் கடலில் அகப்படுவதுபோல. அதன் விளைவாக அலை ஓசை அவளை அடிக்கடி அச்சுறுத்துகிறது. இதுவே மரணபயமாகவும் அமைகிறது. இந்தத் தாய்வழிப்பயம் மகளுக்கும் ஒட்டுகிறது. சீதாவும் அலை ஓசை காரணமாக மருள்கிறாள்; மயங்குகிறாள்; துயருறுகிறாள். இந்த அலை ஓசை இருக்கிறதே இது, கதைக்கு ‘சஸ்பென்ஸ்’ ஆக இயங்காமற்போனாலும், அவளது உயிருக்கும் ஆத்மாவுக்கும் ‘சஸ்பென்ஸ்’ ஆகிறது! உடல், ஆத்மா ஆகிய இரண்டின் கட்டுப்பாடற்ற வினோதக் கலப்புத்தானே இந்த மானுடப்பிறவி?...

ஒரு கட்டம்:

ரஜினிபூர் ஏரி.

சீதா, ராகவன், தாரிணி மூவரும் வருகிறார்கள். குந்துகிறார்கள்.

சீதாவுக்கு தாரிணி என்றால்தான் எரிச்சல் ஆயிற்றே? தலைவலி என்று ஒதுங்குகிறாள்.

சீதாவின் உள்ளத்துக் கோளாறு தாரிணிக்குப் புரிகிறது. “பெண்களின் மனத்தை அறியும் சக்தி உங்களுக்கு இல்லவே இல்லையென்று தெரிகிறது. உங்கள் மனைவிக்கு உங்களுடன் தனியாகவந்து உல்லாசமாக இருந்து விட்டுப் போகவேண்டுமென்று எண்ணம்!” என்கிறாள்.

அதற்கு ராகவன், “அவளைத் தனியாக அழைத்துக் கொண்டுவந்து என்ன செய்கிறது? அவளோடு எந்த விஷயத்தைப்பற்றிப் பேசுகிறது? எங்கள் இருவருக்கும் பொதுவான விஷயம் எதுவும் இல்லை. அவளுடைய பேச்சு என் மனத்தில் ஏறவே ஏறாது. நான் பேசுகிற விஷயம் அவளுக்குப் புரியாது!” என்று பதிலிறுக்கிறான்.

“அது யாருடைய தப்பு? அவளை நீங்கள் படிப்பித்து உங்கள் நிலைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களுடன் சமதையாகப் படிப்பில்லாதவளை மணம் செய்துகொண்டிருக்கக் கூடாது. அப்போது தவறுசெய்துவிட்டு இப்போது இப்படிப் பேசுவதில் என்ன பயன்?”-தாரிணி.

“தப்பு என் பேரில் இல்லை, தாரிணி! உங்கள் பேரில்தான்! உங்களால் வந்த வினைதான் இதெல்லாம்!” -ராகவன்.

“வெகு அழகு! இப்படியெல்லாம் பேசாதீர்கள். உங்கள் மனைவி உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நாமும் போகலாம், வாருங்கள்! இல்லாவிட்டால், அவளுடைய ‘கோளாறு’ இன்னும் அதிகமாகிவிடும்!”-தாரிணி.

“அதிகமானால் ஆகட்டும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை!” -ராகவன்.

ராகவன் சாமான்யமான ஆளா, என்ன? பாரதியின் பெண்மை வாழ்த்து அவனுக்குப் பிடிக்காவிட்டாலும், “தங்குவதற்குத் தாஜ்மஹால்; ஒருகூஜா திராட்சை ரசம்; ஒரு கவிதைப் புத்தகம்; என்னருகில் நீ இதைக் காட்டிலும் வேறு சொர்க்கம் உண்டோ?” என்று தாரிணியை உற்றுநோக்கி உமர்கயாமின், பாடலைக்கூற மட்டும் பிடித்திருந்தது. இந்நிலையிலே, “அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இவ்வாழ்க்கையாகும்; அதுவும், மற்றவர் பழிப்பதற்கு இடமின்றி அமைந்து விடுமாயின் அதைவிட வேறு என்ன சிறப்பு வேண்டும்” என்னும் வள்ளுவனின் அறிவுணர்வில் அவனுக்கு ஏது நாட்டம்?

ஏரியில் விழுந்து விடுகிறாள் சீதா. பழைய அலை ஒசைச் சுழிப்புக்குரல்!

உயிரில் உயிராகவும், உயிரின் உயிராகவும் ஒன்றியதாக ‘தீவலம்’ சான்று மொழிந்ததன் பேரில் அவனது உடைமை ஆகிவிட்டவள் ஏரியில் விழுந்ததும், அவன் அவளைக் காப்பாற்றக் கவலைப்பட்டானா? இல்லை, இல்லவே இல்லை! அந்தக்கவலை தாரிணிக்கு உண்டாகிறது. இதன்பயனாக, தாரிணியைப்பற்றி முரண்பாடாகக் கொண்டிருந்த சீதாவின் கவலையும் கழிகிறது. இது ரத்தபாசத் தொடர்பின் விடிவு!

ஆம்; தாரிணியும் சீதாவும் உடன்பிறப்பு!

இவ்வுண்மை தெளிவு கொள்வதற்கு முன்னும் பின்னும் தொடர்ந்த மனச் சங்கடங்கள் பலப்பல!

பெண்ணென்று பூமியில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருக்கிறதென்னும் கவிமணியின் வாக்கு முற்றிலும் உண்மையே!

தாரிணியை ‘அக்கா’ என்று நேர்மையான பாசத்துடன் அழைத்து, அவளையே முழுதும் நம்பியிருப்பதாக நாணயமான நம்பிக்கையை அவள்பால் வைக்கிறாள் சீதா.

இந்த நம்பிக்கையும் பாசமும் சீதாவை முழுப்பண்பு மிக்க கதைத்தலைவியாக ஆக்குகின்றன!

தேசியப் புரட்சிக் கனல் !

தாரிணியும் சூர்யாவும் அரசியல் புரட்சி இயக்கத்தைச் சார்ந்தவர்கள். விடுதலைப் போராட்டம்!

இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகப்பழக, ராகவன் விலங்காகிவிடுகிறான். சூர்யா மீது அவனுக்குக் கட்டுக் கடங்காப் பகை. இம்மாதிரியான சூழலின் சுழல் உருவாகும் நிலையில், நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் ‘ஒத்தல்லோ’ (Othello) நாடகத்தின் உச்சக்கட்ட உறுப்பினர்களான ஒதெல்லோ, டெஸ்டமொனா, இயாகோ ஆகிய கதை உறுப்பினர்களின் கதையையும் நினைவு கூர்கிறோமே!...சூர்யா அடிக்கடி தன் வீட்டுக்கு வருவதையும் தன் மனைவியுடன் அவன் பழகுவதையும் கண்டு அநாகரிகமான முறையில் ஐயம் கொள்கிறான். சூர்யாவைப் போலிஸில் காட்டிக்கொடுக்க முனைகிறான், தனக்குத் தாரிணி கிடைக்கவேண்டுமென்று பகற்கனவு கண்டவனுக்கு, தாரிணி தன்னை மறந்துவிடும்படி எச்சரிக்கை விடுத்ததே பெரிய தோல்வியல்லவா? திரைப்படமாக இருந்திருந்தால் இங்நேரம் ராகவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்! ஆனால், இப்பொழுது அவன் சீதாவைப் பைத்தியமாக ஆக்கிக் கொண்டிருந்தான். ஓயாமல் ‘தொலைந்துபோ! தொலைந்துபோ!’ என்று தன்னைக் கொண்டவனே சொல்லக்கேட்ட சீதா உண்மையாகவே தொலைந்துபோய் விட முடிவுசெய்து, கைத்துப்பாக்கியோடு தயாராக இருக்கையில், சூர்யா அவள் உயிரைக் காப்பாற்றி விடுகிறான். சீதாவின் அம்மாவிடம் அவன் அன்றொருநாள் கொடுத்த வாக்கின் மெய்ம்மைப்பாட்டை மறுமுறையும் மெய்ப்பித்தான். ஒரு காலத்தில் சீதாவை உள்ளத்தால் விரும்பி,உள்ளத்தில் இருத்திக் கனவுகண்ட ‘கதை’ அவன் வரை ‘விழுப்புண்’ போலத்தான்! ‘தேசத்தை நாம் காப்பாற்ற முயலுவதைவிட நமக்குத் தெரிந்த ஒருவரின் கஷ்டத்தைப் போக்கினால் கைமேல் பலன் உண்டு,’ என்னும்படியான தாரிணியின் ‘ஹிதோபதேசத்’துக்கும் மதிப்பு வாய்க்கிறது.

உணர்ச்சிபூர்வமான மற்றொரு கட்டம்.

கணவனின் தொல்லை தாளாமல் நரகவேதனைப்பட்ட சீதா தன்னை எங்காவது அழைத்துக்கொண்டு செல்லும்படி, காலில் விழாத குறையாக குர்யாவிடம் மன்றாடுகிறாள். சூர்யா அவளுக்குப் புத்தி புகட்டுகிறான்.

வாசல் வரையில் சூரியாவைக் கொண்டுபோய் விட்டு விட்டுத் திரும்புகிறாள் சீதா. ராகவன் வந்து நிற்கிறான். “அவனிடம் என்னடி ரகசியம் பேசினாய்?” என்று கேட்டு ஒரு கன்னத்தில் அறைகிறான். அதிலும் திருப்திப்படாமல், மறுகன்னத்திலும் அறைகிறான். ‘உங்களுடைய நடத்தையைப்பற்றிச் சந்தேகம்!’ என்று நாக்கில் நரம்பின்றி, பல்மேல் பல்போட்டு, உள்ளங் கூசாமல் ஏசுகிறான்.

“நான் உங்கள் பேரிலும் சந்தேகப்படுகிறேன்!” என்கிறாள் சீதா.

இந்த ஓர் எச்சரிக்கையில், சீதாவின் கெட்டதைப் பொசுக்கவல்ல நெருப்புச் சக்தி பளிச்சிடுகிறது!

‘கடவுளின் ராஜ்யம் உனக்குள்ளே!’

கடவுளின் ராஜ்யம் உனக்குள்ளே!
அற்புதமான வேதாந்தத் தத்துவம்.



சீதைக்குக் கண்காணாத கடவுளும் கண்கண்ட காந்தியுமே இப்போது ராஜ்யமாக இருந்தன.

தனக்கு இனிக் கணவன்தான் அனைத்தும் எனச் சீதாவும், இனிமேல் தனக்கு மனைவிதான் அனைத்தும் என ராகவனும் ஒருமுறை மனம்திருந்தி, அந்த மாற்றத்துக்கு வழிபிறப்பதற்குள், கதையைத் திசைதிருப்பப் பிறந்துவிட்ட பல நிகழ்ச்சிகளையும் மறந்துவிட்டு, உச்சக் கட்டத்தை எண்ணுகிறேன்.

இப்போது, ராகவன் சமூக சேவகன்.

ஹவ்ராவில் நடந்த வகுப்புவாதக் கலவரத்தில் சிக்கித் தவித்தவர்கள் அனைவரையும் சுட்டிக்காத்தான் அவன்.

விவரம் அறிந்த சீதா பெருமகிழ்வு பூக்கிறாள்.

மறுபடி சீதா - ராகவன் குடும்பவாழ்வில் புதிய மணம். பஞ்சாப் நகரவாழ்வு சொர்க்கம்! காந்தி அடிகளின் ஆத்ம சக்தி வெல்கிறது. நாடு சுதந்திரம் அடைகிறது.

ஹொஹங்காபாத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிதாவைக் காப்பாற்றிய மெளல்வி சாகிப் உருவத்தில் இருந்த தன் தந்தையின் உண்மைப் பாசம் கண்டும் தாரிணியின் பிறப்பின் ரகசியம் கண்டும் சீதா ஆனந்தக் கண்ணிர் வடித்து, அது உலர்வதற்குள், சீதாவுக்குத் தண்ணிரில் தஞ்சம் கிடைக்கிறது. அலைஓசை-மரணபயம்!...

ஆனால் அவள் பிழைத்தாள்!

ராகவனோ, சீதா செத்துவிட்டதாக நம்பிவிட்டான்! சூர்யா அரங்கேற்றிய நாடகம் இது!

ஜனவரி 31

னவரி 31.

“ஹரீ! தும் ஹரோ - ஜனகீ மீரு!”

‘பகவானே! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக!” என்று ஒலித்த சோக கீதத்துக்கும், ‘அஹிம்சையே எல்லாவகை ஆயுதங்களுள்ளும் மிகமிக வலிமை வாய்ந்ததென்று மண்ணில் மெய்ப்பித்துக்காட்டி விண்ஏகிச் சென்ற அண்ணலின் மரண நிழலுக்கும் ஊடே ஊடாடியபடி சீதா எப்படியோ தன் மனையை மிதிக்கிறாள். கணவனின் அன்புக்கு மிஞ்சிய பேறு ஏது?’

ராகவன் தாரிணியிடம் ‘காதல்பிச்சை’ கேட்கும் அவ வேளை அது.

தாரிணி தலையோடு கால்வரை முஸ்லீம் பந்தா போட்டிருக்கிறாள்.

சீதாவுக்கு தன்னம்பிக்கையும் மனவலிமையும் பறிபோய் எத்தனையோ காலம் ஆகிவிட்டது. ஒரு சமயம் அவள் தாரிணியிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறாள். தனக்குப்பின் தாரிணி தன் கணவனை மணந்துகொள்ள வேண்டுமென்பதே அவ்வேண்டுகோள். அதற்கு அது சமயம் அவளும் உடன்படுகிறாள்.

இப்பொழுது அந்தக் கட்டம் புத்துயிர் பெறுகிறது. "என் தங்கை சீதாவின் ஆவியாவது நிம்மதிபெற வேண்டும். நான் அவளுக்குக் கொடுத்த வாக்கை மீறப்போவதில்லை. நீங்கள் என்னக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதித்தால், எனக்கும் சம்மதம், ஆனால் நீங்கள் தான் யோசித்துச் சொல்ல வேண்டும்!” என்று ‘பொடி’ தூவிப் ‘பொடி’ வைக்கிறாள் தாரிணி.

சீதா வழி விலகுகிறாள்.

மறுநாள் தாரிணி - ராகவன் சந்திப்பு.

தாரிணி - அதாவது ரஜனிபூர் இளவரசி - சீதாவின் தமக்கை தன்னுடைய எழிலார்ந்த பர்தாவை நீக்குகிறாள்!

ஆ!

தாரிணியா அவள்?

காதல் என்பது பொய்க்கனவா? அற்பமான மாயை யேதானா?

தாரிணி கோர சொரூபம் கொண்டிலங்குகிறாள். முகத்தில் நீண்ட பிளவு. ஒரு கண், ஒரு கை இல்லை. தெய்வச்சிலையை எந்த வெறியனே உடைத்துவிட்டான்!

“தாரிணி! தாரிணி!” என்று தாரிணி நாமாவளி பாடிக்கொண்டிருந்த ராகவன் மனம் இப்போது பின் வாங்குகிறது. ஆனால் இதே தாரிணியை முன்னர் இதய நிறைவுடன் காதலித்த சூர்யா, இப்போது அவளை எற்க முன்வருகிறான்.

சீதா மஞ்சள் குங்குமத்துடன், தன் கணவன் மடியில் சாய்ந்தபடி, மகளின் அருகில் இருந்தபடி, “ஒரு குறையும் இல்லாமல் மனநிம்மதியுடன் நான் போகிறேன். நான் பாக்கியசாலி அக்கா!” என்று சொல்லிக்கொண்டே நீள்துயில் வசப்படுகிறாள். அலைஓசையின் மரணபயம் இனி அவளுக்கு ஏது?

ஆஹா!...சீதா பாக்கியசாலி! 

நன்கு விரித்துக்காட்டப்பெற்றும், அழகுடன் முழுமைபெற்றும் (fully developed and finished Character) விளங்குகிற பாத்திரம் சீதாவுடையது.

பின், சீதா பாக்கியசாலி தானே?

முடிவில் :

தன் முதற்காதலுக்கு வடிவம் ஈந்த தாரிணியையே ராகவன் இறுதியில் கைத்தலம் பற்றுகிறான். தாரிணியைத் தான் திருமணம் செய்துகொண்டே தீருவேன் என்றும், அவளுடைய முகலாவண்யத்துக்காக அவளிடம் தான் பிரியம் வைக்கவில்லையென்றும் சத்தியம் செய்ததுடன், சீதாவுக்குத் தாரிணி கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாதென்றும், தன்னிடமும் அதே விஷயத்தை சீதா சொல்லியிருப்பதாகவும் வற்புறுத்தியபின், தாரிணி திருமதி ராகவன் ஆகிறாள்.

இந்த ஒரு நல்ல முடிவில், ராகவன் என்ற நவநாகரிக இளைஞனின் தியாகமனத்தை நமக்குக் காட்டி, அவனது குணச்சித்திரப் படைப்புக்கு ஒரு மெருகு கொடுக்க மதிப்பிற்குரிய பேராசிரியர் கல்கி அவர்கள் என்னதான் முயற்சி செய்திருந்தாலும், அம்முடிவு ராகவனை முழுமைச் சித்திரமாக ஆக்கியதாகச் சொல்லவே முடியாது!

ராகவனின் இம்முடிவு செயற்கையாக (artificial) செருகப்பட்டதுபோல் அமைந்துவிட்டது!

பேரறிவாளன் யார்?

னிதர்களைச் சிற்றறிவினர் என்றும் கடவுளைப் பேரறிவாளன் என்றும் நம் நாட்டுப் பெரியோர்கள் கண்டுணர்ந்து கூறுகிறார்கள். 

சிலர் மிகமிக இன்னலுற்றும் வேறுசிலர் மிகமிக இன்பமுற்றும் சாகிறார்கள்.

வேறுசிலர் குற்றங்களைச் செய்தும்கூட யாதொரு தொல்லைகளும் காணாமல் இருக்கிறார்கள்.

இன்னும்பலர் யாதொரு தீம்பும் செய்யாதிருந்தும், தொல்லை அனுபவிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட உலகின் பாரபட்ச நிலைகளைக் காணுகையில் நாம், “தெய்வம் என்ற ஒன்று இருக்கிறதா?” என்று ஐயப்பட வேண்டியவர்களாகின்றோம்.

இதற்கு ‘கல்கி’ அவர்கள் விளக்கம் தருகிறார்:

அன்னை ஒருத்தி. அவளுக்கு நான்கு குழந்தைகள். மூன்று குழந்தைகள் செம்மையாக இருக்கின்றன. அவற்றுக்கு நல்லஉணவு. ஒன்றுமட்டும் நோய்க்குழந்தை. இதற்கு வெறும் கஞ்சிதான் கொடுக்கிறாள். இதைக் கண்டு, தன் தாயைப் பாராபட்சமுள்ளவள் எனக்கருதினால், இது நோய்வசப்பட்ட குழந்தையின் தவறுதானே? குழந்தை சிற்றறிவு படைத்தது. தன் நிமித்தம் தன் அன்னைக்கு உள்ள அக்கறையும் அன்பும் அதற்குப் பொருள்படவில்லை.

கடவுளைப்பற்றிக் குறைகூறுபவர்களும் மேற்படி குழந்தையின் நிலையையே அடைகிறார்கள்.

கடவுளைப்பற்றி அறியும் ஆற்றலோ பக்குவமோ நமக்கு இல்லாவிட்டாலும், அல்லது அத்தகைய பண்பாடு நம்மிடையே வளரவில்லையென்றாலும், கடவுளிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுவே நம் மனம் அமைதியும் மகிழ்ச்சியும் பெறத்தக்க ஒரே வழியாகும்.

சீதா, ராகவன், சூர்யா ஆகிய மூவர்களுக்கும் மேற்சொன்ன தத்துவம் விளக்கமாக அமைகிறது!

விட்டகுறை - தொட்டகுறை

ன்னிரண்டு ஆண்டுகட்கு முந்தி ‘கல்கி’ அவர்களை நான் ‘பேட்டி’ கண்டபோது, அவரைச் ‘சகலகலா வல்லவர்’ என்று சுட்டியிருந்தேன்.

அவர் தொடாத பாத்திரம் இல்லை.

அவரது பாத்திரங்கள் தொடாத உள்ளம் இல்லை.

மகேந்திரர், மாமல்லர், சிவகாமி, பரஞ்சோதி, புலிகேசி, அருள்மொழி, நாகநந்தி, பார்த்திபன், விக்கிரமன் என்று வரலாற்றைப் பேசவைத்து, வரலாற்று உறுப்பினர்கட்குக் கலைநயம் நல்கி, காவியமேன்மை கொடுத்து, தமிழ் இலக்கியப் புகழ்ச் செல்வர்களாக ஆக்கிய பெருமையைப் புகழ்வதா?

திருடன் முத்தையனையும் கல்யாணியையும் புதிய கோணத்தில் பார்த்துச் சொல்லி நம்மையெல்லாம் விம்மி வெடிக்கச் செய்த விந்தையினைப் போற்றுவதா?

‘விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு - முன்பு
விட்டகுறை வந்து தொட்டாச்சு!’

இந்த ஒரு தத்துவமே ‘அலைஓசையின்’ உட்குரலாக அமைந்து பட்டாபி— லலிதா, மெளல்விசாகிப், கங்காபாய், ரமாமணிபாய், ரஸியாபேகம், அமரநாத், கிட்டா வய்யர், பத்மலோசன சாஸ்திரி, பங்காரு நாயுடு, சரஸ்வதி அம்மாள், துரைசாமி, ராஜம்மாள் போன்ற துணைப் பாத்திரங்களின் துணையுடன் தாரிணியும் சீதாவும் ராகவனும் சூரியாவும் நம் நெஞ்சில் நிலைத்துவிட்ட அதிசயத்தைச் சொல்லச் சொற்கள் எங்கே?


கல்கியின் தனித்துவம் பேசுகிறது!

டிமை மண்ணில் தொடங்கிய கதை சுதந்தரக் கொடியின் சூழலில் முடிந்து, கொடிகட்டிப் பறக்கிறது.

பெண் விடுதலை, வர்ணாஸ்ரமதர்மம், ஈ. வெ. ரா.வின் நாத்திகப் பேச்சு, வேவல்துரையின் திட்டம், ஹிட்லர் முஸோலினி ஆகியவர்களின் போர்வெறி, வகுப்புவாதக் கலவரம், காந்தி அண்ணலின் ஆத்மசக்தி, நேதாஜியின் புரட்சித் திருப்பம்-இப்படி இன்னும் எவ்வளவோ விஷயங்களை மிகத் தெளிவாகச் சொல்கிறார் ஆசிரியர்.

‘அலைஓசை’யில் விரவிக்கிடக்கின்ற வரலாற்று நிகழ்வுகளுக்குக் கணக்கு வழக்கில்லை!

அவர் இன்று இருந்திருக்கவேண்டும் சூ-என்-லாயை வில்லனாக்கி பெரிய நவீனம் ஒன்றைச் சமைத்திருப்பார்! வானவெளிப்பெண் வாலண்டினாவும் அழகி கீலரும்கூட தப்பித்திருக்க மாட்டார்கள்!...

“புதினத்தின் ஆசிரியன், வாசகனைத் திருப்திப் படுத்துவதையே முக்கியமான குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.’’ என்பது ஸாமர்ஸ்ஸெட்மாமின் (Somarset Maugham) கொள்கை. 

இந்தச் சமுதாயப் பின்னணிச் சித்திரத்தில் (Social setting) புதிய பார்வையுடன் கூடிய வரலாற்றுப் பெருமை இழைந்த தேசிய விடுதலை இயக்கத்தின் கதையையே தம்முடைய கதைக்குப் பின்னணியாகக் கொண்டு தமது அதீதமான தனித் தன்மையினாலும் (Unusual individuality) ஆற்றல்மிக்க கற்பனைத்திறனாலும் (Powerful imagination) எழுதி, இந்தப் பெரிய நவீனத்துக்கு அமரத்வம் அளித்துவிட்டார் அமரர் கல்கி.

“The novelist must dramatise என்ற ஹென்றி ஜேம்ஸின் (Henry James) கொள்கையை முற்றும் பிரதிபலிக்கிறது. ‘அலை ஓசை’!

முகமூடி, பர்தா, தாடிமீசை, பாலசந்யாசி வேடம் போன்ற சாதாரணமான சாதனங்கள் ஒரு பிடிப்புடன் பயன்படுத்தப்படுகின்றன!

கல்கியின் தனித்துவம் (personality) அலாதி!

“சோலைமலை இளவரசி”யில் முற்பிறப்பு உணர்வைச் சித்திரிக்கும் ‘கல்கி’ அவர்கள் ‘அலைஓசை’யிலும் சீதா மூலம் மேற்படி தத்துவத்தைக் கையாளுகிறார்.

பிரெஞ்சு நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் டுமாஸ் (Alexander Dumas) அசல்— நகல் என்ற அளவிட்டு இரண்டு இரண்டு பாத்திரங்களைப் படைப்பதில் ஆர்வம் கண்டவர். ‘The man in the Iron Mask’ இதற்கு எடுத்துக்காட்டு.

இந்த ஆர்வம் நம் கல்கி அவர்களுக்கும் தழைத்தது போலும்!...‘சிவகாமியின் சபதத்’தில் நாகநந்தி-புலிகேசி! பொன்னியின் செல்வனில் மதுராந்தகன்-சேந்தனமுதன்! ‘அலைஓசையில்’ தாரிணி-சீதா!

“தமிழர்கள் நல்ல ஹாஸ்ய உணர்ச்சி உள்ளவர்கள். ‘இது ஹாஸ்யம்! இங்கே சிரிக்கவும்!’ என்று அவர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. நுட்பமான ஹாஸ்யத்தைக்கூட இனம்கண்டு அனுபவித்துச் சிரிப்பதில் தமிழர்களுக்கு இணை யாருமில்லை!” என்கிறார் கல்கி.

நம்மைச் சிரிக்கச்செய்ய ‘அலைஓசை’யில் பற்பல உரையாடல்கள் காத்திருக்கின்றன!

வகுப்புவாதம், பிராந்தியமோகம், சாதிவெறி, மொழிவெறி போன்ற குறுகிய மனப்பான்மைகள் நம்மிடையே நிலவினால், கேடு விளையும். ஆகவே நாம் தேசீய ஒருமைப்பாட்டுணர்ச்சியுடனும் ஒன்றுபட்ட தேசிய விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும்!” என்று அவ்வப்போது நேருஜி நமக்கு அறிவுறுத்தி வருகிறார் அல்லவா?

ஆம்; பாரதப்பிரதமரின் இந்த இலட்சியக் கனவுக்கு கனவின் இலட்சியத்திற்கு ‘அலைஓசை’ ஓர் உரைகல்!