கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/செம்பியன் செல்வி

விக்கிமூலம் இலிருந்து

6. செம்பியன் செல்வி
—கோவி. மணிசேகரன்—

கி.பி. 1070 முதல், 1120 வரை அரசாண்டான் முதலாம் குலோத்துங்க சோழன்.

வடக்கே மகாநதி முதல், தெற்கே குமரி முனைவரை எல்லையாகக் கொண்ட சோழப் பேரரசை நிலை நாட்டக் கலிங்க அரசன் அனந்தவர்மன் திட்டம் தீட்டுகிறான். அவனுக்கு உறுதுணையாகச் சாளுக்கியன் விக்கிரமாதித்தன் அவனுடைய படைத்தலைவன் ஆனந்த பாலையன், மற்றும் பல சிற்றரசர்கள் அமைகின்றனர்.

ஒரு வலிவற்ற நாட்டை வென்று புகழ் கொள்வதில் மதிப்பில்லை என்றுணர்ந்த குலோதுங்கச் சோழன் தன்னுடைய தானைத் தலைவனையே கலிங்கம் நோக்கி அனுப்புகிறான். அவன் கொடுத்த திட்டப்படி, தானத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தில் எண்மாய்க் கோட்டை என்ற புது முறைக் கோட்டையைக் கட்டுகிறான். கருணாகரனே தனக்குத் துணையாகக் கிடைத்துவிட்டான் என்ற பெருமிதம் கலிங்கனுக்கு ஏற்பட்டது.

இந்த இடத்தில்தான் அருள் மொழி நங்கை என்ற பேரழகியைச் சந்திக்கிறான்; காதல் கொள்ளுகிறான். ஆயினும் உடல் தீண்டாக் காதலர்களாகவே அவர்கள் வாழ்கின்றனர். காரணம் சோழமாதேவி மதுராந்தகி, தன்னுடைய மகள் அம்மங்கையைக் கருணாகரனுக்கு மணமுடிக்கக் கருதுகிறாள். ஆகவே கருணாகரனுக்கு உண்மையைச் சொல்லாமல் பெண்-பற்றியதில் ஆணை பெற்றுக்கொள்கிறாள்.

மதுராந்தகி தேவியும் மறைகிறாள். கலிங்கனுக்கும் கருணாகரனின் சதித்திட்டம் புரிந்து விடுகிறது. சிறைப்படுத்த முயல்கிறான். கருணாகரனும் சோழகுமாரன் விக்கிரமனின் மூலம் தப்பி வந்துவிடுகிறான். இந்நிலையில் கருணாகரனின் தங்கை இளவேணியை விக்கிரமச் சோழன் காதலிக்கிறான்.

சக்கரவர்த்தியின் ‘மண்ணு மங்கலவிழா’வின் போது கலிங்கன் திறை செலுத்தாமல் விடுகிறான். அருள்மொழி நங்கை கருணாகரனைப் பழிவாங்கத் திறைப்பொருளாக வருகிறாள். இதனையுணர்ந்த பேரரசன் அவளை மனைவியாகக் கொண்டுவிடுகிறான்.

சூழ்ச்சிகள் பலமாக நடக்கின்றன. கருணாகரனின் அண்ணன் காலிங்கராயர் சோழப் பேரரசைப் பகைத்துக்கொண்டு பாண்டியர்பால் சேர்ந்துவிடுகிறார். 

கலிங்கப்போர் மூளுகிறது. பல இன்னல்களுக்கிடையே வெற்றிபெற்றுத் திரும்புகிறான் கருணாகரத் தொண்டைமான். அவனுக்கு அம்மங்கை மனைவியாகிறாள்.

இதுதான் கதை!

திரு தமிழ்வாணன் தங்கமானவர். அவர் உள்ளத்தில் கட்டிபாய்ந்துள்ள தங்கக் கட்டியை மாற்று உரைத்துப் பார்த்து, தங்கம் இவ்வளவு, கலப்புச் சரக்கு இவ்வளவு என்று, அவர் மாதிரி, குறி-ஜோஸ்யம் சொல்லும் தலைவிதி எனக்கு வேண்டவே வேண்டாம். அவர் பிழைப்புத் தெரிந்தவர். அதனால்தான், அவருக்குத் தம் மனத்தில் பட்டதைச் சொல்லும் பக்குவம் உருவாகியிருக்கிறது. அந்தப் பக்குவத்திற்கு மாறு பெயர் ஒன்றும் உண்டு: அதுதான்: ‘ஸ்டண்ட்’!-இல்லையென்றால், சரித்திர புருஷர். பேராசிரியர் கல்கி அவர்களின் சரித்திர நாவல்கள் தலையணையாக உபயோகப்படுத்தவே பயன்படும் என்று புறம் பேசியிருப்பாரா?-பிழைக்கத் தெரியாதவர் அவர்!

“...வாரா வாரம் என் தொடர் கதைகளைப் படித்து, வந்த பதினாராயிரக்கணக்கான தமிழ் அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாசகர்களின் ஆர்வமும் ஊக்கமும் இத்தகைய மாபெரும் வரலாற்றத் தொடர்கதைகளை எழுதி முடிப்பதற்கு உறு துணையாயிருந்தன...!” என்று குறிப்புக் கொடுத்திருக்கிறார் கல்கி. பிறர்முன் எளியனாய் நிற்கும் மனப்பண்பு. அனைவருக்கும் கைகூடி வருவதில்லையே!

கோவி. மணிசேகரன், “வரலாற்றுத் தமிழ் புதின உலகின் வழிகாட்டியாக விளங்கியவர் அமரர் கல்கி அவர்கள். அவர் என்னுடைய வழிபாட்டுக்குரியவர். அன்னார் இதய அரங்கில் இதனை அரங்கேற்றிக் காணிக்கையாக்கி அஞ்சலி செய்கிறேன்,” என்று செப்பியிருக்கின்றார். பக்திக் கடன் இது!


பட்டப் பரீட்சைக்கு அமர்ந்தபோது, சோழர்களின் பொற்காலம்பற்றி ஒரு வினாவுக்கு விடை கொடுக்கும் நிலை வந்தது. படித்ததை வடித்தேன். உங்களுக்கு நினை விருக்கிறதா?-‘வரலாறு என்றால் புளுகுகளின் மூட்டை!’ என்று வாய்கொழுத்துச் சொன்னரே நெப்போலியன்? அப்படியென்றால், அவரை இன்றைய சரித்திரம் மறந்து விட்டதா? நெப்போலியனின் இதய மொழியை முன்னுரையாக்கி, அதன் பேரில், கேள்விக்கு விடைமாளிகை எழுப்பினேன்.

காலத்தின் நாட்குறிப்பு ஏடுதான் வரலாறு. அதனால் தான் ‘வரலாறு நடக்கிறது’ என்று சிலர் வியாக்கியானம் செய்கிறார்கள். வரலாறு அவ்வாறு நடைபோடுவதால் தானே, நாம் இப்படி ஓர் அற்புதமான காட்சியைக் காண முடிகிறது?

அதோ, அந்தத் தலைநகர்தான் கங்கை கொண்ட சோழபுரம். சரித்திரம் புகலும் ஊர்; சரித்திரத்தைப் புகலும் நகரம். அன்று தேர்வலத் திருநாள். கலிங்கத்தை வெற்றி கொண்ட கோலமிகு திருவிழா நாள் அது. கலிங்கம் எறிந்த கருணாகரவேளுக்குப் புகழ் பாடிடக் கொடுக்கப்பட்ட நல்வாய்ப்புத் தவநாள் அது. வெற்றிகளும், அவ்வெற்றிகளை உருவாக்கும் அரசியல் நுணுக்கப் புத்திச் செறிவுக் கற்பனைகளும் வீரர்களின் உள்ளங்கை பாவைகள் அல்லவா? வீரன் ஒருவன்; அவன் வெற்றித் திருவுடன் விளையாடினான்; வெற்றித் திருவுக்கு விளையாட்டுக் காட்டினான். அதனால்தான் அவனுக்குச் செம்பியர்குலச் செம்மலாம் குலோத்துங்கச் சோழமாதேவர் தேரோட்டியானாரா? தோல்வியில் வெற்றி நாதம் இசைத்து, வேதனையிலே உற்சாகத்தைக் கைக்கொண்ட சாதாரணமான வீரன் ஒருவனா அவன்? வீரத்திற்குப் பருவ மாற்றங்கள் ஏது? அவன் கருவிலே திரு வாய்க்கப் பெற்றவன். அதனால்தான், சோழநாட்டின் பட்டமாதேவியின் உள்ளத்தைத் தொட அவனால் முடிந்தது. தொட்ட குறையும் விட்டகுறையும் மார்பொட்டி அணைந்தன. “...இன்று முதல் கருணாகரன் தத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மகன்!...” என்று ஆணையிடுகிறாள் மதுராந்தகி தேவியார்.

வரலாற்றைத் திகழவைத்த மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமானின் வாழ்க்கைச் சரித்திரத்தின் ஏடுகள் ஒவ்வொன்றும் சொல்லாமல் சொல்லும் சித்திர விசித்திரத் கதைகளை நீங்கள் அறிய வேண்டாமா?

‘செம்பியன் செல்வி’ என்ற இந்தக் கதையிலே இதயத்தை மகிழ்விக்கும்’ வர்ணனைகள், உள்ளத்தைத் திடுக்கிட வைக்கும் போர்க்காட்சிகள், உணர்ச்சியைக் கவரும் காதல்நிகழ்ச்சிகள், சுவையோடு செல்லும் நிகழ்ச்சிக் கோவை-இவை அனைத்தும் நிரம்பியிருக்கின்றன,” என்று திரு சோமு அவர்கள் போற்றுதல் அளிக்கிறார். அவர் சொல்வளப் பேரறிஞர்.

ஒரு காட்சி: காதற் காட்சி!

அழகின் பொற்பதுமை அவள்: சோழர் குலப்பூங் கொடி. அம்மங்கை என்பது அவள் பெயர். நீறு பூசும் தந்தையான திரிபுவன சக்கரவர்த்தி பிறமதங்களுக்கு ஊறு செய்யாத பெருந்தகையாளர் அல்லவா? பெற்ற மகள் வைணவப் பற்றில் பற்றி நின்றாள். அவள் கெட்டிக்காரி. வாயில் விரல் பூட்டி அடையாளக் கோடு இட்டாள். செம்பியன் செல்வியாயிற்றே? நந்திகள் விலகின.

வளையோசை கேட்ட அளவில், கருணாகரன் ஏறிட்டு நிமிர்ந்தான். அவள் கட்டிலில் படுத்துக்கிடந்த காட்சி அவள் கண்களுக்கு உலகளந்த பெருமாளே நினைவூட்டிற்றுப் போலும்! கேட்கின்றாள்; கேலி மொழி, “உலகளந்த பெருமாளே! நான் சொன்னது உங்கள் துளசிச் செவியில் விழவில்லையா?”

ஆமாம், அவள் என்ன கேட்டாள்? அது காதல் ரகசியம். அதைப்பற்றி சாவதானமாக ஆராய்வோமா? இப்போது, மீண்டும் ஓர் ஊர்வல விழாவுக்கு அன்பர்களை அழைக்கிறேன்.

அதோ, அரசத் தேரில் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமானும்,அழகிய மணவாளனி அம்மங்கை ஆழ்வாரும் வீற்றிருக்க, தேரோட்டியாகச் சோழக் குமாரப் பேரரசன் விக்கிரம சோழன் அமர்ந்து வெண் புரவிகளைச் செலுத்திச்செல்லும் காட்சிக்கு நிகர் எது?

ஐயகோ! என்ன, அவ்வாறு விழி பிதுங்கிச் சாகின்றீர்கள்? “வெற்றிவேல், வீரவேல்” ஒலி உங்கள் மெய்யை உலுக்கி விட்டதா? அது பழங்குரல் ஐயா, பழமைத் தொனி! அந்த முடுக்கில் உங்கள் பார்வை குறுக்கோடிச் செல்கிறதே? அந்தக் கட்டாரி உங்களை ஏதும் செய்யாது.அஞ்ச வேண்டாம்! பொய்த்தாடி, மீசை, புனைவடிவத்துக்குத் தேவையில்லையா? இவை திருமுக ஓலைகள்! ஏன் அவற்றை அப்படி வீசி எறிந்துவிட்டீர்கள்? கதைக்குக் கால் இல்லை என்கிறார்கள். சுத்தப் பொய்.இப்படிபட்ட சரக்குகள் தாமே கால்களாகத் தொண்டு புரிகின்றன?

அழிந்த காலத்துக்குப் பிரதிநிதித்வம் ஏற்று, அழிந்த காலத்தை அழியாத வகையில் விளக்கிக் காட்டுபவன் சரித ஆசிரியன், 'அனுபவத்தினின்றும் எழுதவேண்டும்' என்பது நாவலலாசிரியனுக்கு இடப்பட்டுள்ள கட்டளை. இவ்விரண்டு குறிப்புக்களையும் கூட்டிக் குழைத்தால், சரித்திர நாவலாசிரியன் உருவாகிவிட முடியுமா? முடியும். ஏன், முடியாது?

நண்பர் திரு கோவி. மணிசேகரனின் 'செம்பியன் செல்வி'யில் சரித்திர ஆசிரியரின் குரல்(tone of a historian) கேட்கிறதா?

இதற்கு மறுமொழி: ‘ஆம்.’

சரி; வரலாறு சொல்லும் இந்த வரலாற்றுப் புதினத்தில் தலைமை உறுப்பினன் எனும் நாயகன் வேடத்தை யார் ஏற்கிறார்கள்? அவ்வேடம் புனைவடிவமா? உள்ளத்துடன் உண்மையிலேயே ஒன்றி, உள்ளத்தை இயக்கும் வேடமா அது? கதைத் தலைவி யார்?

சிந்தனக்குச் சூடு தரும் வினாக்கள் தாம் இவை. ஆனால், இந்தச் சரித்திரப் பெருங்கதைக்கு ஊட்டம் அளிக்கவல்ல உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவர் கலிங்கவேந்தன் அனந்தவர்மன் ஆகிய இருவேறு சக்திகளுக்கும் சொந்தமான படைஞர்களைத் தவிர்த்து இடைவெட்டிய பராக்கிரம பாண்டியன், காலிங்கராயர் போன்ற - (Characterless Characters), குணமிழந்த நபர்களையும் கழித்து, சக்கரயுத்தன் போன்ற உத்திமுறைப் பாத்திரங்களை (actors of Suspense) ஒதுக்கி நீக்கிப் பார்க்கும் பொழுது, கீழ்க்காணும் பெயர்களை நாம் மனனம் செய்து கொள்ளவேண்டியவர்கள் ஆகின்றோம்.

விசயதரன், சயதுங்கன், விருதராச பயங்கரன், கரிகாலன், இராச நாராயணன், திரிபுவனன், அபயன் போன்ற விருதுப்பெயர்கள் விரவிய குலோத்துங்கச் சோழச் சக்கரவர்த்திகள் தாம் இக்கதைக்குப் பிள்ளையார் சுழி.

அவருக்கு வாய்த்த துணைவிமார்களின் பட்டியல் நெடுங்கணக்குப் போல.

அவர்களுள் தலைவி: உலகமுழு துடையாள்-கோப்பெருந்தேவி என்று அழைக்கப்பட்ட மதுராந்தகி தேவியார்.

இவர்கள் பெற்ற பிள்ளைகளுள் கதைக்குக் கவனம் தருகிறான் குமார சோழ விக்கிரமன், இளவரசியின்பெயர் அம்மங்கை. வாயாடிப் பெண்.

நாம் அரண்மனையை விட்டு விலகி வருகிறோம். மகாராணியின் அருள் உள்ளத்தினால் உயர் பதவி பெற்ற தளபதி கருணாகரனைச் சந்திக்கிறோம். மதுராந்தகியின் மனத்தேர் வெற்றிப் பவனி வர வீரவழி சமைத்துத் தரும் வல்லமை கொண்டவன் கருணாகரன். அவனது ரத்தத் தொடர்புக்கு உரிமை பூண்ட இளவேணி நம் கண்முன் - கலாபமாகிறாள். இளவரசி அம்மங்கையை அண்ணியாக்கக் கண்ணி வீசிய கன்னி அவள்!-ஐயகோ அவள் வாழ்வு மூன்று வினாடிக் கதை!

கலிங்கன் அனந்தவர்மன் சக்தி பெற்று, அதே தருணத்தில் சக்தியிழந்த விந்தை மனிதன். அவன் இல்லை யேல், கலிங்கப் போர் ஏது? அவன் சாட்டை வீசி ஆட்டி வைத்த பம்பரமான அருள்மொழிக்கு மதிப்பு எது? திறை செலுத்தி நிறை காட்டவேண்டிய கலிங்க வேந்தனின் திறைப் பொருளாகி ‘இறை முடிச்சுக்கு இதோ ஒரு புதிர்!’ என்று விடுகதை சொல்லிவந்த அவள் ஏழிசை வல்லபியாக மாறியிருக்க முடியுமா? அவளை இளைய தேவியாக ஏற்கும் அளவுக்குச் சோழ பூபதியின் மனத்தை மாற்றிவிட்ட அவள் சாகஸக்காரி! சூதாட்டத்தின் சொக்கட்டான் காய் அவள்!

அப்புறம்: காலதேவர்-அவர் ‘சயங்கொண்ட கால தேவர்!’

இப்படிப்பட்ட நறுக்குத் பெயர்களை நறுக்குத் தாள்களில் கிறுக்கிச் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்க்கிறேன். இரண்டு பேர்கள் என் கவனத்திற்குத் தலைவணங்குகின்றனர். அவர்கள், குலோத்துங்க சோழதேவரும், அவர் தம் மனையாட்டித் தலைவி மதுராந்தகியும் ஆவர். ‘செம்பியன் செல்வி’ கதை ஓடுகிறது-இவர்களைச் சுற்றி. சோழமாதேவியின் மனத்தேர் - அதாவது, அவரது மனக்கனவு புறப்பட்டிருக்கவில்லை யென்றால், இந்தக் கதையே புறப்பட்டிருக்காது. தேவியின் கனவுகளை நனவாக்கித் தர, இராசேந்திரர் தம் மகன் கையாலேயே அறைபடவும் தயாராகிறார். அவருடைய வீரதீர பராக்கிரமங்களுக்கும், அரசியல் சூதுவாதுச் சூழல்களின் சூழ்ச்சிக் கூத்துக்களுக்கும் ஒதுங்கி-அல்லது இணைந்து, இடம் கொடுத்து அல்லது இடம் பிடித்துக் கொள்ளும் ஓர் உயிரும் உண்டு என்பதையும் நான் மறந்து விடவில்லை.

அந்த உயிர் கருணாகரன். 

‘தெய்வப் பரணி’ என்று ஏற்றிப் போற்றப் பெற்ற ‘கலிங்கத்துப் பரணி’யின் உயிரோட்டத்திற்கு ஓர் அடையாள உருவமாக நிற்கிறான் கருணாகரன். உயிரில் உணர்வு ஏந்தி-உள்ளத்தில் கடமை பூண்டு-பற்றில் பாசம் பிணைத்து-காதலில் கருத்து வைத்துத் திரியும் ஒரு மனிதப் பிண்டம் இந்தக் கருணாகரன். தொடக்கத்தில் நாம் அவனைச் சக்திக்கும் நிலையில், படையில் சேரவும் அனுமதியிழந்து, ஏமாற்றத்தின் முதற்படியில் காலூன்றி நிற்கிறான். சந்தர்ப்பங்கள்தாம் சரித்திரத்தை வாழ வைக்கின்றன. இதற்குக் கருணாகரனே உதாரணம். தன் உயிரைத் திரணமாக மதித்து, சோணாட்டின் பட்டமா தேவியின் தாயின் உயிரைத் தெய்வத்திற்கு நிகராக ஒம்பியிராவிட்டால், அவனுக்கு அந்த ஏரியில் குதிக்கத் தெம்பு பிறந்திருக்காது! “என் வளர்ப்புமகன் கருணாகரனும், பிறப்பு மகன் விக்கிரமனும் கருத்தொருமித்து, வள்ளுவப் பெருந்தகையார் கண்ட நட்பிலக்கணமாக என்று வாழ்கிறார்களோ, அன்றுதான் கலிங்கப்போர் நிகழவேண்டும்!...‘காலத்தால் நிகழ்ந்த போர்க்களம் இது ஒன்றே’ என்று தமிழ்மக்கள் பெருமைப்படுவர்!...தில்லைச் சிற்றம்பல நாதர் அருளால் கலிங்கப்போர் வெற்றியாகவே முடியும்...அந்த வெற்றிக்குப் பிறகு...?” என்று முடிக்காமல் தயங்கிய தேவியின் சொற்களைச் சக்கரவர்த்தி முடிக்கும் காரணமாய்ச் சொல்லுகின்றார்: ‘கருணாகரனுக்குப் பட்டமும் பதவிகளும் வழங்கும்போது நம்முடைய செல்வக்குமரி அம்மங்கையையும் ஒப்படைக்க வேண்டும். அப்படித்தானே பட்டமானதேவி?” என்று கூறிச் சிரிக்கிறார்.

மதுராந்தி தேவியார்க்குத் தன் மனத்தவம் பலித்ததாக உள்ள ஓர் உள்ள மகிழ்வு உண்டாகிறது. 

சரித்திரம் என்பது காலத்தின் முத்திரைப் பதிவுத் தொகுப்பு. நவீனம் என்பது சமுதாயத்திற்காகப் பரிந்து பேச முயலும் கற்பனை மனத்தின் குரல் பதிவு. வரலாறும் புதினமும் ஒன்று சேரும்போது, சரித்திரத்தின் பங்கும், நவீனத்தின் கைவரிசையும் விகிதாசார நிர்ப்பந்தந்தில் கூடுதல்-குறைச்சலாகத் தெரியலாம். ஆக, வரலாற்றுப் புதினத்தைப் பொறுத்த அளவில், வரலாறு என்னும் மூக்கணாங் கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டால் தான், நாவல் எனும் தேர் சரளமாக ஓட முடியும்.

‘கலிங்கத்துப் பரணி’யில் வாழ்கிறான் கருணாகரன்.

‘முருகிச் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழன்மடவீர்
செம்பொற் கபாடம் திறமினோ!’

‘கடை திறப்பு’க்குப் பின் ‘களம் பாடியது!’...

காவிய நாயகனும் கருணாகரனைச் சார்ந்தோடும் கதையில்தான் சுவை இருக்கிறது.

கி. பி. 1070. குலோத்துங்கர் பொன்னி சூழ் சோழ வள நாட்டின் தலைவரானர்.

கலிங்கன் அனந்தவர்மன் தவறாமல் கப்பம் கட்டி வந்தான். இருமுறை மறுத்துவிட்டான். பரணிக்கு அமைந்த கரு இங்கேயும் தொடர்கிறது. காலதேவப் புலவர், தம்மை இகழ்ந்த கலிங்கவேந்தனுக்குப் பாடம் கற்பிக்க விழைந்தார். அவரது விழைவும் அறிஞர் தம்பிரானின் ஆத்திரமும் தேவியாரின் மனக்கனவும் முக்கூட்டு ஒப்பந்தம் அமைக்கின்றன. கருணாகரனை ஏவுகின்றார் குலோத்துங்கனர். கலிங்கத்தில் எண்வாய்க் கோட்டை சமைக்கிறான் (கருணாகரனது வாய்மொழியை நம்பி அவ்வளவு சுளுவாக எதிரியின் கூடாரத்தில் அவனுக்கு எப்படி இடம் கிடைத்தது போன்ற குறுக்குக் கேள்விகளை அனுமதிப்பதற்கில்லை.) அருள்மொழி கிடைக்கிறாள். பூபதியின் ஓலை மாற்று விளையாட்டுக்குப் பிறகு, கருணாகரன் தப்புகின்றான் அருள்மொழி தானே திறைப்பொருளாகி இசைமன்னனிடம் வருகிறாள். அவரது இசையாகிறாள். மீண்டும் சூழ்ச்சிகள். புனைவடிவங்களும், சுரங்கப் பாதைகளும் இருட்டில் மறையும் கரிய உருவங்களும் ஏராளம்...! கடைசியில், செம்பியர் செம்மலின் கருத்துப்படியே கலிங்கனைத் தேர்க்காலில் கட்டி இழுத்துவருகிறான் கருணாகரன். மாதண்டநாயகருக்குச் செம்பியன் செல்வி கிட்டுகிறாள்.

சோழப் பேரரசருள் முதல் இராஜ இராஜனே (கி. பி. 985-1014) சிறந்த அரசியல் பேரறிஞனாகத் திகழ்ந்தான். இக்கால அரசியலுக்குப் பொருந்தியும் உயர்ந்தும் விளங்குகின்ற வகையில் அவன் அரசியல் மேதையாகத் திகழ்ந்தான் என்பதற்கு திரு மா. இராச மாணிக்கனார், திரு பண்டாரத்தார் ஆகியோரின் ஆராய்ச்சிகள் சான்று பகருகின்றன. அவனது வாழ்வும் ஆட்சியுமே சோழமண்டலத்திற்கு வாய்த்த ஒரு பொற்காலமாகும். அவனது ஆட்சித் திறன், அவனுக்குப் பின்னர் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள்வரை ஆண்ட சோழர்களுக்கு அடித்தளமாக அமைந்திருந்ததென்பதையும் திரு. சாஸ்திரியார் அழுத்தமாய்க் கூறியுள்ளார்.

இராஜ ராஜ சோழன். அவனுக்குப் பின், முதலாம் இராஜேந்திரன் (1013-104). இவன் வடவேந்தர்களை முறியடித்து, கங்கை ஆறு வரை சென்று போர்த் திறன் விளக்கி, கங்கை கொண்டு மீண்டும் அமைத்த நகரம் தான் கங்கை கொண்ட சோழபுரம். இதுவே முதல் குலோத்துங்கனுக்கு இதயத் துடிப்பு.

‘செம்பியன் செல்வி’யைப் படிக்கும் பேறு பெற்றவர்கள் இரண்டொரு நிமிஷங்கள்வரை மயக்கம் போட்டு விழாமல் இருப்பார்களென்று நம்புகிறேன்.

காரணம் இதுவே:

இந்த வரலாற்றுப் புதினத்திற்கு நான் தேர்ந்தெடுக்கும் கதாநாயகன் கருணாகரத் தொண்டைமான் என்று தானே நீங்கள் கருதுகிறீர்கள்?

அப்படித்தான் ஆசிரியர் கருதுகிறார்.

கருணாகரத் தொண்டைமானைக் கதைநாயகனாகக் கொள்வதற்கு உரிய காரணங்கள் யாவை? சோழ மாதாவைக் காப்பாற்றினானே, அதற்காக அவன் நாயகனாகி விடமுடியுமா? அது, அவனது மனிதத் தன்மையில் எழுந்த கடமை சூழ்ச்சியின் சூத்திரக் கயிறாக இயக்கப்பட்டு நாடகமாடினனே அவன்?-சோழ மண்ணில் பிறந்த நாட்டுப்பற்றின் தூண்டுதல் அது. இளவரசியின் இதயத்தில் அவன் இடம்பெற்றானே?-முன்னைப்பழ வினையின் பின்னே வழிப்பயன் ஆயிற்றே அது?

செம்பியர்க் கோமான் ‘விரிபுகழ்க் காவிரி நாட்டு’க் கோமான் அல்லவா? அவரைத்தான் இந் நவீனத்தின் நாயகனாக நான் கருதுகிறேன். ‘கலிங்கம் எறிந்த கருணாகரன்றன் களப்போர்’ நிகழ்ச்சிகளுக்கு வழிவகை அமைத்துக் கொடுக்கிறாரே, அதற்காகவா?-அல்ல!... ‘உறுபகை ஊக்கம் அழிப்பது அரண்’ என்ற தமிழ்மறை வரிக்கு வாழ்வு தர எண்ணி, அங்கே கோட்டை அமைக்கும் முறையையும் சொல்லிக் கொடுத்துச் சாகசம் பல புரிந்தாரே, அதற்காகவா?-அல்ல!

‘போக்கிரி ஒருவனின் கடைசிப் பட்சமான அடைக்கலம் அரசியலாகும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஓலை, இலச்சினை, போர்க்கொடி, தாடி மீசை, சிறை, கள்ளவிழி கள்ளவழி-இப்படியான உபாயங்கள் ராஜாராணிக் கதைகளுக்குச் சொந்தம். இதற்கு எந்தப் பட்டயமும் கல்வெட்டும், மெய்க்கீர்த்தியும் உரிமை தரவேண்டு மென்பது இல்லை! -

‘ஆனால், என் இலக்கியத்திறனாய்வுக் கண்னோட்டத்தில் குலோத்துங்கன் கதைத்தலைவனாக ‘இலக்கிய அந்தஸ்து’ பெறுகிறானென்றால், அதற்கு அவனது அழுத்தமான குணச்சித்திரமே காரணமாகும்.

“A historical romance must engender reflection and provoke thought!...The mental pictures it create must be indelible”-சரித்திரப் பேராசிரியர் திரு கே. வி. ரங்கசாமி ஐயங்கார் ‘சிவகாமியின் சபத’த்தில் வரம்பறுத்துள்ள குறிப்புக்கள் இவை.

ஓர் அற்புதமான கட்டம்:

கலிங்கன் அனந்தவர்மனின் திறைப்பொருள் செலுத்தும் பணியை பூவை ஒருத்தி ஏற்று வந்து நிற்கிறாள். பிறகு “புதுமையான முறையில் என்னைத் திறைப்பொருளாக அனுப்பி வைத்திருக்கிறார், புவனேஸ்வரா!” என்கிறாள்,

திறைப் பொருளுக்குத் தனித்த பெருமை ஏதேனும் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது இயல்பு. மன்னர் சோதனை செய்கிறார் சோதனையில் வெற்றியடைகிறாள் அந்தப்பாவை. 

ஏழிசையின் சங்கமத் தூண்டுதலினால் மெய்ம்மறந்த இசைமன்னன், “திரிபுவனேசுவரா, தாங்கள்தான் என் குருநாதர்! தாங்கள் வகுத்த இசையைப் பயின்றே நான் வாணி ஆனேன்!” என்று கூறியதைக் கேட்டு மேலும் பூரிப்படைகிறார். கருணாகரன்-அருள்மொழி காதலைப் பற்றி அறிவார் அவர். ஆனால் அவர்களது காதல் வளர்ந்தால், கருணாகரனால் பூர்த்திபெறவேண்டிய தேவியின் மனத்தேர் அச்சுமுறிந்து போய்விடுமென்பதையும் அறிவார் அவர். அது மட்டுமல்ல; தம் ராணியின் மனக் குறிக்கோளின்படி, கருணாகரனுக்கு உரியவள் அம்மங்கை என்பதையும் அவர் மறந்திட மாட்டார்! மேலும், வந்தவள் ‘சூது’ என்பதும் அவர் அறியாப் புதிரன்று. இருந்தும், அவரே சூதாக மாறி, தம்மையே அவள்பால் இழக்கின்றார். ஏழிசை வல்லபிக்கு இளைய தேவியாகும் அதிர்ஷ்டம் கிடைக்கிறது. அந்த அதிர்ஷ்டத்தின் நல்ல பயன்தானோ என்னவோ, சோழர்பிரான் நாயக பிரானகிறார். தமிழ்ச் சரித்திரப் புதின உலகிற்கு ஒரே ஒரு வழிகாட்டியாகத் திகழும் பொற்புமிகுந்த கல்கி அவர்களின் மாமல்லச் சக்கரவர்த்தி, புலிகேசி, பொன்னியின் செல்வன் ஆகியோரின் குணச்சித்திரப் பிடிப்புக்கு ஈடுகொடுத்து நிற்க குலோத்துங்கனாலும் முடியுமென்பதற்குச் சாட்சியமாக அமைந்துள்ள கட்டமும் இதுவேதான்!

கதைக்குத் தலைவி ஒருத்தி வேண்டும். அந்த வாய்ப்பு இளவரசி அழகிய மணவாளனி அம்மங்கைக்குக் கிடைத்திருக்க வேண்டும். இளவரசியை வைத்துக்கொண்டு. அற்புதங்கள் செய்திருக்கலாம். ஆனால் ஆசிரியர் தவறி விட்டார். பதவி மறந்து, பண்பு அறிந்து காதலிக்க பரிபக்குவம் பெற்ற அம்மங்கையின் ஓவியம் நீர்பட்ட 

மூவர்ணச் சித்திரமாகிவிட்டது. பெரிதாகக் காதல் ரகசியம் பேசுவதாக எண்ணி நான் ஏமாந்துவிட்டேன்! தலைவிப் பதவி மதுராந்தகி தேவியாருக்கே கிடைக்க வேண்டும். “இன்றுமுதல் கருணாகரன் என்னால் தத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மகன்!” என்று கூறும் அந்த ஒரு வாய் மொழியில் வாழ்கிறாள் அந்தத் தாய். தியாகத்தில் பிறந்த தியாகமன்றோ அது!

அருமைமிகு நண்பர் திரு கோவி. மணிசேகரன் சரித்திரத்தில் வாழ்பவர்.

மறைவுச் சூழ்ச்சிகள், தாமாகவே உருப்பெறல் வேண்டும். இங்கே, ஆசிரியர் பக்கத்திற்குப் பக்கம் சொந்தக் குரல் கொடுத்திருக்கிறார்!

முதற் குலோத்துங்கன் சோழமா காவியத்தில் சக்கவர்த்தியாக வாழ்கிறான்; புலவரேறு செயங்கொண்டார் நாக்கினில் அறிஞர் என வாழ்கிறான்; ‘செம்பியன் செல்வி’யில் கடிகமணியாக வாழ்கின்றான்!