ஆறுமுகமான பொருள்/திருமலை முருகன்

விக்கிமூலம் இலிருந்து

திருமலை முருகன்


இன்று தமிழ்நாட்டிலல் கோயில் திருப்பணிகள் ஏராளமாக நடக்கின்றன. சமீபத்தில் மதுரை மீனாக்ஷி கோவிலில் இருபத்தைந்து லக்ஷம் ரூபாய் செலவில் திருப்பணி நடந்தது. குடமுழுக்கும் நடந்தது. அதைப் பற்றியும், அப்பணியில் ஈடுபட்ட பெருமக்களைப் பற்றியும் விரிவாகப் பலர் பேசுகிறார்கள். இந்தத் திருப்பணிக்கே இத்தனை மகத்துவம் என்றால், ஒரு கோயிலையே கட்டியவர்களை கோயிலில் வைத்தே கும்பிடலாம் போல் இருக்கிறது. பல்லவமன்னன், ராஜசிம்மன், காஞ்சியில் கைலாசநாதருக்கு ஒரு கலைக் கோயிலைக் கட்டியிருக்கிறான். தஞ்சையில் ராஜராஜ சோழன் பெரு உடையாருக்கு ஒரு பெரிய கோயிலையே கட்டியிருக்கிறான். பராக்கிரம பாண்டியன் தென்காசியில் காசிவிசுவநாதருக்கு ஒரு கற்கோயிலைக் கட்டியிருக்கிறான். மதுரை மீனாக்ஷி கோயிலின் பெரும் பகுதியைத் திருமலை நாயக்கரே கட்டியிருக்கிறார் என்றெல்லாம் சரித்திர ஏடுகள் பேசுகின்றன. ஆனால் ஒரு கோயிலுக்குத் திருப்பணி செய்ததும் அக்கோயில் நிர்வாகங்கள் எல்லாம் சரிவர நடைபெற நூற்றைம்பது கோட்டை விரைப்பாடும், தோப்பும் நிலமும் தேடி வைத்ததும் ஒரு சாதாரணப் பெண் பிள்ளை என்று அறிகிற போது நாம் அப்படியே அசந்து விடுகிறோம். அப்படி ஒரு திருப்பணி செய்தவர் தாம் சிவகாமி ஆத்தாள் என்னும் மறவர் குலப்பெண். அத்திருப்பணி நடந்த தலம் தான் செங்கோட்டையை அடுத்த திருமலை முருகன் கோயில்.

இனி இக்கோயில் உருவான வரலாற்றையும் அங்கு திருமலை முருகன் கோயில் கொண்ட திறத்தையும் அக்கோயிலுக்குச் சிவகாமி ஆத்தாள் செய்த சேவையையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம் தானே.

திருமலை ஒரு சிறிய மலைதான். அந்த மலையிலே ஒரு சுனை இருக்கிறது. அதனைப் பூஞ்சுனை என்கின்றனர். அச்சுனையின் கரையிலே ஒரு புளிய மரம் நிற்கிறது. அதனையடுத்து சப்தகன்னிமார் கோயில் ஒன்றும் இருக்கிறது. அக்கோயில் அர்ச்சகர் ஒருவர் பூசைகளை முடித்து விட்டுப் புளிய மரத்தடியில் வந்து இளைப்பாறுகிறார். அங்கு தலையைச் சாய்த்தவர் துங்கிவிடுகிறார். இவரது கனவில் முருகன் தோன்றி இம்மலைக்கு வடபக்கம் ஓடும் அனுமன் நதிக்கரையில் கோட்டை மேடு என்ற இடத்தில் மண்ணால் புதையுண்டு கிடக்கிறோம். நம்மை எடுத்துவந்து மலை மீது பிரதிஷ்டை பண்ணினால் உங்கள் அரசனது பிணிதீரும் என்கிறார்கள் அதனையே உத்தண்ட வேலாயுதம், ஆதிமூல நிலையம் என்று இன்றும் அழைக்கிறார்கள்.

பல வருஷங்கள் கழிகின்றன. நெடுவேலி என்ற கிராமத்தில் மறவர் குலத்தில் ஒரு பெண் பிறக்கிறாள். அவளுக்குச் சிவகாமி என்று பெயர் சூட்டப்படுகிறது. நாளும் வளர்ந்து மங்கைப்பருவம் அடைகிறாள் அவளை கங்கை முத்துத்தேவர் என்பவர் மணக்கிறார். அவளுக்கோ, முருகனிடத்தில் அபார பக்தி. ஆதலால் துறவறம் பூண்டு செவ்விய நெறியிலே வாழ்கிறாள். தன் கணவன் இறந்த பின் தன் சொத்துக்கள் அத்தனையும் திருமலை முருகனுக்கே சாஸனம் செய்து கொடுத்து விடுகிறாள் அவள்தான் அக்கோயிலைக் கட்ட முனைந்திருக்கிறாள். மலையடிவாரத்திலுள்ள வண்டாடும் பொட்டல் என்ற இடத்திலே ஒரு சத்திரம் அமைத்து, அதில் இருந்து மலைக்கு வருபவர்களுக்கு ஆகாரமும், நீர் மோரும் கொடுத்திருக்கிறாள். மலைமேல் செல்கிறவர்கள் கையில் ஆளுக்கு ஒரு செங்கல்லும் ஒரு ஓலைப் பெட்டியில் கொஞ்சம் சுண்ணாம்பும் கொடுத்து மலை மீது எடுத்துச் செல்லச் சொல்லியிருக்கிறாள். இந்த விதமாகவே செங்கல்லும், சுண்ணாம்பும் மலை மீது வந்து குவிந்து கோயில் உருவாகியிருக்கிறது. (இன்று மலைமேல் நடக்கும் திருப்பணிக்குச் செங்கல்லை ஆண்களும் பெண்களும் சுமந்து செல்கிறார்கள். நூறு செங்கல் கொண்டு செல்ல கிட்டத்தட்ட ஆறு தடவை மலை ஏற வேண்டியிருக்கிறது அதற்குக் கூலி ரூ.1.25 என்கிறார்கள் (ஆம் அன்று மதுரையில் உள்ள சொக்கலிங்கம் பிட்டுக்கு மண்சுமந்தார் இன்றோ நம் மக்கள் துட்டுக்கு மண் சுமக்கிறார்க்ள்) இப்படித்தான் திருமலைக்குமரன் கோயில் சிவகாமி ஆத்தாளால்" முதலில் உருவாகியிருக்கிறது. அவள் கனவில் முருகன் தோன்றி, தனக்குச் சேர வேண்டிய சொத்தும் அதற்குரிய சாஸனமும் எங்கே புதைந்து கிடக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறான். அதைக் கண்டெடுத்து அந்தச் சொத்தை வைத்திருந்தவருடன் வழக்காடி கிட்டத்தட்ட 150 கோட்டை நன்செய் நிலங்களையும், தோப்பு முதலியவைகளையும் கோயிலுக்குச் சேர்த்திருக்கிறாள். இந்த அம்மையார் இப்படி செய்த கைங்கரியத்தினால் தான் திருமலை முருகன், இம்மலை மீது நிலைபெற்றிருக்கிறான் என்று அறிகிறபோது நாம் பூரித்து விடுகிறோம்.

இந்த திருமலை முருகனைக்காண நாம் நேரே செங்கோட்டை ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கட் எடுக்க வேண்டும். அங்கிருந்து ஐந்து மைல் வண்டிவைத்துக் கொண்டோ, நடந்தோ செல்ல வேணும். அவகாசம் இருந்தால் காலையிலும் மாலையிலும் செல்லும் பஸ்ஸுக்காக காத்து நிற்கவேணும், தென்காசியில் இறங்கினாலும், குற்றாலத்தில் தங்கி இருந்தாலும், அங்கிருந்து காலையிலும் மாலையிலும் செல்லும் பஸ்களிலும் செல்லலாம். இல்லை டாக்சி வைத்துக்கொண்டு செல்லலாம். சொந்தக் கார் உடையவர்கள் என்றால் ஜாம்ஜாம் என்று காரிலேயே சென்று மலையடிவாரத்தில் இறங்கலாம். அதன் பின் மலை ஏறவேணும். மலையடிவாரத்தில் ஒரு பெரிய மண்டபம். அதில் ஒரு கோயில் அங்கு இருப்பவர்தான் வல்லபை கணபதி. எல்லாம் வல்ல சக்தியையே தன் தொடை மீது தூக்கி வைத்துக் கொண்டிருப்பார் அவர். அவரைக் கண்டதும் நமக்கு வடநாட்டு ஞாபகம் தான் வரும் வடநாட்டில் கார்த்திகேயன் கட்டைப்பிரமச்சாரி. கணபதி தான், சித்தி புத்தி என்னும் இருவரை மணந்தவர். அதே போல, திருமலையிலும் கணபதிதான் வல்லபையுடன் இருக்கிறார். அவர் தம்பி திருமலைமுருகனோ தனித்தே நிற்கிறான். வல்லபை கணபதியை வணங்கி விட்டு மலைமேல் ஏறவேணும் முன்னர் அமைந்திருந்த பாதையில் 544 படிகளே இருந்தன. சில பகுதிகள் செங்குத்தாக ஏற வேண்டியிருக்கும் ஆனால் இன்றோ ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் கட்டிவைத்திருக்கிறார்கள். இப்போது மொத்தம் 615 படிகள் இருக்கின்றன. பழநிமலை ஏறும் துரத்தில் பாதி தான். திருத்தணிமலை ஏறுவதுபோல் இரண்டு பங்கு ஏறவேணும். ஆனால் கொஞ்சம்சிரமப்பட்டு பழைய படிக்கட்டுகளில் ஏறினால், மலைமேல் உள்ள உச்சிப் பிள்ளையாரையும் வணங்கிவிட்டு திருமலைமுருகனைவணங்க கோயிலுள் செல்லலாம். புதிய பாதையில் சென்றால் நேரே கோயில் வாயிலுக்கே வந்து சேர்ந்துவிடலாம். அப்படிச் சுற்றினால் கோயிலின் கன்னி மூலையில்தான் ஆதிப்புளிய மரம். அதன் அடியில் உத்தண்ட வேலாயுதமும் ஆதிமூல நிலையமும் இருக்கும். அங்கு நம் வணக்கத்தைச் செலுத்திவிட்டு அதற்கு மேற்புறத்திலுள்ள பூஞ்சுனையையும் பார்த்துவிட்டு, கோயிலைச் சுற்றிக் கொண்டு திரும்பவும் கோயில் வாயிலுக்கே வந்து சேரலாம். பிரகாரம் முழுவதும் நல்ல சிமெண்ட் தளம் போட்டு வைத்திருக்கிறார்கள். இனி கோயிலுள் நுழையலாம். இங்குள்ள கோயில் அமைப்பு திருச்செந்தூர் செந்திலாண்டவன் சந்நிதியைப் போலத்தான். திருமலை முருகன் கிழக்கு நோக்கியும் சண்முகன் தெற்கு நோக்கியும் நிற்கிறார்கள். ஆதலால் முதலில் நாம் கோயிலுள் சண்முக விலாசத்தின் வழியாகவே நுழைவோம். அங்குதான் வசந்த மண்டபம் பெரிய அளவில் இருக்கிறது. அங்கு ஒரு துணின் உச்சியில் குழந்தை முருகனை அன்னை பார்வதி தன் மடியில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிலை இருக்கும். அதற்கு எதிர்ப்பக்கத்தில் உயரமான இடத்திலே சிவகாமி ஆத்தாளின் சிலையும் வைத்திருக்கிறார்கள். அவளுக்கு அருள் புரியவே குழந்தை முருகன் அவசரமாக அன்னை மடியிலிருந்து இறங்க முயல்கின்றானோ என்னவோ. இருவரையும் வணங்கிவிட்டே உள்ளே சென்றால் உள் பிரகாரத்திற்கு வருவோம். அதையும் கடந்து உள்ளே சென்றால் ஒரே சமயத்தில் திருமலை முருகனையும். வள்ளி தெய்வயானை சகிதம் மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கும் சண்முகனையும் தரிசிக்கலாம்.


திருமலை முருகன் கம்பீரமான வடிவினன். சுமார் நான்கு அடி உயரத்தில் நல்ல சிலாவிக்கிரகமாக நிற்கிறான். அவன் தனது வலது தோளில் ஒரு செப்புவேலையும் ஏந்தியிருக்கிறான். கருணை ததும்பும் திருமுகம். அதனால் தானே அவன் சிறந்த வரப்பிரசாதியுமாக இருக்கிறான். சண்முகன் மிகச் சிறிய வடிவினன். அவனுக்கு அவன் துணைவியருக்கும் ஆடைகள் உடுத்து அவர்கள் உருவம் முழுவதையுமே மறைத்து வைத்திருப்பார்கள் அர்க்சகர்கள். அவன் மஞ்சம் மிக்க சோபையோடு விளங்கும். முருகன் சந்நிதியில் விழுந்து வணங்கி எழுந்தால் அர்ச்சகர் விபூதிப்பிரசாதத்தை இலையில் வைத்தே கொடுப்பர். இப்படி இலை விபூதி கொடுப்பதற்கு என்றே சொக்கம் பட்டி ஜமீன்தாராயிருந்த ஒருவர் 12 கோட்டை நன்செய் நிலங்களை மானியமாக விட்டிருக்கிறாராம். முருகனுக்குத் தினசரி எட்டுக்கால பூசை நடக்கிறது. ஒவ்வொரு பூசைக்கும் தனித்தனி நைவேத்தியங்கள் உண்டு. பணம் கொடுத்து நைவேத்தியங்களை அருந்தி நம் வயிற்றுப் பசியையும் தீர்த்துக் கொள்ளலாம். ஆத்மப்பசிதான் முருகனை வணங்கி எழுந்ததுமே தீர்ந்திருக்குமே.

முருகனையும் சண்முகனையும் வணங்கிவிட்டு, உட்பிரகாரத்தைச் சுற்றினால் ஈசான்யமூலையில் ஒரு கம்பீரமான வடிவம் நிற்கும். எட்ட இருந்து பார்த்தால் அதுவும் முருகனே என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த வடிவம் சிவனது பைரவமூர்த்தம் என்பார்கள் அதற்குரிய கணங்கள் அங்கிருக்க மாட்டா. அந்த பைரவன் மிக்க வரசித்தி உடையவராம். அதனால் அவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகிறார்கள் பக்தர்கள். மேலும் அவரே அக்கோயிலின் பிரதான நிர்வாகி இரவில் வாயில்களை எல்லாம் பூட்டி சாவியை அவர் முன்பு கொண்டுபோய் வைத்து விடுவார்கள். அதன் பின் கோயிலையும் அங்குள்ள சொத்துக்களையும் கண்காணிப்பது அவருடைய பொறுப்பு. கோயிலைவிட்டு வெளியே வரும் போது ஒரு சிறு மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கும் திருமலைக்குமரனின் செப்புப் படிமத்தையும் பார்த்துவிட வேண்டும். ஒன்றரை அடி உயரமே உள்ள வடிவம் தான் என்றாலும், மிக்க அழகான வடிவம். இங்கு கோயிலுக்கு ராஜ கோபுரம் கிடையாது. முருகனும் பால முருகன் ஆனதால் வள்ளி தெய்வானை சந்நிதிகளும் கிடையாது.

திருமலை முருகன் நல்ல இலக்கிய ரஸிகன் என்று தெரிகிறது. அவனைத் தனது திருப்புகழ் பாக்களால் அருணகிரியார் பாடி இருக்கிறார்.

எனது உயிர்க்கு உயிர் ஒத்த நவநீதா
சிவமுகப் பரமற்கு இளையோனே
தினைவனத் தெரிவைக்கு உரியோனே
திருமலைக் குமரப் பெருமானே

என்பது பாடல். எனக்கு அருணகிரியார் பேரில் பொல்லாத கோபம் வருகிறது. அவன் வள்ளியைக் கண்ணெடுத்தும் பாராத இள வயதினன் என்றாலும் அவனுக்க அவளே உரியவள் என்று கோடி காட்டுகிறார். சரி, இது இருக்கட்டும். மங்கைப் பருவத்தின் அழகெல்லாம் திரண்டிருக்கும் வள்ளியை தெரிவை என்று சொல்வானேன்? இன்னும் திருமலை முருகன் பிள்ளைத் தமிழுக்கு உரியவனாகவும் இருந்திருக்கிறான். குறவஞ்சி நொண்டி நாடகம், பள்ளு, காதல் பிரபந்தங்களும் இந்த முருகனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்தே பாடப்பட்டிருக்கின்றன.


ஐவர் சகாயன் மருகன்
திருமலை ஆறுமுகத்
தெய்வ சகாய முண்டே
வருமோ கொடுந் தீவினையே

என்று பெரியவன் கவிராயர் பள்ளில் பாடியிருக்கிறார். அத்தகைய உறுதியான உள்ளத்தை அந்த முருகன் அளிக்கக் கூடியவன் என்பதற்காகவே ஒரு நடை அவன் சந்நிதிக்குச் செல்லலாம்.

ஒன்று சொல்லமறந்து விட்டேனே! எங்கள் குடும்பத்தின் குலகுருவாய் விளங்கியவர் திருப்புகழ் சாமி என்னும் வண்ணச்சரபம் முருகதாச சுவாமிகள். அவர் திருமலை முருகனிடத்து ஆராத காதல் உடையவர். கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன் திருமலையில் ஏறியிருக்கிறார். திருமலை முருகனை வணங்கி இருக்கிறார். மலைமீதிருந்தே கீழே உடலை உருட்டியிருக்கிறார். குமரனும் அந்து உடலுக்கு யாதொரு தீங்கும் நேரிடாவண்ணம் காத்திருக்கிறார். இதை அவரே பாடுகிறார்.


வட திசையில் தலை வைத்து
மறலித்திசைக்கால் நீட்டி
உடலை அந்தத் திரு மலையின்
உச்சியில் நின்று உருட்டி விட்டேன்
விடலை இடும் தேங்காய் போல்
வேறு பட்டுச் சிதறாமல்
மட மடெனக் கொண்டு ஆங்கோர்
மண் தரையில் விட்டதுவே

இந்தப் பாடலைப் படித்துக் கொண்டே திருமலையினின்றும் இறங்கினேன் நான். எனக்கு என் உடலை உருட்ட தைரியமில்லை. ஆனால் அங்கு அடித்த காற்றில் நான் அணிந்திருந்த முக்குக் கண்ணாடி கழன்று படிகளில் உருண்டது. சரி கண்ணாடி உடைந்திருக்கும் பிரேமாவது மிஞ்சட்டும் என்று ஆள் அனுப்பி உருண்ட கண்ணாடியைத் தேடி எடுத்துவரச் சொன்னேன். என்ன அதிசயம்! கண்ணாடி உடைந்து சிதறாமல் அப்படியே இருந்தது. அந்தக் கண்ணாடியை அணிந்து கொள்வதில் ஓர் ஆனந்தம் அடைகிறேன். என் குருநாதர் ஆசியையும் திருமலை முருகன் அருளையும் நினைந்து நினைந்து மகிழ்கின்றேன் வையத்தில் வாழ்வதற்கு இது ஒன்று போதாதா என்ன!