உத்தரகாண்டம்/28

விக்கிமூலம் இலிருந்து

28

வளுக்கு நல்ல நினைவு வரும் போது, அவள் வண்டியில் போய்க் கொண்டிருக்கிறாள். அவளை வண்டியில் ஏற்றியது, மங்கலாக நினைவில் நிழலாடுகிறது. ‘ஏம்பா, என்னிய எங்கே கொண்டு போறீங்க?...’ அவள் கேள்விக்குப் பதில் இல்லை. முன்னே யாரோ வண்டி ஓட்டுகிறான். கார்... அவள் தலையை யாரோ பற்றிச் சாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். யார்...? யாரோ ஒரு பெண்...

அவள் உட்கார முயலுகிறாள். ஏதோ இறுக்கிக் கட்டியிருந்த கட்டுகள் எல்லாம் அவிழ்ந்து விட்டாற்போல் உடல் வெலவெலத்துத் துவளுகிறது... முருகா...! இது என்ன பயணம்?...

கண்களை மூடி மூடித் திறக்கிறாள்.

“அப்பவே புள்ள வந்து கூட்டபோது மருவாதியாப் போயிருக்கலாம்ல! இப்பபாரு. காலம வந்து பாக்குற. கதவு துறக்கர உள்ள பூட்டிருக்கே. பின்னால வந்து, குதிச்சி, பாத்தா வுழுந்து கெடக்குது. வயிசானாலும் வீம்புல கொறவில்ல...”

ரங்கனின் குரல்தான்.

ஆக, முருகனே இவளை அப்புறப்படுத்துகிறான்.

எங்கே கொண்டு போகிறான் ?

குடிலில், அந்த குண்டு, சப்பை மூக்கியின் ஆளுகைக்கா?

இல்லை... மரகதம் கடித்துத் துப்பும் வீட்டுக்குள்ளா?

“நான் மாபாவி... மாபாவி. பிரும்மசரியம், ஒழுக்கம் எல்லாம் பொய்” என்று சுப்பய்யாவின் குரல் மின்னுகிறது.

“நான் பாவி, மன்னிக்கமாட்டேன்னு சொன்னேன்; நீ மன்னிக்க வேண்டாம்; ஆனால் உனக்கும் மன்னிப்புக் கிடையாதுன்னு போயிட்டார் தாயம்மா!”

அநு அழுகிறாள்.

இவள் எங்கே கொண்டு செல்லப்படுகிறாள்?

உலகத்தில் என்ன அதிசயம் என்று குளத்தில் இருந்த யட்சன் கேட்ட கேள்விக்கு தருமபுத்திரன் என்ன சொன்னான்? நாள் தோறும் உயிர்கள் மடிவதை மனிதன் பார்க்கிறான். ஆனால் தான் வாழ்வதைப் பற்றி கனவுகளையும் கற்பனைகளையும் சமைத்துக் கொள்வதுதான் அதிசயம் என்று தானே சொன்னார்?

அப்படி இவள் கண்ணமங்கலக்கனவில் நின்றாள். ஆறு, கோயில், நல்லநீர், மனித சிநேகம், மாசுபடாத சூழல்... ஏதோ ஒரு வாயிலில் இவள் வண்டி வருகிறது. வண்டியிலிருந்து இறங்கி அந்தப் பெண்ணும் ரங்கனும் வீட்டுப்படி ஏற்றிக் கூட்டிச் செல்கின்றனர். இவளால் நிமிர்ந்து பார்க்கக் கூட முடியவில்லை.

அங்கே ஒரு கூடத்தில், நாற்காலியில் உட்கார வைக்கிறார்கள்.

வீட்டில் யாரும் இருப்பதாகக் குரல் கேட்கவில்லை. ஒரு சாப்பாட்டு மேசை; அதைச் சுற்றிய நாற்காலிகளில் ஒன்றில்தான் அவளை உட்காரவைத்திருக்கிறார்கள். தலை தரிக்கவில்லை. மேசை மீது கவிழ்ந்து கொள்கிறாள்.

அப்போது தான் பார்க்கிறாள். அவள் சேலை...யில்லை, உடுத்தியிருப்பது. நீளமாக கவுன்... நைட்டி, ‘அது’ போட்டிருக்கிறாள். ‘முருகா ?’ இதென்ன கோலம்? இதையா இவளுக்கு மாட்டிவிட்டார்கள்?

“ஏம்மா? நீ ரங்கன் பொஞ்சாதி மருதுதானே? என் சீலய ஏண்டி எடுத்திட்டு இத்தை மாட்டினீங்க? இதென்னடி கோலம், இந்த வயசில எனக்கு?”

“கோச்சுக்காத தாயி, நீ சீலைய நனச்சிட்டுத் தொப்பயாக் கெடந்த, ஒடனே அது போன் போட்டுச் சொல்லிட்டு எனக்கு ஆளனுப்பிச்சிது. ஒடம்பு நாத்தமெடுக்காது?... இது புதுசுதா... என் தங்கச்சி வச்சிருந்தா. ஆபத்துக்கு ஒண்ணில்லேன்னு தூக்கி மாட்டின...” சிறிது நேரத்தில் ரங்கன் இன்னொரு பணியாளனுடன் வருகிறான்.

“நீங்க போன் போட்டப்பவே அம்மா ரூம் சுத்தமாக்கச் சொல்லிட்டாங்க...”

அவளை இருவருமாக நடத்திக் கூட்டிச் செல்கின்றனர்.

கீழே பளிங்காகத் தரை. ஒரு வாயிலில் நுழைந்து ஒழுங்கை போன்ற பகுதி கடந்து ஓர் அறைக்கு வருகிறார்கள்.

அந்த அறையில் ஒரு கட்டிலில், மெத்தை-விரிப்பு-தலையணை அதில் உட்கார்த்துகிறார்கள்.

“படுத்துக்கம்மா? உம்மவன் வூடுதா. அவுரு டில்லிக்குப் போயிருக்கிறாரு. சந்தோசமா இரு...!”

அவள் பதிலை எதிர்பாராமலே ரங்கனும் அவன் சம்சாரமும் போகிறார்கள். அவளுக்குத் துயரம் கரையும் கண்ணீர்கூட வரவில்லை.

‘என் ஆயுசில நான் கட்டில் மெத்தைன்னு சாயவில்லை. இப்ப, இதெல்லாமும் தண்டனையா, முருகா?’

நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? கருப்பு, அசத்தியம், பொய்யின்னு துணை போக மாட்டேன்னு சொன்னது தப்பா? முருகா, என்னைக் கீழே தள்ளினியே, அப்பிடியே சாகவுட்டிருக்கக் கூடாதா?...

“ஆ... படுத்துக்குங்க பெரியம்மா! அப்புறம் நாங்கல்லாம் எப்படிப் பிழைக்கிறது?”

‘வெள்ளையில் சிறு பூப்போட்ட சல்வார் கமிஸ் அணிந்த ஓர் அழகான பெண் கழுத்தில் ரப்பர் மாலையுடன் அவளைப் படுக்க வைக்கிறாள்.

பன்னிர்ப்பூப்போல முகம். சிரிப்பு. பளீர்ச்சாயம் இல்லை. ஒரு மென்மையான மணம்; அவள் தொட்டபோது உணர்வே இதமாக இருக்கிறது.

காதுகளில் அதை மாட்டிக் கொண்டு, அவளும் நாற்காலியில் அமர்ந்து அவள் நெஞ்சை, முதுகைப் பரிசோதிக்கிறாள். கண்களை நீக்கிப் பார்க்கிறாள். இரத்த அழுத்தம் பார்க்கிறாள்.

“பெரிம்மா, நீங்க சரியாவே சாப்பிட மாட்டீங்களோ? ஒடம்புல ரத்தமே இல்ல...?”

“ஏன் சாப்புடாம?... நேத்துக்கூட அநு புள்ளங்களோட, இங்க புள்ள கேக் வாங்கியாந்து குடுத்தா...”

அவளுக்கு அதெல்லாம் புரிந்திருக்காது.

மென்மையாகச் சிரிக்கிறாள்.

“உங்க உடம்புக்கு ஒண்ணில்ல. நல்லா சாப்புடனும்; ரெஸ்ட் எடுக்கணும், தூங்கணும். ஒரு நாலஞ்சு நாள்ள சரியாயிடும். பிறகு உங்க அநு, புள்ளங்க, சிங்கா, அதென்ன சிங்கு ?... அங்கே போயி ஜாலியா இருக்கலாம். இப்ப உங்களுக்கு ஒரு பொண்ணு சாப்பாடு கொண்டு வரும். சாப்பிடுங்க. எந்திரிச்சி நடக்கக் கூடாது. மாத்திரை கொண்டாந்து குடுப்பேன். போட்டுட்டு நல்லா தூங்குவீங்க. எதுவானும் வோணுன்ன, இத, மணி கொண்டாந்து தலப்பக்கம் ஸ்டூல்ல வைக்கிறேன். அடியுங்க. கன்னிம்மா ஒரு பொண்ணு வருவா இப்ப, அவ உங்களுக்கு எது வோணுன்னாலும் செய்வா. வரட்டுமா?...”

மென்மையாகச் சிரித்து விட்டுக் கதவை மூடிக் கொண்டு போகிறாள்.

யார் இந்தப் பெண் ? சந்திரியின் மகள்... பேரென்னவோ சொன்னாள். அர்ச்சனாவோ, என்னவோ, அவளில்லை இது... ஒரு கால் இது மரகதத்தின் மகளா? ரஞ்சிதத்தின் மருமகளா?... அந்தக் கொடியில் இப்பிடி ஒரு மலரா?... ஆனால் நஞ்சை உள்ளே வைத்திருக்கும் பூக்கூட அழகாக இருக்கிறது. இல்லை. எல்லாப் பூக்களும் தியாகம் செய்யத்தானே மண்ணில் உதிக்கின்றன?

சற்றைக்கெல்லாம் தட்டில் சாப்பாட்டுடன் கன்னியம்மா என்ற பெண்ணைக் கூட்டிக் கொண்டு, டாக்டர் பெண் வருகிறாள். நீர்ப்பாத்திரத்தை ஓரமாக இருந்த மேசை மீது வைக்கிறாள்.

“இதபாருங்க, இவதான் கன்னிம்மா. உங்களுக்கு என்ன தேவைப்படுதோ அத இவ கிட்டச் சொல்லுங்க. உங்களுக்கு இவ ஒரு பேத்தி...” அழுந்த வாரிய பின்னலும், ஒரு பூப் போட்ட மஞ்சள் வாயில் சேலையுமாக பளிச்சென்று இருக்கும் பெண், கை குவிக்கிறாள்.

“இவங்க யாரு தெரிமில்ல? எம்.பி. அய்யாக்கு அம்மா. பெரியவங்கள இப்படிக் கும்பிட்டா போதாது. நல்லா பாத்துக்கணும். சீக்கிரம் நல்ல படியா உடம்ப குணப்படுத்தணும்.”

“சரிங்க டாக்டரம்மா!”

“முதல்ல இவங்கள மொள்ள பாத்ரூமுக்குப் போகணுன்னா கூட்டிட்டுப்போ. முகத்தைத் துடைச்சிவிட்டு, சாப்பாடு குடு. பிறகு, இதா, இந்த மாத்திரை வச்சிருக்கிறேன், மூணு மாத்திரை. குடுக்கணும்...”

“சரிங்க டாக்டரம்மா.”

“அப்ப, நா வரேன் பெரிம்மா? மாத்திரை சாப்பிட்டுட்டு நல்லாத் தூங்குங்க...”

கன்னத்தைச் செல்லமாகத் தட்டிவிட்டுப் போகிறாள்.

கன்னியம்மா, கதவைத் தாழிடுகிறாள்.

அவளை மெள்ள எழுப்பி, அருகிலுள்ள குளியலறைக்குக் கொண்டு செல்கிறாள்.

ஓ... குளியலறையா? பளபளவென்று பளிங்கு. எதிரே கண்ணாடி, கழுவும் தொட்டி. கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்க்க, கருப்பும் வெளுப்புமாகப் பம்மென்று முடி. முகம் ‘அசிங்கமாக’ப் படுகிறது. எப்போதேனும் அவள் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாளா? புருசன் இருந்த நாட்களில் கூடக் கண்ணாடி பார்த்து முகம் சீவிப் பொட்டு வைத்துக் கொண்டதில்லை. அடங்காத முடியை ஒரு மரச்சிப்பினால் அழுந்த வாரி கையால் சுமாராக வகிடு பிளந்து... முடிந்து கொள்வாள். ஒரு ஊசி செருக வேண்டும்... இப்போது முடி கூழையாகிவிட்டது. என்றாலும், இறுக முடிவதுபோல் செருகிக் கொள்வாள்...

உக்காருங்க...

“அடிம்மா... இதுல...”

உயர கால் தொங்கப்போட்டு உட்காரும் கழிப்புக்கலம்.

“கீழ வழுவழுன்னு இருக்கு, பத்திரம், உக்காந்துக்குங்க...” அவள் உட்கார்ந்து கொள்கிறாள். பல்விளக்க ஒரு பற்பசை தருகிறாள். நிற்க முடியவில்லை. அப்படியே விரலால் துலக்கிக் கொள்கிறாள். பல் பொடியோ, வேப்பங்குச்சியோ வைத்துத் துலக்கித்தான் பழக்கம். கடையில் ஏதேதோ பற்பொடிகள், கொடுக்கிறான். அவள் பற்களுக்கு ஒரு கேடும் இல்லை. அநுவுக்கு எப்படிப் பற்கள் தேய்ந்தும் விழுந்தும் முகத்தையே மாற்றிவிட்டன?

கன்னியம்மா, அவள் முகத்தைத் தேங்காய்ப் பூத்து வாலையால் துடைத்து, படுக்கைக்குக் கூட்டி வருகிறாள்.

பக்குவமாக பருப்பும் சோறும் ரசமுமாகப் பிசைந்து, முன்னே ஸ்டூலில் வைக்கிறாள்.

அழுக்குக் குளத்தில் தாமரைகளா?...

வயது முதிர்ந்து, உடலும் உள்ளமும் நலிந்த காலத்தில், இந்தப் பரிவும் பேணுதலும் எத்துணை ஆறுதல் அளிக்கிறது?

“கொஞ்சம் தயிரூத்தி சோறு பிசையட்டுமா பெரிம்மா? இஞ்சி ஊறு காய் இருக்கு.”

“வாணாந்தாயி, எனக்குத் தாயா நிக்கிறீங்க. போதும்மா. வழக்கத்தைவுட நெறய சாப்புட்டேன். நீ போட்ட கையி...” என்று அந்தக் கையைக் கண்களில் வைத்துக் கொள்கிறாள். கையில் ஈரம் படிகிறது. சம்பு அம்மா, நீங்க இந்த ரூபத்துல வந்திருக்கீங்களா? என்னிய இந்தக் கண்ணம்மாளக் கரையேத்த கன்னியம்மா ரூபத்துல வந்திருக்கீங்களா? அம்மா, உங்களுக்கு நா ஒண்ணுமே செய்யலியே?...” என்று விம்முகிறாள்.

மாத்திரை சாப்பிட்ட சற்று நேரத்தில் அவள் மயங்கி, உறங்கிப் போகிறாள். கனவுகள், பிரிசல்கள் எதுவும் இல்லாத ஆழ்ந்த உறக்கம். நேரம் என்ற உணர்வையே மிதித் தெறிந்துவிட்ட உறக்கம்.

கண்ணை மெல்லத் திறக்க உணர்வு வரும்போது, அறைக்குள் வெளிச்சம் பரவி இருக்கிறது.

உனக்கு எது தேவைப்பட்டாலும் ‘மணி அடி, கன்னியம்மா வருவாள்’ என்று டாக்டர் பெண் சொன்னது நினைவுக்கு வரவில்லை. மெள்ள எழுந்திருக்கிறாள். வயிற்றில் உள்ள பலங்களைத் தோண்டிப் போட்டுவிட்டாற் போல் பலவீனம் ஆட் கொள்கிறது. நரம்புகளே அறுந்தாற் போன்று துடித்த நிலை இல்லை என்றாலும், நிற்கத் திராணி இல்லை. மெல்ல கட்டிலில் நகர்ந்து சுவரைப் பற்றி நடந்து குளியலறைக்கு வருகிறாள். விழுந்து விடுவோமோ, பளிங்குத் தரை பாழாகிவிடுமோ? கேலி பேசுவார்களோ என்றெல்லாம் அச்சம் வதைக்கிறது. தரையின் அப்பழுக்கற்ற தன்மை பாழாகிறது. போர்க்களத்தில், கோழைக்கும் வீரம் வருமாம். அவள் எப்படியோ சமாளித்து, வாளியில் நீர்பிடித்து ஊற்றுகிறாள். கழுவ முடியவில்லை. மெள்ள எழுந்து வாய் கழுவிக் கொள்கிறாள். கண்கள் பாதாளத்தில் போய், முகம் தேய்ந்து சோர்ந்து, வீம்பும் துணிவும் அடிபட்ட சருகாய்க் காட்சி அளிக்கிறாள்.

மெள்ள சுவரைப் பற்றிக் கொண்டு படுக்கைக்கு மீள்கிறாள். ஸ்டூலில் உள்ள மணி, கவனத்தைக் கவருகிறது.

அதை அடிக்கிறாள்.

கன்னியம்மா வருவாள்; வந்ததும், ‘இந்தச் சனியன் நைட்டி வேண்டாம், எனக்கு சீலை கொண்டு வந்து தாம்மா, வெள்ளைச்சீலை... என்று கேட்க வேண்டும்.

கதவு திறக்கப்படுகிறது.

கன்னியம்மா இல்லை. ஒட்டு மீசை வைத்துக் கொண்டாற் போல் ஒரு பணியாளன். அவன் மேசையைப் பார்க்கிறான்.

“இன்னா பெர்சு? அதா நாஷ்தா இட்டிலி சட்டினி சாம்பாரு வச்சிகிற, சாப்புடல?...” பிளாஸ்கைத் தூக்கிப் பார்க்கிறான்.

“காபியும் அப்படியே கீது?... மணி ஒண்ணடிக்கப் போவுது. லஞ்ச் அவுரு வந்திடிச்சி. இந்நேரமா தூங்கின?”

“எனக்கு இட்லி காபியெல்லாம் வாணாந்தம்பி... கண்ணம்மா இல்ல? அவளக் கொஞ்சம் வரச் சொல்லுங்க.”

“யாரு அது, பெர்சு?...”

“...அ... கண்ணம்மால்ல, கன்னிம்மா. அவதா எனக்கு எதும் செய்யும்னு டாக்டரம்மா சொன்னாங்க... அவங்க இல்லியா?”

“ஆரு, அர்சிதா மேடமா? அவங்க அய்யா கூட டெல்லிக்கில்ல போயிகிறாங்க?...”

“அவங்க என் பேத்திதா. இவங்க வேறப்பா, நேத்து வந்து பாத்து, மாத்திரை குடுத்தாங்க...”

“ஓ, அவங்களா, அவுங்க உனக்குப் பாத்து மாத்திரை மருந்து குடுத்தாங்களா?”

“ஆமா. அவங்கதா கன்னிம்மாளை இங்க கூட்டி வந்தாங்க. நேத்து தூக்கமாத்திரை குடுத்திட்டாங்க போல இந்நேரம் தூங்கி இருக்கிறேன்.”

“கன்னிம்மா இங்க இல்ல, சிந்தாமணி பங்களாவுக்குப் போயிருக்கும். நான் இப்ப லஞ்ச் கொண்டாறேன். அசுவினி மேடம் ஆபீஸ் ரூமுல இருந்தா சொல்லி அனுப்புறேன்...” என்று சொல்லிவிட்டு நாஷ்தா சமாசாரங்களை எடுத்துப் போகிறான்.

இதுவரையிலும் மரகதம், மஞ்சு, சந்திரி யாருமே இங்கே வரவில்லை. பெரிய அரண்மனைகளில் இப்படித்தான் நடக்குமோ? சிந்தாமணி பங்களா என்பது மூத்தவளின் வாசஸ்தலமோ?

அவள் வாழ்ந்த உலகுக்கும் இந்த நடப்பியல் உலகுக்கும் எத்தனை வித்தியாசம்?

அவள் மகனுக்கு எத்தனை மகன்கள், எத்தனை மகள்கள்?

அந்த ஒட்டு மீசை சாப்பாடு கொண்டு வருகிறான்.

பெரிய தட்டில் சாப்பாடு வைத்து மேலே இன்னொரு தட்டால் மூடிக் கொண்டு வருகிறான். கட்டிலுக்கருகில் ஸ்டூலில் வைக்கிறான். தண்ணீரையும் கிளாசில் ஊற்றி வைக்கிறான்.

தட்டைத் திறந்து விட்டு, “பெர்சு, குர்மா பொரியல், அல்லாம் ஸ்பெசல் இன்னிக்கு. உனக்குன்னு கொண்டாந்திருக்கிறேன்... சாப்பிடு... வர்ட்டா ?” என்று போகிறான்.

மசால் நெடி மூக்கைத் துளைக்கிறது.

சிறு கிண்ணங்களில் குழம்போ, குர்மாவோ ஏதோ வைத்திருக்கிறான். பருப்பும் ரசமும் போட்டுப் பாங்காகப் பிசைந்து கொடுத்த அந்தச் சோறு இல்லை இது...

சோற்றைத் தொடவே கை கூசுகிறது. கீழே அவன் வைத்த தட்டை எடுத்து மூடிவிட்டுப் படுக்கிறாள்.

உண்ணாவிரதம் என்று அவள் அறிந்து இருந்ததில்லை. ஆனால் எத்தனையோ சந்தர்ப்பங்களில், வயிற்றுக் குணவு கொள்ளத் தோன்றியதில்லை. நேரம் இருந்ததில்லை. பசி தெரிந்ததில்லை. அவள் கால்களும் கைகளும் நன்றாக இயங்க, சுதந்தரமாக இருந்த நாட்களில் பசித்து, பட்டினி கிடந்ததில்லை.

சிறை உண்ணாவிரதம் பற்றிச் சொல்வார்கள். சுதந்தரம் வந்த பின்னரும், தொழிற் சங்கம், போராட்டம் என்று பெண்கள் சிறைக்குப் போனார்கள். உண்ணா விரதம் இருக்கும் போது, உறவினர்களை விட்டு நல்ல நல்ல பண்டங்களைக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்வார்களாம். ஆனால், உயிர் போனாலும், கோரிக்கை நிறைவேறாமல் உண்ணா விரதத்தை முடித்துக் கொள்ள மாட்டார்கள்.

இப்போது இவளுக்குப் பசிக்கிறது. ஆனால் எழுந்திருக்க வேண்டாம். கண்களை மூடிக் கொண்டு கிடக்கிறாள்.

எத்தனை நேரமாயிற்று என்று தெரியவில்லை.

“ஆயா...ஆயா... ? எந்திரி... கன்னிம்மா சோறு கொண்டாந்திருக்கிறேன். வாழக்காப் பெரியல்... வெந்தியக் குழம்பு வச்சிருக்கிற எந்திரு, பாவம், கசுமாலங்க, கொல பட்டினி போட்டுட்டானுவ... எந்திரம்மா... மணி ஒம்பதடிக்கப் போவுது...”

இது நிசமா, மறுபிறப்பா?...

“அந்தப் பொறுக்கி வோணுன்னே கோழிக்குருமாவும் அதும் இதும் கொண்டாந்து வச்சிட்டுப் போயிருக்கு! என்ன, ரஞ்சிதம்மா கூட்டுவிட்டாங்க. அவுங்க பங்களாலதா நா இருப்பேன். அசுவினி மேடம் கூட்டியாந்தாங்க, வந்தேன். ம், வா, பாவம்...”

ஈரத்துண்டால் முகம் திருத்தி, அவளைச் சாப்பிட வைக்கிறாள்.

“நீ சாப்பிட்டியா கன்னிம்மா?”

“என்னப்பத்தி இன்னா ஆயா? நீங்க வயசானவங்க. சீக்காளி. சாயங்காலந்தா அசுவினி மேடம் ஃபோன் போட்டு விசாரிச்சாங்க. என்னக் காலமேயே அங்க போகச் சொல்லிட்டாங்க. இங்க, சந்திரி அம்மாதான் எல்லாம் பாக்கும். அவங்க கட்சி காரியமா வெளியூர் போயிட் டாங்க...” சாப்பாடு கொடுத்து முடித்துத் துடைத்து விடுகிறாள். குளியலறைக்குக் கூட்டிப் போகிறாள்.

அப்போது கதவைத் திறக்கும் ஓசை கேட்கிறது.

அறைக்குள் அசுவினி-டாக்டர் பெண் வந்திருக்கிறாள்.

“எப்படி இருக்கிறீங்க பாட்டியம்மா ?”

“...வாம்மா, நீ நல்லா இருக்கணும். நீ சொன்னாப்புல எனக்கு ஒண்ணில்ல. மொதல்ல, எனக்கு என்னோட வெள்ள சீல ரவிக்கை வோணும்மா. நேத்து, இன்று முழுக்கத் தூங்கி இருக்கிற. குளிக்காம, கழுவாம, நா இப்பிடி சோறு தின்னதில்ல... என்ன மாத்திர குடுத்தியோம்மா, தூங்கி, பசி... சோறு... பாவச்சோறுன்னு நெனப்பே. ஆனா... ஒங்க அன்பு எனக்குப் புதிசா இருக்கு. யாரு பெத்த பொண்ணுகளோ, நீங்க நல்லா இருக்கணும். என்சீல ஒண்ணும் எடுத்துக்காம, இத்த மாட்டி... கண்ணு, எனக்கு சீல கொண்டாந்து குடுத்திரு. நல்லாப் போச்சி. நான் பாட்டுக்கு என் வழில போயிடறேன்...”

“சேலைதானே? நிச்சயமா தாரேன். இப்ப, நீங்க நடந்து போக முடியுமான்னு பாத்து சொல்லுறேன்... படுங்க...”

“கன்னியம்மா, இதெல்லாம் எடுத்திட்டுப் போ...”

அவள் குழாய் வைத்து இவளைப் பரிசோதிக்கிறாள்.

பிறகு கதவைத் தாழிட்டுவிட்டு உட்காருகிறாள். அவள் கையைத் தன் கையில் வைத்துக் கொள்கிறாள்.

“உங்களுக்கு இங்கே இருக்கப் பிடிக்கலியா?”

“வாணாம்மா. எங்கியோ பாடி பரதேசி மாதிரி இருக்கிற சுகம் இதுல இல்ல. நீ யாரோட மகன்னு, எனக்குத் தெரியல. மகன், மகள், உறவு, சொத்து சுகம் எல்லாம் பாவமலை மேலே நிக்கிறதுன்னு மனச்சாட்சி குத்துது. அதுனாலே தான் எல்லாம் துறந்தேன். நான் அண்டிய இடம் சத்தியம் குடியிருந்த கோயில். இப்ப அங்க, ஆசுபத்திரி கட்டுறாங்களாம்; ‘லாட்ஜ்’ கட்டுறாங்களாம். என்னப் போ போன்னு வெரட்டினாங்க- ரா முச்சூடும் தூக்கமில்ல. எப்படி வுழுந்தேன்னு தெரியல. முருகன்... என்ன நிணச்சிருக்கிறான், எந்த கதிக்கு ஆளாக்கப் போறான்னு தெரியல...”

“ஏம்மா, உங்க சொந்த மகன் வூட்டுக்குத்தானே வந்திருக்கிறீங்க?”

“சொந்தம். இந்த வயித்தல எடம் குடுத்தேன். அவங்கப்பாரு, குடிப்பாரு. ஆனா... கட்டின பொண்சாதியத் தவுர ஒரு நிழலக்கூட அந்த எண்ணத்துல நினைக்கல. அந்தப்பெரி மணிசர், பத்து நாளயப் புள்ளயக் கையிலெடுத்து, ‘மோகனதாசு’ன்னு அந்த மகாத்துமா பேர வச்சாரு. “தாயம்மா, நம்ம புள்ள பெரி...ய ஆளா வருவாம்பாரு!"ம் பாரு. அவரு எதும் பார்க்காம நல்ல படியாப் போய்ச் சேர்ந்தாரு...”

அவள் இவள் கையை அழுத்திப் பிடிக்கிறாள். அவளும் உணர்ச்சி வசப்படுவது தெரிகிறது... இவள் ரஞ்சிதத்தின் இளைய மகளா? பேரன் மனைவியா?

“கண்ணு, நீ யாருன்னு இன்னும் தெரியலம்மா?”

“நான் யாரா?...”

கேட்டுவிட்டுப் புன்னகை செய்கிறாள்.

“நிச்சியமா தெரியணுமா?...”

“உனக்குச் சொல்ல விருப்பமில்லேன்னா வேணாம். ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கறேன்...”

“உங்களுக்குச் சேலை கொண்டுக் கொடுக்க வேணும். வெளியில கொண்டுவிட வேணும்... அதானே?”

“முருகா, எனக்கு அது போதும். ரோட்டுமேல சின்னஞ்சிறுசுகல்லாம் வண்டிகளுக்குப் பலியாகுதுங்க. அப்படி எங்கியாலும் நா ரோட்டு மேல வுழுந்திருக்கக் கூடாதா?...”

“ஆமாம் பாட்டிம்மா. இந்த முருகனுக்குக் குசும்பு ரொம்ப. என்ன செய்ய, அவுரே ரெண்டு பொண்டாட்டிக் காரரு. பத்தாததுக்கு, எக்கச்சக்கமான பக்தர்கள் வலையிலே சிக்கிட்டு பண்ணாட்டு வாணிப பேரங்களில் தவிச்சிட்டிருக்காரு. அதான் குளறுபடி பண்ணிட்டாரு...”

“நீ யாரம்மா சொல்லுற?”

“உங்க கடவுள் முருகனத்தான்...”

அவள் சட்டென்று நிலைப்படுகிறாள். இந்த இளந்தலை முறை பற்றி அவளுக்குத் தெரியாது. அவன் மகள் தானோ?

“ஏங்க, நா கேக்குற. நீங்க கும்புடற சாமி, முருகனோ, ராமனோ, ஈசுவரனோ, யாராக வானாலும் இருக்கட்டும். மூலைக்கு மூலை கோயில், கும்பாபிஷேகம், தீமிதி, காவடி, பாயசம்னு கும்பிடுறாங்களே, எங்கியானும் ஏழைக்கு நியாயம் நடக்குதா? நா கவுர்மென்ட் ஆசுபத்திரிலதா இருக்கிறேன். சீட்டுப் போடுறதிலேந்து, ஆபிரேசன் டேபுள் வரையிலும் பணம் உருவுறாங்க. மயக்கம் குடுக்குமுன்ன, பணம் கேக்குறான். இல்லேன்னா, எறக்கிவுட்டுடறான். எங்கியானும் அற்புதம் நடக்குதா?... கட்சி... கட்சிக்காக ஏழை, கட்சிமாற, புதுக்காட்சி துவக்க, எல்லாத்துக்கும் அவுங்க வேண்டி இருக்கு. பதவி புடிக்க, அவங்களையே சுறண்டிக் கொள்ளையடிக்க... சினிமா, டி.வி. அது இதுன்னு எத்தினியோ வலை. அதுக்குள்ள உங்க சாமியே வுழுந்திட்டாரு...”

“கண்ணு, நீ சொல்லுறது அத்தினியும் மெய்தா...”

அவள் உருகிப் போய், ஒரு பஞ்சையின் பிள்ளையைக் காப்பாற்ற அந்த வீட்டுக்கு வந்து அவமானப்பட்டதைச் சொல்கிறாள்.

“பாட்டி, கொஞ்சம் பொறுத்துக்குங்க. உங்கள நல்லா ஆக்கி, வெளில கொண்டுவுட்டுடறேன். நீங்க, இளையவங்கள ஒண்ணு சேத்துப் போராடத் தயாராகணும்... உங்களுக்குத் தெரியுமா? இது ‘கெஸ்ட்ரூம்’னு பேரு. எத்தினி பொண்ணுகளக் கதறக்கதறக் குலைச்சிருக்காங்க தெரியுமா? சினிமா, டி.வின்னு மயங்கி, அழகழகான பொண்ணுகள் இவங்க வலையில் விழுந்து... எங்கம்மா.” கண்கள் குளமாகின்றன.


“நிர்வாணக்காதல்’னு ஒரு படம். பேரே கழிசடை. அது வெளிவரல. எங்கக்காவுக்குச் சான்ஸ் குடுக்கிறதா, சொல்லி, இங்கே கொண்டாந்து, குலைச்சானுவ. அப்பன் அன்னிக்கு, மகன் இன்னிக்கு.”


“சிவா சிவா...” என்று காதைப் பொத்திக் கொள்கிறாள்.

“தற்கொலை, யாரையோ டயரக்டரைக் காதலிச்சா, ஏமாற்றம்னு’ பத்திரிகைக்காரங்க மூடிட்டானுவ... எல்லா மீடியாவும் இவங்க கிட்டத்தானே இருக்கு? அமுக்க வச்சி, மலத்தைத்தின்னு பிழைக்கிற தொழில்களாப் போயிட்டுது...”

“அம்மா, நீ வேற எதுனாலும் பேசு. ரணத்தைக் கிளறும் ஆபிரேசன் வானாம். ரொம்ப வலிக்குது... உன்னியப் போல ஒரு பத்து, நூறு ஆயிரம் பேருக சேரனும். நான் சாவக் கூடாது...”

“வாங்க. அதான் ஸ்பிரிட்..” கையை அழுத்தமாகப் பற்றுகிறாள். ‘டொக்டொக்’ கென்று கதவு தட்டப்படுகிறது.

எழுந்து கதவைத் திறக்கிறாள்.

“குடீவினிங் மேடம். இப்பதா இவங்கள- பி.பி. பாக்க வந்தேன்...”

“பார்த்தாச்சில்ல?... போ!” அவள் மின்னல் போல் இவளை ஒரு கணம் பார்த்துவிட்டுப் போகிறாள்.


“அத்தே...? வாங்கத்தே...” என்றவள் அறை வாயிற்படியில் நின்று அவள் ஒழுங்கை கடந்து செல்வதையே பார்க்கிறாள். பிறகு கதவைச் சாத்திவிட்டு வருகிறாள்.

“இதுங்கல்லாம் கொஞ்சம் சந்து தெரிஞ்சாலே நுழைஞ்சு பத்திக்கும். தாசி குலம். சீரழிஞ்ச குலம். இவ பாட்டி தொண்ணுாறு வயசு, இன்னும் இருக்கா. இதுங்களல் லாம் இந்த வட்டத்துக்குள்ள நுழயவுடக் கூடாதுன்னு சொன்னா, உங்க மகன் காதிலியே போட்டுக்கிறதில்ல. நம்ம வீட்ல, சின்னஞ்சிறிசு நடமாடுற இடம்.

“இவ சிரிச்சிக்குழஞ்சி, சாதுரியமாப் பேசி, புளியங்கொம்புன்னு புடிச்சிக்குவாளுவ. லாட்ஜிலை ஓட்டல்ல வாடிக்கை வச்சிட்டு, வயித்தில வாங்கிக்கிட்டு, உங்க மகன்தான்னு சத்தியம் செய்யத் துணிஞ்சவளுக...”

அவளுக்குக் காதுகளைப் பொத்திக் கொள்ளக் கைகள் பரபரக்கின்றன. பாம்பின் கால் பாம்பறியும். இவள் அப்படி வந்தவள்தானே?

“ஏம்மா, அநாவசியமா ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணப் பழி சொல்லணும்...? டாக்டருக்குப் படிச்சிருக்கிற பொண்ணு...”

“அத்தே, அப்படியெல்லாம் நினச்சி எடபோடக்கூடாது. இந்தக் காலத்தில இதுபோல பொண்ணுகளுக்கு வெக்கம் மானம் கூச்சம் ஒண்ணுமே கிடையாது. கூட்டத்துல தோள் உரசினாக்கூட, காது மூக்கு வச்சி, இவன் கற்பழிச்சான்னு கோர்ட்டுல துணிஞ்சி விவரிக்கும் சாதி. நாமன்னா செத்திடுவம். அதும் இவ டாக்டர்ங்ற பேருல லைசன்ஸ் இல்லாம நுழையிற வருக்கம். அதும் இது பெரிய ரவுடி. மெடிகல் படிக்கணும், இன்ன குலம், மறுவாழ்வுன்னு உதவி கேட்டு வந்தா. சூடிகையா இருக்கான்னு, இவங்க உதவி செஞ்சாங்க. அதையே சாக்கா வச்சிட்டு, அக்காவைப் பாக்க வரும். நானும் கபடில்லாம தான் நினச்சிருந்தேன்... இப்ப நீங்க கூட அன்னைக்கு அந்தப் பையனுக்காக நியாயம் சொன்னீங்களே. எந்தப் பயலோ, எவ கையையோ புடிச்சி இழுத்திருக்கிறா. விபரீதம் நடந்திடிச்சி. அத நம்ம பையன் மேல போட்டு கேசு தொடுக்கத் தூண்டுனதே இவதா. ஒரு குடும்பத்துக்குள்ளியே எதிர்க்கட்சி பண்ணுது. மானம் கெட்ட சன்மங்க. இந்த வூட்டுமருவன்னு சொல்லிட்டுத் திரியிறாளாம். இவ படிச்சிப் பாஸ் பண்ணா, சர்வீஸ் பண்ணனும்...”

தன் குற்றங்களை மறைக்க, பிறர் முகத்திலும் குப்பையை வீசுவதுதான் பரிகாரமா?... அவள் பேசவேயில்லை.

“சரி, அது கெடக்குது விடுங்க, அத்தை. கடசீல நீங்க வந்து சேந்தீங்களே, அதாம் பெரிசு. நா கும்புடாத தெய்வம் இல்ல. ஒவ்வொருத்தரும் வந்து கூப்புட்டு, நீங்க வரயில்ல. அவங்களுக்கு இதே குறையிலதான் ‘அட்டாக்’ வந்திச்சி. இத இப்ப கூட்டம்னு போயிருக்காங்க. அர்ச்சிதா கூடப்போயிருக்கு. அது யு.எஸ்.ல படிச்சிதா, அதுதா ரொம்பக் கவனம். நா, இத இப்பக்கூட ரெண்டுநா, திருப்பதிக்குப் போயி, அங்கப்பிரதட்சிணம் பண்ணிட்டு வார. திருக்கல்யாணம் பண்ணி வைக்கிறேன், கேசுகீ செல்லாம் போகட்டும்னு வேண்டிட்டிருக்கிற... அங்க தங்கிருக்கிற காட்டேஜ்ல அக்காதா ஃபோன் போட்டா. அத்த தல சுத்தி விழுந்திட்டாங்க, உடனே ரங்கன இங்க கொண்டாரச் சொல்லிருக்கிறன்னு... நல்லாப் பாக்கச் சொல்லுங்க. ஸ்பெஷலிஸ்ட் சுந்தரராசை வந்து பாக்கச் சொல்ங்க, ஸ்கேன்‘கீன்’ எதுன்னாலும், என்ன செலவானலும் பாக்க வோணாம்னே. சாப்புட்டீங்களா?... துரும்பா எளச்சிட்டீங்க...”

மூச்சு விடாமல் பட்டுப்பாய் விரிக்கிறாள்.

“உங்கக்கா ரஞ்சிதம் இந்த வூட்ல இல்லையா?”

“இதே காம்பவுண்டுதா. சொல்லப்போனா, அவுங்கதா இங்க படுத்திருப்பாங்க. அக்காவுக்கு அந்த ஆபிரேசனுக்குப் பிறகு நடமாட முடியல. தெரபிஸ்ட் வராங்க. கால்ல, நாலு விரல எடுத்திட்டாங்க. இப்பக்கூட அத்தையப் பாக்கணு முன்னாங்க. பாக்கலாம்னு சொல்லிட்டு வந்தேன். உங்களுக்கு எது வோணுன்னாலும், தயங்காம கேளுங்க. நானும் உங்க சந்திரி போலதா...”

அவள் கையைப் பற்றுகிறாள்.

“எனக்கு என்னாம்மா வேணும்? இந்த எளவு ‘டிரஸ்’ எனக்கு ஒடம்பையே அறுக்குது. என் வெள்ள சீல, ரவிக்கை ரெண்டும் அங்கே அந்த வூட்டுல தகரப் பொட்டில இருக்கு. அதை ரங்கனுக்கு போன் போட்டுச் சொல்லிக் கொண்டாரச் சொன்னாப் போதும்...”

“அந்த சீலதான் வேணுமா? இப்பவே ஃபோன் போடுறேன்... நான் உங்களுக்குப் புதிசா, அரை டசன் வெள்ளைச் சேலை, நல்ல மெல்லிசு ஆர்கன்டியோ, ஃபுல்வாயிலோ, செட்டா கொண்டுவரச் சொல்றேன். வயசுகாலத்துல நீங்க சவுரியமா இருக்கணும்...”

அவள் பேசிக் கொண்டே போகிறாள். அவள் உணர்வில் சேலையைத் தவிர வேறொன்றும் புரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/28&oldid=1022840" இலிருந்து மீள்விக்கப்பட்டது