அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/அரக்கர்களா?

விக்கிமூலம் இலிருந்து


(83) ரக்கர்களா?



வீர சிவாஜியின் முடிசூட்டு விழாவைக் கண்டு களிப்பதற்கு 1674ம் ஆண்டு வெள்ளையர் தூதுக் குழுவினர் ராயகட்டத்துக்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களுக்குப் புலால் உணவு வழங்கும்படி ஒரு கசாப்புக் கடைக்காரருக்கு சிவாஜி உத்தரவிட்டிருந்தார்.

ஒரு மாதத்துக்குப் பிறகு தூதுக் குழுவினர் திரும்பிச் செல்லத் தயாரானார்கள். அப்பொழுது அவர்களைக் காண்பதற்கு அனுமதி கோரினார் கசாப்புக் கடைக்காரர். அனுமதியும் கிடைத்தது.

கசாப்புக் கடைக்காரர் தங்களைவந்து கண்டபோது, வெள்ளையர் மிகவும் மரியாதையோடு, "என்ன அலுவலாக வந்தீர்கள்?" என்று விசாரித்தனர்.

கசாப்புக் கடைக்காரர் சிறிது நேரம் அவர்களை உற்றுப் பார்த்துவிட்டு,

“வேறு ஒன்றும் இல்லை. என்னுடைய மற்ற வாடிக்கையாளர்கள் அனைவரும் சேர்ந்து பல ஆண்டுகள் புசித்த மொத்த மாமிசம் அவ்வளவையும் விட, அதிக அளவு மாமிசத்தை ஒரே மாதத்தில் புசித்திருக்கிறார்களே; அத்தகைய மனிதர்கள் யார் என்று பார்க்கவே வந்தேன்” என்றார்.