உடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வியின் உளவியல் கொள்கைகள்

விக்கிமூலம் இலிருந்து
9. உடற்கல்வியின் உளவியல் கொள்கைகள்
(PSYCHOLOGICAL PRINCIPLES)

உளவியல் விளக்கம்

Psychology என்பது கிரேக்கச் சொல். இது இரண்டு சொற்களால் ஆன ஒரு சொல்.

அதன் அர்த்தம் இப்படி அமைகிறது. Psycho என்றும் Logas என்று பிரிந்திருக்கும் சொற்களுக்கு உள்ளம் என்றும் இயல். அதாவது விஞ்ஞானம் என்றும் பொருள் விரிந்து போகிறது. அதனால், நாம் இதனை உளவியல் என்ற அழைக்கின்றோம்.

உளவியலின் காலம்

உளவியல் தற்காலத்தில் தோன்றிய ஒரு புதிய அறிவியல் என்றுதான், பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பழைய பெயரில், புதிய கருத்துக்கள் என்ற நிலையில், இது புதுமை இயலாக பூமியில் உலா வந்து கொண்டிருக்கிறது. 

தத்துவ இயல் எப்பொழுது தோன்றியதோ, அப்பொழுதே உளவியலும் உண்டாகிவிட்டது, உருவாகி வேரூன்றி விட்டதுதான் உண்மை நிலை என்று உரைப்பாரும் உண்டு.

தத்துவ ஆராய்ச்சியாளர்கள், மனித இனத்தின் இயற்கைத் தன்மைகளை ஆய்வு செய்து விளக்கம் பெற முனைகிற பொழுதெல்லாம், உள்ளத்தையும் சேர்த்தே ஆராய்ந்திருக்கின்றனர்.ஆகவே, தத்துவமும் உளவியலும் ஒன்றுக்கொன்று இணைந்து உதவியிருக்கின்றன. ஆக, இது காலத்தில் பழமைபோல இருந்தாலும், தான் கொண்ட கோலத்தால் இன்றும் புதுமைத்துவம் பூண்டதாகவே விளங்கி, வளமூட்டுகிறது.

உளமா!மனமா!

உள்ளம் என்ற ஒன்று இருப்பதாக எல்லோரும் நம்பினர். அது பற்றி ஆய்வு நடத்தினர் என்றாலும், அவர்களுக்கு அதில் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படவில்லை.

உள்ளம் என்பது என்ன என்று அவர்களால் விளக்கிக் கூற இயலவில்லை. அதற்கு உருவம் கிடையாது. வடிவம் கிடையாது. அதைப் பார்க்கவும் முடியாது. தொட்டுப் பார்க்கவும் முடியாது. தொட்டுப் பார்க்கவும் முடியாது. அதற்கு கனமும் இல்லை. எடையும் இல்லை. அதற்கு ஒர் அமைப்பும் இல்லை.

இத்தகைய ஒன்றைப் பற்றி, எல்லோரும் விளக்கம் பெறவும் முன் வந்தது விந்தையான ஒன்றுதான்.

கிரேக்கர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் கோட்பாடும் போல, குடால்ப் கியோகிலி என்பவரும் 1590 ஆம் ஆண்டே, உளவியல் பற்றி நிறையப் பேசி சிந்தித்து  வந்தார். இந்தப் பெயரை பலமுறை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

ஆனாலும், உள்ளம் (Soul) என்ற சொல்லை உணர்த்த முடியவில்லை என்பதற்காக, ஒரு பெயர் மாற்றம் அளித்தனர். அதற்கு மனம் (Mind) என்று பெயர் சூட்டினர். உளவியல் என்பது மனதைப் பற்றி அறிய என்று அவர்கள் கூறினார்கள். இருந்தாலும், முன்பு வந்த இடர்ப்பாடுதான் இப்பொழுதும் தலை தூக்கிநின்றது.

மனம் என்றால் என்ன? அது மூளையைப் போலவே, இதயத்தைப் போல ஒர் உறுப்பா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.மனம் என்பது, நரம்புமண்டலத்தின் மூலமாக விளைகிற முனைப்பில், நடைபெறுகிற நடத்தைக்குரியது என்பதுதான் உண்மையான விளக்கம். ஆகவே, மனம் என்பதும் விளக்கத்திற்குரியதாக அமையவில்லை.

மனம் என்றால் என்ன?

1596ஆம் ஆண்டு முதல், 1650ஆம் ஆண்டு வரை வாழ்ந்த டெஸ்கார்ட்டிஸ் என்பவர் மனதைப் பற்றிக் கூறும்போது, மனச் சான்று அல்லது மன உணர்வு (Consciousness) என்று விளக்கியுள்ளார்.ஆனாலும், முன்பு இருந்த விளக்க முடியாத நிலைதான் இங்கு எழுந்தது.மன விழிப்புணர்ச்சி (awareness) என்பதை எப்படி வெளிக் காட்ட முடியும் வடிவமற்றது இது. இது உள்ளார்ந்த உணர்வு என்பது தானே தவிர, உருவம் இல்லையே! எனவே இக்கருத்தும் ஆட்சேபத்திற்குள்ளானது.

விழித்திருக்கும்போது ஏற்படுகின்ற மன உணர்வுகள், உறங்கும் போதும் தொடர்கின்றனவே! மனம் அல்லது மூளையின் உயிர்ப்புகள், உறக்க நிலையிலும் தொடர்  வதால், உளவியல் என்பது விழித்திருக்கும் போதும், உறங்கும்போதும் உண்டாகிற மனத் தொடர்பான விஷயங்களைப் பற்றி விளக்குவதாகும் என்று விவரிக்கப்பட்டது.இதை ஃப்ராய்டு (Freud) என்பவர் கூறியிருந்தார்.

நடத்தை இயல்

நவீன காலத்தில் விளக்கம் தர முனைந்தவர்களில் முதன்மையானவர் வாட்சன் (Watson) என்பவர்.

உளவியல் என்பது நடத்தையைப் பற்றி (Behaviour) விளக்கம் தரும் இயல் என்றார். அவரின் கருத்துப்படி தனிப்பட்ட ஒருவரின் நடத்தையைப் பற்றி சோதனை செய்ய முடியும். விளக்கம் பெற முடியும்.நடத்தை என்பது வெளிப்புறச் செயல்களே (Obejective) ஆகவே உளவியலை நடத்தை பற்றி அறியும் இயல் எனும் கருத்தை மாற்றி, நடத்தை பற்றி மிகுதியாக விளக்கும் இயல் என்பதாக ஏற்றுக் கொண்டனர்.

விவரமான விளக்கம்

இதற்கு மேலே, ஒரு படி சென்று, உட்ஒர்த் (wosd worth) என்பவர், புதிய விளக்கம் ஒன்றை அளித்தார். அதாவது “உளவியல் என்பது தனிப்பட்ட ஒருவரின் நடத்தைப்பற்றியும், அவருக்குள்ள சூழ்நிலைபற்றியும், சூழ்நிலை காரணமாக எழுகின்ற நடத்தை பற்றியும் விளக்குகிறது” என்பதே அந்தப் புதிய விளக்கம்

உளத்தைப் பற்றி கூறுகிறது என்பது மாறி, மனதைப் பற்றி விளக்குகிறது என்பது மாறி, மனச்சான்று என்பதாக மாறி, இப்போது நடத்தை பற்றி விளக்குகிற இயல் என்பதாக உளவியல் விளக்கம் பெற்றுக் கொண்டிருக்கிறது. 

உடலும் மனமும்

சமீபகாலம் வரையில், ‘உடலும் மனமும் தனித் தனியாகவே இயங்குகின்றன; ஒன்றுக்கொன்று உறவோ இணக்கமோ கிடையாது’ என்றே எல்லோரும் எண்ணி வந்தனர். ஆனால், அது அப்படி இல்லை என்று அண்மைக் காலத்தில் தத்துவ ஞானிகள் தெளிவுபடுத்தினர்.

மனித உடலானது, உடலும் மனமும் ஒருங்கிணைந்து ஒன்றாக உருவாக்கப்படுகிறது.உடல் என்பது வெறும் நரம்பாலும், எலும்புகளாலும், தசைகளாலும் மட்டும் ஆக்கப்பட்டதல்ல. அதன் உள்ளே உள்ள மனம் சிந்திக்க, தெளிவாகத் தெரிந்து கொள்ள. விளக்கம் பெற, அதன்படி செயல்பட போன்ற தன்மைகளாலும் ஆக்கப்பட்டிருக்கிறது.

மனமும் உடலும் இரண்டறக் கலந்து, இணைக்கப் பெற்ற ஓர் உன்னதமான அமைப்பாகும். ஒப்பற்ற படைப்பாகும்.

நாம் ஒரு மனிதரது நடத்தையைப் பற்றி அறிய விரும்பும் போது, உட்புறமாய் அமைவன (Internal) வெளிப்புற செயல்களாய் அமைவன (External) என்று நாம் பகுத்துப் பிரித்துக் கொள்ளலாம்.

இணைந்த செயல்பாடுகள்

ஒரு மனிதரது செயல்பாடுகள் எப்படி அமைகின்றது என்று பார்ப்போம்.ஒருவன் ஒரு பொருளைப் பற்றி அறிய விழையும்போது ஐம்புலன்களும் அவனுக்கு உதவு கின்றன. புலன்களால் பார்த்து முடிந்ததால் தொட்டு அல்லது செவிமடுத்ததை, தனது மன உறுப்புகளால் ஆய்ந்து, அதற்கான சுற்றுப்புறச் சூழலைத் தெளிவுறத் தெரிந்துகொண்டு அதற்கு செயல்படத் தொடங்குகிறான். அந்தச் செயலை செய்திட எலும்புத் தசைகள், நிலைமைக்கு ஏற்றாற்போல் நெகிழ்ந்துகொள்கின்றன.

அதனால், வெளிப்புற நடப்புக்கேற்றவாறு, மனதிலே உள்ளுணர்வு செயல்பாடுகள் நடந்தேறி, அதன் விளைவாக வெளிப்புற நடத்தைகளை மேற்கொள்ள உடல் இயங்கி சமாளிக்கின்றது.

ஆகவே, மனநிலை சரியாக இல்லாவிடில், உடலில் உண்டாகும் செயல்களும் நடத்தைகளும் பாதிக்கப்படுகின்றன.உடல்நிலை பாதிக்கப்படும்போது, மனநிலையும் பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையைத்தான் உடல் மன ஒற்றுமை அல்லது மனிதருக்குரிய ஒற்றுமை என்று கூறுகிறோம் (Psycho Physics).

இதனையே வில்லியம்ஸ் என்பவர், ‘முழுமையான மனிதன்’ என்பதாக விளக்குகிறார். உடல் இல்லாவிடில் மனம் என்பதே இல்லை. மனம் உடல் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே, மனம், உள்ளம் (ஆத்மா) உடல் ஆகிய மூன்றும் முழு மனிதனை உருவாக்கி விடுகிறது.

கருத்துக்கள் பல

மனம் உடல் இரண்டும் தனித்தனிதான் என்று பலரது கருத்துக்கள் இருந்தன. ஆனால் அவை ஒன்று தான். பிணைப்பு மிகுந்தது. பிரித்திட முடியாதது என்பதாகவே பலர் கருதினார்கள். தெளிவுபடக் கூறினார்கள். ஆனால் வில்லியம்ஸ் என்பவர் இக்கருத்தை அதிகமாக வலியுறுத்திக் கூறியதாவது பின்வருமாறு.

உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்போது அதாவது அஜீரணக் கோளாறு வந்துவிட்டால், இரத்தத்தில் ஹீமோ குளோபின் சத்து குறைந்துவிட்டால், அல்லது சுரப்பிகளில் ஏதாவது ஒன்று செயலற்றுப்போனால், உடல் நிலை நிச்சயம் பாதிக்கப்படுகிறது. அப்போது, மனமும், பாதிப்புக்குள்ளாகி, ஒரு படபடப்பு நிலைக்கு ஆளாகி போகிறது. எனவே, மனமும் உடலும் ஒன்றுக் கொன்று உறுதுணையாகவே இருந்து, உயிர்ப்பாகப் பணியாற்றுகிறது.

ஹெர்ரிக் (Herric) என்பவரின் கருத்து. “நாம் மனம் என்பதை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு சிந்திக்க முடியாது. மனம் என்பது ஒரு பெயர். அதுதணியாக இயங்கிவிடமுடியாது.தனிப்பட்ட ஒருவரின் செயலுக்கு அது துணையாக நிற்கிறது அவ்வளவுதான். ஒரு குழந்தை பள்ளிக்குப் போகிறது என்றால், அது உடலையும் மனதையும் முழுதாகக் கொண்டு செல்கிறது என்று தான் அர்த்தம். அந்தக் குழந்தை கற்கிற கல்வியும் உடலையும் மனத்தையும் ஒரு சேர வளர்க்கிறது. ஒன்றை மட்டும் அல்ல” என்பதை நாம் நன்றாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கருத்தையே ரூரோ என்பவரும் வலியுறுத்திக் கூறுகிறார். ‘மனதுக்கு மட்டும் நாம் பயிற்சியளிக்க வில்லை. உடலுக்கு மட்டும் நாம் பயிற்சியளிக்கவில்லை. உடலுக்கு மட்டும் தனியாகப் பயிற்சி தரவில்லை. இரண்டுக்கும் சேர்த்தே பயிற்சியளிக்கிறோம். 

மனதுக்குரிய வேலை (mind) மரியாதை மிகுந்த, மகிமை நிறைந்த வேலையாகும். செய்திகளை சேகரித்துக் கொண்டு, அதற்கேற்ற கட்டளைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது முழுமையான மனித உடலின் மாண்புமிகு பணியாகும்.

மனிதர்களின் தனிப்பட்ட செயல்களானது. அவர்களது சுற்றுப்புறச் சூழ்நிலைகள் தருகின்ற தன்மைகளுக்கேற்பவே அமைந்து விடுவதால், மனிதர்களும் அவர் வாழும் சூழ்நிலைகளும் இரண்டறக் கலந்தனவாகவே அமைந்து விடுகின்றன.

வெளியுலகில் ஏற்படுகின்ற இயக்கங்கள் யாவும் புலன்கள் வழியாகப் படித்து, நரம்புகள் வழியாக மிதந்து, மூளைக்குச் செல்கின்றன. என்ன காரணம், அதற்கு எப்படிப்பட்டக்காரியம் செய்யவேண்டுமென்று மூளை முடிவு செய்கிறது. ஆணையை ஏந்திச் செல்லுகின்ற நரம்புகள் மூலமாகத் தசைகளுக்குத் தந்துவிட, அந்தச் சூழ்நிலையின் அவசியம் அல்லது அவசரத்திற்கேற்ப, காரியம் நிறைவேற்றப்படுகிறது. ஆகவே மனதின் படி செயல்கள் நடக்கின்றன. செயல்களுக்கேற்ப மனம் முடிவெடுக்கிறது.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு குறிப்பு

உடற்கல்வி ஆசிரியர்கள் குழந்தைகளுக்குப் பயிற்சிகள் கொடுக்கும் பொழுது, உடலை மட்டும் நினைத்து உடலுக்காக மட்டும் பயிற்சிகளைத் தரக்கூடாது.குழந்தைகளின் முழுமையை உணர்ந்து. மனதுக்கும் உடலுக்கும் சேர்த்து, முக்கியத்துவம் அளித்து, பயிற்சியளிக்க வேண்டும்.இது மிகவும் இன்றியமையாத குறிப்பாகும்.

இயக்கத்தின் மூலமாகவே கற்பது நடைபெறுகிறது. கற்பத்தின் மூலமாக இயக்கம் நடைபெறுகிறது. ஒவ்வொரு இயக்கத்திற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது சீரான சிறப்பு இயக்கங்களின் (Motor Activity) ஒருங்கிணைந்த முறைகளாகும். ஒரிடத்தில் உட்கார்ந்து கொண்டு எண்ணுகிற நினைவுகள் இயக்கமாகாது. அந்த எண்ணங்கள் தசைகளையும் இயக்காது. அது மனதில் இருக்குமே தவிர செயல்வடிவம் பெறாததாகும்.

நடத்தையும் சூழ்நிலையும் (Behavior and Environment)

உலகத்தில் உலாவருகின்ற உயிரினங்கள் நன்கு இயங்க, இரண்டு சக்திகள் இருந்து ஊக்குவிக்கின்றன. ஒன்று - பரம்பரை குணம், மற்றொன்று சுற்றுப்புறச் சூழ்நிலை.

பாரம்பரிய குணம் (Heredity) என்பது, கற்றுத் தராமலே வருகின்ற பண்பாகும். அது உள்ளுக்குள்ளிருந்தே ஊறி வருகின்ற நடத்தைகளாகவும் அமைகின்றன. சில சமயங்களில், மாறாத, மாறிப்போகாத, மாற முடியாத நடத்தைகளாகவும் அவை ஆழமாக ஊறிப் போய் விடுகின்றன.

சுற்றுப்புறச் சூழ்நிலையால் சேர்கிற நடத்தைகள். கற்றுக் கொள்வதால் நேர்வனவாகவும், அத்தகைய நிறை நலன்கன் நிலையாக இருந்து விடாமல், வாழும் இடங்களுக்கேற்ப நிலைமாறிக் கொள்வனவாகவும் அமையும்.

ஆகவே, ஒவ்வொரு மனிதனும் உணர்வு பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறான். அவன் வாழ்க்கை இந்த இரண்டு சக்திகளால் தான் அலைக்கழிக்கப்படுவதாக விளங்குகிறது.

குழந்தை பருவத்தில் உள்ள இயற்கை பாரம்பரிய குணாதிசயங்கள், சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் வளர வளர, அந்த சூழ்நிலைக்கேற்ப இயற்கைக் குணங்கள் மாற்றம் பெறுகின்றன. ஏற்றம் பெறுகின்றன. மாற்றியமைத்துக் கொள்ளப்படுகின்றன. சமுதாய நிலைக்கேற்ப நடத்தைகள் அமைக்கப்படுகின்றன.

தூண்டல்களும் இயக்கமும் (Stimulus and Response)

பிறப்பிலேயே வருகின்ற குணங்களும் நடத்தைகளும் மாறாத பண்புடையவை என்று நாம் அறிவோம். பிறப்போடு வருகின்ற உடலுறுப்புக்களும், ஏற்படுகின்ற எதிர்துண்டல்களுக்கு இசைந்து கொடுத்து இயக்குகின்ற ஒரே மாதிரியான சக்தியை பெற்றுக்கொள்கின்றன. அவை உடல் சார்ந்த, ஒத்துழைப்புள்ள இயக்கமாகின்றன.

அதாவது உட்கொள்கின்ற உணவை ஜீரணித்தல், உள்ளே வெளிப்படும் கழிவுப் பொருட்களை விரைந்து வெளியேற்றுதல், உள்ளே இழுக்கும் உயிர்க்காற்றை நெறிப்படுத்துதல்.இரத்த ஒட்டம் போன்றவை இயற்கையாக நடைபெறுவதென்றாலும், அவை இயல்பான தூண்டல்களுக்கு ஏற்ற எதிர்ச்செயல் இயக்கமாகவே அமைகின்றன.

அதற்கு முன் நாம் எதிர்ச்சொல் (Reflex) என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.

பிறப்பிலிருந்தே பெறுகிற தூண்டல்களுக்கு ஏற்றாற் போல், இசைந்து கொடுத்து இயங்கக் கற்றுக் கொண்டிருக்கிற உள்ளுறுப்புக்கள், அவ்வாறே பழகிப் பக்குவ மடைந்து கொள்கிற பாங்குதான் எதிர்ச் செயல்திறனாக வளர்ந்து கொள்கிறது. அந்த எதிர்ச்சொல் ஒரு குறிப்பிட்ட அமைப்போடு, இயல்பாகவே, இயற்கையாகவே அமைந்துபோகிறது.

G.A. மில்லர் என்பவர் எதிர்ச்செயலை இவ்வாறு விளக்கிக்காட்டுகிறார். ‘எதிர்ச்செயல் என்பது தானாக இயங்குவது. எந்தக் கட்டுப்பாட்டிற்கும் இணங்காதது. இப்படித்தான் இயங்கும் என்ற நிலையான நியதியை யுடையது; தூண்டல்கள் ஒன்றாக இருந்தாலும் அல்லது பலவாக அமைந்தாலும், ஏற்படுகின்ற எதிர்ச்செயல். நினைவுகளால் பிறப்பிக்கப்படாமல், தீடீரென்று ஏற்படுவது, அதாவது முன் கூட்டியே அமைந்திருக்கின்ற நிலையான எதிர்ச்செயல்களில் ஒன்றாக விளைந்து வெளிவருகிறது.அப்படி ஏற்படுகின்ற எதிர்ச்செயலானது, சுற்றுப்புறச் சூழலுக்கு இணக்கமாக நடைபெறுவதுடன், எதிர்ச் செயல்களுக்கு இலக்காகிற உள்ளுறுப்புக்களையும் பத்திரமாகப் பாதுகாக்கின்ற முறைகளையும் விளைவிக்கிறது’.

இதனை இன்னும் தெளிவாக விளக்கவேண்டு மென்றால், உள்ளுறுப்புக்களிலே ஏற்படுகின்ற இத்தகைய எதிர்ச்செயல் என்பது, மூளையால் தரப்படுகின்ற கட்டளைகள் அல்ல. முதுகுத்தண்டு (Spinalcord) உண்டாக்குகிற உத்திரவுகளாகும் என்று நாம் அறியலாம்.

இவ்வாறு ஏற்படுகின்ற எதிர்ச் செயல்கள் இரண்டு வகைப்படும். கட்டளைக்கிணங்க ஏற்படும் எதிர்ச் செயல்கள். கட்டளைக்கு ஆட்படாத, தானியங்கியாக வருகிற எதிர்ச் செயல்கள் ஆகும். 

தானியங்கு எதிர்ச் செயல்கள் (Unconditioned Reflex Actions). இப்படிப்பட்ட தானாக விளைகிற எதிர்ச் செயல்களுக்கு என்று பல குணாதிசயங்கள் இருக்கின்றன. அவைகள் பற்றி சற்று விவரமாகப் புரிந்து கொள்வோம்.

1. தானியங்கு எதிர்ச் செயல்கள், பிறப்பிலேயே உருவாகின்றன. உடலுறுப்புக்களோடு ஒன்றிப்போய், நடத்தைகளாக வெளியாகின்றன.

2. அவைகள் விரைவாக, உடனுக்குடன் வெளிப்படுகின்றன. அதே சமயத்தில், குறிப்பிட்ட அமைப்புடன், தெளிவான தன்மையுடனே அவை நடைபெறுகின்றன.

3. முன் கூட்டிய சிந்தனை எதுவும் செய்யாமலேயே தானாகவே அந்த செயல்கள், ஊக்கிகளுக்கு ஏற்ப தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.

4. இந்த எதிர்ச் செயல்கள் ஒரே அமைப்பும், தெளிவான தன்மையும், விரைவாகவும், உள்ள தன்மைகள் கொண்டனவாகவே அமைந்திருக்கும்.

5. அவைகள் தன்னிச்சையானது, தன்னினைவு இல்லாமல், தாராளமாக உடனடியாக நடைபெறுவதாகும்.

6. எதிர்செயல்கள் எல்லாம் உறுப்புக்களின் விரைவான வெளிப்பாடாகவே விளங்கியிருப்பதும், அவைகள் பாரம்பரியக் குணாதிசயங்கள் கொண்டனவாகவும் விளங்குகின்றன.

7. யாரும் கற்றுத் தராமலேயே, தானாகவே அவைகள் நடைபெறும் சிறப்புப் பெற்றனவாகும்.

8. சிறிதும் தாமதம் இல்லாமல், உடனடியாக செயல்படும் தன்மையுடன், எப்பொழுதும் வெளிப்படும் பண்பாடுகளாகும். 

எதிர்ச் செயல்கள் எத்தனையோ!

கண்ணைச் சிமிட்டுவது, காறித்துப்புதல், தும்மல், முழங்காலை இழுத்துக் கொள்ளுதல், எல்லாம் எதிர்ச் செயல்களுக்கு உதாரணங்களாகும். இதயம் ஆற்றுகிற வேலை, நுரையீரல்களின் இயக்கம், குடல்கள் குலுங்கி உணவைக் கலக்குதல் போன்றவையாவும், இயற்கையான இயக்கங்களுக்கு சான்றுகளாக அமைந்திருக்கின்றன.

இவை இரண்டையும் இணைத்து,பாவ்லோவ் என்ற சோவியத் நாட்டு உளவியல் அறிஞர் ஒர் ஆய்வினை நிகழ்த்தி உண்மை ஒன்றைக் கண்டறிந்து கூறியிருக்கிறார்.

அந்த ஆய்வை ஒரு நாயின் மூலம் செய்து காட்டினார்.

உணவைப் பார்த்ததும் நாய்க்கு எச்சில் ஊறுகிறது. இது இயற்கையான தூண்டலும் எதிர் செயலும் ஆகும். (Stimulus and Response).

இந்த இயற்கையான செயல் ஊக்கியுடன், ஒரு செயற்கையான துண்டலையும் பாவ்லோவ் ஏற்படுத்தினார். உணவை நாய்க்கு வைக்கும் பொழுதே, ஒரு முறை மணியையும் அடித்து வைத்தார்.இந்த உணவையும் மணி அடிப்பதையும் இணைக்கிறபோது, அந்தநாய்க்கு எச்சில் ஊறியது, எச்சில் கொட்டியது.

சிறிது நாள் கழித்து, இயற்கைத் தூண்டல் நிறுத்தப்பட்டது. அதாவது உணவு வைப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் மணி சத்தம் கேட்டபொழுது, நாய்க்கு எச்சில் சொட்ட ஆரம்பித்தது. 

இப்படியே சிறிது நாள் கழிந்தது, உணவும் இல்லாமல், மணி சத்தமும் கேட்டபொழுது,நாய்க்கு எச்சில் ஊறுவது நின்று போனது.

ஆகவே உணவு என்பது இயற்கைத் துண்டல். இயற்கைத் தூண்டல் இருக்கும்போது தான், செயற்கைத் தூண்டலும் பலன் பெறுகிறது. இயற்கைத் தூண்டல் இல்லாமல், செயற்கைத் தூண்டலால் எதிர்பார்த்த எதிர் செயலை உருவாக்கிவிட முடியாது. அகவே, செயற்கைத் தூண்டல்+இயற்கைத் துண்டல் எதிர் செயல் என்பதாக அமைகிறது. இயற்கைத் தூண்டல் நடுவில் இருந்து எதிர் பார்த்த காரியத்தை இயக்குகிறது என்பதுதான் பாவ்லோவின் கண்டுபிடிப்பாகும்.

பாவ்லோவின் பரிசோதனை

மணி அடித்தவுடன், அந்த சத்தத்தைக் கேட்ட நாய்க்கு எச்சில் சுரப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்தியாகி விட்டது.அது நாய்க்குத் தவிர்க்க முடியாத தூண்டுதலாகி விட்டது. நிலைத்து விட்டது. இப்படி ஏற்பட்ட நிலைமைக்கு ஏற்ப, நாயின் உறுப்புக்கள் பழகிக் கொண்டன. அந்தத் தூண்டுதலுக்கு ஏற்பட செயல்படத் தொடங்கின.

அதனால்தான், செயற்கைத் துண்டல்களை விரிவு படுத்தும்போதும், அதற்கேற்ப உடலுறுப்புக்கள் ஏற்றுக் கொண்டு, இணக்கமாக செயல்படுகின்றன என்று கூறிய பாவ்லோவ், மணி சத்தம் கேட்டதும் நாயின் ஜீரண சுரப்பிகள் செயல்படத் தொடங்கியதையும், எலும்புத் தசைகள் இயங்கத் தொடங்கியயுைம் நிரூபித்துக் காட்டினார். 

அது போலவே, குழந்தைகளுக்கு செயற்கைத் துண்டுதல்கள் தந்து பயிற்சியளிக்கும்போது, எதிர்பார்க்கும் பழக்கங்களை குழந்தைகள் எளிதாகக் கற்றுக் கொள்கின்றனர். அந்தப் பழக்கங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் ஆற்றல், செயற்கைத் துண்டுதல்களுக்கும் இருக்கின்றன என்பதுதான் அந்தக் கோட்பாடாகும்.

கற்றல் திறன்களுக்கு இந்தக் கோட்பாடு நிறைய உதவுகிறது. உதாரணமாக, கண்பார்த்து கை செய்கிற கண்கை கூட்டுச் செயல் (Hand eye coordination) மூலம், உடலுறுப்புக்களின் சீரான சிறப்பு இயக்கங்கள், யாவும் எதிர் செயல் பண்புகளின் வழியாக எளிதாகக் கற்பிக்கப் படலாம் என்பதை தெளிவாகிறது.

அவ்வாறு கற்கின்ற முறைகளுக்கேற்ற விதிகளைப் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம்.

கற்றல் விதிகள் (Laws of learning)

கற்றல் என்பது இயற்கையான ஒரு பொதுக் குறிப்பாகும். நான்கு சுவர்களுக்கிடையில் அமர்ந்து கொண்டு, நடத்துகிற அறிவுத் திரட்டல் அல்ல இது. வீடுகள் அல்லது பள்ளிகளில் உட்கார்ந்து கொண்டு படிப்பதால் மட்டும் கற்றல் நிகழ்ந்து விடுவதில்லை.

தனிப்பட்ட ஒருவர், தான் செய்கிற செயல்கள் வழியும், அவற்றின் மூலமாகக் கிடைக்கின்ற அனுபவங்கள் மூலமாகவும் நிரந்தரமாகக் கிடைக்கக்கூடிய உணர்வுகள், சிறந்த உணர்வுகள் தான், கற்கும் நிலையைக் கனிவுற அமைத்துத்தருகின்றன.

கற்றல் என்பது, சூழ்நிலைகளுக்குதம் அனுபவங்களுக்கும் இடையே ஏற்படுகிற காரியங்களினால்  உண்டாகும் நடத்தையின் மாறுதல்கள் அளிக்கின்ற அறிவுச் சிறப்பாகும்.

மனித இனத்தில் பிறக்கின்ற ‘சின்னஞ் சிறுசுகள்’ தான் மனோநிலையில், உணர்வுகளில், உடலுக்குத் தேவையானவற்றில் வளர்ச்சி பெறாமல், குழந்தைப் பருவத்தில் கஷ்டப்படுகின்றனர்.

நாளாக நாளாக, அவர்கள் வளர்கிற பொழுதே அடைகின்ற அனுபவங்கள் மூலமாக அறிவினைப் பெற்றுக் கொண்டு, மற்ற எல்லா உயிரினங்களையும்விட, ஆற்றல் மிக்கவராக விளங்கி விடுகிறார்கள்.

புதிய புதிய வாழ்க்கைச் சூழல்கள் அனுபவங்களை வழங்கி விடுவதோடு, அறிவையும் வளர்த்துக் கூர்மையாக்கி விடுகின்றன.அத்துடன், சூழலை சுமுகமாக அணுகி வெற்றி பெறத்தக்க நிலைமைகளையும், வலிமைகளையும் வளர்த்து விடுகின்றன. ஏனெனில், உடலாலும், மனதாலும், உணர்வாலும் ஒட்டு மொத்தமாகவே குழந்தைகளைக் கம்பீரமாக வளர்க்கும் பணியினை, சூழல்கள் மேற்கொள்கின்றன.

ஹென்றி ஸ்மித் எனும் அறிஞர் கூறுகிறார் இப்படி:- “கற்றல் என்பது புதிய நடத்தைகளைக் கற்றுத்தருகிறது. சேமித்துத் தருகிறது. அது பழைய நடத்தைகளைப் பலஹீனப் படுத்தி விடுகிறது அல்லது பழைய நடத்தைகளுக்குப் பலம் கூட்டி விடுகிறது.”

சூழ்நிலைகளில், இக்கட்டான நிகழ்ச்சிகளே ஒருவருக்கு நடத்தையில் நுணுக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. பல்வேறு விதமான, வித்தியாசமான சூழ்நிலைகளுக்கேற்ப, ஆட்படுகிற மனிதர்களும்  நடத்தையில் மாறுபட்டு நடந்துகொள்கிறார்கள். அப்படி நடக்கும் அனுபவங்கள் ஆற்றலை வழங்குவதுடன், அறிவையும் நன்கு வளர்த்து விடுகின்றன.

ஆகவே, கற்றல் என்பது ஏற்படும் அனுபவங்களின் விளைவாக நடத்தையில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்துகிற ஒன்றாக அமைகிறது என்றே நாமும் அறுதியிட்டுக் கூறலாம்.

கற்றல் என்பது காலையில் தொடங்கி, மாலையில் முடிந்துபோகிற காரியமல்ல. அது வாழ்க்கை முழுவதும் விடாது தொடர்ந்து நடக்கிற, மிகுந்து வருகிற காரியமாகும்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அனுபவத்தை அளிப்பதாகப் பிறக்கிறது. பிறக்கும் அனுபவங்களுக்கு அனுசரித்துப் போகின்ற நடத்தைகளுடன், குழந்தையும் நடந்து கொள்கிறது. மாறிக்கொள்கிறது.

இதனால்தான், ஒருவரது சுற்றுப்புறச் சூழலும், பாரம்பரிய குணாதிசயங்களும் கற்றலுக்கு மிகுந்த வலிமையான வழிகாட்டல்களாக அமைந்துள்ளன. இப்படிக் கற்றுக்கொள்வது என்பது அறிவு முதிர்ச்சிக்கும் அழைத்துச் செல்கிற ஆற்றல் கொண்டதாக விளங்குகிறது.

கற்றுத்தரும் கோயில்கள்

கல்வி நிலையங்கள் எல்லாமே கற்றுத்தருகின்ற கோயில்களாகவே விளங்குகின்றன. கோயிலில் மிக முக்கியமானவர்களாக விளங்குபவர்கள் இரண்டு வகையினர். கற்பிப்பவர்கள் கற்பவர்கள் ஆவார்கள்.

கற்றுத்தருபவர்கள் ஆசிரியர்கள். அதை ஏற்றுக் கொள்பவர்கள் மாணவர்கள். இந்தக் காரியம் இனிதாக, இணைந்ததாக நடைபெற வேண்டுமானால், ஆசிரிய மாணவர்களிடையே சிறந்த ஒற்றுமை, ஒன்றுட்ட நோக்கம் அமைந்திட வேண்டும். இந்த எழுச்சி எப்படி ஏற்படவேண்டும் என்பதற்கான, ஆய்வுகள் பல அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

தார்ன்டைக் (Thorndike) எனும் உளவியலறிஞர். இவரது வாழ்க்கைக் காலம் 1874 முதல் 1949 வரை. இவர் தன் வாழ்நாளில், நாய்கள், குரங்குகள், மீன்கள் போன்ற விலங்கினத்தில் பல ஆய்வுகளை நிகழ்த்திப் பார்த்தார். அத்தகைய ஆய்வுகள், கற்பதில் உள்ள ரகசியத்தை வெளிப்படுத்தித்தந்தன.

அவரது ஆய்வுகள் விலங்கினத்தில் இருந்தாலும், அவையே மனித இனத்திற்கும் பொருந்துகிற மகாத்மியத்தைப் பெற்றிருந்தது. அவற்றை, அறிஞர்கள் பலரும் உளமாற ஏற்றுக்கொண்டனர். அத்தகைய கருத்துக்களம் நமது உடல் கல்வித்துறைகளுக்கும் சாலப்பொருந்துவனவாக அமைந்திருக்கின்றன. நாமும் அவற்றை உடற் கல்விக் கற்றலுடன் இணைத்துக் கொண்டால், நமது வரிகளில் வேகமும், முறைகளில் நுணுக்கமும் பெருகும்.

அத்தகைய கற்றல் விதிகள் பற்றியும் சிறிது விளக்கமாக புரிந்து கொள்வோம்.

1. ‘ஆயத்த நிலை விதி’ (The law of Readiness)

எதையும் ஏற்றுக்கெள்ளத் தயாராக இருப்பதற்குத் தான் ஆயத்த நிலை என்று சொல்லுகிறோம்.

தயாராக இருக்க வேண்டும். அதுவும் தேவையாக இருக்க வேண்டும். அதையும் ஏற்கின்ற பக்குவமும் இருக்கவேண்டும். இந்த இதமான நிலையில்தான் கற்க முடியும். கற்றதை நினைவில் கொள்ள முடியும். 

உடலாலும் மனதாலும் ஒரு குழந்தை கற்றுக் கெள்ளத் தயாராக இருக்கவில்லை என்றால், என்னதான் முயற்சித்தாலும், அந்தக் குழந்தையால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு மாறாக, எரிச்சல் ஏற்படும். திருப்தியற்ற, வெறுப்பும், வேதனையும், மந்தமான வரவேற்புமே கிடைக்கும்.

ஆகவே, குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கு முன்னதாகவே, அவர்களுக்குக் கற்றுக் கொள்கின்ற மனோ நிலையை ஊட்டி விடவேண்டும். அப்பொழுது கற்றுக் கொள்ளுதல் எளிதாகிறது. இனிதாகிறது. திருப்தியும் தருகிறது.

அதனால்தான், தான்டைக் என்பவர் ‘ஆயத்த நிலையானது ஆர்வத்தை ஊட்டுகிறது. ஆனந்தத்தைக் கூட்டுகிறது. மனநிலையையும் விரிவுபடுத்திக் காத்திருக்கிறது’ என்பதாகக் கூறுகிறார். ஆகவே, ஆயத்த நிலை என்பது கற்கத் தயார் நிலையில் உள்ளதைத் தெளிவு படுத்துகிறது.கற்றுக்கொள்பவருக்கு அதுவே விருப்பமான சிறப்பு நிலையாகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் இந்தக் குறிப்பை நன்கு கருத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகள் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் பொழுதுதான் கற்றுத் தரவேண்டும். கற்றுத்தரும் அந்த செயலைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்களா, அந்த செயலை அவர்களால் செய்ய முடியுமா என்றெல்லாம் ஆராய்ந்த பிறகே கற்பிக்க வேண்டும்.

ஒரு வயதுக் குழந்தையிடம் பேனாவைக் கொடுத்து எழுதச் சொன்னால் எப்படி அதனால் முடியாதோ, அது  போலவே, குழந்தைகளின் வலிமையை, திறமையை முதலில் அறிந்து கொண்டு கற்பிப்பது அவசியம்.

குதிரையைத் தண்ணிர்த் தொட்டி வரை கூட்டிச் செல்ல முடியும். குடிப்பது குதிரை தானே! அதுபோலவே, குழந்தைகளுக்குக் கற்றுத்தர முடியும். எவ்வளவு துரம் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

ஆகவே, உடற்கல்வி ஆசிரியர்கள் கற்றுத்தர இருக்கின்ற திறன்களை, செயல்களை, அவர்கள் விரும்பி ஏற்பதுபோல முதலில் விளக்கி, ஏற்கின்ற ஆயத்த நிலையை ஏற்படுத்தி விடவேண்டும். அதன் பிறகு அந்த செயலால் என்ன பலன் ஏற்படுகிறது என்ற முடிவையும், மேற்கொள்கிற இலட்சியத்தையும் விளக்கிவிடவேண்டும். அதன்பின் எப்படி அதை சிரமமின்றி செயல்படுத்த வேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுத் தருவது.குழந்தைகளுக்கு வெறுப்பேற்றாமல், அலுப்பினை உண்டாக்காமல், திறமையாகச் செய்திட உதவும்.ஆகவே, கற்றலில் ஆயத்த நிலை என்பது முதல் தரமான முதல் விதியாகும்.

அ)

2. பயன்தரு நிலை விதி (The law of effect)

ஒரு செயலில் ஈடுபடும்பொழுது, அதன் முடிவு மகிழ்ச்சியை அளிக்கிறதா, துன்பத்தைத் தருகிறதா என்பதைப் பொறுத்தே, அதில் விருப்பும் அல்லது வெறுப்பும் ஏற்படுகிறது.

மகிழ்ச்சி ஏற்படுகிறபொழுது செயல்படவும், மீண்டும் தொடர்ந்து உழைக்கவும் விருப்பம் ஏற்படுகிறது.

துன்பமும் வலியும் வேதனையும் ஏற்படுகிறபோது, செயல்படுவதில் ஆர்வம் குறைகிறது. வெறுப்பு மேலிடு கிறது; செயலை புறக்கணிக்கும் சிரத்தை மேலோங்குகிறது.

ஆகவே, இந்தவிதி விளக்குவதாவது: திருப்தி அளிப்பது அல்லது எரிச்சலூட்டுவது என்ற பயனை அளிக்கிற செயலைக் கற்பிப்பது. இப்படி ஏற்படுகிற முடிவானது பரிசைப் பெறுவதாக இருக்கக்கூடும். அல்லது தண்டனை தரத்தக்கதாக அமைந்து விடுவதும் உண்டு.

எனவே, ஒரு குறிப்பிட்ட பயனைக் கொடுக்கிற காரியம், திருப்தியை உண்டாக்கும். அந்தத் திருப்தியே அதிக ஆர்வத்தை உண்டாக்கும். குழந்தைகள் எப்பொழுதும் குதுகலமான சூழ்நிலையையும், களிப்பு தருகின்ற காரியங்களைச் செய்யவுமே விரும்புவதால், அவர்களுக்குத் தேவையான, திருப்தியையும் சந்தோஷத்தையும் கொடுக்கின்ற காரியங்களையே தந்திட வேண்டும்.

உடற்கல்வி ஆசிரியர்கள், இவ்விதியை மனதில் கொண்டு, குழந்தைகள் விரும்புகின்ற, விருப்பமான செயல்களையே கற்பிக்க வேண்டும். சுவையான விளையாட்டுக்களை அல்லது பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கிற ஆசிரியர்களின் பக்குவ நிலையைத் தொடர்ந்து, குழந்தைகளுக்குரிய விருப்பத்தில் பல புதிய திருப்பங்களை உண்டு பண்ண முடியும்.

குழந்தைகளுக்குப் பயம் ஏற்படாத வகையிலும்; ஏதேனும் விபத்து நேர்ந்து விடுமோ, காயம்பட்டுவிடுமோ என்ற அச்சம் சூழாத தன்மையிலும், குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பங்கேற்க முனைகிற விதங்களில் ஆசிரியர்கள். செயல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே  அவர்களின் சிறப்பான செயல் மேம்பாடுகளை செவ்வனே வளர்த்து விட முடியும்.

2 ஆ. பயன்தரு நிலை விதி:

ஒன்றைக் கற்றுக் கொள்வதிலும், கற்றலில் ஏற்படுகின்ற பயன்கள் பற்றி ஆர்வம் கொள்வதிலும், ஒருவருக்குப் போதிய பலன் எதுவும் கிடைத்துவிடாது. சிறந்த பயனைப்பெற தொடர்ந்து பயிற்சி செய்வது அவசியம்.

அத்தகைய பயிற்சியின் அவசியத்தைத் தான் பயிற்சி நிலை விதி, பெரிதாக வற்புறுத்துகிறது.

தொடர்ந்து பழக்கப்படுத்தப்பட்டு வருகிற பயிற்சியே, பெறும் பயன்களில் முழுமை பெற உதவுகிறது. இதை இரண்டாகப் பிரித்துக் காட்டுவார்கள் உளநூல் அறிஞர்கள்.

பயன்படுத்துவது (Use) பயன்படுத்தாமல் விட்டு விடுவது (Disuse) என்பதாகப் பிரிப்பார்கள்.

ஒரு காரியத்தை அல்லது செயலைச் செய்ய, துண்டலை (Stimulus) அடிக்கடி, அடுத்தடுத்து தொடுத்துக்கொண்டே வந்தால்,கொடுத்துக்கொண்டே வந்தால், அதற்கான எதிர்வினை (Response) சரியாக நடக்கும். வலிமையுடன் கிடைக்கும்.

வெளிப்புறத் தூண்டல், உட்புற எதிர்வினையை உண்டாக்கும் நரம்பு மண்டலத்தைப் பயன்படுத்தி, சிறப்பாக செயல்படச் செய்துவிடும்.இப்படி அடிக்கடிப் பழகப்பழக நளினம் பெறுகிற நாட்டியம்,இசை, சைக்கிள் ஒட்டுதல், தட்டச்சான டைப் அடித்தல் போன்ற செயல்கள் இதற்கான சான்றுகளாகும். 

பழகப் பழக செயல் சிறப்படைவது போலவே, பழகாமல் விட்டு விடுகிற எந்தச் செயலும் பலஹீனம் அடைந்து போகிறது. தூண்டலுக்கும் எதிர்வினைக்கும் உரிய சம்பந்தம் விட்டுப்போகிறது. விடுபட்டுப் போகிறது.

விளக்கம் தரும் தத்துவமானாலும், விவரமான செயல்படுகிற காரியமானாலும், சரியான தூண்டல் இருந்தால், நெறியான எதிர்ச்செயல் ஏற்பட உதவும். வளர்க்கும். வலிமை சேர்க்கும். இப்படிப்பட்ட எழுச்சியான கற்றுக் கொள்ளும் முறையை வளர்க்க உதவும் மூன்று விதிகளும், மனிதகுலத்திற்கு மிகவும் முக்கியமான தேவை என்பது உளநூல் வல்லுநர்களின் கருத்தாகும்.

உடற்கல்வியில், ஆசிரியர்களுக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.மகிழ்ச்சி தரும் செயல்கள் தாம் விளையாட்டு என்பதை விளக்கவும், வளமாக செயல்படுத்தவும் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன.

அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை ஆசிரியர்கள் அமைத்துத் தருவது அந்த ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் விளையாட்டுக்களைப் பொறுத்தே அமைகின்றன. கற்றுக் கொள்ளும் மாணவர்கள், எவ்வளவு ஆர்வத்துடன் பங்கு பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தே, விளையாட்டும் சிறப்பு பெறுகிறது. முயற்சியும் சிறப்படைகிறது.

விளையாட்டுக்களின் போது, விபத்து ஏற்படுத்தும் சூழ்நிலைகளை வாய்ப்புக்களைத் தடுத்து விடவேண்டும். தவிர்த்து விடவும் வேண்டும். விளையாட்டுக்களை நன்கு விளக்குவதுடன், எப்படி பங்கு பெற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட வைப்பது, திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிப்பதுடன், குழந்தைகள் தொடர்ந்து பங்குபெற ஊக்குவிப்பதாகவும் அமையும்.

3. பயிற்சி விதி (The law of Exercise)

இந்த விதி தருகிற விளக்கமாவது: பயிற்சிகள் தான் ஒரு செயலைப் பக்குவப்படுத்தி, செம்மைப்படுத்துகின்றன. பயிற்சிகள் என்பது, தொடர்ந்து, விடாமல் முறையோடு செய்து வருகின்ற முறைகளாக அமைகின்றன.

இப்படிச் செய்கிற பயிற்சி முறைகளை விளக்கும் விதியானது, இரண்டு பிரிவாகப் பிரிகிறது. 1. பயன் படுத்தும் விதி. (Law of use) 2. பயன்படாத விதி (Law of Disuse)

ஒரு தூண்டுதலுக்கும் அதன் தொடர்பான செயலுக்கும் அடிக்கடி தொடர்பும் செய்கைகளும் பயிற்சிகளும் தொடரும் போது தான், செயலில் செம்மையும் செழுமையும் விளைகின்றன. அதாவது நரம்பு செயல்களை உண்டாக்கும் நரம்பு மண்டலம், ஒரே செயல்களை செய்ய வைக்கும்போது செப்பம் ஏற்பட்டு, செழித்தோங்கி நிற்கிறது. நடனம், சைக்கிள் ஒட்டுதல், டைப் அடித்தல் போன்ற செயல்கள் யாவும், தொடர்ந்து செய்யும் பயிற்சிகள் தனித்திறன் பெறுவதற்குரிய சான்றுகளாகும்.

தூண்டலுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லாமல், செயல்கள் தடைபட்டுப் போனாலும், விடுபட்டுப் போனாலும்,மேற்கொள்கிற செயலில் தெளிவு இருக்காது. தேர்ச்சி இருக்காது. திறன் நுணுக்கம் பெருகாது. இதில் திறமையும் விளையாது.

அதனால்தான் தார்ன்டைக் என்ற உளநூல் அறிஞர் பின்வருமாறு கூறுகிறார். தியரியும் (Theory) பயிற்சியும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், அதில் ஏற்படுகிற கற்றலும் கல்வியும் நிறைவு பெறுகிற இந்த நிறைவான செயல்கள் விளைய, தயார் நிலைவிதி, பயிற்சி விதி, திருப்தி விதிகள் துணை நிற்கின்றன.

உடற்கல்வித் துறையில் இந்த மூன்று விதிகளும் முழுமையாகச் செயல்படுகின்றன. பயிற்சியே செயல்களைப் பக்குவப்படுத்துகின்றன. ஒருங்கிணைந்த செயல் முறை, இதமான இயக்கங்கள், குறைந்த அளவு சக்தியால் நிறைந்த பணியாற்றல், அதிகத்திறன், சிறந்த செயல் சாதனையெல்லாம், உடற்கல்வித்துறை தரும் தொடர்ந்த பயிற்சிகள் மூலம் பங்கு பெறுவோரிடையே எதிர் பார்க்கலாம்.

‘செய்து கொண்டே கற்றுக் கொள்ளுதல்’ என்பது நவீனக் கல்விமுறையின் நனி சிறந்த கொள்கையாகும். இப்படிப்பட்ட செய் முறைகளைக் கொண்டே உடற் கல்வித்துறை சிறப்புப் பெற்றிருக்கிறது என்ற குறிப்பை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது.

கற்றல் முறைகளில் மேலும் பல விதிகள் இருக்கின்றன.அவ்விதிகள் பற்றி, சுருக்கமாக விளக்குகின்றோம்.

1. தொடர்பு விதி (Law of Continuity)

ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் உள்ள தொடர்பு பற்றி நினைவுபடுத்தித் தூண்டுகின்ற விதி என்று கூறலாம். தாஜ்மகால் என்றதும் அது அமைந்திருக்கின்ற யமுனை ஆற்றங்கரையும் நினைவுக்கு வருகிறதல்லவா!

கண்ணகி என்றதும் காற்சிலம்பும், கம்பன் என்றதும் இராமாயணமும் உடனே நினைவுக்கு வருகிறது. இப் படிப் பட்ட நினைவுகள் அனுபவங்கள் மூலமாகவே தொடர்ந்து ஏற்படுகின்றன.

2. ஒப்புமை விதி (Law of Similarity)

ஒன்றை நினைத்தவுடன், அதே போல சாயலும், ஒத்தப் பண்பும் கொண்ட மற்றொன்று நினைவுக்கு வருவதைத்தான் ஒப்புமை என்கிறோம்.

மென் பந்தாட்டம் (SoftBall) என்று நினைத்தவுடன், தளப்பந்தாட்டம் (Base ball) நினைவுக்கு வருகிறது. கால்பந்தாட்டம் என்றதும், ரக்பி நினைவுக்கு வருகிறது. இதைத்தான் ஒப்புமை விதிக்கு உதாரணம் கூறுவார்கள்.

3. எதிர்மறை விதி (Law of Contrast)

ஒரு கருத்து நினைவுக்கு வருகிறபோது அந்தக் கருத்துக்கு எதிர்மாறான கருத்து நினைவுக்கு வருவது இயற்கைதான். இருள் என்றதும் ஒளியும், மேடு என்றதும் பள்ளமும், செல்வம் என்கிறபோது ஏழ்மையும், நன்மை என்கிற போது தீமையும் நினைவுக்கு வருவது இதற்கு சான்றாகும்.

தவறுகள் நிறைந்ததாக ஒரு போட்டி நடைபெறுகிறபோது சிறப்பாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்று நினைவுக்கு வருவதையும் நீங்கள் நினைவில் கொள்ளலாம்.

4. முதல் ‘அனுபவ விதி’ (Law of primary)

முதலில் அதாவது முதல் நாளில் எந்தத் தொழிலிலும் ஏற்படுகிற முதல் அனுபவம் பற்றிய விதி இது. முதல் நாளில் பெறுகிற இன்பம் மறக்க முடியாத இன்பமாக வளர்வதுடன், நினைக்குந்தோறும் எழுச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். முதலில் பெறுவது துன்பமாக அமைந்தால், அந்தத் துன்பம் ஆறாத துன்பமாக அமைந்துவிடும்.

அதையே முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி பேசுகிறது. முதல் நாள் வகுப்பில் மாணவர்களிடம் பேசுகிற ஒரு ஆசிரியர், சிறப்பாக நடத்தி, மாணவர்களிடம் சிறப்பிடத்தைப் பெற்றதால், அவரது மதிப்பும் மரியாதையும் பின்னும் பெருகி வளர்கிறது.

அவரே மாணவர்களிடம் முதல் வகுப்பில் போரடித்து விட்டால், அவரை காணும் மாணவர்கள், கேலி செய்திடும் போக்கை வளர்த்து விடுகிறது.

இதைத்தான் முதன்முதலாகப் பெறுகின்ற அனுபவ விதி ஆழமாக எடுத்துரைக்கின்றது.

5. அண்மை அனுபவ விதி (Law of Recency)

மிகவும் சமீப காலத்தில் ஏற்படுகிற நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் தாம், மனதில் மிகுதியாக நிற்கின்றன. அவற்றை எளிதாக நினைவு கூரமுடிகிறது. அடிக்கடி நினைத்தும் சுவைத்தும் பார்க்க முடிகிறது.

‘காயங்களை காலம் ஆற்றும்’ என்பது பழமொழி; நாளாக நாளாக, நினைவுகள் மாறிப் போகின்றன. புதிய அனுபவங்களே பொலிவு பெற்று முன்னணியில் நிற்கின்றன என்பதையே இந்தவிதிவிரித்துரைக்கிறது.

6. இயல்பாகக் கற்றல் விதி (Law of Belongingness)

மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொழுது உண்டாக்குகிறதுண்டலும்,ஏற்படுத்துகின்ற செயல்களும் இயற்கையானதாக இருந்தால், கற்றலில் தெளிவும், சுவையும் ஏற்படும். 

குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிற பொழுது, இயற்கையான முறையில், காட்சி அமைப்புகளுடன் பாடத்தை நடத்துகிறபோது, அவரது போதனை வெற்றியடைகிறது. கேட்பவர்களும் எளிதாகப் புரிந்து கொள்கின்றனர்.

அதுபோலவே, விளையாட்டுக்களிலும் கடினமான திறன்களைக் கற்றுத் தருவதற்கு முன்பாக எளிய திறன்களை இயல்பாகக் கற்றுக் கொள்வதுபோல் கற்றுத் தந்தால், சிரமமான திறன்களும் சீக்கிரம் வந்து விடும்.

உதாரணத்திற்கு நீளம் தாண்டல் நிகழ்ச்சி. இதில் வேகமாக ஓடிவருதல், காலூன்றி உதைத்து மேலே எழும்புதல், காற்றில் நடத்தல், கால்களை நீட்டிக் கொண்டே மணலில் கால் பதித்தல் போன்ற பல திறன்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கற்றுக் கொள்ளும்போது, அந்தத் திறன்கள் அற்புதமாக வளர்ந்து கொள்கின்றன.

7. தொடர்ந்து தூண்டிவிடும் விதி (Law of Intensity of Stimulus)

துண்டல்களின் வலிமையும், தொடர்ந்து தூண்டிவிடும் காரியங்களே, ஆழ்ந்து கற்பதற்கு அரும் உதவிகளை ஆற்றுகின்றன. தூண்டல்கள் வலிமையாகவும், வற்புறுத்தல் மிகுந்ததாகவும் விளங்கும்போது, ஏற்படுகின்ற எதிர்வினை செயல்களும் வலிமையானதாகவும், கட்டாய மானதாகவும் ஏற்பட்டு விடுகின்றன.

உதாரணமாக, தேசிய அளவிலான ஒரு போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பினைப் பெறுகின்ற ஒரு விளையாட்டு வீரர், தன் சக்திக்கு மேலாக பயிற்சிகளைச் செய்ய முயற்சிக்கிறார். திறன்களை சிறப்பாகக் கற்றுக்  கொள்ளவும், மெருகேற்றி மேன்மைப்படுத்திக் கொள்ளவும் விழைகிறார்.உழைக்கிறார்.

என்றாலும், ஒருவருக்கு எவ்வளவு சாமர்த்தியம் உண்டு என்பதை கற்றுத் தரும் ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் கண்டு கொண்ட பிறகே, வாய்ப்புக்களை வழங்க வேண்டும். அப்பொழுதுதான், வாய்ப்பு பெறு பவரும், வல்லாளராகப் பிரகாசிக்கும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள முடியும்.

சாமர்த்தியம் இல்லாதவருக்கு பெரிய வாய்ப்புக்களைத் தருகிற பொழுது, அவர் வீணான முறையில் விரும்பி பயிற்சி பெறுகிற பொழுது, எதிர்பார்த்தத் திறன்களை எய்த முடியாமல், வேதனைப் பட நேரிடும். அதுவே, அவர் மன எழுச்சியை மாய்த்து விடவும் கூடும். ஆகவே, தூண்டல்களிலும் துல்லியமான கணிப்பு தேவைப்படுகிறது என்கிறது இந்த துண்டல் விதி.

பயன்தரும் திறன்களின் பரிமாற்றம் (Transfer of Training)

கற்றல் விதிகளிலேயே, இந்த விதி ஒரு கம்பீரமான கொள்கையை, மக்களுக்கு அறிவிக்கிறது. அறிவூட்டுகிறது. அலங்காரமாக வழிகாட்டுகிறது.

‘ஒரு துறையில் கற்று, சிறப்பான பயிற்சிகளைச் செய்து, வளர்த்துக் கொள்கிற ஒரு திறமையானது, மற்றொரு இடத்தில் மகிமையுடன் உதவுகிறது’ என்பது தான் அந்த விதியின் கூரிய குறிப்பாகும்.

“குறிப்பிட்ட ஒரு கற்றல் அனுவத்தை ஒரு தனியாளர் பெற்றுக் கொண்டு, தன்னுள்ளே அதனை செழுமையாக வளர்த்துக் கொண்டிருக்கும் பொழுது, வேறொரு நிலையில் எடுபடுகின்ற துண்டல்களை சமாளித்துக் கொள்ள, அந்தக் கற்றல் அனுபவத் திறன் முழுதாகக் கை கொடுத்துக் காப்பாற்றுகிறது”. அப்படித் தான் ஒரு துறையின் பயிற்சியானது, மற்றொரு துறையில் சமாளிப்பதற்கு சாதகமாகி உதவுகிறது’ என்று கல்விக் களஞ்சியம், இப் பரிமாற்றத்திறன் பற்றி விமர்சிக்கிறது.

அப்படி ஏற்படுகின்ற பரிமாற்றத்தின் அளவானது, தனிப்பட்ட ஒவ்வொருவரின் உள்ளாற்றல், உணர்ந்து கொள்ளும் சக்தி, பெற்ற அனுபவங்களைக் கொண்டு, பேணி வளர்த்துக் கொண்ட பேராற்றல் இவைகளைப் பொறுத்தே அமைகிறது.

இதிலே ஒரு சிறப்புக் குறிப்பு என்னவென்றால், அர்த்த பூர்வமான, அதிசயமான அனுபவங்களே, பரிமாற்றத்திற்கும் பேருதவியாக அமைகின்றன. அநாவசியமான திறன்கள், அர்த்தமற்றவைகளாகப் பயனற்றுப் போகின்றன.

வாழ்க்கையின் சவால்களை சந்திக்க, சமாளிக்க, சாதிக்க, சக்தி மிகுந்த திறன்களின் பரிமாற்றம் மிகவும் உதவிகரமாக விளங்குகின்றன.

இப்படிபிறக்கின்ற பரிமாற்ற சக்தியை,நாம் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.

1. நேர்முகப் பரிமாற்றம் (Positive Transfer)

ஒரு விளையாட்டில் பெற்று வளர்த்துக் கொண்டிருக்கிற திறன் நுணுக்கங்கள், அப்படியே அடுத்த விளையாட்டுக்கும் பொருத்தமாக உதவுகின்ற பாங்கினையே நேர்முகப்பரிமாற்றம் என்று கூறுகிறோம். 

பூப்பந்தாட்டத்தில் கற்றுக் கொண்ட திறன் நுணுக்கங்கள், திறன்கள் யாவும் டென்னிஸ் விளையாட்டை நன்கு விளையாட உதவும்.

100 மீட்டர் தூர ஓட்டத்தில் பெற்றுக் கொண்டிருக்கும் வேகம், நீளத் தாண்டல் நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக உதவும். அதுபோல, உயரத் தாண்டும் சக்தியும் திறமையும், கோலுான்றித் தாண்டுவதற்குத் துணையாக அமையும்.

2. எதிர்முகப் பரிமாற்றம் (Negative Transfer)

ஒரு பயிற்சியில் பெறுகிற சக்தியும் திறமையும், மற்றொரு காரியத்திற்குப் பரிமாறும் போது பாதகமான பலன் அளிப்பதையே எதிர்முகப் பரிமாற்றம் என்று கூறுகிறோம்.

அதிக எண்ணிக்கையில் போடுகிற பஸ்கிகளும், தண்டால் பயிற்சிகளும், வேகமாக ஓடுகிற விரைவோட்டத்திற்குத் துணை தராது. மாறாக எதிர் மாறான தாகவே அமைகிறது என்பது நல்ல உதாரணமாகும். இதுபோல் பலமுறைகள் இருப்பதை அறிந்து தெரிந்து கொள்க.

விளையாட்டுத் திறன்களின் பரிமாற்றம்

விளையாட்டுத்திறன்கள் எல்லாம் வாழ்க்கை நிகழ்ச்சிகளை சந்தித்து, வெற்றி பெறக்கூடிய வகைகளில் தான் அமைந்திருக்கின்றன. இத்தகைய பரிமாற்றத்தால் தான் விளையாட்டுக்கள் மனிதர்களது மேம்பாட்டுத் துணைவர்களாக விளங்குகின்றன.

எனவே, நேர்முகத்திறன் பறிமாற்றங்களே வாழ்க்கைக்கு உதவுகின்றனவாக அமைந்திருக்கின்றன. இப்படி  அமைந்து உள்ள காரணகாரியங்களை, உடற்கல்வி ஆசிரியர்கள் நன்கு ஆய்ந்து அலசிப்பார்த்து, அதன் பிறகே, மாணவ மாணவியர்க்குக் கற்றுத்தர வேண்டும்.

விளையாட்டுக்களில் ஏற்படுத்தித்தருகின்ற சூழல்களில், விளைகின்ற திறன்களை, வாழ்க்கைச் செழிப்புக்கு உதவும் திறன்களாக அமைகின்ற தன்மைகளால், விளையாட்டுக்களில் பங்கு பெறுபவர்கள். சமுதாய அமைப்பில், சக்தி மிக்கவர்களாக விளங்குவதுடன், மற்றவர்கள் உரிமைகளை மதித்தல், கூட்டுறவாக வாழ்தல், தீமைகளில் ஈடுபடாது ஒதுங்குதல், நல்லவைகளைச் செய்து உதவுதல் போன்ற பண்பாடு மிக்கக் காரியங்களிலும் சிறக்கின்றார்கள். ஆகவே, ஆசிரியர்கள் வாழ்வுக்கு வேண்டிய பண்புகள் கொடுக்கும் விளையாட்டுத் திறமைகளை வளர்த்துவிடவேண்டும் என்பதுதான், பயன் மிகு பரிமாற்றம் என்பதற்குப் பொருத்தமான அர்த்தமாக இருக்கும்.

அத்துடன், புதிய புதிய திறன்களை மாணவர்களுக்குக் கற்றுத்தருகிற பொழுது, அவர்கள் முன்னேற கற்றுக்கொண்டிருக்கும் பழைய திறன்களையும் வளர்த்து விடுவது போல, ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும். அதுவே திறமைகளின் பரிமாற்றமாக வளர்ந்து, நல்ல தேர்ச்சிமிக்க மக்களை நாட்டிலும் வீட்டிலும் உருவாக்கி வளர்க்கின்றன.

பயிற்சிப் பரிமாற்றக் கொள்கைகள் (Theories of Transfer of Training)

பரிமாற்றக் கொள்கைகளின் முக்கிய மூலமாக விளங்குவது மனம் (mind) என்பதாகும். ஆய்வு நிகழ்த்திய முன்னாள் அறிஞர்கள், உடல் என்பது வேறு, மனம் என்பது வேறு என்று தனித்தனியாகப் பிரித்துக் கூறினர். மனத்தைப் பற்றியே அதிகமாக ஆராய்ந்தனர். பேசினர்.

ஆகவே, பரிமாற்றக் கொள்கைகளில், மனத்தின் இயல்புகள் பற்றியும், அவற்றின் பிரிவுகள் பற்றியும் ஆராய்ந்து, பல்வேறு விதமான கொள்கைகளைக் கூறிச்சென்றனர். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தெரிந்து கொள்வோம்.

1. மனத்தின் நுண்பிரிவுக் கொள்கை (Theory of Faculty)

இக்கொள்கையானது, மனத்தின் மாண்பு மிகு அறிவுப் பகுதிகளை விரித்து, விளக்கிக் கூறுவதாகும். அதாவது மனம் என்பது, பல்வேறு அறிவு நுணுக்கப் பகுதிகளில் ஆட்பட்டதாக விளங்குகிறது. அதை காரணமறியும் திறன் (Reasoning); நினைவாற்றல்,(Memory); எண்ணுதல் (Thinking); கவனம் காெள்ளுதல் (Attention); நியாயத்துடன் நிலை உணர்தல் (Judgement); உன்னிப்பாக ஊன்றிப்பார்த்தல் (Perception).

மேலே கூறிய மனப் பண்புகள் யாவும், ஒன்றுக் கொன்று தொடர்புள்ளது போலவும், தனித்தன்மை கொண்டது போலவும் நமக்குத் தெரியும். ஆனால், அண்டம் என்பது முழுமையானதாகவும், அதனுள்ளே பல்வேறு உலகப் பிரிவுகள் பிண்டம் என்று பிரிந்து சூழ்ந்திருந்து. ஒன்றாக இயங்குவது போலவும், மனப் பிரிவுகள் செயல்படுகின்றன.

ஆனால் இக் கொள்கையில் சில குறைபாடுகள் இருக்கின்றன. உதாரணமாக, காரணம் அறியும் மனம்  இருக்கிற தென்றால், அதை மட்டும் வளர்த்தால், மற்ற நுண் பிரிவுப் பகுதிகள் எல்லாம் நிறைவாக வளர்ந்து கொள்ளும் என்பதைத் திட்ட வட்டமாகச் சொல்ல முடியாது.

இந்த மனப் பிரிவுகளுக்கு உள்ளேயே பல்வேறு உட்பிரிவுகள் இருப்பதால், ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்குமே தவிர, ஒன்றை வளர்க்க மற்றொன்று வளராது என்பதைக் குறிக்க ஒரு உதாரணம் கூறுவார்கள் வல்லுநர்கள்.

நினைவாற்றல் என்றால் அவை எத்தனையோ வகைப்படுகின்றன. காதுமூலம் நினைவுகொள்ளல், கண்வழி நினைவாற்றல், செயல்வழி நினைவாற்றல் என்று பல உண்டு. செவிவழி பெறுகிற நினைவாற்றலைக் கொண்டு, செயல் வழிபெறுகிற நினைவாற்றல் செழித்து வளராது. சில சமயங்களில், எதிர்மாறான விளைவுகள் ஏற்பட்டுவிடும்.ஆகவே, மனத்தின் நுண்பிரிவுக் கொள்கையானது, நிலைத்து நிற்க இயலாமற்போயிற்று.

2. பொதுக் குறிப்புக் கொள்கை (Common Element Theory)

தார்ண்டைக், உட்ஒர்த் எனும் இருவல்லுநர்கள், இந்தக் கொள்கையைத் தங்கள் அனுபவத்தின் மூலமாக உருவாக்கித் தந்தார்கள்.

அதாவது பொதுவான அமைப்புள்ள பொருட்ளால், ஒன்றின் மூலமாக ஒன்றினால், பயிற்சியை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். உதாரணமாக, பூகோளமும் சரித்திரமும் இணைந்து உதவிக் கொள்கின்றன. இரண்டுக்கும் படங்கள் (Maps) தேவை. ஆகவே,  பூகோளம், அதன் தரைப்படத்தின் மூலமாக, சரித்திரச் சான்றுகளுக்கு உதவுகிறது. அதுபோலவே கூட்டல் என்பது பெருக்கலுக்கு உதவுகிறது. எண்ணிக்கைகளில் கூட்டுகிற அமைப்பின் முடிவே, பெருக்கும் போது வருவதால் இரண்டுதம் பொதுக் குறிப்புக் கொள்கையாகிப் போவதை நாம், பார்க்கலாம்.

இந்தக் கொள்கை மூலமாக ஒன்றை நாம் புரிந்து கொள்கிறோம். பல மில்லியன் கணக்கில் உண்டாகும் குறிப்பிட்ட எதிர் செயல்களுக்கு ஏற்ப, ஒவ்வொன்றும் சிறப்பான இணைப்புகளைப் பெற்றிருக்கின்றன. எல்லாம் பொதுவானதாக இருந்து, பலசூழ்நிலைகளில் பல்வேறு விதமாக மாறி உதவி புரிந்து வருகின்றன. என்பதே இதன் அவசிய சிறப்பாகும்.

3. அறிவின் இரு பகுதிக் கொள்கை (Two Factor Theory)

பல ஆய்வுகள் செய்த பின்னர், இந்தக் கொள்கையை உருவாக்கித் தந்தவர் ஸ்பியர்மேன் என்பவர். இவரது கருத்துப்படி, அறிவானது இரு பகுதியாகப் பிரிந்து செயல்படுகிறது.பொது அறிவு (Generalintelligence). சிறப்பு அறிவு என்பதாகும்.

இந்த இரண்டு அறிவுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவே விளங்குகின்றன. அதாவது ஒரு செயலுக்கும் மற்றொரு செயலுக்கும் இடையே இவ்விரு அறிவுப் பகுதிகளும் வேறுபட்டே நிற்கின்றன. அதிலும், குறிப்பாக, சிறப்புப் பகுதி என்பது வேறுபட்ட செயல் களுக்கிடையே மாறுபட்டுத்தான் இருக்கிறது.

ஆனால், பொது அறிவுப் பகுதி, எல்லாவற்றிற்கும் பொதுத் தன்மை கொண்டதாக விளங்குகிறது. உதாரண மாக, பூகோளம், சரித்திரம், இலக்கியம், விஞ்ஞானம் என்பதெல்லாம் பொது அறிவின் தன்மையில் இயங்குகிறது.

இசை, கலை, ஒவியம், நீச்சல் போன்றவை எல்லாம் சிறப்பு அறிவுப் பகுதியின் சிறப்புப் பகுதியாக சித்தரிக்கப் படுகின்றன.

உடற்கல்வி ஆசிரியர்கள்

இந்த அடிப்படையில்தான், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விளையாட்டுத்திறன்களை வளர்க்கும்விதம் முறைகளையும் உத்திகளையும் வகுத்தாக வேண்டும்.

உடற்கல்வி என்பது ஒடுதல், தாண்டுதல், எறிதல், ஏறுதல், இறங்குதல் போன்ற அடிப்படைத் திறன்களைக் கொண்டு, நுண்திறன்களை வளர்த்துக் கொண்டு விடும் பண்புகளைக் கொண்டதாக விளங்குகிறது. ஆகவே, ஒருமித்த அமைப்புகள் திறன்களைக் கொண்டு, பயிற்சித் திட்டங்களை உருவாக்கி, குறைந்த முயற்சிகளில், சீரிய திறன்களைக் கற்றுக்கொள்ளும் அரிய தன்மைகளை ஏற்படுத்திக் கற்றுத்தர முடியும் என்பதையும் ஆசிரியர்கள் நிரூபித்தாக வேண்டும்.

விளையாட்டுக் கொள்கைகள் (Theories of play)

விளையாட்டு உணர்வுகள் என்பது பிறப்பிருந்தே தொடர்வன. விளையாட்டு என்பது உடலியக்கச் செயல்களின் மூலமாக விளைவன.இயற்கையான, சுதந்திரமான, தன்னியக்கச் செயல்களே, விளையாட்டுக்கள் என்று பெயர் பெற்றிருக்கின்றன.

“உடலைப் பாதுகாக்கவும், உறுப்புக்களை வளர்க்கவும், உறுதியாக வலிமையாக்கவும் விளையாட்டுக்கள் உதவுகின்றன என்கிறார் மெக்டோகல் எனும் பேராசிரியர்.

விளையாட்டுக்கள் என்பவை மகிழ்ச்சியானவை, தானாகவே தோன்றியவை. கற்பனைகள் மெருகேற்றிய காரியங்களான அத்தகைய விளையாட்டுகள் மனிதனது சுய வெளிப்பாட்டுணர்வை வெளிப்படுத்தித் திருப்தி காணச் செய்கிறது” என்கிறார் ரோஸ் என்பவர்.

விளையாட்டுக்கள் மனிதர்களிடையே மட்டுமல்ல, விலங்குகள் மத்தியிலும் வீறுகொண்டு விளங்குகின்றன. அவை அனைத்துயிர்களுக்கும் பொதுவான இதமான செயல்களாக மிளிர்கின்றன.

உலகில் உள்ள எல்லா குழந்தைகளும் விளையாடுகின்றனர். என்றாலும், அவர்களது விளையாட்டுக்கள் ஒன்று போல் தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பேசும் மொழிகளில் தான் பேதமே தவிர, செய்யும் செயல்களில் அல்ல.

“வெளிப்புற வற்புறுத்தலினால் விளையாட்டுக்கள் தோன்றவில்லை. இவை மனிதர்களின் உள் மனதிலிருந்தே உருவானவைகளாகும்” விளையாட்டு என்பது வெளிப்புற செயல்கள் அல்ல. அவை விளையாட்டுக்காகவே தோன்றின” என்று வலியுறுத்துகிறார் ஸ்டெர்ன் என்பவர்.

“கற்பனையாலும், சிந்தனையாலும் உருவாக்கப்பட்ட சீரிய செயல்முறைகளே விளையாட்டு” என்று நன் என்பவர் கூறுகிறார். 

முற்காலத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், விளையாட்டுக்களானது மாணவர்களது நேரத்தை மட்டும் வீணாக்காமல், வாழ்க்கையையே பாழடிக்கும் செயல் என்று பேசினார்கள். மாணவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தடை செய்தார்கள். அதனால், மாணவர்கள் விளையாடுகிற வாய்ப்புக்களை இழந்தனர். மகிழும் சூழ்நிலைகளையும் இழந்தனர்.

இன்று, உளநூல் அறிஞர்கள் கூறிய காரண காரியங்களை கேட்டுத் தெளிந்த காரணத்தால், கல்வித் துறையில் விளையாட்டுக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்தனர் அரசியல் தலைவர்கள். கல்விக் கொள்கையிலேயே தலை சிறந்த பகுதியாக, இன்று விளையாட்டுத் துறை விளங்குவதே அதன் சிறப்புக்கு அற்புதமான சான்றாக அமைந்திருக்கிறது.

விளையாட்டும் கல்வியும்

உடலும் மனமும் ஒருங்கிணைந்தே செயல்படுகின்றன. இரண்டும் வேறல்ல. ஒன்றுக்கொன்று ஒன்றை யொன்று சார்ந்தே இருக்கின்றன.நலமான உடலில் தான் நலமான மனம் இருக்கும் என்ற கருத்தையும் இங்கு நாம் நினைவு கூர்வோம்.

நலமான உடல் நலமான மனதை வளர்த்து விடுவது போலவே, நலமான மனமும் நலமான உடலை வளர்த்து, உதவிக் கொள்கிறது.

அதுபோலவே, கல்வியும் ஒரு மனிதரது தோரணையை வளர்த்து, அவரது நடத்தைகளையும் நல்ல முறையில் பண்படுத்தி வைக்கிறது.நான்கு கூறுகளாக ஒரு மனிதரது தோரணை நிறைவு பெறுகிறது. 

அதாவது ஒரு மனிதர் உடலால், மனதால், சமூகத்தில், உணர்ச்சி பூர்வமான ஒப்பற்ற வாழ்வை வாழ்ந்து செல்ல, கல்வி உதவுகிறது. அந்த அற்புதப் பணியை விளையாட்டுக்கள்தான் செய்து, மனிதர்களை மேம்படுத்தும் முயற்சிகளில் உதவுகின்றன. வளர்த்து வழிகாட்டுகின்றன.

எவ்வாறு விளையாட்டு ஏற்றமான முறையில் உதவுகிறது என்பதையும் விளக்கமாகக் காண்போம்.

1. உடல் வளம் பெற வளர்கிறது!

உடல் நலம் பெற, வளமடைய, பலம் பெருகிட, விளையாட்டு வேண்டிய பயிற்சிகளை மனிதர்களுக்கு வழங்குகிறது. உடற்பயிற்சியினால் உடல்நலமடைகிறது. திசுக்கள், தசைகள், நரம்புகள் எல்லாம் வலிமையடைகின்றன. ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் எல்லாம் மேன்மை மிகுநிலையை எய்துகின்றன.

ஐம்புலன்கள் வழியாக அனைத்துலகத்தையும் அறிந்து கொள்ள, புரிந்து செயல்பட, போதிய ஆற்றலும், ஆண்மையும் மிகுதியாகக் கிடைக்கும் வழி வகைகளை உடற்பயிற்சி அளித்து விடுகிறது.

2. மன உணர்வுடன் செழிக்கின்றன!

விளையாட்டில் ஈடுபடுகின்ற குழந்தைகள் உணர்வுகளால் (Emotions) அலைக்கழிக்கப்படுவதில்லை.அவர்கள் உணர்வுகளை அடக்கி ஆள்கின்ற ஆற்றலை அடைகின்றனர். எதற்கும் அவர்கள் அஞ்சி நடுங்குவதில்லை. எதையும் அறிவான துணிவுடன் சந்திக்கின்றனர்.

விளையாட்டானது ஈடுபடுபவர்கள் உடலில் தேங்கிக்கிடக்கும் மிகையான சக்தியை வெளிப்படுத்தி மிதமான சக்தியை உடலில் தேக்கி, பதமாக வாழ்விக்கிற பணியை ஆற்றுகிறது.

குழந்தைகள் மனதிலே அமுத்தப்படுகிற ஆசைகளும், வெளியாக்கப்படாத உணர்வுகளும் நிறைந்து கிடைப்பது இயற்கைதான், வீட்டிலே போடப்பட்டிருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளும், பள்ளிகளில் சூழ்ந்திருக்கிற சட்டங்களும் திட்டங்களும், அவர்களது ஆசைகளை உந்துதல்களை அழுத்திக் கொண்டிருப்பதும் உண்மைதான்.

நிறைவேற்றப்படாத ஆசைகள், நெஞ்சிலே நெருப்பாக எரிந்துகொண்டும்,நிலைமைகள் கிடைக்காதா என்று நெருடிக் கொண்டும் கிடக்கும். வழிகிடைக்காதபோது, அந்த நெஞ்சங்கள் வக்ரம் நிறைந்தனவாக மாறிவிடுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், குழந்தைகளிடம் தேங்கிக் கிடக்கிற மிகுதியான சக்தியினை (Energy) செலவழித்து, சமாதானப்படுத்துகிற பணியைத்தான் விளையாட்டுக்கள் செய்து, குழந்தைகளைக் குதுகலப் படுத்துகின்றன. அதனால்தான், குமுறல்களைக் கொடுக்கின்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, வளப்படுத்தி வாழவைக்கும் சிறந்த சேவையை விளையாட்டுக்கள் செய்து காட்டுகின்றன.

3. சமூக உணர்வுகளில் சுமுகம்

விளையாட்டுக்கள் என்றதும், கூடி விளையாடுகின்ற குழு விளையாட்டுகளே அதிகம் இருக்கின்றன. அதிலே ஈடுபடுகிற குழந்தைகள், தங்கள் உணர்வுகளிலும் உந்துதல்களிலும் கூட, மற்றவர்களுடன் ஒத்துப்போகின்ற உறவுநிலையில் உடன்படுகின்றனர். 

அதனால், உண்மையான செயல்பாடுகள், நேர்மையான அணுகுமுறைகள், நட்புவழிகள், ஒற்றுமை, கூட்டுறவு, தலைமைக்கு ஏற்று நடத்தல், அன்பு பாராட்டுதல், கண்ணியம் காத்தல், கடமை உணர்தல், ‘நான்’ என்பதை மறந்த ‘நாம் உணர்வுகளுடன், விரோதமில்லாத விவேகமான போட்டிகளில் ஈடுபடுதல் போன்ற பண்பான குணங்களை வளர்த்துக் கொள்ள முடிகிறது.

இப்படிப்பட்ட குணங்களே, வாழ்க்கையின் உண்மையான பகுதிகளாக மாறி உதவுகின்றன. விளையாட்டுக் குணங்களே, வாழ்க்கைக் குணங்களாக வடிவெடுத்துக் கொள்கின்றன. வெற்றிலையில் வீறாப்பு கொள்ளாமல், தோல்வியில் நொய்ந்து போகாமல், எதையும் ஏற்கிற இனிய மனிதர்களாக வாழ வைக்கும் வேள்விப் பணியை, விளையாட்டுக்கள் செய்து, மக்களினத்தைக் காத்து, மகிமைப்படுத்துகின்றன.

4. சீரான உணர்ச்சிகளும் தோரணைகளும்

மனிதர்களது மதிப்புமிக்க தோரணையை உருவாக்க, உணர்ச்சிகளே முக்கிய பங்காற்றுகின்றன விளையாட்டானது மக்களை விளையாட்டில் ஈடுபடுத்தி, ஈடில்லாத அனுபவங்களை வழங்குகின்றன. அத்தகைய அனுபவங்கள் அறிவினை பக்குவப்படுத்தி, வேண்டாத வழிகளில் ஈடுபடாதவாறு விலக்கி, உயர்ந்த லட்சியத்தில் ஈடுபட்டு புகழ் பெறுமாறு புகுத்தி விடுகின்றன.

எனவே தான் விளையாட்டு என்பதை, மன நல மருத்துவமனை என்றும்; சமூக சீர்திருத்தப் பள்ளி என்றும் அறிஞர்கள் புகழ்ந்துரைக்கின்றார்கள்.

விளையாட்டு அவசியமே!

பெற்றோர்கள் ஆசிரியர்கள் கட்டுப்பாட்டிலிருந்து, விளையாட்டு மக்களையும் மாணவர்களையும் விடுவிக்கிறது.அவர்களை சுதந்திர மனிதர்களாக உலவவிடுகிறது. உலாவரச் செய்கிறது.

விளையாட்டு மக்களுக்கு கல்வியாக விளங்குகிறது. வாழ்க்கையின் கண்ணாடியாக பிரதிபலிக்கிறது.அறிவான அனுபவங்களை அள்ளித் தெளிக்கிறது. சுவையான செய்திகள், உற்சாகம் ஊட்டுகின்ற சந்தர்ப்பங்கள், இவற்றை விளையாட்டுக்கள் தந்து, தனிப்பட்ட மனிதரின் சிந்தனைத் தெளிவினை ஜீவநதி போல வற்றாமல் ஒடச் செய்கிறது.

விளையாட்டு வெறும் அனுபவங்களை வழங்கி அறிவோடு செயல்பட வைப்பதில்லை. உந்துதல் துண்டுதல்களுக்கு ஏற்ப உடனடியாகச் செயல்படவைக்கும் எதிர் செயலாற்றலையும் துரிதப்படுத்திடும் வகையில் கற்றுத் தருகிறது. உற்சாகம் குறைந்து போகாத வண்ணம் வளர்த்துவிடுகிறது.

சில விளையாட்டுக்கள் சிறந்த சிந்தனா சக்தியையும் அறிவாற்றலையும் அதிகமாக்கிடும் வண்ணம் வளர்க்கும் பாங்கிலே அமைந்திருக்கின்றன. அதாவது யோசித்தல், நுணுக்கமாக சிந்தித்தல், செயல்படுகிற முறையில் சடுதியில் கணித்தல் போன்ற திறமைகளையும் விளையாட்டு விளைத்து விடுகிறது.

ஆகவே, குழந்தைகளின் எதிர்காலத்தைக் களிப்பானதாக, கடமையுணர்வு மிக்கதாக, கட்டுப்பாட்டில் திளைப்பதாக, விளையாட்டுக்கள் வளர்த்து, சந்தர்ப்பங்