சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/17

விக்கிமூலம் இலிருந்து



[17]

பாட்டியிடமிருந்து பிரிவு!

அந்த நான்கு முரடர்களுக்கும் புதையலைத் திருட முயன்றதற்கும், மூவரையும் கொலை செய்ய முயற்சி செய்ததற்கும் பல ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது நிச்சயம்.

தங்கமணியையும், சுந்தரத்தையும், கண்ணகியையும் போலீஸார் மிகவும் பாராட்டினார்கள். அவர்கள் முயற்சியால்தான் திப்புசுல்தான் காலத்துத் தங்கக் காசுகள் கிடைத்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கக் காசை சப்-இன்ஸ்பெக்டர் பரிசாகக் கொடுக்க முன்வந்தார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

“இந்தப் புதையல் சட்டப்படி அரசாங்கத்திற்குச் சேர வேண்டியது. ஆகவே எங்களுக்கு அதில் ஒன்றுமே வேண்டியதில்லை” என்று தங்கமணி, சுந்தரம், கண்ணகி மூவரும் சேர்ந்து ஒரே மூச்சில் சொன்னார்கள். சப்-இன்ஸ்பெக்ட ருக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டது. “நானாகவே இதில் ஒன்றையும் உங்களுக்குக் கொடுக்க முடியாது என்பது மெய்தான். ஆனால் நீங்கள் செய்த உதவிக்காக இதில் ஒரு தங்க நாணயத்தைக் கொடுத்துவிட்டுப் பின்னால் அரசாங்கத்தின் அனுமதியைப் பெறலாம் என்று எண்ணினேன். ஆனால் நீங்களே இந்தப் பரிசை வாங்கிக் கொள்ள மறுத்ததைக் கண்டு எனக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று கூறி அவர் வாழ்த்தினார். கோடை விடுமுறை இப்படி எதிர்பாராத அதிசய சம்பவங்கள் நிகழ்வதற்குக் காரணமாக இருந்ததை மூவரும் நன்கு ரசித்தார்கள்.

“கண்ணுப் பாட்டி, உங்கள் உதவியால்தான் நாங்கள் அந்தத் திருடர்களிடமிருந்து தப்பினோம். உங்களை எப்பொழுதும் மறக்க மாட்டோம்” என்று தம் நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள். கண்ணுப் பாட்டி அந்தக் குழந்தைகளின் அன்பைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். ஜின்காவின் குதூகலம் சொல்லி முடியாது. அது குதித்துக் குதித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தியது. சுந்தரம் அதனுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்துவிட்டான், மற்ற இருவரும் அவனைப் பின்தொடர்ந்து ஆடினார்கள்.

“கண்ணுகளா, நீங்கள் மூவரும் ஜின்காவோடு இங்கேயே இருந்து விடுங்கள்” என்று இன்ப மிகுதியால் கண்ணுப் பாட்டி தெரிவித்தாள்.

“அதெப்படி முடியும் பாட்டி? கோடை விடுமுறைக்குப் பின் நாங்கள் எங்கள் ஊருக்குச் சென்று படிக்க வேண்டாமா? ஆனால் நீங்கள் அன்போடு ‘கண்ணு’ என்று சொல்வதை நாங்கள் நினைத்துக் கொண்டேயிருப்போம்” என்று குழறிக் குழறி சுந்தரம் சொன்னான்.

“ஆமாம் பாட்டி, நீங்கள் ‘கண்ணு’ என்று சொல்வது எங்களுக்கு அமுதமாக இருக்கிறது. இந்தக் கோமாளி அதே வார்த்தையைச் சொன்னா எப்படியோ இருக்கிறது” என்று கண்ணகி கூறினாள்.

அனைவரும் வாய் விட்டுச் சிரித்தார்கள்.

“கண்ணுகளா, வாங்க உங்களுக்கு இன்றைக்குத் தனி விருந்து வைத்திருக்கிறேன்” என்று கூறிக் கண்ணுப் பாட்டி அவர்களை உள்ளே அழைத்துக் கொண்டு போனாள்.

இன்னும் விடுமுறையில் பலநாள் இருந்தன. ஆனால் “உடனே புறப்பட்டுப் போய் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இந்தச் சம்பவங்களையெல்லாம் நேரில் கூறவேண்டும்” என்றாள் கண்ணகி. தங்கமணியும் அதையே தெரிவித்தான்.

“பாட்டி, உங்களைப் பிரிய மனமில்லாவிட்டாலும் உடனே புறப்பட்டுப் போகத் துடிக்கிறோம்” என்றான் சுந்தரம். அவர்களுடைய உற்சாகத்தைக் கண்டு பாட்டில் இணங்க வேண்டியதாயிற்று.

உடனே தந்தி கொடுத்து விட்டு, அன்று இரவே சென்னையை நோக்கிப் புறப்பட்டார்கள். ஜின்கா ஜிங் ஜிங் என்று ஒருமுறை ஆடிக் காண்பித்து விட்டுக் கண்ணுப் பாட்டியிடம் விடை பெற்றுக்கொண்டது.


--------------------------- .:0:.-----------------------------