ஹெர்க்குலிஸ்/6

விக்கிமூலம் இலிருந்து

6. எரிமாக்தஸ் மலைப்பன்றி


நான்காவது பணிக்காக ஹெர்க்குலிஸ் ஆர்கோலிஸ் நாட்டுக்கு வெளியே போக நேர்ந்தது. ஆர்க்கேடியாப் பிரதேசத்தில் எரிமாந்தஸ் என்ற மலையில் முரட்டுக் காட்டுப் பன்றி ஒன்றிருந்தது. அதை உயிருடன் பிடித்து வர வேண்டுமென்று யூரிஸ்தியஸ் கட்டளையிட்டான். எந்தக் கொடிய விலங்கையும் ஹெர்க்குலிஸ் எளிதில் வதைத்து விடுவான் என்று அம்மன்னன் கருதி, வதைப்பதைவிடக் கடினமான வேலையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் பன்றியை உயிருடன் கொண்டு வரும்டி கூறினான்.


அந்தப் பன்றி யானைக் குட்டி போல் படுத்திருந்த போதிலும், அது குதிரைகளைவிட வேகமாக ஓடக் கூடியது. அது தன் தந்தங்களைக் கொண்டு குதிரை வீரர்களைத் தாக்குவதுடன், குதிரைகளையும் குத்தி வெல்லக்கூடிய வல்லமையுள்ளது. எந்த மனிதனும் அதன்மீது ஒரு காயத்தைக் கூட உண்டாக்க முடியவில்லை. எனவே, அது எரிமாந்தஸ் மலையடிவாரத்திலிருந்த நிலங்களில் கிழங்குகளையும், வேர்களையும், விதைகளையும், கொட்டைகளையும் தோண்டித் தின்று வந்ததுடன், கழனிகளையும் பாழாக்கிவிட்டது. அதற்கு அஞ்சிக் குடியானவர்கள் எவரும் அந்தப் பகுதியில் பயிரிடச் செல்வதேயில்லை. அருகேயிருந்த வனங்களிலும் மக்கள் நடமாடுவதில்லை.


மும்முறை வெற்றி கொண்ட ஹெர்க்குலிஸ் இம்முறையும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுட்ன் மலைப் பிரதேசத்தை நோக்கிப் பயணமானான். வழியில் அவனுடைய விரச் செயல்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்த மக்கள் பலர் அவனை அன்புடன் வரவேற்று ஆதரித்தனர். அவனுடைய தோளிலே வில்லும், ஒரு கையிலே கதையும், முதுகிலே அம்பறாத்தூணியும், இடையிலே நன்றாக முறுக்கிய கயிறுக்ளும் இருந்தன. கயிறுகள் வலை பின்னுவதற்குரியவை. இரண்டு பெரிய வேட்டைநாய்களும் அவனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. அவனுக்குத் தேவையென்றால், வழியிலே குடியிருந்த ஜனங்கள் நூற்றுக்கணக்கான வேட்டைநாய்களைக் கொடுத்து உதவியிருப்பார்கள். ஏனெனில், எல்லோருக்கும் அந்த மலைப்பன்றி தொலைய வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வமிருந்தது.


மலையின் அடிவாரத்தை அடைந்ததும், நாய்கள் இாண்டும் மோப்பம் பிடிக்கத் தொடங்கின. அவை பன்றியிருந்த திசை நோக்கிக் கிளம்பியதும், ஹெர்க்குலிஸ் அவைகளைத் தொடர்ந்து சென்றான். மலைப் பன்றி மதிய உணவுக்காக அலைந்துகொண்டிருந்தது. அன்று மாலை வரை நாய்கள் அதைத் தொடர்ந்து மிகுந்த வேகத்துடன் ஓடிக்கொண்டிருந்தன. ஹெர்க்குலிஸும் தளராமல் ஓடினான். அன்று பன்றியைக் காண முடியவில்லை.


மறு நாளும் பன்றி வேட்டை தொடர்ந்து நடைபெற்றது. அது ஓடவும், நாய்கள் துரத்தவுமாக மனிக் கணக்காகத் தொடர்ந்து அவ்வேட்டை நடந்தது. கடைசியாக அது ஓர் ஓடைக் கரையில் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தது. அதன் முன்புறம் ஓடை, பின்புறம் செங்குத்தான பாறை ஆகியவை இருந்தன. அந்த நிலையில் அது நடமாடும் குன்று போல விளங்கிய வீரனையும், யமதூதர்களைப் போல விளங்கிய இரு நாய்களையும் ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு, பாறையில் தன் தந்தங்களைத் திட்டத் தொடங்கியது. அதன் கால்கள் தரையைப் பிராண்டி மண்ணை அள்ளி விக்கொண்டிருந்தன. அதன் வாய் வெண்மையான நுரையைக் கக்கிக் கொண்டிருந்தது. கோபத்தோடு விளங்கிய அக்கொடிய மிருகம் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. இயற்கையில் மிகுந்த வீரத்துடன் விவங்கிய வேட்டைநாய்கள் இரண்டும், கோரமான தந்தங்களையும். பன்றியின் உருவத்தையும் பார்த்தவுடன் துணுக்ககமுற்றன. ஹெர்க்குலிஸ் உரக்கக் கூவி அவைகளை உற்சாகப்படுத்தி அழைத்துச் சென்றான்.

பன்றி ஒரு நாயை முதுகில் கடித்துத் தள்ளிவிட்டு, மற்றதன் உடலைக் கிழித்து ஓடையிலே வீசிவிட்டது. ஒரே கணத்தில் இந்த அற்புதம் நடந்ததைக் கண்ட ஹெர்க்குலிஸ், மேற்கொண்டு தான் மட்டுமே தனியாக நின்று அதனுடன் போராட வேண்டும் என்று தீர்மானித்தான். பன்றி பாறையின் அடியிலிருந்த தன் குகையை விட்டு, வேறு புறமாகத் திரும்பி ஒரு பாதை வழியாக மலைமீது ஏறத் தொடங்கிற்று. மலைமேலே போகப் போகப் பணி அதிகமாகப் பெய்து கொண்டிருந்தது. பனி பெய்ததால், பாதையும் பல இடங்களில் மறைந்துவிட்டது. ஆயினும், ஹெர்க்குலிஸ் பன்றியைத் தொடர்வதை நிறுத்தவில்லை. பன்றியும் ஓடி ஓடிக் களைத்துப் போய்விட்டது. எங்குப் போய் விழலாம் என்று அதற்கு அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டுவிட்டன. அந்த நிலையில் ஹெர்க்குலிஸ் அதன் மீது பல பாணங்களை விடுத்தான். ஆனால், ஓர் அம்புகூட அதன் உடலுள் பாயவில்லை ; அதன் உடல் மீது, பட்டவுடன் எல்லாம் வழுக்கிக் கீழே விழுந்துவிட்டன. பன்முறை அவன் தன் கதையை வீசிப் பார்த்தான். கதையும் பயனற்று வீழ்ந்தது. பன்றி அளவற்ற உரத்துடன் வரமும் பெற்றிருந்தது. என்பதை அவன் கண்டான். எனினும், அது புதர்களுக்குள் மறைந்து சற்று ஒய்வெடுத்துக்கொள்ள முயன்ற பொழுதெல்லாம், அவன் வாயால் ஊளையிட்டு அதை வெளியே கிளப்பி வந்தான். அது அயர்ந்தால், அவன் விரட்டினான், அது வேகமாய்ப் பாய்ந்தால், அவன் சிறிது பின் தங்கிக்கொண்டான். இவ்வாறு அதன் தொடர்பு விட்டுப் போகாமல், அவன் நெருங்கிச் சென்றுகொண்டிருந்தான்.


பன்றி எப்படியும் மலைமீது ஏறிக் கொண்டேயிருக்கும்படி செய்ய வேண்டும் என்பதே அவன் யோசனை. இரவுப்பொழுதில் மலையிலே ஒரு வேடனுடைய குடிலில் அவன் தங்கியிருந்து, மறு நாள் காலையில் இரண்டு வேட்டை நாய்களை வாங்கிக் கொண்டு மீண்டும் பன்றியைத் தொடரலானான். நாய்கள் இரண்டும் இரண்டு பக்கங்களிலும் முன்செல்ல, நடுவில் ஹெர்க்குவிஸ் போய்க் கொண்டிருந்தான். பன்றியை அதிகமாய் விரட்டினால், அது திரும்பி மறுபடி சமவெளியான தரைக்கு இறங்கிவிடும் என்பகால், அவன் மெதுவாக அதைத் தொடர்ந்து சென்றான். தரையிலே அவனைவிட அதிக வேகமாகப் பன்றி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், மலைப்பகுதியிலே அதன் கால்கள் கட்டையாயிருந்தமையால், அதே வேகத்துடன் ஏறிச்செல்ல அதனால் முடியவில்லை. மலையில் பணி தேங்கியுள்ள குட்டங்களில் அது இறங்கிச் செல்லுகையில்தான் அதைப்பிடிக்க முடியும் என்று அவன் கண்டான். ஆகவே, அதைப் பிணித்துப் பிடிப்பதற்குரிய வலையையும், சங்கிகளையும் அவன் ஆயத்தமாகக் கைகளிலே எடுத்து வைத்துக்கொண்டான். வழியிலே பணி பெய்து நிரம்பியிருந்த ஒரு பெரிய குட்டத்திலே பன்றி தொப்பென்று விழுந்ததும், ஹெர்க்குலிஸ் ஒரே பாய்ச்சலாக அதன் மீது பாய்ந்து, அது என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு முன்பே, அதைச் சங்கிலிகளால் பிணித்துவிட்டான். வெள்ளையான பால் குளத்தில் கரிய யானைக்குட்டி மிதப்பது போல் கிடந்த அப்பன்றியை ஒரு கணத்திற்குள் அவன் வலையினுள் தள்ளி வலையைத் தன் தோள்மீது துக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டான். வேட்டைநாய்கள் அக்கொடிய விலங்கைக் கடித்துப் பழி வாங்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தன. ஆனால், ஹெர்க்குலிஸுக்கு அதனிடம் மதிப்பும், இரக்கமுமே ஏற்பட்டன. அதற்கு வல்லமை இருந்தவரை அது ஓடிப் பார்த்தது. தன்னால் இயலாத நிலைமையில்தான் அது வீழ்ந்தது என்று அவன் அதைப் பாராட்டினான்.

காட்டு வராகத்தைச் சுமந்துகொண்டு மலையிவிருந்து இறங்கி வந்த ஹெர்க்குலிளைஸைக் கண்ட ஜனங்கள் உரக்க ஆரவாரம் செய்துகொண்டு, அவன் பின்னால் சென்றார்கள். மனிதர் எவராலும் முடியாத பெரும்பணியை அவன் நிறைவேற்றியதைக் கண்ட அவர்கள், எக்களிப்போடு அவனுக்கு மரியாதை செலுத்தினார்கள். அஉன் தோளிலே சாய்ந்திருந்த கரிய பிசாசை அவர்கள் அப்பொழுதுதான் நன்றாகப் பார்க்க முடிந்தது. கதிரவன் மறைந்து எங்கும் இருள் போர்த்துக் கொண்ட பிறகுதான் அவன் மக்களைப் பிரிந்து தனியாக நடக்க முடிந்தது.  மறு நாள் பொழுது புலரும் நேரத்தில் அவன் மைசீன் கோட்டை வாயிலை அடைந்தான். அங்கே கோட்டைக் காவலாளி சிறிது நேரம் வேறு வேலையாகச் சென்றிருந்ததால், ஹெர்க்குலிஸ் கோட்டைவாயிலைத் திறந்துகொண்டு, நேராக அரண்மனைக்குள்ளே சென்றான். தொலைவில் அவன் தோள்களிலே பன்றியைச் சுமந்துகொண்டு வருவதை யூரிஸ்

தியஸ் அரண்மனை மாடியிலிருந்தே கவனித்திருந்தான் ஆனால், அவன் கர்ச்சனை செய்துகொண்டு, அந்தக் கோலத்துடனேயே தன் சபா மண்டபத்திற்கும் வந்து விடுவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஹெர்க்குலிஸ் பன்றியை வலையோடு கீழே இறக்கி வைத்தான். உடனே பன்றி உடலை நெளித்துக்கொண்டு தன்கோரத் தந்தங்களை வெளியே நீட்டலாயிற்று. அதைக் கண்டவுடனேயே யூரிஸ்தியஸ் எழுந்து தனக்காக அமைத்திருந்த பித்தளை அறைக்குள் புகுந்து, கதவைத் தாழிட்டுக் கொண்டான். அந்த நேரத்தில் ஹெர்க்குலிஸ், இடியிடிப்பது போல் உரக்கச் சிரித்து, அவனைப் பரிகாசம் செய்தான். அங்கே கூடியிருந்த அரண்மனை அதிகாரிகளும், ஊழியர்களும் மத யானை போன்ற பன்றியியையும் அதையும் அடக்கித் துாக்கி வந்த வீரனையும் பார்த்துப் பிரமிப்படைந்து நின்றனர்.


தனியான அறைக்குள்ளே ஆபத்தில்லை என்று மன அமைதியடைந்த யூரிஸ்தியஸ், மேற்கொண்டு ஹெர்க்குலிஸை எப்படி இழிவு செய்யலாம் என்று யோசனை செய்தான். அதுவரை அவன் ஏவியபணிகளில் ஹெர்க்குலிஸின் புகழ் அதிகமானதைத் தவிரக் குறைவடையவில்லை. இனி அருவருப்பான இழிவான வேலை ஒன்றை இவனுக்குக் கொடுத்துச் சிறுமைப்படுத்த வேண்டும்! என்று அந்த மதிகெட்ட மன்னன் முடிவு செய்நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=ஹெர்க்குலிஸ்/6&oldid=1032761" இலிருந்து மீள்விக்கப்பட்டது