சடுகுடு ஆட்டம்/ஆட்ட அதிகாரிகளும், கடமைகளும்

விக்கிமூலம் இலிருந்து
9. ஆட்ட அதிகாரிகளும் கடமைகளும்

1. நடுவர்களின் கடமை

1. ஒரு நடுவர், இரண்டு துணை நடுவர்கள், இரண்டு கோடு காப்பாளர்கள், ஒரு குறிப்பாளர் ஆகியோர் ஆட்டத்தை நடத்தும் அதிகாரிகளாகப் பணியாற்றுவர்.

2. ஆடுகளத்தினுள், துணை நடுவரின் (Umpire) முடிவே முடிவானது. ஆயினும் சில இன்றியமையாத நேரங்களில், இரு துணை நடுவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்படும்பொழுது, ஆட்ட நலனை உத்தேசித்து, நடுவர் அந்த முடிவை மாற்றிவிட அதிகாரம் உண்டு.

3. ஒர் ஆட்டக்காரரை எச்சரிக்கை செய்யவும், அன்னாருக்கெதிராக வெற்றி எண்களைத் தரவும், அல்லது ஆட்டத்திலிருந்து நீக்கவும், பெருந்தன்மையற்ற நடத்தைக்கும் அல்லது கீழ்க்கண்ட குற்றங்களைச் செய்யும் குழுவைக் கண்டிக்கவும், நடுவருக்கு முழு அதிகாரம் உண்டு.

அ) நடுவர்கள் எடுத்த முடிவிற்கெதிராக, அதுபற்றி அவர்களிடம் பிடிவாதமாக அறிவுறுத்தல் (Address).

ஆ) நடுவர்களைப் பற்றியும் அல்லது அவர்கள் எடுத்த முடிவைப் பற்றியும் அருவருக்கத்தக்க முறையில் புறங்கூறல்.

இ) பண்பு கெட்ட கீழான முறையில் நடுவர்களுடன் நடந்து கொள்ளுதல் அல்லது அவர்கள் எடுத்த முடிவிற்கெதிராக வெறுப்பைக் காட்டுதல்.

ஈ) தனிப்பட்ட முறையில், தரக்குறைவாக எதிராளியைப் பற்றிப் பேசுதல்; அத்துடன் அவர்களிடம் அவ்வாறு நடந்து கொள்ளுதல்.

தவறுகள்:

அ) வாயைப் பொத்தியோ அல்லது தொண்டையை அழுத்தியோ அல்லது வேறு எந்த வழியிலாவது பாடி வருபவரின் மூச்சை அடக்க ஒர் ஆட்டக்காரர் முயலுதல்.

ஆ) உடலுக்குக் காயமும், அபாயமும் ஏற்படும் வகையில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுதல்.

இ) கால்களால் கத்தரிக்கோல் பிடி போட்டு, பாடி வருபவரைப் பிடித்தல்.

4. பாடிச் செல்பவரை எதிர்க்குழுவின் பக்கத்திற்கு அனுப்ப, ஒரு குழு 5 வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளுதல்.

5. வெளியிலுள்ள ஆட்டக்காரர்கள் அல்லது குழுப் பயிற்சியாளர், உள்ளிருந்து ஆடும் ஆட்டக்காரர்களுக்குக் குறிப்புரை வழங்கக்கூடாது. ஆட்டம் நடத்துபவர்கள், குழுப் பயிற்சியாளர்கள் யாராயினும் ஆட்ட நேரத்தில் ஆடுகளத்தினுள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த விதியை மீறும் குழுவினர் எதிர்க்குழுவுக்கு நடுவர் ‘வெற்றி எண்களை’ அளித்து விடுவார்.

6. இப்படிப்பட்ட தன்மை வாய்ந்தவர்களின் எண்களைச் சத்தமிட்டு கூறி, துணை நடுவர் அல்லது நடுவர், அவர்களை வெளியேற்றிவிட வேண்டும். பாடும் சத்தம் தொடர்ந்து கேட்கும் வரை விசில் சத்தம் கேட்கவே கூடாது.

7. (அ) விதிகளை நன்கு ஆராய்ந்த பின்னரே, அதற்கான முடிவினை நடுவர் எடுப்பார்.

(ஆ) ஒவ்வொரு குழுவும் எடுத்துள்ள வெற்றி எண்களை எல்லோருக்கும் அறிவிப்பதுடன், ஆட்ட முடிவில் மொத்த வெற்றி எண்களைக்கூறி, வெற்றி பெற்றக் குழுவின் பெயரை நடுவர் தெரிவிப்பார்.

(இ) பொதுவாக, ஆட்டம் நல்ல முறையில் நடந்து முடிவு பெற, சிறப்பான முறையில் நடுவர் மேற்பார்வை யிடுவார்.

(ஈ) ஆட்டம் தொடங்குகிற நேரத்தைக் குறித்துக் கொண்டு, ஆட்டத்தைத் தொடங்கவும், முடிக்கவும், நடுவர் தன் விசிலால் சைகை தருவார்.

2. வெற்றி எண் குறிப்பாளரின் கடமை

(அ) ‘போட்டி ஆட்டக் குறிப்பேட்டில்’ (Match Score Sheets) வெற்றி எண்களைக் குறித்துக்கொண்டு முதற் பருவத்திலும், ஆட்ட இறுதியிலும், நடுவரின் அனுமதியுடன் வெற்றி எண்களை அறிவிப்பார்.

(ஆ) வெற்றி எண் பட்டியலை சரியாக முடித்து வைத்து, நடுவரிடமும், துணை நடுவர்களிடமும் கையொப்பங்களைப் பெற்று வைப்பார்.

(இ) ஒரு குழுவைச் சேர்ந்த ஏதாவது ஒர் ஆட்டக்காரர் எடுத்த எல்லா வெற்றி எண்களையும், அக்குழுவிற்குரிய தொடர்ந்தெழுதும் குறிப்பில் (Running Score) (1) என்ற முறையில் குறித்து வைப்பார்.

(ஈ) லோனாவுக்காகக் குறிக்கப்படும் வெற்றி எண்களை (–) என சரி சமமாகக் காட்டிக் குறித்து வைப்பார்.

(உ) ஓய்வு நேரம் கேட்ட குழுவுக்குள்ள குறிப்பேட்டின் பகுதியில் T என்று குறிக்க வேண்டும்.

(ஊ) குறிப்பேட்டில் கீழ்க்கண்டவற்றின் கால நேரத்தைக் குறித்துக் கணக்கிட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பருவத்திலும் (Half), ஒய்வு நேரங்களிலும், முதல் பருவ நேரத்தில் முதன் முதலில் வெற்றி எண்ணை எடுத்தக் குழுவின் பெயரையும் குறிக்க வேண்டும்.

நடுவர் அல்லது துணை நடுவர்களால் தரப்படுகின்ற தனியான ‘வெற்றி எண்களை’ (Extra Point) வட்டமிட்டுக் குறித்து வைக்க வேண்டும் (O). 3. கோடு காப்பாளரின் கடமைகள்

வெளியேற்றப்பட்ட ஆட்டக்காரர்களின் வரிசையைக் குறித்துக்கொண்டு, அந்த ஒழுங்கு முறைப்படி குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் அமர்ந்திருக்கின்றனரா என்பதைக் கவனிக்க வேண்டும். கடைக்கோட்டுக்கு வெளியே குறிக்கப்பட்டுள்ள அவர்களுக்கான கட்டத்தில் (Blocks) வெளியேற்றப் பட்டவர்கள் வந்து அமர வேண்டும். வெளியேற்றப் பட்டவர்கள் மீண்டும் உள்ளே நுழைய வாய்ப்புப் பெற்று போவதையும் (Revived) குறித்துக்கொள்ள வேண்டும். நடுவரின் கடமைகள் இனிது நிறைவேற உதவுவதும் இவர்களின் பணியாகும்.

குறிப்பு: 2 மீட்டர் 8 மீட்டர் அகல நீளமுள்ள வெளியேற்றப்பட்டவரின் ‘அமரும் கட்டம்’ கடைக் கோட்டின் பின்புறத்தில் 2 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

குறிப்பாளர் மொத்த வெற்றி எண்களை இடைவேளை நேரத்தில் அறிவிப்பதுடன், கடைசி 5 நிமிடங்களில் ஒவ்வொரு நிமிடம் கடந்ததையும் தெளிவாகக் கூற வேண்டும்.

ஆட்டத் தொடக்கத்திற்கு முன்னர் குறிப்பாளர் கடிகாரத்துடன், நடுவர் தன் மணிப்பொறியை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வார். ஆனாலும், நடுவரின் மணிப்பொறி காட்டும் நேரமே சரியான ஆட்ட நேரம் ஆகும்.

கலைச் சொற்கள்
Antis - பிடித்தாடுபவர்கள்
Address - அறிவுறுத்தல்
Anti-Raider - பிடிப்பவர்
Baulk Line - பாடித் தொடும் கோடு
Boundary Line - எல்லைக் கோடு
Cant - பாடுதல்
Chase - பாய்ந்தடித்தல்
Court - ஆடுகளப் பகுதி
Duty - கடமை
Extra Point - தனி வெற்றி எண்
Half - பருவம்
Instruction - குறிப்புரை
Knock out System - முடிவாட்ட முறை
Lines Man - கோடு கண்காணிப்பாளர்
Lobby - தொடரிடம்
Lona - சிறப்பு வெற்றி எண்
Losing the Cant - பாட்டை விடுதல்
Match - போட்டி ஆட்டம்
Match Score Sheet - ஆட்டக் குறிப்பேடு
March Line - பாடத் தொடங்கும் கோடு
Mid Line - நடுக்கோடு
Number - ஆடும் எண்
Out - வெளியேற்றுதல்
Point வெற்றி எண் Raid பாடிச் செல்லல் Raider பாடிச் செல்பவர் Regular Player நிரந்தர ஆட்டக்காரர் Replay மீண்டும் ஆடுதல் Revive உயிர்த்தெழல் Score Sheet ஆட்டக் குறிப்பேடு Scorer வெற்றி எண் குறிப்பாளர் Sitting Block உட்காரும் கட்டம் Socks காலுறைகள் Struggle போராட்டம் Time out ஓய்வு நேரம் Touch தொடல் Waiting Block அமரும் கட்டம்

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அவர்களைப் பற்றி

அறிஞர்கள் சொல்கிறார்கள்


விளையாட்டுத் துறையின் வியன்மிகு கலைச் சொற்கள் குற்றால அருவி ஓடி வருவதைப்போல தங்கு தடையின்றிய பேச்சு, ஆழமான கல்வி, பரந்துபட்ட உலக அறிவு, பண்பாட்டின் சிகரம், இனிமையானவர், நகைச் சுவை நல்லரசு, செயலிலே விறுவிறுப்பு, விளையாட்டுத் துறையிலே ஒப்பாரும், மிக்காரும் இல்லாத உயர்ந்த நிலை. இவர்தான் நவராஜ் செல்லையா.

- தமிழ்த் தொண்டர் கோ.முத்துப்பிள்ளை


டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் ஓய்வறியாத உழைப்பாளர். அவரது சுறுசுறுப்பும், போலித் தனமில்லா பேச்சும், தளராத தன்னம்பிக்கையும் அவரைச் சுற்றி இருக்கும் எல்லோரையும் எழுச்சி பெற வைக்கும்.

- டாக்டர் பொற்கோ


டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா உடற்கல்விக்கு அளித்த அர்ப்பணிப்பு, நண்பர்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பு, ஆர்வம், பாசம், பணிவு, இனிய சொற்கள், ஆற்றிய உதவிகளும், பணிகளும் அவர் மறைந்தாலும் என்றும் ஆயிரக்கணக்கானோர் நெஞ்சங்களில் மறையாது. அவர் ஏற்றிய தீபம் அணையாது. மேலும் சுடர் விட்டுப் பிரகாசிக்க நம்மைப் போன்றோர் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

- பேராசிரியர் இரத்தின நடராஜன்
தேசிய விருது பெற்ற நூலாசிரியர், பல்கலைப் பேரறிஞர்

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அவர்களைப் பற்றி

தினமணி நாளிதழ்

விளையாட்டு, உடல் நலம், உடற்பயிற்சி, உடற்கல்வி, யோகாசனம், மனநலம் குறித்த ஆய்வு நூல்களை இவர் எழுதியுள்ளார்.

முதன்முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழ் 1977 முதல் வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

விளையாட்டு இசைப் பாடல்கள் என்னும் ஒலி நாடாவை 1978-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

விளையாட்டுக்களின் பெருமையை உணர்த்தும் வகையில் “ஓட்டப் பந்தயம்” எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதன் கதை, வசனம், பாடல்கள், இசை, பின்னணிக்குரல், நடிப்பு, தயாரிப்பு முதலிய பொறுப்புக்களையும் ஏற்று திரையிட்டார்.

உடற்கல்வித் துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு தமிழ்நாடு அளவிலே “உடற்கல்வி கலைமாமணி” என்ற விருதையும், ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்து விளங்கும் உடற்கல்வி ஆசிரியப் பெருமக்களுக்கு “உடற்கல்வி ஜீவ ஜோதி” என்ற விருதையும் வாங்கிப் பாராட்டி வந்தார்.

ஒலிம்பிக் பந்தயத்தின் கதை, விளையாட்டுக்களின் வரலாறும் வழிமுறைகளும், விளையாட்டுக்களின் கதைகள் முதலிய நூல்களுக்காக 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டுச் சடுகுடுப் பாடல்களும், சடுகுடு ஆட்டமும் என்னும் நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்துள்ளது.

சென்னை அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் பேராசிரிய ராகவும், ஆய்வுத்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

உலகப் பொதுமறை திருக்குறளுக்கு புதிய சிந்தனையுடன் (அறத்துப்பால் மட்டும்) திருக்குறள் புதிய உரை என்ற நூலையும் எழுதியுள்ளார்.
ஆசிரியரைப் பற்றி...

திருமூலர் திருவள்ளுவர். வள்ளலார் போன்றவர்களுக்குப் பிறகு தேகத்தின் தெய்வாம்சம் பற்றி மக்களிடையே மகிமையை வளர்க்கும் பணியை நாற்பது ஆண்டுகளாகச் செய்து வந்தார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையில் நம்பிக்கையுடைய இவர், எங்கும் முதல் எதிலும் முதல் என்பது போல பல அறிய காரியங்களை நிறைவேற்றித் தமிழ்த் தொண்டாற்றினார்.

சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போன்றவை நடத்திய ஓடுகளப் போட்டிகளில் வெற்ற வீரராகத் திகழ்ந்தவர்.

தான் பெற்ற வெற்றியும், புகழும் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக, “விளையாட்டு இலக்கியத் துறை” என்ற புதிய துறையை உருவாக்கி நூல்களை எழுதி வெளியிட்டார்.

முதன்முதலாக விளையாட்டுத் துறை இலக்கிய நூலை 1964–ஆம் ஆண்டு எழுதி முடித்த இவர், 2001 வரை இருநூறு நூல்களைப் படைத்திருக்கிறார்.

இதற்காக தான் வகித்து வந்த எல்லாப் பதவிகளையும் விட்டுவிட்டு முழுநேர எழுத்தாளராக வாழ்ந்தார்.

பதிப்பாளர்
ஆசிரியரைப்பற்றி
(1937 – 2001)


டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் தனது மாணவர் பருவத்தில் சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்ந்தவர். சென்னை பல்கலைக்கழக அளவில் மும்முறைத்தாண்டும் போட்டியில் சாதனையாளர். மழலையர் பள்ளி குழந்தைகள் முதல் ஆய்வறிஞர் பட்டம் பெற்ற மாணவர் வரை பாடம் நடத்திடும் வாய்ப்பு பெற்றவர்.

சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் விளையாட்டுத்துறையில் ஆய்வறிஞர் பட்டம் பெற்ற முதல் மாணவர்.

விளையாட்டுத்துறையில் அதிகமான நூல்களை எழுதி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு துணை நின்றவர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

விளையாட்டுத்துறையை சார்ந்த ‘விளையாட்டுக் களஞ்சியம்’ மாத இதழை 25 ஆண்டுகள் தொடர்ந்து ஆசிரியர் பொறுப்பை ஏற்று வெளியிட்ட பெருமைக்குரிய மனிதர்.

விளையாட்டுக்களின் மேன்மையை சொல்லும் ஒலி நாடாக்களையும், ‘ஒட்டப்பந்தயம்’ என்னும் திரைப்படத்தையும் தயாரித்து இயக்கி, நடித்து திரையிட்ட சாதனையாளர்.

மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார். ஒருமுறை தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றுள்ளார்.

‘திருக்குறள் புதிய உரை’ என்னும் நூலில் திருக்குறள் (அறத்துப்பால் மட்டும்) ஒழுக்கம் பற்றி கூறும் உடலியல் நூல் என்னும் கருத்தை முதன்மையாகக் கொண்டு புத்துரைதந்து தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழ்த்தொண்டர்.


ஆர். ஆடம் சாக்ரட்டீஸ்
பதிப்பாளர்.