இன்பம்/புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

விக்கிமூலம் இலிருந்து
2
இன்பம்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

இன்பம், இன்பம், என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.


இன்பம் எது?

துன்பம் அற்ற உள்ளத்தின் நிலையே இன்பம். அது சிற்றின்பம் பேரின்பம் என இரண்டு வகைப்படும். சிற்றின்பம் என்பது சிறிது மட்டான இன்பம், பேரின்பம் பெரிது-மட்டற்ற இன்பம்.

இதுவன்றி, சிற்றின்பம் என்பது ஒருவன், ஒருத்தி சேர்க்கையின் நுகர்வது என்றும், மக்கள் நிலைக்கு அப்பாலான வீடுபேறு, பேரின்பம் என்றும் விள்ளுவது உண்மையானது அன்று; அது சமயக் கொள்கை நோக்கி மக்களை இழுத்துச் செல்வதோர் முயற்சி என்க,

துன்பம் இல்லாவிடத்து இன்பமே! துன்ப மில்லாத நிலைமை ஒன்றும் அந்நிலைமைக்குப்பின் தேடப்படும் இன்பம் மற்றொன்றும் இருப்பதாகக் கருதவேண்டா.

துன்பம் என்பதென்ன?

துன்பம் என்பது ஊறு, உறுவல், உறுகண் என்ற பெயர்களால் குறிக்கப்படும் நெருங்குவது என்பதுதான் அவற்றின் பொருள்.

துன்பம் என்பதன் வேர்ச்சொல் துன். அதன் தொழிற்பெயர் துன்னல்! துன்னல்-நெருங்குதல். துன் என்பதன் பண்புப் பெயர் துன்மை! துன்மை, துன்பம். நெருங்குவது என்ற காரணம் பற்றித் துன்பம் எனப்பட்டது.

மலையின் அடர்ந்த மூங்கில்கள் ஒன்றின் ஒன்று தேய்ந்து பற்றவே, அந்நெருப்பு நெருங்குவதைத் துன்பம் என்றனர் பண்டைத் தமிழர். மலையினின்று கிளம்பும் அந்தக் கனவைத் தாவம் என்றனர். தாவம் தாவும் எரி! மற்றும் தீயை அக்கால மக்கள் தீங்கு என்றே சொல்லி வந்தனர். தீ-எரி, தீங்கு! மற்றும் மேற்பாங்கிற் பெய்த மழையும், மலையருவியும் பெருகிக் குறிப்பின்றி நெருங்குவதையும் துன்பம் என்றனர் பண்டைய தமிழர், வெள்ளம், வெள்; வெள்கல் என ஆகி அச்சத்தைக் குறிப்பதும் உணர்க. வெள்கல்-அச்சம் வெள்ளம் விரைவது. இவையும் அன்றி, விண் வீழ் கொள்ளியும் நில நடுக்கமும், பெருங்காற்றும், துன்பம் ஆயின. விலங்கு அணுகலும், நோய் அணுகலும் துன்பமே இடைக்காலத்தில் மக்களை மக்கள் நலிவு செய்ய அணுகலும், துன்பமாயிற்று. இனி, இன்பம் என்பதன் பொருளை நோக்குவோம்.

இன்பம் (துன்பம்) இல்லாதது! இன்பம், இன்மை, இல், என்பனவற்றை நோக்குக.

இல்லல்-கடத்தல்; துன்பத்தைக் கடத்தல் என்பது பொருள்.

மேலும் கடி என்பது இன்பத்திற்குப் பெயர், கடி-நீக்கம்:(துன்பம்) நீங்கிய நிலை.

எனவே, ஐயுற, துணுக்குற, நடுக்குறத் துன்னுவது-வருவது துன்பம் என்பதும். அஃது இன்மையே இன்பம் என்பதும் தெளிவு.

இதனால், தீ நெருங்குதல் முதலியவை இல்லாத இடத்து, நிலவுவது இன்பமோ? எனின், ஆம், வேறென்ன? அவ்வாறாயின், ஒருவன் தூங்கும்போது மேற்சொன்னவை அவனை, நெருங்குவதில்லையாதலின் அப்போது அவன் நிலை இன்பமோ எனில் அது, இன்பமும் அற்ற நிலை என்க. ஆயினும், தூங்கல் என்பது சோர்வை யும் நிரம்பாத் தூக்கத்தையும் குறிப்பதாயின் அத் தூங்கல் இன்பமுடையது எனல் பொருந்தாது. அச்சந்தரும் கனாக்காண்பதும், கண் தூங்கவும். கை சிரங்கு சொரியவும் உள்ள நிலை தூக்கமேயல்ல. ஆயின் ஒருவன் செத்த நிலை இன்பநிலை தானோ என்றும் இன்பநிலையாயின் அதனை அவன் சொல்லியதுண்டோ என்றும் கேட்டால், அக்கேட்பானை நோக்கி நானும், செத்தநிலை துன்ப நிலையா என்றும், துன்பநிலையாயின் அதனை அவன் சொன்னதுண்டோ என்றும் கேட்கின்றேன்.

சாவு இன்பமும் துன்பமும் அற்ற நிலை என்க.

“அப்படியானால் அது நல்லதுதானே!”

“ஆம் நல்ல நிலைதான்”

“விரும்பத்தக்கதுதானா?”

“உன் மகனுக்குக் கல்வி தரவேண்டும். அப்பையன் இறகு முளைத்த பறவையாதல் வேண்டும். அவனுக்குத் திருமணம் முடிவதை நீ கண்டு இன்புறுதல் வேண்டும். தமிழுக்குத் தொண்டு செய்தல் வேண்டும். தமிழர் உயர்நிலையை நீ கண்டு இன்புறுதல் வேண்டும். புகழ்பெறுதல் வேண்டும். இவைபோன்ற பற்றுக்களை நீ விட்ட போது சாக்காடு விரும்பத்தக்கதுதான்.” இன்னொரு கேள்வி

தீயணுகல் முதலிய துன்பமும், நோயும், மக்களை மக்கள் நலிக்கும் துன்பமும், இல்லாமல் ஒழியுமாயின் அவ்வுலகம் இன்ப உலகமா? நுணுகி ஆராயின், அது இன்ப உலகமாயிராது என்பது புலப்படும். ஏனெனில், மேற்சொன்ன துன்பங்கள் எதுவுமில்லாதபோது அங்கு நுகரப்படும் உண்ணல், உறங்கல் என்னும் நிலையைவிட மேலான நிலையை அவ்வுலகம் வேண்டி நிற்கும் ஆதலால் இன்பம் என்றுகூறிய அந்நிலையே துன்பமாகக் கருதப்படும்.

இன்பம் என்பது இவ்வளவு என்னும் எல்லை. குறிக்க முடியாது. துன்பமே, அடுத்து நுகரப்படும் இன்பத்திற்கு அளவுகாட்டி நிற்கிறது,

இன்பம் எப்போது கிடைக்கும்? துன்பத்தின் இறுதியில் கிடைக்கும். எதிலிருந்து இன்பம் கிடைக்கும்?

துன்பத்தின் பயன் இன்பம் என்று முழக்கஞ் செய்த தூங்கும் உலகிற்கு! தொண்டு துன்பம். அதன் விளைவு இன்பம், முயற்சி துன்பம். அதன் விளைவு இன்பம். சூல் தாங்கல் துன்பம் மகப்பேறு இன்பம், வித்திடுவது துன்பம் அறுப்பது இன்பம். குற்றுவது துன்பம் அரிசிகாணல் இன்பம், ஆக்குவது துன்பம் அருந்துவது இன்பம். 

இங்கு குறித்தது-மட்டான இன்பம்-சிற்றின்பம் என்க. அதன் பிறகு நிலையான இன்பம், நிலையற்ற இன்பம் என இரண்டு உண்டா?

நிலையான இன்பம் என ஒன்று இருக்கவே முடியாது. இருப்பின் அது இன்பமல்ல என்று மறுக்க, இறந்தவனின் ஆன்மா நிலைத்த இன்பத்தை யடைவதாய்க் கூறுவதில் உண்மையுண்டா எனின், கூறுவேன்;

‘தலைநாளில் கோல் என்பது ஆட்சியாயிற்று. கோலன், (கோல் எடுத்தவன்) ஆள்வோன்; அரசன் என்று போற்றப்பட்டான். ஆயினும், அவன்- அக்கோலன் தனக்கு அஞ்சி வரும் பெருமக்கள், மற்றொரு நாள் தன்னை மீறுதல் கூடும் என்று அஞ்சியே கிடந்தான், அவன் மக்களின் அறிவை இருட்டாக்கவும். ஏமாற்றவும் துணை தேடினான். தன் நாட்டானைக் கருவியாகக் கொள்ள அவன் வெள்கினான். ஆரியன் வந்தான்; அவன் அரசனின் துணையை விரும்பினான்.

முற்பிறப்பில் நல்வினை செய்ததால் இப்பிறப்பில் இவன் அரசனானான்! முற்பிறப்பில் தீவினை செய்தால் இப்பிறப்பில் இப்பெருமக்கள் ஆட்பட்டார். ஆட்பட்டோர் இப்பிறப்பில் நல்வினை செய்து மறுபிறப்பில் உயர்நிலை யடைவதன்றி எம் முயற்சியும் பலிக்காது. ஆதலால் ஆட்பட்டோர் நான் கூறும் வகையில் என்னை வழிபட்டுக் கிடக்க, அரசனும் அடுத்த பிறவியில் தாழாது பெருநிலை யடைய வேண்டில் என்னால் தீவினை நீங்கிக்கிடக்க என்றான். இச்சொற்கள் கோலனுக்கும் மகிழ்ச்சியைத் தந்தன. அரசன், ஆரியனைத் தாங்கினான். அவனைத் தேவகுலமாக்கினான். அவனால் பெருமக்களை அடக்கினான். அவர்களின் எழுச்சியைத் தரைமட்டமாக்கினான். “இதுவன்றி முற்பிறப்போ, ஒருவனுக்கு மறுபிறப்போ உண்டு எனலும் செத்த பிறகு சிவலோகம், வைகுந்தம், உண்டு எனலும் உண்மையல்ல. இனி, மட்டான இன்பம் தவிர, பேரின்பம் எது என்றால் கூறு கிறேன்.

உன்னாட்டுக்கு மற்றொரு நாட்டால் துன்புமில்லை; நீ விடுதலையுடையவன்; நீ நோயற்றவன் தீயும் வெள்ளமும் உன்னை நெருங்காத நிலையில் நீ உள்ளவன். நீ இன்பம் நுகர்கின்றாய்! அந்த நிலையில் உன்னை உயர்ந்த ஒவியம் நெருங்குகிறது. உன் கண்கள் பேரின்பம் நுகர்கின்றன! அதே நிலையில் உன் செவி நோக்கி இசையேறிய பாட்டொன்று வருகின்றது. உன் காது பேரின்பம் அடைகின்றது. அரும்பிலும் மணக்கும் முல்லை வருகிறது. உன் மூக்கும் பேரின்பம் அடைகின்றது. அன்னத்தின் தூவி திணிந்த மெல்லணையில் படுக்கின்றாய், உன் மெய் பேரின்பம் எய்துகின்றது! கோடைபுறம் போக்கும் ஓடுபிடிக்காத இளநீரைக் குடிக்கின்றாய். உன் வாய் பேரின்பம் நுகர்கின்றது. உன் கண்ணையும் மனத்தையும் கவர்ந்தாள். அவளோ எண்ணையும் எழுத்தையும் தெரிந்தாள். அவளை நீ, கிட்டுதற்கரிதென்று கருதினாய். துன்பம் பெரிதுற்றாய் அவளோ உன்னைத் தொட்டிழுத்து வலிய அணைத்தாள். இன்பம் பெரிதுற்றாய். அவள் அறிவை உன் அறிவால் அறிந்தாய். ஒரே நேரத்தில் உன் கண், மூக்கு, காது, மெய், வாய், அறிவு அனைத்தும் பேரின்பம் நுகர்கின்றன! இனி,

இப்பேரின்பம் துன்பத்தின் பயன்தானோ என்று கேட்பின், காதல் என்னும் தீயின் பயனே இது! அவள் கிட்டுவாளோ என்று காத்த முயற்சியின் பயனே இப் பேரின்பம்! இதன் பின்னும், அவன் “ஊடல்” ‘பிரிதல்’ என்ற துன்பத்தின் பயனாகவே இன்பத்தை யடைதல் வேண்டும்.

திராவிட நாடு
22-4-1945