இன்பம்/எஸ். தனபாக்கியம்

விக்கிமூலம் இலிருந்து
7
இன்பம்

எஸ். தனபாக்கியம்

இன்பம். இன்பம், என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம் இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி தோழியர் பொள்ளாச்சி எஸ் தனபாக்கியம் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.

மாலை வேளை; மலைவாயில் வீழ்கிறான் ஆதவன். கண்ணாம்பூச்சி பிடிப்பதுபோல், கீழ்த்திசையில் செம்பொற் குடம்போல் மிதக்கத் திக்குத் திகந்தமெல்லாம் வெண்ணிலாப் பரவுகின்றது, நிலவினது ஒளிபட்டு அடர்ந்த பந்தரிலே இருண்டு படர்ந்துள்ள முல்லை மலர்கிறது. நிலவொளியால் ஏற்பட்ட இன்ப உணர்ச்சியால்தான்! போதாக உள்ள அது அக்காந்த சக்தி பட்டவுடன் ஆவினது அணித்தே அதன் அணைப்பிலே உள்ள கன்று, புறஞ்சிறை வாரணத்தின் கூடாரப் பாதுகாப்பிலே அடங்கிய அதன் குஞ்சுகள் இவைகளின் தன்மையை அடைகின்றன! ஆவும் அதன் கன்றும் கோழியும் அதன் குஞ்சுகளும். ஒரே விதமான இன்ப நிலை அடைகின்றன. மனிதருக்குள்ளது போன்ற ஓர் பேசும் கருவியை இயற்கை அவைகளுக்கு அளித்திருக்குமானால் அதனதன் இன்ப நிலையை மனிதன் காட்டுவதைவிட அழகிய முறையில் ஒழுங்கான முறையில்-வெளிப்படுத்தும்! இப்பண்புகளை நாம் ஓரளவு கண்ணால் காணலாமே யொழியக் கற்பனையால் சிந்திக்கலாமே தவிர, உள்ளவாறு எடுத்துரைத்தல் முடியாத தொன்றாம். ஓரிடத்திலே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி அதைக் கண்ணுற்றவர் பல மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கொடுப்பர். அதேபோலத்தான் பகுத்தறிவில்லாத விலங்கினத்தைப் பற்றி நாம் நினைப்பதும். அவைகளின் இன்பதுன்ப நிலைமையைப் பற்றிக் கூறுதல் சாத்யமன்று.

இரவிலே, இளந்தென்றலிலே - நிலவினது ஒப்பற்ற தட்ப ஆட்சியில் முல்லை நாயகி அசைந்தாடுகின்றாள். நிருத்தம் புரிகின்றாள். இன்ப முண்டாகும்போது ஏற்படும் மகிழ்ச்சியினால் இளித்த வாயர்களாவர் மனிதர்; விலங்குகளும் அவ்வாறே. மற்றைய ஊர்வன, தாவரங்களின் இப்பண்பைக் காணுதல் முடியாது. நிலவொளியின் காந்த சக்தி கண்டு முல்லையாள் தன் வாய்திறந்து. நகைக்கின்றாள் இதழ்கள் விரித்து, இதே நிலவொளி தாமரையாளுக்குத் துன்பத்தை உண் டாக்குகிறது. இரவு பூராவும் இத்தகைய இன்ப நிலை.

கொஞ்சம் கொஞ்சமாக இருள் மறைகிறது. வைகறையை உணர்ந்த இயற்கையின் தொண்டர்களான சேவலும், காகமும் தம் கடமையை நிறைவேற்றுகின்றன. பனிப்பகையோன் பரந்த ஒளிவீசிக் கொண்டு தோன்றுகின்றான். சூரிய ஒளிபட்டவுடன் முல்லையாள்வாடி வதங்கிச் சுருங்குகிறாள். இரவிலே காணப்பட்ட இன்பம் மறைகிறது. துன்பம் வந்து விடுகின்றது. புன்னகை தவழக் காட்சியளித்த முல்லையாள் அலங்கோலமாகக் காட்சி அளிக்கிறாள். சூரிய வெப்பம் முல்லையாளுக்குத் துன்பமுண்டாக்குகிறது இதே வெப்பம் தாமரையாளுக்கு இன்பத்தைக் கொடுக்கிறது. இவை இயற்கையில் காணப்படும் முரணான சித்திரங்கள்! மாறுபட்ட தோற்றங்கள்! ஒரே காலத்தில் சூரிய சந்திரர்களால் அவைகளைக் கண்கூடாகக் காண்கிறோம்.

கவிஞன் ஒருவன், கற்பனைக் களஞ்சியம், கவி இயற்ற உட்காருகிறான். அவனது இன்ப நிலையிலே கடல் மடைதிறந்தாலன்ன கவி ஊற்றுக் கிளம்புகிறது. எதுகை, மோனை, சீர் இவைகள் தானாகவே அமைகின்றன. கவிதைக்கு முடிவை உண்டாக்குகிறான் கவிஞன் பிறகு திரும்ப அதை ஓர்முறை. இருமுறை பார்க்கிறான். சில சீர்த்திருத்தங்களைச் செய்து தன் உருவெடுத்ததன் தன்மை கண்டு ஓர் இன்பத்தை உணர்கிறான். அதைப் படிக்கும் நாமும் இன்பமடைகிறோம். கவிதையிலே உள்ள இன்பதுன்ப நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு நம் மனமும் மாறுபடுகின்றது. கவிஞனின் மேதைகண்டு மகிழ்கிறோம். அதே கவிஞன் தனக்கு ஏற்படும் துன்ப நிலையில் கவி இயற்ற முற்படுவானாகில் அது கடைசிவரை வெற்றி அளிக்காது. ஆயிரம் அடித்தல் திருத்தல்கள், காகிதக் கிழிப்புகள், நேர இடமேற்படும்! எழுது கருவிகொண்டு மண்டையில் தட்டிக்கொள்வான். திலகமிடுமிடத்தில் கைவிரல் செல்லுகின்றது. விரலுக்கும் அந்த இடத்திற்குமுள்ள ஏதோ அறிய முடியாத ஒன்று-அஜந்தா இரகசியம் போன்ற உணர்ச்சி-அவன் கற்பனையைத் தூண்டுகின்றது.

பண் இசைக்கும் ஒருவனுடைய இசை இசைக் கலையிலே இசை வெள்ளம் கரை கடந்து செல்லுகின்றது. பாடுவோரையும் கேட்போரையும் மெய் மறக்கச் செய்கின்றது. பலே! சபாஷ்! என்று உற்சாக மூட்டுகின்றனர். கேட்போரும் கைதட்டலைக் கூடச் சேர்த்துக் கொள்கின்றனர். அங்குள்ள அனைவரும் இசைமயமான இன்ப-வெள்ளத்தில் மூழ்குகின்றனர். இசை பாடுபவன் துன்ப நிலையில் அமர்வானாகில் அவ்விசை சோபிக்காது. எல்லோருக்கும் அதே நிலை ஏற்படும். இது இசை அரங்கில் காணப்படும் ஓர் தோற்றம். ஓர் ஓவியனும் சிற்பியும். ஒவியன் இன்ப நிலையிலே ஓர் ஓவியம் தீட்டமுற்படுவானாகில் அது நன்கு அமையும். துன்ப நிலையிலே முடிவுறாது. அலுப்புத் தோன்றும்; சினமுண்டாகும். சிற்பியும் சிற்றுளிகொண்டு சிலை அமைக்க இன்பநிலையிலே முற்பட்டால் சீரிய கருத்துக்களினால் சிறந்த ஓர் சிலை தோன்றும். துன்ப நிலையில் இதற்கு நேர் மாறாக அவனது சிந்தனை சிதறும்!

இதனால் இன்பம் எது? அதன் தன்மை என்ன? என்று ஆராய்ந்தால் எளிதில் கிடைக்கப் பெறாத ஒன்று-விரும்பப்பட்ட ஒன்று விரைவில் கிட்டினால் அதன் பயன்தான் இன்பம். இயற்கை இந்த இன்பத்தை அவரவர்களுக்கு ஏற்ற முறையில் அளிக்கின்றது. மாசுமருவற்ற தூய உள்ளத்துடன் பகற்கனவுகள் கண்டு பரிதபிக்கத்தக்க தன்மையில் அல்லாமல், அச்சம் போக்கி, ஆண்மைகொண்டு, இச்சகத்துள்ளோரை ஈகையுடன், உயர்வறு முறையில் ஊக்கமாக ஆதரித்து ஐயங்கள் தவிர்த்து, ஒளி குன்றாமல், ஓங்கிய நிலையில் ஊட்டப்படும், ஒளதடமே இன்பம்! பொதுவாக இயற்கை அழகைத் தன் அகக்கண் கொண்டு நுண்ணிய கருத்துக்களால் ஆராய்பவன் இன்பமடைவான்.

திராவிட நாடு
27-5-1945
"https://ta.wikisource.org/w/index.php?title=இன்பம்/எஸ்._தனபாக்கியம்&oldid=1056415" இலிருந்து மீள்விக்கப்பட்டது