அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/008

விக்கிமூலம் இலிருந்து

புலனடக்கம்


னது மனைவியிடம் உண்மையாக நடப்பதை, ஒழுக்கமாக இருப்பதை, அவ்வாறு வாழ்வதை சத்தியத்தின் ஒரு பகுதியாகவே காந்தி நம்பினார்! வாழ்ந்தும் காட்டினார்!

காந்தியடிகள், அன்னை கஸ்தூரிபாய் இருவருக்கும் இறுதியாகப் பிறந்த குழந்தைதான் தேவதாஸ் காந்தி என்பவர். எதிர்பாரா நேரத்தில் தேவதாஸ் பிறக்க கஸ்தூரி பாய்க்கு பிரசவ வேதனை உண்டானது.

அந்த இக்கட்டான நேரத்தில் பிரசவம் பார்க்க எந்த மருத்துவரும் அங்கே திடீரெனக் கிடைக்கவில்லை- போய் அழைத்து வரவும் நேரமில்லை. அதனால், காந்தியே மனைவியுடன் இருந்து பிரசவத்தைக் கவனித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு காந்தியடிகளாராலேயே பிரசவம் பார்க்கப்பட்டவர்தான் இந்தியாவின் இறுதி கவர்னர் ஜெனரலான சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியாரின் மகள் லட்சுமியைத் திருமணம் செய்து கொண்ட தேவதாஸ் காந்தி.

இந்தக் குழந்தை பிறந்ததற்குப் பிறகுதான் காந்தி தன்னையே மிகக் கடுமையான சோதனைகளிலே ஈடுபடுத்திக் கொண்டார்.

ஒரு மனிதன் தன்னைப் புலனடக்கம் செய்து, ஆசைகளை அடக்கவேண்டும். அப்படி அடக்கி வெற்றி பெறாதவனால் மனப் பூர்வமான மக்கட் தொண்டு செய்ய முடியாது என்பது காந்தியமாகும்.

இதே கருத்தைத்தான் பிளேட்டோ என்ற சிந்தனையாளர் தனது குடியரசு நூலில் கூறும்போது, மனித இனத்தை மூன்றாகப் பிரித்து முதல் தர மனிதனை தங்க மனிதன் (Golden Man) என்றார். இந்த மனிதனைத்தான் காந்தியடிகள் இங்கே நினைவுகூர்ந்து, அவரது ஆன்மிகம் கலந்த சிந்தனைக்கு பிரம்மச்சரியம் என்று பெயர் சூட்டுகிறார். இவர்கள்தான் ஆட்சியிலும், பொதுத் தொண்டிலும் அமரவேண்டும் என்கிறார் பிளேட்டோ.

இரண்டாவது தரத்திற்குரிய மனிதன் வெள்ளி மனிதன் அதாவது {Siver Man) என்கிறார். இவர்கள் கல்வி, அறிவியல் வரலாற்றுத் துறைகளில் மேன்மைகளை உருவாக்கும் திறன் உடையவர்களாக நாட்டுக்கு நன்மையாக விளங்குவார்கள் என்கிறார்.

மூன்றாவது தரத்திற்குரிய மனிதனை Iron Man அதாவது இரும்பு மனிதன் என்கிறார். இவனுடைய உழைப்புத்தான் மக்களது வாழ்வுக்கும் வளமைக்கும் உபயோகமான உழைப்பாக உயரும் எனகிறார்! அவனால்தான் அந்த நாடு வளமும் நலமும் பெறும் என்று அறுதியிட்டு உரைக்கின்றார்.

இந்த மூன்று மனிதர்களில் முதல் ரகம்தான் பிரம்மச் சரியம் பேண வேண்டும் என்ற காந்திய முறையாகும்!

காந்தி தென்னாப்பிரிக்காவில் 1906ஆம் ஆண்டு ஆசிரம வாழ்க்கையின் போதே இந்த பிரம்மச்சரிய முடிவுக்கு வந்து, தனது வாழ்நாள் முழுவதும் அந்த விரதத்தை மேற் கொண்டார்.

”பொதுநலவாழ்க்கையில் மக்கள் சேவை செய்ய நினைப்போர் அல்லது செய்து கொண்டிருப்போர் இந்த பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் குரங்குபோல குறும்புசெய்து அங்குமிங்கும் தாவிக் கொண்டிருக்கும் மனத்தையும், ஆத்மாவையும் ஈடுபடுத்தி மக்கட் தொண்டு செய்ய முடியாது என்பதை நான் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.

”இல்லற இன்பங்களில் மூழ்கி, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தால், நான் செய்த பல பணிகளைச் செய்திருக்க முடியாது. குறிப்பாக மண், பெண், பொருள் என்ற மூவாசைகளையும் ஒழிக்காதவன், முக்தி என்ற மோட்சத்தை நாட முடியாது என்பது உறுதி... என்று மகாத்மா காந்தி தனது சத்திய சோதனை வரலாற்றில் எழுதுகிறார்.

பட்டினத்தடிகள் பாடியதைப் போல "பொல பொலவென குழந்தைகளைப் பெற்றுவிட்டுப் பின்பு ஆப்பசைத்த குரங்கைப்போல, வாழ்க்கையின் நிலை ஆகிவிடக் கூடாது” என்ற சிந்தனைதான் அவளுக்கு புலனடக்கத்தைத் தூண்டி விட்டது. அதனால், சுயேச்சையாகப் புலனடக்கத்தைக் கட்டுப்படுத்தலானார். இந்த அரிய ஆத்ம முயற்சியில் பல தொல்லைகள் ஏற்படலாயின. அன்னை கஸ்தூரிபாய்க்கு ஒரு படுக்கை! காந்தியடிகளுக்கு ஒரு படுக்கை அதுவும் ஒரே அறையில்!

காம வேட்கை மிகுந்து மோக வெறிக்கு அடிமையான காந்தியடிகள், சிற்றின்ப வேட்கையை ஒடுக்க முடியாமல் மிகவும் துன்பப்பட்டார்!

ஆனால், கஸ்தூரி பாவுக்கோ அது மிகவும் எளிதாக இருந்தது. இந்த உண்மையைக் காந்தியடிகளே ஒப்புக் கொண்டு, தனது 'சத்திய சோதனை'யில் ”என் மனைவி என்னை ஒருபோதும் தூண்டியதில்லை, வேண்டியதில்லை என்பதைக் கூற நான் கடமைப்பட்டவன். மன உறுதி இல்லாததாலும், காமவேட்கையாலும் துணிந்து அந்த பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிக்க என்னால் இயலவில்லை” என்று எழுதுகிறார்.

பிரம்மச்சாரிய விரதத்தைக் கடைப்பிடிக்க அவர் அமைத்த வியூகம் என்னவென்றால், விரதத்தை மேற்கொள்வதற்கு முன்பாக, அவர் கஸ்தூரி பாயைக் கலந்து யோசித்தார். கஸ்தூரிக்கு அப்போது வயது என்ன தெரியுமா? முப்பத்து ஒன்றுதான்! அதே நேரத்தில் காந்தியடிகளுக்கு என்ன வயது என்றால் முப்பதரை ஆண்டுகள்.

சிற்றின்ப ஆசைகள் தீவிரமாக இருக்கும் வயது இருவருக்கும். என்றாலும், தனது கணவர் பிரம்மச்சாரிய விரதம் இருக்கப் போவதாக கூறியதும், சற்றும் தயங்காமல் ”சரி உங்களது விருப்பம் அதுவானால் நான் குறுக்கிடமாட்டேன்” என்று கூறி சம்மதம் தெரிவித்து வாழ்நாள் முழுவதும், சாகும் வரையிலும் இருப்பேன் என்று இணக்கம் தெரிவித்த இல்லத்தரசியாக விளங்கினார் கஸ்தூரி பாய்! அவ்வாறே தான் இறக்கும்வரையும் கடைப்பிடித்தார்.

இதே நேரத்தில், கஸ்தூரிபாய் இடத்தில் வேறோர் பெண் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? காந்தியடிகளாருடைய பிரம்மச்சரிய நோன்பு வெற்றி அடைந்திருக்குமா? பாதிக் கிணறு தாண்டியவன் கதியல்லவா ஏற்பட்டிருக்கும்?

ஆனால் ஒன்று உறுதி. கணவர் கூறிவிட்டார் என்பதற்காக மட்டும் எதையும் சிந்திக்காமல் ஏற்றுக் கொள்கிறவர் அல்லர் அன்னை கஸ்தூரிபாய். 'எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருளில் மெய்ப்பொருள் காணும் அறிவுத்திறம் பெற்ற தாயுள்ளம் கொண்டவர் அவர்.

எதிலும் சுயேச்சையாக சிந்திக்கும் தகுதி உடையவர் அவர் என்பதால், கணவர் காந்தியடிகள் தன்னைக் கலந்து ஆலோசித்ததும், இந்த விரதத்தால் உலகம் என்ன வியத்தகு வரலாற்றுச் சம்பவங்களைப் பெறுமோ என்று எண்ணி, தயங்காமல் சரி என்று சம்மதம் கூறி ஏற்று இணங்கியதுடன், அந்த வாக்குறுதியை தான் சாகும்வரை பிடிவாதமாக, சபதமாக, வைராக்கியமாகக் கடைப்பிடித்து காந்தியடிகளாரின் ஞான வேட்கையை வெற்றி பெறச் செய்தார் கஸ்துர்பா காந்தி!

xxx