அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/007

விக்கிமூலம் இலிருந்து


ஆசிரமத் தலைவியாக கஸ்தூரிபாய்

தென்னாப்பிரிக்காவில் பல சோதனைகளை எதிர் கொண்டு வெற்றிகண்ட மகாத்மா காந்தி, அங்கே ஃபினிக்ஸ் செட்டில் மெண்ட்’ என்ற ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு இந்தியர் உரிமைகளுக்காகப் போராடி வந்தார்.

அதே ஆசிரம வாழ்க்கையைத்தான், அவர் இந்தியா வந்த பிறகும் சபர்மதி, வார்தா போன்ற நகரங்களிலே அமைத்துக் கொண்டு வாழ்ந்தார்.

ஃபினிக்ஸ் செட்டில்மெண்ட் ஆசிரமத்திலே வாழ்ந்து கொண்டிருந்த அவர், அப்போது ஆடம்பர வாழ்க்கையை மட்டும் ஒழிக்கவில்லை; தென்னாப் பிரிக்காவிலே உள்ள ஆங்கிலேயர் ஆட்சியையே அந்த ஆசிரமத்திலே இருந்து கொண்டுதான் எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்.

எனவே, காந்தியடிகளது ஆசிரம வாழ்க்கை தென்னாப்பிரிக்காவிலே ஆரம்பமாகி, அங்குள்ள இந்தியர்களது உரிமைகளை மீட்டு, ஆங்கில ஏகாதிபத்தியத்தின் நிறவெறிக் கொழுப்பை உருக்கி சமத்துவம் என்ற விளக்குக்குரிய மனித நேயர் என்ற திரியாக மாறி ஒளி தந்தது!

ஆசிரம வாசிகள் ஒரு குடும்பத்தினர் போல சமத்துவமாக, மனித நேயமாகக் கூடி வாழ்ந்திடும் பண்புடையவர்கள் என்பதைக் காந்தியடிகள்தான் முதன் முதலில் வாழ்ந்து காட்டினார்.

இத்தகைய ஃபினிக்ஸ் செட்டில்மெண்ட் ஆசிரமத்திற்கு அன்னை கஸ்தூரிபாய்தான் தலைவியாக இருந்துகொண்டு எல்லா வேலைகளையும் கவனித்துக்கொண்டார். அங்கே தென்னாப்பிரிக்காவின் பல முக்கிய தலைவர்களும், பெரியோர்களும் ஆசிரமத்திற்குள் வந்து குடியேறினார்கள். எழுத்து வாசனையும் படிப்பறிவும் இல்லாத அன்னை இந்த ஆசிரமத்திலேதான் தனது எண்ணங்களை ஆங்கில மொழியிலே வெளிப்படுத்தப் பயிற்சி பெற்றார்.

மறுபடியும் ரத்தப்போக்கு நோய் அன்னையைப் பற்றி வாட்டி வதைத்தது. எளிதில் அந்த நோய் குணமடைவதாகத் தெரியவில்லை. எந்த மருந்தாலும் அவரது வியாதி சுகமடையவில்லை.

இதனைக் கண்டு மனம் நொந்த காந்தியடிகள், இயற்கை மருத்துவமான ஜல சிகிச்சையாலும் அந்நோய் தீராததால், நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, தனது மனைவி உண்ணும் உணவில் உப்பையும், மசாலாவையும் நீக்கி விட்டார். இந்த ரத்தப் போக்கு நோய் குணமாகலாம் என்று உணர்ந்து, இதனால் இரண்டையும் விட்டுவிடும்படி தனது மனைவியை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், கஸ்தூரிபாய் இந்த கெஞ்சுதல் நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டார். பலவீனமான உடம்பில் விரைவில் கோபம் கொப்பளித்து வருவது இயற்கை அல்லவா?

அதனால் அவர் கணவன் மீது கோபப்பட்டார். ”வைத்தியர் ஒருவர் உம்மைப் பார்த்து உப்பையும் மசாலாவையும் கைவிட்டு விடுங்கள் என்று யோசனை கூறினால் விட்டு விடுவீர்களா?” என்று தனது கணவனைத் திருப்பிக் கேட்டு விட்டார்.

காந்தியடிகளுக்கு அதைக் கேட்டதும் மனைவி மீது ஓர் அனுதாபம் ஏற்பட்டது. இருப்பினும் வருத்தத்துடன் மகிழ்ச்சியும் பெற்றார். மனைவியிடம் தனக்குள்ள அன்பு, பாசம், பிடிப்பு எத்தகையது என்பதை எடுத்துக்காட்டிட இதுதான் தக்க நேரம் என்று உணர்ந்தார்!

”கஸ்தூரி, நான் நோயாளியாக இருந்து எனக்கு மருத்துவர் உப்பு மசாலாவை மட்டுமல்ல, வேறு எந்தப் பொருளையும் கைவிடு என்பாரேயானால், நான் உறுதியாக அவற்றைத் தொடமாட்டேன்.

”எனக்கு மருத்துவர்கள் யாரும் அவ்வாறு கூற வில்லையே! இப்போது நான் கூறுகிறேன் கேட்டுக் கொள்; இன்று முதல் ஓராண்டு காலத்திற்கு நான் உப்பையும், மசாலாவையும் தொடமாட்டேன். நீ அவற்றைக் கைவிடுகிறாயோ இல்லையோ, நான் நிச்சயமாக அப்பொருள்களைச் சுவைக்க மாட்டேன்” என்று உறுதிபட மனைவியிடம் உரைத்தார்.

திடுக்கிட்டார் கஸ்தூரிபாய்! ”தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். உங்களுடைய சுபாவம் நான் அறிந்ததே ஐயோ, தெரியாமல் இப்படி உங்களைக் கோபமடையச் செய்து விட்டேன்! நான் இன்று முதல் உப்பையும் மசாலாப் பொருட்களையும் உண்ண மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கின்றேன். நீங்கள் உங்களுடைய சபதத்தைக் கைவிடுங்கள். அதனை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று கண்ணிர் சிந்தினார் கஸ்தூரிபாய்.

உடனே காந்தியடிகள் அரைகுறையான பச்சாதாபத் தோடு, ”கஸ்தூரி, உனது உடம்பு நலமாகத்தான் நான் கூறுகிறேன். எனக்குக் கூட வருத்தமாகத்தான் இருக்கிறது. சுவையோடு உண்டவர்களுக்கு இது ஒரு சோதனை தான்; என்ன செய்வது?

”உப்பையும், மசாலாப் பொருட்களையும் நீ சேர்த்துக் கொள்ளாவிட்டால் உனது வியாதி உன்னை விட்டு நீங்கும்; உடலும் முழுமையான குணமடையும். அவற்றை விலக்க விலக்க உனக்கு நன்மைதான்; சந்தேகமே இல்லை.

"ஆனால், நான் செய்த சபதத்தை என்னால் மாற்றிக் கொள்ள இயலாது. அதனால் எனக்கும் தான் நன்மை. புலன் அடக்கத்திற்கு உதவும் எதுவும் நன்மைகளைத்தான் தரும். எனக்கு இது ஒரு சோதனையாகவும், உனக்கு உன் தீர்மானத்தை நிறைவேற்றும் அறத்தின் வலிமையாகவும் இருக்கட்டுமே!” என்றார் அடிகள்.

கணவரைத் மாற்ற முடியாது என்றுணர்ந்த கஸ்தூரிபாய், ”நீங்கள் பிடிவாதக்காரர், யார் சொன்னாலும் கேட்க மாட்டீர்கள்” என்றார், வருத்தமும் சோகமும் கலந்த குரலோடு:

உப்பையும், மசாலாப் பொருட்களையும் அறவே நீக்கி விட்ட அன்னைக்கு, விரைவிலே ரத்தப்போக்கு நின்றது. சாகும்வரை அவருக்கு அந்த நோய் வரவே இல்லை.

ஏற்கனவே, பாமரவைத்தியன் என்ற பெயரைப் பெற்றிருந்த காந்தியடிகளாருக்கு, அன்னையின் ரத்தப் போக்குத் தடுப்பு மேலும் ஒரு புகழைத் தேடித் தந்து விட்டது.

xxx