அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/006

விக்கிமூலம் இலிருந்து



புலால் எதிர்ப்பு: டாக்டருடன் வாதம்

தென் ஆப்பிரிக்காவில் காந்தி சட்ட மறுப்பு, நிறவெறி எதிர்ப்பு அறப்போர் நடத்திய போது, கஸ்தூரி பாய் ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்து ஓடாய் தேய்ந்ததால், ரத்தப் பெருக்கு நோய் ஏற்பட்டு உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலை உருவாகிவிட்டது.

கஸ்தூரி பாய்க்கு மருத்துவச் சிகிச்சை பார்த்த டாக்டர் காந்திக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிலே ஒருவர். அதனால் அவர், கஸ்தூரி பாயை மிகப் பொறுப்புடனும், அக்கறையுடனும் கவனித்து, உடனே அறுவைச் சிகிச்சை செய்தால் தான் அவர் உயிர் பிழைப்பார் என்று காந்தியிடம் கூறினார்.

முதலில் கஸ்தூரி பாய் தயங்கினார்! காரணம், அவரது உடல் ஓயாத ரத்தப் பெருக்கால் மிகவும் பலம் குன்றிப் போயிருந்தது. பிறகு, அவர் அறுவைச் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார்.

மயக்க மருந்து கொடுக்காமலேயே டாக்டர் அவருக்கு அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். என்றாலும், அவர் அறுவைக்குப் பிறகு மேலும் பலவீனம் அடைந்தார். இந்த சிகிச்சை டப்ளின் நகரிலே நடந்தது.

ஜோஹன்ஸ் பர்க் என்ற நகரிலே காந்திக்கு ’இந்தியர் காங்கிரஸ்’ இயக்கப் பணி அதிகமாக இருந்ததால், அவர் டாக்டரை நம்பி, அவரது உத்தரவைப் பெற்று, ஜோஹான்ஸ் பர்க் நகரை வந்தடைந்தார்.

சில நாட்கள் கழித்து டப்ளின் நகரில் உள்ள டாக்டரிடம் இருந்து காந்திக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் கஸ்தூரி பாய் உடல் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்றும், எழுந்து உட்கார முடியாத நிலையில் அவரது உடல் உள்ளது என்றும், ஒரு முறை அவருக்கு மயக்கம் ஏற்பட்டு விட்டது என்றும் எழுதியிருந்தார்.

உடனே காந்தி அங்கிருந்து தொலை பேசியில் பேசி அவர் உடல் நிலை பற்றி விசாரித்த போது, டாக்டர் காந்தியிடம் 'உமது மனைவிக்கு மாட்டிறைச்சி சூப் கொடுக்கலாமா? என்று கேட்டார். அதற்கு காந்தி கஸ்தூரி பாயைக் கேளுங்கள் என்று பதில் கூறிவிட்டார்.

"நான் நோயாளிகளைக் கலந்து யோசிக்க முடியாது. நீங்களே நேரில் வரவேண்டும். எனது விருப்பப்படி உணவு தராவிட்டால் உமது மனைவியின் உயிருக்கு நான் பொறுப்பல்ல" என்று டாக்டர் காந்தியிடம் கூறினார்.

காந்தி உடனே டப்ளின் நகருக்கு வந்தார். அவரைப் பார்த்த டாக்டர் ”உமது மனைவிக்கு மாட்டு சூப் கொடுத்து விட்டேன்” என்றார்.

'டாக்டர் இது பெரிய நம்பிக்கைத் துரோகம்" என்று காந்தி கூறினார்.

”நோயாளிக்கு மருந்து தருவதும் பத்தியம் சொல்வதும் டாக்டரின் உரிமை. இதில் ஏதும் நம்பிக்கைத் துரோகம் இல்லை. நோயாளி உயிரைக் காப்பாற்றுவது தான் டாக்டரின் கடமை” என்றார் டாக்டர்.

நல்ல எண்ணத்தோடு, ஓர் உயிரைக் காப்பாற்றவே டாக்டர் தனது கடமையைச் செய்தார் என்று சிந்தித்த காந்தி, ”டாக்டர் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? என்பதை என்னிடம் கூறுவீர்களா? எனது மனைவிக்கு மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி தருவதை நான் விரும்பவில்லை. அவள் செத்தாலும் பரவாயில்லை. ஒருவேளை அவள் விரும்பினால் நீங்கள் அவைகளைக் கொடுக்கலாம்" என்றார்.

”உமது மனைவியின் உடல் சுகம் பெற, அதற்கு நான் மருத்துவம் செய்யும் வரை, எனது முடிவு என்னவோ அதைச் செய்வேன்; எனக்கு அந்த உரிமை உண்டு. இதற்கு நீர் உடன்படாவிட்டால் உமது மனைவியை இங்கிருந்து அழைத்துச் செல்லலாம். எனது மருத்துவ சிகிச்சையில் ஓர் உயிர் இறப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறினார் டாக்டர்.

”அப்படியானால் நோயாளியை இங்கிருந்து அழைத்துச் செல் என்கிறீர்களா?” என்று காந்தி டாக்டரைக் கேட்டார்.

"நானா அழைத்துச் செல்லுங்கள் என்கிறேன். நீங்கள் நான் சொல்வதற்குச் சம்மதித்தால் நானும் எனது மனைவியும் எங்களால் முடிந்ததைப் பொறுப்புடன் செய்வோம். பிறகு, நோயாளியைப் பற்றிய கவலையே இல்லாமல் நீங்கள் போங்கள். இந்தச் சிறிய விஷயங்கள் கூட உங்களுக்குப் புரியவில்லையே! உமது மனைவியை எனது வீட்டிலே இருந்து அழைத்துப் போங்கள் என்று நான் கூறும் அளவுக்கு, நான் உங்களைக் கேட்டுக் கொள்ளுமாறு தூண்டுவது யார்? நீங்கள்தானே!" என்றார் டாக்டர்.

அப்போது உடன் இருந்த காந்தியின் மகன், தந்தையின் கருத்தை ஆதரித்தான். "தாயாருக்கு எக் காரணம் கொண்டும் மாட்டிறைச்சி சூப் கொடுக்கக் கூடாது" என்றான்.

இதற்குப் பிறகு காந்தி, மனைவியின் கருத்தறிய கஸ்தூரிபாயிடம் சென்று, தனக்கும் டாக்டருக்கும் நடந்த வாக்கு வாதத்தைக் கூறினார்.

அதற்கு கஸ்தூரிபாய், "என்ன மாட்டிறைச்சியா? அதன் ரசமா? பருகமாட்டேன். மாட்டின் உடலை வெட்டித் துண்டாக்கிய அந்தப் புலால், மாட்டின் உடலிலுள்ள புண்தானே அந்தப் புண்ணிலே வடிக்கப்பட்ட புலால் ரசத்தை நான் குடிக்க மாட்டேன். உலகத்தில் மனிதப் பிறவியே பெறுவதற்கரிய உன்னதமான பிறவி. இந்த மாதிரிப் பிற உயிர்களைக் கொன்று அதன் புண்களிலே வடித்து எடுக்கப்பட்ட ரசத்தைக் குடித்து எனது உடம்பைக் கறைப்படுத்திக் கொள்ள மாட்டேன். இதைவிட என் உயிர் எனது கணவன் அரவணைப்பிலே பிரிவதே மேல்” என்றார்.

டாக்டர் கூறிய, அக்கறை மிகுந்த வாதங்களைக் காந்தியும்-கஸ்தூரிபாயிடம் வலியுறுத்தினார். எல்லா விஷயங்களிலும் மனைவி கணவனைப் பின்பற்றியாக வேண்டிய அவசியமில்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மதுவையும், புலாலையும் நண்பர்கள் உண்பதைக் காந்தி தனது மனைவிக்கு எடுத்துரைத்தார்.

ஆனால், ”புலால் ரசம் என்ற பிற உயிரின் ரசத்தைக் கண்டிப்பாக அருந்தமாட்டேன் என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார் கஸ்தூரிபாய். உடனே என்னை டாக்டரிடம் இருந்து அழைத்துச்செல்லுங்கள்” என்றும் வேண்டினார் அவர்.

காந்தி, கஸ்தூரி பாய் கருத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். மனைவியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பி டாக்டரிடம் அனுமதி பெற்றார். டாக்டர் ”காந்தி உணர்ச்சியற்ற ஒரு கல்நெஞ்சர்” என்று வருத்தப் பட்டார்.

மழை தூறிக் கொண்டிருந்தபோதே, தனது மனைவியைக் குண்டுக் கட்டாகத் தூக்கி ரிக்க்ஷாவில் ஏற்றிக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று விட்டார். போகும் வழியில் தனது கணவரிடம் கஸ்தூரிபாய் எனக்கு ஒன்றும் இல்லைங்க. நீங்கள் கவலைப்பட வேண்டாம்! என்றார்.

எலும்பும் தோலுமாக இருந்த கஸ்தூரி பாயைக் காந்தி தனது இரு கைகளால் தூக்கிச் சுமந்து கொண்டு ரயிலேறி பீனிக்ஸ் என்ற இடத்திலே உள்ள தனது வீட்டுக்கு வந்து, இயற்கை வைத்திய முறையில் ஜல சிகிச்சை கொடுத்து, மனைவி உயிரைக் காப்பாற்றி விட்டார்.

காந்தி வீட்டிற்கு, அப்போது ஒரு துறவி வந்தார். டாக்டர் கூறிய புலால் ரசம் யோசனையை அந்தத் துறவியிடம் காந்தி கூறினார்!

சாமியார் பேசும்போது, ”புலால் உண்பதைச் சாஸ்திரங்கள் தடை செய்யவில்லையே! தாராளமாக இறைச்சியை உண்ணலாமே” என்று சாஸ்திர ஸ்மிருதியிலே இருந்த ஆதாரங்களை எடுத்துரைத்தார்.

துறவி கூறிய சாஸ்திரச் சான்றுகள் எல்லாம் இடைச் செருகல் என்று எண்ணிய காந்தி, துறவிக்கு ஏதும் பதில் கூறாமல், முன்னோர்கள் கடைப்பிடித்த புலால் உண்ணாமை என்ற கொள்கையைக் பின்பற்றினார்.

”நீங்கள் எத்தனை சாஸ்திர மேற்கோள்களை என்னிடம் எடுத்துரைத்தாலும், மாட்டிறைச்சிப் புண்ணிலே வடித்தெடுக்கப்பட்ட புலால் ரசத்தைப் பருகமாட்டேன். அதை உண்டு என் உடல் குணமடைய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கில்லை. என்னைத் தொல்லைப்படுத்தாதீர்கள். என் கணவரோடும், குழந்தைகளோடும் இதைப்பற்றிப் பேசுங்கள். என் மனம் புலால் ரசம் விஷயத்தில் மிக உறுதியாக உள்ளது” என்று கூறிவிட்டார் கஸ்தூரிபாய்.

எதைக் குடித்தாகிலும், உண்டாகிலும் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ளும். மனிதர்களிடையே கஸ்தூர்பாய் பிற உயிர்களைக் கொன்று உண்டு தனது உயிரைக் காத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது எத்தகைய பண்பு பார்த்தீர்களா?

xxx