அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/011

விக்கிமூலம் இலிருந்து
சபர்மதி ஆசிரமத் தலைவி!
கஸ்தூரிபாயின் தேசத் தொண்டு!

ளிமண்ணிலிருந்து போராட்ட வீரர்களைத் தேர்ந்தெடுத்தவர் மகாத்மாகாந்தி என்று காந்தியடிகளைப் புகழ்ந்த கோபால கிருஷ்ண கோகலே, அப்போது இங்கிலாந்து நாட்டிலே இருந்தார்.

தென்னாப்பிரிக்காவிலே சட்டமறுப்புப் போராட்டத்தை நடத்தி மாபெரும் வெற்றி கண்ட மகாத்மா காந்தி, அங்கே இருந்து இந்தியா திரும்பியபோது, நேராக இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று கோபால கிருஷ்ண கோகலேவைச் சந்தித்தார்.

கி.பி. 1915ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து நாட்டிலே இருந்து இந்தியாவிற்கு காந்தியடிகள் தனது குடும்பத்தோடு அகமதாபாத் நகர்வந்து சேர்ந்து, அங்கே சபர்மதி என்ற ஓர் ஆசிரமத்தைத் துவங்கி அதிலே வசித்து வந்தார்.

ஆசிரமத்தில் முதல் உறுப்பினராகத் தனது மனைவியையும், அத்துடன் இருபத்தைந்து உறுப்பினர்களையும் அவர் சேர்த்தார். எளிய முறையில் வாழ்ந்து தேச சேவை செய்வதுதான் ஆசிரமத்தின் நோக்கமாக இருந்தது.

எல்லோருக்கும் பொதுவான சமையல் அறை; சேர்ந்து வேலை செய்து சமைத்து உண்பது. இந்த ஆசிரமத்தின் தலைவியாகவும், அன்னையாகவும் கஸ்தூரிபாய் விளங்கினார்.

கணவர் காந்தி பொது வாழ்க்கையில் தோல்வியுறும் போது எளிமையுடனும், அஞ்சா நெஞ்சத்துடனும், கம்பீரத்துடனும் ஆடியோடி கஸ்தூரிபாய் பணியாற்றினார். அது போலவே, அவர் வெற்றி வீரராக விளங்கிய நேரத்திலும், கம்பீரத்தோடும், கண்ணியத்தோடும், எளிமை யோடும், எவரிடமும் பற்றும் பாசத்தோடும் பழகும் மாதரசியாகவும் அவர் காட்சி தந்தார்.

தென்னாப்ரிக்க ஃபினிக்ஸ் செட்டில்மெண்ட் ஆசிரமத்தில் வாழ்ந்ததற்கு மாறாக, சபர்மதி ஆஸ்ரமத்தில் ஒரு திண்டு மீது சாய்ந்து காந்தி உட்கார்ந்திருந்தார். காந்தியடிகள் அப்போது உடல் நலம் குன்றி, கொட்டைகளையும், பழவகைகளையும் ஆகாரமாகக் கொண்டு மெலிந்து நலிந்து காணப்பட்டார்.

"அன்னை கஸ்தூரி பாய் தென்னாப்பிரிக்காவின் சட்ட மறுப்புப் போராட்டத்தில் எப்படிப் பணியாற்றினாரோ, அதே மனஉறுதியோடு இந்திய விடுதலைப் போராட்டத்திலும், குடும்ப சம்பந்தமான விவகாரங்களிலும் ஈடுபட்டுக் கம்பீரமாகப் பணியாற்றி வந்தார். இப்படிப்பட்ட ஆசிரம சேவையே தனக்குப் போதுமானது; உகந்தது என்ற அளவில் அன்னை கஸ்தூரிபாய் தோற்றமளித்துக் கொண்டிருந்தார்" என்று கவிக்குயில் சரோஜினி தேவி ஆசிரமம் சென்று அதை நேரில் பார்த்தபோது கூறி வியப்புற்றார்.

சரோஜினி தேவி பின்னர் அன்னையைப் பற்றிய தனது வருணனையில், "ஆசிரம அமைப்புக்காக விதிகளை எழுதும் போதே, தாழ்த்தப்பட்ட ஹரி ஜனங்களையும் ஆசிரமத்தில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று எல்லா உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டார்கள்.

"சபர்மதியில் ஆசிரமம் அமைக்கப்பட்ட நேரத்தில், ஹரிஜனக் குடும்பம் ஒன்று அங்கு வந்து சேர்ந்தது. அந்தக் குடும்பத்தையும், அவர்களைச் சேர்ந்தவர்களையும் காந்தியடிகள் அப்போது ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார். அதற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்தது. ஆசிரமத்திற்கு யார் யார் பண உதவிகளைச் செய்தார்களோ அவர்கள், தங்களது உதவிகளை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால், காந்தியடிகள் அதையெல்லாம் ஒருவாறு சமாளித்துக் கொண்டார். ஆசிரமத்துக்குள் எழுந்த கலவரங்களை ஆனால் அடக்குவது கஷ்டமாகவே இருந்தது.

"அன்னை கஸ்தூரிபாய் தாழ்த்தப்பட்ட ஹரி ஜனங்களை ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார். மற்றும் சில ஆசிரமப் பெண்களுக்கும் இது திருப்தியளிக்கவில்லை. ஹரிஜனங்களைக் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; இது ஆசிரம விதிகளுள் ஒன்று என்பதைக் கலவரமடைந்தவர்களுக்கு காந்தியடிகள் விளக்கிப் புரிய வைக்க இயலவில்லை. அதனால் மக்களிலே பலர் ஆசிரமத்தைப் புறக்கணித்ததால், ஆசிரம வாழ்க்கை மிகவும் பாதித்து விட்டது.

"அதே நேரத்தில் ஆசிரமத் தலைவியான கஸ்தூரிபாயும் ஹரிஜன எதிர்ப்பு எழுப்புவதைப் பார்த்து காந்தியடிகள் மிகவும் கவலையடைந்தார். அதனால் அவர் ஆசிரமத்துக்கு உள்ளேயே ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் என்பது கஸ்தூரிபாய்க்கு மட்டும்தான் தெரியும்.

"ஏழு நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தபோதுதான்,கஸ்தூரிபாய்க்கு அந்த ஆசிரமத்தின் அடிப்படைத் தத்துவம் சரியாகப் புரிந்தது. தீண்டத் தகாதவர்கள் என்று மக்களுள் ஒரு பிரிவினர் ஒதுக்கி வைக்கப்படுவதும், மனித உயிர்களுக்குள்ள உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுவதும், மாபெரும் தவறாகும். அந்த உயிர்களுக்கு ஆசிரம விதிப்படி எல்லா உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்பதும் அப்போதுதான் கஸ்தூரி பாய்க்குப் புரிந்தது. காந்தியடிகளின் உண்ணாவிரத ஏழாம் நாளன்று அடிகளின் விருப்பப்படி ஆசிரமத்தில் நடந்து கொள்கிறேன் என்று அவர் ஒப்புக் கொண்டு, அன்று முதல் தாழ்த்தப்பட்ட மக்களுடன் சமத்துவமாகப் பழக ஆரம்பித்து விட்டார்.

"ஹரிஜன மக்களுக்காக காந்தியடிகள் செய்த எல்லாப் போராட்டக் கிளர்ச்சிகளிலும், கஸ்தூரிபாய் இணைந்து பங்கேற்று எல்லாவிதமான தொண்டுகளையும் செய்தார்... என்று சரோஜினி தேவி தனது வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

சம்ப்ரான் என்னும் ஊரிலுள்ள அவுரித்தோட்டப் பயிர் விவசாயிகளுக்காக நடந்த போராட்டத்தை 1917ஆம் ஆண்டு காந்தியடிகள் நடத்தினார். அந்தக் கிராம மக்களுடைய உரிமைகளுக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த அந்தப் போராட்ட்த்திற்கு பெண்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த மாதர்களுக்கு வழிகாட்டியாகக் கஸ்தூரி பாயைக் காந்தியடிகள் நியமித்தார்.

அப்போது, சம்ப்ரான் பகுதியில் ஆறு பள்ளிக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. அந்தப் பள்ளிகளில் ஒன்றில் கஸ்தூரி பாய் ஆசிரியையாகப் பணி புரிந்தார். கல்வி கற்பிப்பது மட்டுமல்ல அந்தப் பள்ளியின் பணி. கிராமத்து மக்களுக்குரிய அகத்தூய்மையையும், புறத்தூய்மையையும் சொல்லிக் கொடுப்பதும் அப்பள்ளிகளின் வேலை. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அந்த மக்கள் பேசும் குஜராத் மொழி கூட கஸ்துரிபாய்க்குச் சரியாகத் தெரியாது. இருந்தாலும், தனக்குத் தெரிந்த அளவில் அந்த மொழியைக் கொண்டே அவர்களுடன் பழகி, அவர்களுக்குக்குரிய ஒழுங்குகளை அவர் போதித்தார்.

சம்ப்ரான் பகுதியிலே உள்ள ஒவ்வொரு கிராமத்திலுள்ள வீடுகளுக்கும் தவறாது செல்வார். "கிராமப் பெண்கள் தினந்தோறும் குளிக்க வேண்டும். துணிகளைச் சுத்தமாகத் துவைத்து அணிய வேண்டும்; வீடுகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது மட்டுமல்ல, வீட்டின் சுற்றுப் புறங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று பள்ளிப் பாடங்களைப் போல அவர்களுக்குப் போதித்தார்.

உடனே அந்தப் பெண்கள், "அம்மா எங்களிடம் இருப்பது ஒரே ஒரு புடவை. அதைத் துவைத்துக் கட்டிக் கொள்வது எப்படி? காந்தியடிகளிடம் சொல்லி, எங்களுக்கு ஒரு மாற்றுச் சேலை வாங்கிக் கொடுங்கள். நாங்கள்.தினந்தோறும் குளித்துவிட்டுச் சுத்தமான சேலைகளைக் கட்டிக் கொள்கிறோம்" என்றார்கள்.

வறுமையிலே வாடும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் அன்னையின் மனத்தைப் பக்குவப்படுத்தியது. அவர்கள் மீது மேலும் கருணை பிறந்தது. அப்போதுதான் காந்தியடிகளது மக்கள் சேவையின் உட்பொருள் அன்னைக்குத் தெளிவாகப் புரிந்தது.

வறுமையான ஒரு குடும்பத்தின் கஷ்டங்களைத் தீர்த்து வைப்பதைக் காட்டிலும், வறுமை பெருகிய ஒரு நாட்டின் கஷ்டத்தைத் தீர்ப்பது தான் பெரிய தொண்டு என்பதை அவர் நன்றாக அப்போது தெரிந்து கொண்டார். அதற்குப் பிறகுதான், காந்தியடிகள் நடத்திய ஒவ்வொரு போராட்டங்களிலும் அன்னையும் சேர்ந்து பங்கு பெற்றார். கணவரது தேசத் தொண்டுகளுக்கு தானும் இளைத்தவர் அல்லர் என்பதை அன்னை ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து கொண்டு மெய்ப்பித்தார்.

1921-ஆம் ஆண்டு, காந்தியடிகள் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்று வித்தார். 1922-ஆம் ஆண்டு மகாத்மா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு நாடெங்கும் மிகுந்த பரபரப்பை உருவாக்கி விட்டது.

வழக்கு விசாரணையின் போது காந்தியடிகள் தனது ஒத்துழையாமைக்குரிய காரண, காரியங்களைக் கூறி குற்றங்களை ஒப்புக்கொண்டார். நீதிபதி, காந்தியடிகளைக் குற்றவாளி என்று தீர்மானித்து ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். அப்போது இந்தியத் தலைவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார்கள்.

அந்த இக்கட்டான நேரத்தில் போராட்ட இயக்கத்துக்குத் தலைமையேற்று நடத்திட எவருமில்லை. அப்போதுதான் அன்னை கஸ்தூரி பாய், தென்னாப்பிரிக்காவிலே தான் போராடிய வீரத்தின் எதிரொலியாக ஓர் அறிக்கையை விடுத்து தனது அஞ்சா நெஞ்சத்தை, ஆங்கிலேயர் ஆட்சிக்குரிய எதிர்ப்புணர்ச்சியை மக்களுக்கு உணர்த்தலானார். அந்த அறிக்கையின் விவரம் இதுதான்:

"எனது நாட்டுச் சகோதரிகளே!

எனது கணவர் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியின் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. இந்த நீண்ட காலத் தண்டனையைக் கேட்டு நான் மனம் கலங்க வில்லை என்று கூற முடியாது. இந்தத் தண்டனை முழுவதையும் அவர் அனுபவித்து முடிப்பதற்குள், நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக முயன்றால், அவருடைய தண்டனையைக் குறைத்துச் சிறையிலிருந்து அவரை விரைவில் மீட்க முடியும் என்று உணருகிறேன். அதனால் ஆறுதலும் அடைகிறேன்.

இந்திய மக்கள் விழிப்புற்றுக் காங்கிரசின் வேலைத் திட்டங்களை முழு மனத்துடன் நிறைவேற்ற முன் வருவார்களானால், நாம் அவரைச் சிறையிலே இருந்து மீட்பதுடன், பதினெட்டு மாதங்களாக நாம் எந்த எந்த விஷயங்களுக்காகப் போராடித் துன்பங்களை ஏற்று வருகிறோமோ, அவைகளிலும் நாம் வெற்றி காண முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பரிகாரம் நம்மிடந்தான் உள்ளது. இந்தப் போராட்டம் தோல்வி கண்டால் அந்தக் குற்றம் நம்மையே சாரும். ஆகையால், என்னிடம் அனுதாபம் காட்டவும், என் கணவரிடம் மதிப்புச் செலுத்தவும், காங்கிரசின் திட்டங்களில் கவனம் முழுவதும் செலுத்திப் போராட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவும், பெண்கள்-ஆண்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

என் கணவருடைய திட்டத்தில் பலவேலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவைகளுள் சர்க்காவும், கதரும் முக்கியமானவை. இந்த இரு விஷயங்களிலும் நாம் வெற்றி பெற்றால் இந்தியப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குச் சிறப்பான உதவிகள் கிடைக்கும்; நம் அடிமைத்தனமும் நீங்கும். ஆகவே, காந்தியடிகளின் நிர்மாணத் திட்டத்துக்கு இந்திய மக்கள் கீழ்க் கண்ட உதவியை அளிக்க வேண்டும்.

1. ஆண், பெண் அனைவரும் அயல்நாட்டுத் துணிகளை ஒழித்துக் கதர் கட்ட வேண்டும். மற்றவர்களையும் அணியுமாறு தூண்ட வேண்டும்.

2. பெண்மணிகள் அனைவரும் நூல் நூற்கும் ராட்டினம் என்ற சர்க்காவில் நூல் நூற்பதை ஒரு வைக்கிராக்கிய நோன்பு போல நினைத்துப் பின்பற்ற வேண்டும். மற்ற மக்களையும் மேற்கண்டவாறு செய்திடத் தூண்ட வேண்டும்.

3. வியாபாரிகள் எல்லாரும் வெளி நாட்டுத் துணிகளை விற்பனை செய்யக் கூடாது.

மகாத்மாவின் ஆணைகளை எவ்வளவு உண்மையாக இந்த அறிக்கை எதிரொலிக்கின்றது என்பதை மக்கள் உணர்ந்து கஸ்துரி பாயின் தேசப் பற்றை எல்லாரும் வரவேற்றனர். காங்கிரஸ் இயக்கத்தை மேலும் வலுவாக வளர்த்திடும் முயற்சியை அந்த அறிக்கை மக்களிடையே ஏற்படுத்தியது என்று கூறலாம்.

xxx