அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/012

விக்கிமூலம் இலிருந்து
ராஜ்கோட் சமஸ்தானப் போர்!
கஸ்துரி பாய் கைது!

1924-ஆம் ஆண்டு, இருபத்தொரு நாட்கள் உண்ணா விரதப் போர் நடந்தது. இந்தப் போராட்டம் இந்தியாவையே குலுக்கி உலுக்கிற்று! அன்னை கஸ்தூரிபாய்க்கு அடி வயிற்றில் நெருப்பு!

ஆம், மேற்கண்ட ஆண்டில் மகாத்மா காந்தியடிகள், இந்தியத் தலை நகரமான புதுடில்லியில் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக, இருபத்தொரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அறப்போரைத் துவக்கினார். இந்தப் போராட்டத்தினால், தனது கணவர் உயிருக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்று கலங்கினார்.

நடப்பது நடக்கட்டும் என்ற பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு, கஸ்தூரி பாய், தனது கணவர் அருகே அமர்ந்து அவருக்குரிய உண்ணாவிரதப் போர்ப் பணிகளைச் செய்தபடியே இருந்தார்!

இந்திய விடுதலைக்காக, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து காந்தியடிகள் அந்த உண்ணாவிரத்தின் மூலமாகத் தன்னைத்தானே வருத்திக் கொண்டார். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்ற மகாத்மாவுடன், கணவருக்காக அன்னை யும் துன்பங்களை ஏற்றார்!

1932-ஆம் அண்டு பர்தோலி நகரில் ஒரு போராட்டம்! அந்த அறப்போரில் அன்னை 'கஸ்தூரிபாயும் கலந்து கொண்டதால், பர்தோலி மாஜிஸ்திரேட் அன்னைக்கு ஆறுவாரம் சிறைத் தண்டனை என்று தீர்ப்பளித்தார்! அந்தத் தண்டனையையும் ஏற்று அன்னை சிறை புகுந்தார்! எனவே, அண்ணல் நாட்டு நலனுக்காக எந்தப் போராட்டத்தை நடத்தினாலும் அந்த அறப்போரில் அன்னையும் முந்திக் கொண்டு வந்து கலந்து கொள்வார்.

அலகாபாத் சபர்மதி ஆசிரமத்தை அண்ணல் 1933-ஆம் ஆண்டு கலைத்துவிட்டார். பிறகு 'வார்தா' என்ற நகர் அருகே, 'சேவா கிராமம்' என்ற ஒரு கிராமத்தை உருவாக்கி அங்கே ஓர் ஆசிரமத்தை அமைத்து அதிலே வசித்து வந்தார் காந்தியடிகள் அந்த ஆசிரமத்துக்கும் அன்னை கஸ்துரிபாய் தான் ஆசிரமத் தலைவி, நிர்வாகி!

சேவா கிராமத்திற்கு வருகை தரும் எண்ணற்ற வருவோர், போவோர், விருந்தினர் அனைவரையும் உபசரிக்கும் தாயாகத் திகழ்ந்து அவர்களுடன் தனது பாசத்தையும், மனிதநேய அன்பையும் காட்டிப் புகழ் பெற்றார் கஸ்தூரிபாய்!

காந்தியார் தேச விடுதலைப் போராட்டம், ஆன்மீக உணர்வு, அரசியல் ஆலோசனைகள், ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டு இந்திய விடுதலைப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார்! கஸ்தூரிபாய், காந்தி மேற்கொண்ட அத்தனை பணிகளுக்கு அப்பாலும் பணியாற்றி வந்தார்! ஆசிரமத்தின் எல்லாப் பணிகளையும் தானே நிர்வகித்து எந்த விதக் குறைகளாவது ஏற்பட்டுவிட்டால் அது அடிகளுக்கும் நாட்டுக்கும் அவப் பெயரை உண்டாக்கி விடுமே என்ற எச்சரிக்கையுடனும், அச்சத்துடனும், அடிகளால் ஆற்ற முடியாத, இயலாத, நெருக்கடிகளால் நேரமில்லாத தேசத்தொண்டுகளை அண்ணலையும் மீறி செய்து நற்புகழ் பெற்றிருந்தார்.

டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையார், ஒரு புத்தகத்தில் அன்னை கஸ்தூரிபாயைப் பற்றி எழுதும் போது:

"கஸ்தூரிபாயைப் பற்றி அதிகமாக எவரும் பாராட்டி எழுதியது இல்லை. ஆயினும் இந்திய அரசியல் என்றதும், காந்தியடிகள் தொண்டுகள் அல்லது காங்கிரஸ் தேசிய இயக்கச் சேவை, அல்லது போராட்டம் இவற்றில் எவையாயினும் சரி, அவற்றில் கஸ்தூரி பாய் தொண்டுகளை, சிறைவாசங்களை, போராற்றல் உணர்ச்சிகளை எவராலும் மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இது ஓர் உணர்ச்சி வரலாறாகும். எந்தத் தலைவர்களுக்கும் அவர் சளைத்தவரல்லர்! குறிப்பாக, சேவா கிராமத்தின் உயிரோட்டமே கஸ்தூரி பாயிடம் தான் இருக்கிறது. அந்த ஆசிரமத்தின் எந்தத் திக்கை நோக்கினாலும் சரி, அவரின் தியாகமே மனம் வீசுகின்றது. அவருடைய பொறுமையும், மற்றவர்களின் தேவைக்கு ஏற்றவாறு அவரவர் இயல்புகளை அறிந்து சேவை செய்யும் ஆற்றலும், அந்த ஆசிரமத்திற்கே பெருமை அளிக்கின்றன.

"பாரத நாடு போற்றிப் புகழ்கின்ற சுபாவங்களுக்கு, பண்புகளுக்கு உறைவிடமான அன்னை கஸ்தூரிபாய், மிக மிக உயர்ந்தவர். அவர் இந்த நாட்டுக்கு வழங்கிய விலை மதிப்பற்ற பரிவு, கருணை, அன்பு, இரக்கம், மனிதநேயம், சேர்ந்து பழகும் பாச உணர்வு அனைத்திலும், அவருடைய கணவர் மகாத்மாவினால் நாம் பெறும் எல்லா நன்மைகளிலும் மெளனமான பங்காளி கஸ்தூரிபாய் ஒருவரே என்று அந்த அம்மையார் எழுதியுள்ளார்.

அதனைப் போலவே, ஆசிரமத்தில் வாழ்பவர்களுக்கும், வருவோர் போவோர்களுக்கும், குறிப்பறிந்து பணியாற்றும் உயர்ந்த ஓர் இல்லறத் தலைவி அன்னை கஸ்தூரி பாய் தான் என்றால் அது ஒன்றும் அதிகபட்சமான அளவுகோல் ஆகாது என்று பண்டித ஜவகர்லால் நேரு தனது சேவா கிராம வருகைப் பதிவு ஏட்டிலே எழுதினார்.

'காந்தி அடிகளாரின் துனைவியார் அன்னை கஸ்தூரி பாய் சேவா கிராமத்திற்குச் செல்வோரை எல்லாம் வசீகரிப்பவர்; இந்தியாவில் இருக்கும் போது கஸ்தூரிபாய் அம்மையாரைத் தரிசிப்பதைப் போல் நம் அன்பையும், மரியாதையையும் ஒன்று போல வசீகரிக்கும் வேறொரு தாயன்புக் காட்சியை நாம் உலகெங்கும் உள்ள எந்த ஒரு பெண்மணியிடமும் காணமுடியாது. என்று, தேசப் பணிகளில் ஏணிபோல விளங்கிய சுசிலா நாயர் என்ற அம்மையார், அன்னை கஸ்தூரிபாயின் மறைவுச் செய்தி கேட்டுக் கண்ணீர் சிந்தினார்.

கஸ்தூரி பாய் பிறந்தகமான ’ராஜ்கோட் சமஸ்தான’ மக்களின் உரிமைகளுக்காக ஒரு போராட்டத்தை 1939-ஆம் ஆண்டு துவக்கினார் காந்தியடிகள்.

இந்தப் போராட்டத்தைத் துவக்கத் திட்டமிட்ட நேரத்தில் கஸ்தூரிபாய்க்கு உடல் நலம் சரியில்லை. மிக பலவீனமாகவே அவர் காணப்பட்டார். ஆனாலும், எனது தொண்டு சத்யாக்கிரகம் தான் என்று.அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இதை அறிந்த ராஜ் கோட் சமஸ்தானத்து அதிகாரிகள் கஸ்தூரி பாயைக் கைது செய்து, விசாரணை செய்யாமலே அவரைச் சிறையில் அடைத்து விட்டார்கள்.

'கஸ்தூரி பாய்' தனது பிறந்த மண்ணிலேயே அறப்போர் செய்ததைப் பற்றி, மகாத்மா காந்தியடிகள் தனது 'ஹரிஜன்' பத்திரிக்கையிலே கீழ்க் கண்டவாறு எழுதினார்:

"ராஜ்கோட் போராட்டத்தில் என் மனைவி ஈடுபட்டதைப் பற்றி எதையும் நான் கூற விரும்பவில்லை. ஆனால், எனது மனைவி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டது குறித்து பலர் பலவிதமான கொடிய வார்த்தைகளைப் பேசுவதாகக் கேள்விப்பட்டதால் தான், நான் எனது கருத்துக்களைக் கூற முன் வந்தேன்.

"சட்ட மறுப்பு இயக்கங்களில் ஈடுபடுவதால் உண்டாகும் துன்பங்களை சுமக்கமுடியாத முதுமை வயதை அடைந்து விட்டாள் என் மனைவி. எழுதப் படிக்கவும் அவளுக்குத் தெரியாது. ஆனாலும், அவள் விரும்பியபடி எதையும் செய்திட அவளுக்கு உரிமை உண்டு. இவ்வாறு நான் எழுதுவதைப் பார்க்கும் போது என் மனைவியைக் குறை கூறுவோருக்கு ஒரு வித ஆச்சரியம் ஏற்படும்.

"ஆப்பிரிக்காவில் இருந்தபோதும், இந்தியாவில் இருக்கும் போதும் என் மனைவி, தன் மனம் தூண்டிவிடும் எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்வாள். தற்போதும் அப்படியே நடந்திருக்கிறாள். பேரன் மணிபென் சிறை புகுந்ததாகக் கேள்விப்பட்டாள். அவள் அதைப் பொறுக்க முடியாமல் உடனே, 'நானும் போராட்டத்தில் சேருகிறேன்' என்று என்னிடம் கூறினாள்.

"உனது உடல் நிலை சரியாக இல்லையே, நலம் குன்றி நடமாடுகிறாயே, பலவீனம் அதிகமாக இருக்கிறதே என்றேன் நான். சில மாதங்களுக்கு முன்புதான் அவள் டில்லியில் இருக்கும்போது, குளியலறையிலே உணர்விழந்து கீழே விழுந்தாள்.

"அந்த நேரத்தில் எனது மகன் தேவதாஸ், கலக்கம் அடையாமல் தாய்க்குரிய சேவைகளைச் செய்திரா விட்டால் அப்போதே அவள் இறந்து போயிருப்பாள். அதனால், சத்தியாக்கிரகத்தில் சேர வேண்டாம் என்று நான் கூறியதையும் அவள் எடுத்துக் கொள்ளவில்லை. உடனே புறப்பட்டுச் சென்று விட்டாள்.

"சர்தார் வல்லபாய் படேலிடம் இது பற்றி யோசனை கேட்டேன். அவள் போராட்டத்தில் கலந்து கொள்வதை அவரும் விரும்பவில்லை. ஆனால், அவரும் இறுதியில் ஒப்புக் கொண்டார்'.

"கஸ்தூரிபாய், ராஜ்கோட்டுப் பெண். அந்த ஊராருக்காகப் போராட வேண்டியது தனது கடமை என்று எண்ணினாள். அந்த சமஸ்தான மக்களின் சுதந்திரத்துக்காக, ராஜ்கோட்டைச் சேர்ந்த மற்ற பெண்கள் துன்பப்படும்போது அவளால் சும்மா இருக்க முடியவில்லை.

"ராஜ்கோட் போராட்டத்தின் வெற்றி; விடுதலைப் போரிலே நாம் ஒரு படி முன்னேறியதைக் குறிப்பிடும். இப்போதோ, சிறிது காலம் கழித்தோ வெற்றி கிடைப்பது உறுதி; அந்த வெற்றி கிடைக்கும் போது அதற்காகக் கஸ்தூரிபாயும் தனது பங்கைச் செலுத்தினாள் என்று மக்கள் எண்ணுவார்கள். சத்தியாக்கிரகப் போராட்டத்தில் வயது முதிர்ந்தவர்களும், பலவீனமாக உள்ளவர்களும் பங்கேற்கலாம். ஆனால், அவர்களுக்கு நெஞ்சில் உரம் இருக்க வேண்டும்” என்று காந்தி எழுதினார்.

ராஜ்கோட் போராட்டம் மக்கள் இடையே பரபரப்பும் தீவிரமுமாய் பரவியது. இதைக் கண்ட காந்தியடிகள் 'சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்’ என்றார். அப்போது கஸ்தூரிபாய் இதே ராஜ்கோட் போராட்டத்துக்காக சிறையில் இருந்தார்.

கணவரின் உண்ணாவிரத முடிவைக் கேள்விப்பட்ட அன்னை கஸ்தூரிபாய், மிகவும் வேதனையடைந்தார்; கண் கலங்கினார். தம்மைக் கேட்காமல் உண்ணா விரதம் தொடங்கியதற்காக, பணிவுடன் கோபம் கொண்டு ஓர் மடலை காந்தியடிகளுக்கு எழுதினார். 

அதற்கு மகாத்மா எழுதிய பதில்: "வீணாக நீ கவலைப்படுகிறாய். கடவுள் ஒரு வாய்ப்பு அளித்துள்ளார். அது பற்றி நீ மகிழ வேண்டும். நான் உண்ணாநோன்பு இருக்கப் போவது எனக்கே தெரியாது. அவ்வாறிருக்க, தான் உன்னையோ மற்றவர்களையோ எப்படிக் கலந்து கொண்டு பேச முடியும்?

"உண்ணா நோன்பு இருக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார் கடவுள். அவருக்குக் கீழ்ப்படியாமல் நான் என்ன செய்ய முடியும்? வருவது வந்தே தீரும். அவ்வாறு அவர் என்னை உரிமையுடன் அழைக்கும் போது, வரமாட்டேன் என்று நிற்க முடியுமா? அல்லது உன்னையோ, மற்றவர்களையோ யோசனை கேட்கத்தான் முடியுமா?

மகாத்மா இந்தப் பதிலுடன் திருப்தி பெறவில்லை. அவர் உண்ணாவிரதம் இருக்கும் போதெல்லாம் பக்கத்தில் இருந்து கஸ்தூரிபாய் பணிவிடை செய்பவர் என்பதால், இப்போது இருக்கும் உண்ணாவிரதத்திலும் உடனிருந்து பணிவிடை செய்ய அவர் விரும்பலாம். அவ்வாறு அவருக்கு விருப்பம் இருந்தால் அதற்கு ஏற்ப அவரைச் சிறையிலே இருந்து விடுதலை செய்யுமாறு சமஸ்தான அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்யலாமா? கஸ்தூரி பாயின் விருப்பம் என்ன என்பதை அறிய சிலரை காந்தி அனுப்பி வைத்தார்.

"வேண்டாம், வேண்டாம். எனது கணவர் உண்ணாவிரதம் பற்றியும் அவரது உடல் நிலை இருக்கும் விதம் குறித்தும், எனக்கு அடிக்கடி தகவல்கள் தந்தால் போதுமானது. இதற்கு முன்னர் அவர் உண்ணாவிரதம் இருந்தபோது காப்பாற்றிய கடவுள், இப்போதும் அவரைக் காப்பாற்றுவார். என்றாலும், ஒருவர் இப்படி அடிக்கடி அபாயத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது. என்று கஸ்தூரிபாய், சிறைக்கு தூது வந்தவர்களிடம் சொல்லி அனுப்பிவிட்டார்.

மகாத்மா இந்த பதிலைக் கேட்டதும் என்ன கூறினார் தெரியுமா? "ஆம். அப்படியும் நடக்கக் கூடும். ஆன்மீக நோக்கோடு மேற்கொள்ளும் உண்ணாவிரதத்தின் முடிவைக் கொண்டு அதன் பலத்தை முடிவுகட்ட இயலாது.

"தெய்வ அருளுக்குப் பரிபூரணமாகப் பணிவதைப் பொறுத்தே உண்ணாநோன்பின் வலிமையைக் கணக்கிட முடியும். தெய்வத்திடம் அவ்வாறு உண்மையாகப் புகலடைவதே உண்ணா நோன்பின் ஒரு பகுதியாகும். மிகச் சிறந்த கடமையைச் செய்யும் போது, இறப்பு ஏற்பட்டாலும் அதை இன்முகத்தோடு ஏற்றே ஆகவேண்டும், என்றார் காந்தியடிகள்.

காந்தி பெருமான், குறிப்பிட்ட நாளன்று தனது உண்ணா நோன்பைத் துவக்கினார். இதைக் கேட்ட ராஜ் கோட் சமஸ்தான நிர்வாகத்தினர் ஒரு மணி நேரத்துக்கெல்லாம் அன்னை கஸ்தூரி பாயை சிறையிலே இருந்து அவசரம் அவசரமாக விடுதலை செய்து விட்டார்கள்!

xxx