நவகாளி யாத்திரை/பரிசு வகைகள்

விக்கிமூலம் இலிருந்து

பரிசு வகைகள்

சில காலத்துக்கு முன்னால் வங்காளக் கவர்னராக இருந்த கேஸி துரை ஒரு சமயம் மகாத்மாவைப் பேட்டி காண வந்தபோது மேற்படி கம்பளத்தை மகாத்மாவுக்குப் பரிசாக வழங்கினாராம். மிகவும் விலை உயர்ந்த அந்தக் கம்பளத்தைத்தான் காந்திஜி அன்று முதல் போர்வையாக உபயோகித்து வருகிறாராம்.

மகாத்மாவுக்கு இப்படி அடிக்கடி அநேக பரிசுகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்ற கிறிஸ்துமஸ் தினத்தன்று கூட அவருக்கு இத்தகைய பரிசுகள் ஏராளமாக வந்தன. ஏசுநாதர் பிறந்த புனித தினத்தன்று மகாத்மாஜியைத் தரிசிப்பதற்காகச் சில வெள்ளைக்கார ஸோல்ஜர்கள் ஸ்ரீராம்பூருக்கு வந்திருந்தார்கள். பிரார்த்தனை மேடையில் அவரைக் கண்டு, அவரிடம் ஏதேதோ விசித்திரமான பொருட்கள் நிறைந்த பெரிய அட்டைப் பெட்டி ஒன்றை தங்கள் அன்புக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார்கள்.

மகாத்மாஜி அந்தப் பெட்டியைத் தம் முன்னே எடுத்து வைத்துக்கொண்டு திறந்து பார்த்தார். முதன் முதலாக மகாத்மாஜி பெட்டிக்குள்ளே கையை விட்டதும் சில அபூர்வ சாமான்கள் வெளியே வந்தன. அவற்றைக் கண்டதும் மகாத்மாவுக்கும், மற்றவர்களுக்கும் சிரிப்புத்

தாங்கவில்லை; காரணம், எல்லாம் சிகரெட் பாக்கெட்டுகள்!

“உயர்ந்த சிகரெட்டுகளைக் கண்டால் நேருஜிக்கு ரொம்பப் பிடிக்கும். ஆகையால், இந்த சிகரெட்டுகளை ஜாக்கிரதையாக வைத்திருந்து நேருஜி இங்கே வரும்போது அவரிடம் கொடுக்கப் போகிறேன்“ என்று மகாத்மா அன்பும், மகிழ்ச்சியும் பொங்கக் கூறினார்.

பின்னர், மறுபடியும் பெட்டிக்குள்ளே கையை விட்டார். வாசனை சோப்புகளும், தந்தத்தில் தயார் செய்யப்பட்ட சீட்டுக்கட்டு ஒன்றும் வந்தன.

“இதெல்லாம் எனக்கு உபயோகமில்லை; சீட்டாடவும் எனக்குத் தெரியாது“ என்று வருத்தப்பட்டுக் கொண்டே மறுபடியும் பெட்டிக்குள் கையை விட்டார். இந்தத் தடவை 'ஷேவிங் ஸெட்' ஒன்று வந்தது!

“இது எனக்கு ரொம்பவும் அவசியமானது. ஆகவே, இதை நானே வைத்துக் கொள்ளப் போகிறேன்“ என்று சொல்லி அதை எடுத்துப் பத்திரமாகத் தமது மடிக்குள்ளே வைத்துக்கொண்டார். மகாத்மாஜி அன்று முதல் தமது அந்திம காலம் வரை மேற்படி ஷேவிங் ஸெட்டைத்தான் உபயோகித்து வந்தார்.

மகாத்மாவைப் பற்றிய பல அபூர்வ சம்பவங்களைப் பற்றியும், அவர் தமது யாத்திரா மார்க்கத்தில் கண்டு வந்த பல முக்கிய காட்சிகளைப் பற்றியும் அங்குள்ளவர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். காந்தி மகாத்மாவின் கதைகளைக் கேட்கக் கேட்க மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றியது.