மாபாரதம்/அவல முடிவுகள்

விக்கிமூலம் இலிருந்து
10. அவல முடிவுகள்

பாரத யுத்தத்துககே மூல காரணம் துரியன் இராமாயணத்தில் இராவணனின் வீழ்ச்சியோடு போர் முடிவு பெறுகிறது. பாரதத்தில் துரியனின் முடிவோடு கதையும் முடிகிறது. சர்வாதிகாரிகள் தம்மைச் சார்ந்தவர் அனைவரையும் அழித்துவிட்ட பின் தாமும் அழிவை அடைகின்றனர்.

பெற்ற பிள்ளைகளையும், உற்ற தம்பியரையும் கற்ற ஆசிரியர்களையும் இழந்த பின்தான் அவர்கள் சாவினைச் சந்திக்கின்றனர். வீமனை எதிர்த்துத் துச்சாதனன் இறக் கிறான். துச்சாதனனும் பதினேழாம் நாட் போரிலேயே மரணத்தைச் சந்திக்கிறான். ஆரம்ப முதல் அவன் தம்பியர் தொடர்ந்து வீமனோடு போரிட்டு மரணம் அடைகின்றனர்.

பதினெட்டாம் நாட் போர்

இதுவே கடைசி நாட்போர். கன்னனை இழந்ததும் துரியன் கை இழந்தவனாகக் காணப்பட்டான். உயிருக்கு இனிய நண்பனையும், வாழ்க்கைக்கு இனிய தம்பியரையும் இழந்த பின்பும் அவன் கொண்ட உறுதியிலிருந்து பின் வாங்கவில்லை. எஞ்சியிருந்த மாவீரன் மாத்திரி நாட்டு அரசன் சல்லியன் ஆவான். அவனைப் படைத் தலைமை ஏற்கச் செய்தான்.

பதினெட்டாம் நாள் இறுதிப்போர் அன்று தருமன் பாண்டவர் பக்கத்தில் தலைமை ஏற்றான். இதுவரை அமைதியாக ஆறி அடங்கி இருந்த அறத்தின் மைந்தன் தருமன் சீறிப் புயல் எனப் பாய்ந்தான். அவன் தன் கையிலிருந்த ஆற்றல் மிக்க அம்பினால் சல்லியனைக் கொன்று முடித்தான். வீமன் தன்னை எதிர்த்த துரியனின் தம்பியருள் மீதி இருந்தவர் எல்லாரையும் எதிர்த்து அவர் களுக்கு ஒரு முடிவு கட்டினான். சகாதேவன் சகுனியைக் கொன்றான். துரியனுக்குத் துணையாகப் போரிட்டவர்களில் மாண்டவர் பலர்; உயிர் தப்பி ஓடியவர் பலர்.

இராவணனின் இறுதிப் போரில் அவன் தன்னந்தனிய னாக விடப்பட்டதைப்போல இவனும் நிலை கெட்டான். செத்தவரைப் பிழைப்பிக்கும் மந்திரம் ஒன்று ஒரு முனிவனிடம் இருந்து அவன் அறிந்திருந்தான். அதைக் கொண்டு இறந்தவரை எல்லாம் எழுப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தான்.

அதனால் அவன் அதற்காகத் தடாகம் ஒன்றைத் தேடிச் சென்று அதில் முழுகி மூச்சடக்கிக் கொண்டு மனத்தை ஒருமுகப்படுத்தி யோக நிலையில் இருந்து அம்மந்திரத்தைச் சொல்ல முற்பட்டான் அவன் முழுகி இருக்கும் நீர் நிலை பற்றித் தெரியாமல் பல இடத்திலும் தேடினர். சஞ்சய முனிவர் அவன் மூழ்கி மூச்சை அடக்கிக் கொண்டிருக்கும் தடாகம் உள்ள இடத்தைக் கூற அசுவத்தாமன் அங்குச் சென்று கூப்பிட்டுப் பார்த்தான். துரியன் செவி சாய்க்கவில்லை. பாண்டவர் ஐவரும் கண்ணனும் அத்தடாகத்தின் கரையிலிருந்து விளித்துப் பார்த்தனர்.

முடிவில் வீமன் வீர மொழிகள் பேசி அவன் மானத்தைத் துண்டினான்.

“உற்றார் உறவினரை வானுலகம் அனுப்பி வைத்து விட்டுக் கோழையைப் போல் இங்கு ஒளிந்து கொண்டிருக்கிறாயே, உனக்கு வெட்கமில்லையா? உனக்கு மானம் இல்லையா? நீ ஒரு வீரனாக இருந்தால் வெளியே வா” என்று உரக்கக் கூவினான்.

மற்றவர்களை உயிர்ப்பிக்கவேண்டும் என்ற சிந்தனை யிலிருந்து விடுபட்டுத் தன் அஞ்சாமையைக் காட்டக் கரை ஏறினான்.

“வீரத்தைப் பற்றிப் பேசும் வீணர்களே! படைவீரர்களைத் துணை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஐந்து பேறாக வந்துநிற்கிறீர்களே! தனி ஒருவனைத் தாக்க ஐவர் சூழ்ந்து நிற்கிறீர்களே! இதுவா வீரம்! இது கொலையாளிகள் காட்டுக் கூச்சல்” என்றான்.

கண்ணன் அவனை அமைதிப்படுத்திப் பின் வருமாறு கூறினான்;

“நீ சொல்வதும் உண்மைதான்; ஒண்டிக்கு ஒண்டி நின்று போர் செய்; நீ தனி ஒருவனாக நின்று வீமனைத் தோல்வியுறச் செய்; அந்த வெற்றிக்கு ஐவரும் அடிபணிவர். அது மட்டுமல்ல, ஆட்சி முழுவதும் உனக்கே உரிய தாகிவிடும். மிக எளிய வழி இது. சூது போரில் வெற்றி பெற்ற நீ மோது போரிலும் வெற்றி பெறுவது கடினம் அல்ல. நீ ஒரு மகா வீரனாயிற்றே” என்று தூக்கிவைத்துப் பேசினான்.

குளத்தில் நின்று இருந்த அவன் களத்தில் சந்திக்குமாறு கேட்டான். யமுனை நதியைக் கடந்து சமந்த பஞ்சகம் என்ற இடத்தை அடைந்தனர். அதற்குள் தீர்த்த யாத்திரை சென்றிருந்த மூத்தவனான பலராமனும் வில் விதுரனும் வந்து சேர்ந்தனர். அவர்களும் அக்களத்துக்கு மற்றவர்களோடு சென்றனர்.

மற்போர் தொடங்கியது; கதாயுதம் கொண்டு போர் செய்யலாம் என்று பேசி முடிவு செய்தனர். இருவரும் சம வலிவும் ஆற்றலும் உடைமையால் வெற்றி தோல்வி கண் டிலர். துரியன் வீமனை நோக்கி “உன் உயிர் நாடி எங்கே உள்ளது?” என்று கேட்டான். அவன் ஒளிவுமறைவு இன்றி “நெற்றி” என்றான்; இவன் நெற்றி அடி” ஒன்று கொடுத்தான்; வீமன் துவண்டு கீழே விழுந்தான். மறுபடியும் மூர்ச்சை தெளிந்து கதை கொண்டு தாக்கினான். துரிய னின் உயிர் நாடி எங்கே உள்ளது என்று அவனைக் கேட்டான். நெற்றியே என்று வெற்றுரை பேசினான்.

பொய் சொல்லி ஏமாற்றினான். வீமன் அவன் நெற்றியை நோக்கிக் கதை கொண்டு தாக்கினான். குருதி வெளிப்பட்டது; ஆனால் உயிர் அவனை விட்டு வெளிப் படவில்லை. அவன் சொன்னது முழுப் பொய் என்பதை அறிந்தான்.

மறுபடியும் போர் தொடங்கியது. அருச்சுனன் கண்ணனை நெருங்கித் “துரியனின் உயிர் நாடி உள்ள இடம் யாது?” என்று கேட்டான்.

“ஆயிரம் நாள் அடித்துப் புரண்டாலும் அவர்களுள் யாரும் ஒருவரை ஒருவர் வெல்ல முடியாது; நேர் முறை யில் போர் செய்தால் என்றுமே வெல்ல முடியாது; குறுக்கு வழியில் சென்றால் தான் சுருக்கமாக முடிக்கலாம்” என்றான்.

“நறுக்கு என்று உரை தருக” என்றான். அவன் ‘தொடையை அடித்து நொறுக்கினால் விடை கிடைக்கும்’ என்று கூறினான்.

விசயன் “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலை விலாது உஞற்றுபவர்” என்ற குறட் கருத்தைத் தமையனுக்கு அறிவித்தான். “விதியை மதியால் வெல்லலாம்” என்று சொல்லி ஊக்கமளிப்பது போலத் தொடையைத் தட்டிக் காண்பித்தான். தம்பி தட்டிக்காட்டிய குறிப்பைக் கொண்டு தன் கதையைக் கொண்டு துரியனின் தொடைச் சதையை அடித்து அவன் வாழ்க்கைக் கதையை முடித் தான். அவன் துடித்து விழுந்து அலறினான். அந்த நிலை யிலும் முகுந்தனாகிய கண்ணனை நோக்கிக் கடிந்து பேசினான்: வீரம் இழந்து சூழ்ச்சியால் தன்னைத் தாக்கி யதாகக் குறை கூறினான்.

தனித்துப்போர் செய்ய வேண்டிய அவன் தம்பியின் சைகையைக் குறிப்பால் உணர்ந்து செயல்பட்டது விதியை மீறியதாகும் என்றான். அடித்து நொறுக்கப் பட்ட அவன் பேசிய கிறுக்கு மொழிகளைக் கேட்டுக் கொண்டிருக்க வீமன் விரும்பவில்லை. செருக்களத்தில் உருக்குலைந்திருந்த அவன் மணிமுடியைக் காலால் இடறி மிதித்து அப்புறப்படுத்தினான். மன்னவனின் மாமுடி சிதறியது; முடியாட்சியை எதிர்த்துச் செய்த முதல் புரட்சியாக அது அமைந்தது. பலராமனின் செல்லப்பிள்ளை துரியன் ஆதலால் அவன் நெஞ்சு கசிந்து உதிரம் பெருக்கியது. பலராமன் கதாயுதப் போரை இருவருக்கும் கற்றுக் கொடுத்தவன்; விதிகளை மீறித் துரியனைத் தாக்கியது தவறு என்று தான் கலப்பை ஏந்திக் கலகம் விளைவிக்க எண்ணினான். துளப மாலை அணிந்த கண்ணன் தடுத்து நிறுத்தித் துரியன் இதுவரை செய்த அடாத செயல்களை அடுக்கிக் கூறினான்.

பாஞ்சாலியை அவமானப் படுத்தியது மாபெரும் குற்றம்; மன்னிக்க முடியாத ஒன்று; அரச அவையில் பொருளியல் பேசவேண்டிய அவன் சேலை உரியியல் பற்றி பேசியது எப்படிப் பொருந்தும்? இங்கே வட்டமிட்டு அமர அவர்கள் செய்யும் போர் கேளிக்கைப்போர் அன்று, வீமன் உரைத்த வஞ்சினம் உள்ளது; பகைமை பற்றி நிகழ்ந்த போரேயன்றி இது விதிகளைப் பேசி விளையாடும் வினை அன்று. அது மட்டுமன்று மைத்திரேய முனிவர் என்பவர் இவனுக்கு இட்ட சாபமும் உள்ளது.கானக வாழ்க்கையில் துரியனைச் சந்தித்துப் பாண்டவர்க்கு உரிய நாட்டையும் உரிமையையும் தரும்படி அவர் அறிவுரை கூறினார். அவன் தன் தொடைகளைத் தட்டிக்காட்டி வீரம் பேசினான். அப்பொழுது அம்முனிவர். இத் தொடைகளே உன் உயிருக்கு விடை தரும்; வீமன் தன் கதையால் உன் தொடைகள் முறிய நீ சாவாய்” என்று சாபம் தந்திருக்கிறார். விதியை மீறியதும் விதியின் செயலாகும்” என்று விளக்கிக் கூறினான். பலராமனும் இவற்றை எல்லாம் கேட்டுவிட்டுத் “தீமைகள் ஒன்று இரண்டு என்று இருந்தால் தட்டிக்கேட்க முடியும்; வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது உண்மையாயிற்று. முதல் கோணல் முற்றும் கோணலாயிற்று” என்ற சமாதானம் அடைந்தான். தன் முன்னேயே உயிர் நிலை பற்றி அவன் பேசிய பொய்யுரை நினைவுக்கு வந்தது. அது அவன்மேல் கொண்டிருந்த பரிவினை நீக்கியது.

அவன் குற்றுயிரும் குலையுயிருமாகக் குருதியில் கிடந்தான். காகங்களும் பருந்தும் வேகமாகப் பறந்து வந்து அங்கு வட்டமிட்டன. அவை வலம் வந்து சுற்றிச் சுழன்றன பத்திரிகைச் செய்தியாளர்களைப் போல.

போரில் வெற்றி பெற்றவர்கள் பாசறையில் இரவுப் பொழுது தங்கக்கூடாது என்று ஒரு நம்பிக்கை இருந்தது. அதனால் உயிருக்கு அழிவு நேரக்கூடும் என்பதால் கண்ணன் அவர்களை அன்று ஒர் இரவு பாசறையில் படுக்கவிடாமல் தன்னோடு அழைத்துக்கொண்டு அடுத்து இருந்த கானகத்தில் அவர்களை மறைத்து வைத்தான்.

அசுவத்தாமனின் அராஜகம்

அந்தணன் அசுவத்தாமன் தன் குல ஒழுக்கத்தை மறந் தான். உயிர்களிடத்து அன்பு காட்டும் செந்தண்மையைத் துறந்தான். க்ஷத்திரியனுக்கு உரிய வீரத் தன்மையையும் இழந்தான். சராசரி மனிதனினும் கீழ் நிலைக்குச் சென்று விட்டான்.

துரியனிடம் கொண்டிருந்த பற்றும் பாசமும் நன்றி யுணர்வும் அவனை நாயினும் இழிந்த செயலைச் செய்யத் தூண்டியது. நீரில் முழுகிக் கிடந்தவனை எழுப்பிக் குருதியில் முழுகவைத்த கொடுமை அவனுக்குக் குழப்பத்தை உண்டு பண்ணியது. பழிக்குப் பழிவாங்கும் பகை உணர்வு உச்ச கட்டத்தை எட்டியது; அழிவுப் பாதையில் அவனைக் கொண்டு நிறுத்தியது.

அழுவதற்கும் ஆள் இல்லாமல் அலங்கோலமாகத் கிடந்த அரவக் கொடியோனை அடைந்து அங்கலாய்த்தான்.

“கண்ணன் செய்த சூழ்ச்சியால் மன்னர் சபையில் என்னைத் தவறாக உணர்ந்து பதவி கொடுக்க மறுத்தாய். படைத் தலைமை என்னிடம் ஒரு நாள் தந்திருந்தால் பார் முழுவதும் உனக்கு அடைக்கலம் ஆகியிருக்கும். வெற்றி யைக் கொண்டு வந்து உன் காலடியில் வைத்துப் பூஜித்து இருப்பேன். இன்று அந்தப் பஞ்சைகள் ஐவரையும் அவர்கள் தலைகளை எண்ணி வந்து உன் முன் காணிக்கையாக்குவேன். விடை கொடு” என்றான்.

சாகும் போதும் சங்கரனை நினையாத அத்தீயவன் சங்காரத்தை நினைத்து மகிழ்ந்தான் அழுங்கல் சகதியில் நெளியும் புழுப்போல அவன் தீய செயல்களில் உழன்றான் சாவதற்கு முன் இவ்வெற்றிச் செய்தியைக் கொண்டு வந்து சேர்க்கும்படி அன்புக் கட்டளையிட்டான்.

அசுவத்தாமன் தனக்குத் துணையாகத் தன் மாமன் கிருபனையும், யதுகுல அரசனாகிய கிருதவர் மனையும் அழைத்தான் அவ்விருவரும் முதலில் சிறிது தயக்கம் காட்டினர். பின் முக்கூட்டுச் சதியில் தம்மைக் காட்டிக் கொண்டனர்.

இரவுப் பொழுதில் கோட்டான் வலிமை பெறுகிறது. பகலில் கூகையைக் காக்கை வெல்கிறது. இரவுப்பொழுது கூகை ஒன்றே ஆயிரம் காக்கையைத் துரத்தி அடிக்கும் ஆற்றல் பெறுகிறது. எல்லாம் கால வித்தியாசம்தான். காலமும் இடமும் கருதிச் செயல்பட்டால் ஞாலமும் கைக்கு வரும் என்ற கருத்தில் நம்பிக்கை வைத்தான்.

பாண்டவர் உறங்கும் வேளை, கரங்களில் படை தொடாத நிலை. இரவுப் பொழுதில் தான் ஒருவனே தனியாகச் சென்று அவர்களைக் கொன்றுவிட முடியும் என்று திட்டமிட்டான்.

மூவரும் பாண்டவர் தங்கும் பாசறையில் நுழைய முந்தினர்; கண்ணன் ஆணையால் அங்குக் காவல் தெய்வமாக இருந்த சதுக்க பூதம் ஒன்று அவர்களை உள்ளே விடாமல் தடுத்தது. உள்ளே செல்வதற்கு அறம் குறுக்– கிட்டது. அதனை விலக்க முயன்றான்; சிவனை அடைந்து தவம் செய்து வில் ஒன்று வரமாகப் பெற்றான். கிருபனையும் கிருதவர்மனையும் வெளியே காவல் வைத் தான். வேகமாக உள்ளே சென்றான், சிவன் தந்த வேல் கையில் இருந்ததால் பூதம் அடங்கியது. சாத்தகியும் மற்றும் சிலர் அவனை எதிர்த்துப் போராடினர். வெறி கொண்ட அவனை யாராலும் நெறிப்படுத்த முடிய வில்லை. போரில் முறியடிக்க இயலவில்லை. திட்டத் துய்மனை அவன் தீர்த்துக் கட்டினான்.

உறங்கிக்கிடந்த பஞ்ச பாண்டவரின் வாரிசுகளான இளம் பஞ்ச பாண்டவரை உருவ ஒற்றுமையால் பாண் டவர் எனவே நினைத்து அவர்கள் தலையை வெட்டி அவர்களை மாண்டவர் ஆக்கினான்.

தலைகள் ஐந்து கிடைத்ததும் தலைகால் தெரியாமல் அவற்றை எடுத்துக்கொண்டு வந்து துரியன் முன் வைத்தான்; மங்கிய ஒளியில் அவற்றின் முழு வடிவத்தைக் காண வில்லை. முதிர்ந்த முகங்களை அவனால் வேறுபடுத்தி அறியமுடியவில்லை. மீசை முளைக்காத பச்சைப் பால கர்களைத் தன் இச்சைப்படி கொச்சைப்படுத்தி விட்டான்.

துரியன் கண்டான்; கதறினான்; “வமிச வாரிசுகளைப் பறித்துவிட்டாயே” என்று கண்டித்தான். “என்னுடைய மக்களையும் இழந்தேன்; “என் சகோதரர்களின் பிள்ளை களையுமா இழக்க வேண்டும்!” என்றான். தலைகளுக்குப் பதிலாக அவற்றின் நகல்களே இருந்தன. “நிகழ்காலத்தை அழிக்கலாம்; எதிர்காலத்தை அழிக்கக் கூடாது” என்றான்.

“என்ன காரியம் செய்தாய்? இளம் குருத்துகளைப் பறித்துவிட்டாயே! குருகுலத்துக்கு உரு இல்லாமல் செய்து விட்டாயே! போர் என்பது பயங்கரமானது என்பதை இப்பொழுதான் உணர்கிறேன். வீரர்கள் மட்டும் களத்தில் மாய்வது இல்லை. பெண்கள் விதவைகள் ஆகின்றனர்; குழந்தைகள் சாகின்றனர். போரைத் துண்டுகிறவர்கள் எவ்வளவு பெரியவர்களாயினும் சரி, அவர்கள் கூறும் கொள்கை எத்தகைய தாயினும் சரி, அவர்கள் மனித குலத்தில் எதிரிகள். இது சரித்திரம் கற்றுத் தரும் பாடம்”.

“விலங்குகள் கூடத் தேவை இல்லாமல் கொல்வது இல்லை; யுத்த வெறியர்கள் இதில் சிக்கிவிட்டால் தப்ப முடிவதில்லை; அழுகைக்கே அவர்களுக்கு நேரம் இல்லாமல் தொடர்ந்து உலகை அழித்து விடுகிறார்கள்”.

“அந்தணன் நீ; உன் தர்மத்தைக் கைவிட்டாய்; அடு போர் உனக்குத் தகாது; பயிர்களிடை தோன்றும் களை களைப் பறிக்கலாமே தவிரப் பயிர்களையே அழிக்கக் கூடாது; வேதம்படி; வேதபாடசாலை நடத்து; பஞ்சாங்கம் பார். கோயில் பூசை செய்; தவம் செய்; பாவத்தைப் போக்கிக்கொள்; சாதிபேதம் காட்டக்கூடாது என்ப தற்காக உன்னையும் உன் தந்தையையும் போர்க் குலத் துக்கு உயர்த்தினேன். ஆனால் நீவிர் அரச குலத்தையே ஆணிவேரோடு களைந்து விட்டீர்; என் கண் முன் நிற்காதே; எங்காவது போய்த் தொலை” என்று கடிந்து கொண்டான். அறத்தின் வேலியாக இருக்க வேண்டிய சான்றோர்களே தவறு செய்தால் பின் யார் தான் தவறு செய்ய மாட்டார்கள்?

“இளைஞர்கள் நீங்கள் உங்களை தம்பித்தான் சமுதாயமே வாழ்கிறது; அவசரப்படுகிறீர்கள், அநீதி நடந்தால் அதை எதிர்க்கிறீர்கள் நியாயம், தான்; அதற்காகச் சட்டத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது"

“பதவியில் இருக்கிறவர்கள் நாங்கள் தவறு செய்கிறோம். பயங்கரவாதம் அதற்கு மருந்து அல்ல; நீங்களும் நாங்கள் செய்த தவறுகளையே செய்கிறீர்கள். பாரத நாடு உங்களைப் போன்ற பயங்கரவாதிகள் கையில் போகக் கூடாது” என்று கூறினான்.

தன் தந்தை தாய் இவர்களின் நினைவுகள் வந்து நின்றன. தன் மனம்போன போக்கெல்லாம் வாழவிட்டுத் தடுக்காத அந்த மூடரைப்பற்றி எண்ணி வருந்தினான். “கண்கள் இழக்கலாம்; ஆனால் நல்ல அறிவை இழந்திருக்கக் கூடாது” என்று கூறி வருந்தினான்.

“அநீதிகள் எங்களோடு அழியட்டும்” என்று கூறி அவன் கடைசி மூச்சு விட்டான்.

பாண்டவர்களை அந்நியமாகக் கருதாமல் அவர்களைத் தம் சொந்த மக்களாக நினைத்து வாழும்படி தன் பெற்றோர்களை அனுப்பினான். அதுவே அவன் விடுத்த கடைசி செய்தியாக இருந்தது.

மைந்தர்களை இழந்த பாண்டவர் திக்கற்றவராகத் திகைத்து வருந்தினார்கள். அக்கணமே சென்று அசுவத் தாமனை அழித்து ஒழிப்பதாகச் சீறிச் சினந்தார்கள். அச்சுதன் ஆகிய அமலன் அவர்களைத் தடுத்தான்.

“அசுவத்தாமன் தவறு உணர்ந்து திருந்தி விட்டான் . சிவனை நினைத்துக் கொண்டு தவவழிக்குச் சென்று விட்டான். தவறு அவனுடையது. அன்று; விளைந்த போரின் விளைவு; அதருமங்களின் பூதாகாரம்”

நாம் எப்படியும் போரில் வெல்வோம் என்று ஆண வத்தோடு செயல்பட்டோம். சூழ்ச்சிகள் செய்தோம். வீழ்ச்சிகள் அடைந்தோம்; எந்தஒரு செயலுக்கும் எதிர்ஒலி உண்டாகித் தான் தீரும்” என்று கூறி அவர்களை எஞ்சி யிருக்கும் திருதராட்டிரனிடம் அழைத்துச் சென்றான்.

வீமனைப் போன்ற தூண் ஒன்று துரியன் செய்து வைத்திருந்தான். அந்தத் துணை அவ்விழியில்லாதவன் முன் கண்ணன் நிறுத்தினான்.

‘வீமனைக் காணவேண்டும்’ என்றான்.

அந்தத் துணை அவன் முன்னால் நகர்த்தினான்; இரும்புத் தூண் என்றாலும் திருதராட்டிரன் தழுவலில் அது துரும்பாக உலுத்துவிட்டது. பொடிபட்டது; அதிலே இருந்து விடுபட்ட திருதராட்டிரன் தன் செய்கைக்கு வெட்கப்பட்டான். தீமையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விட்டது. பாசம் அவனை நாசவழிக்குக் கொண்டு சென்றது.

ஆவேசத்தில் தவறு செய்ய நினைத்ததற்கு வருந்தினான். காந்தாரியையும் திருதராட்டிரனையும் தருமன் வணங்கினான்.

“அரசினை ஏற்று மக்களின் துன்பச்சுமையைக் குறைக்க வேண்டும். அது உன் கடமை” என்று கூறித் தருமனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டுக் கண்ணன் தன் தம்பி சாத்தகியையும் தமையன் பலராமனையும் அழைத்துக் கொண்டு துவாரகை போக முற்பட்டான்.

மக்கள் ஐவரை இழந்த பாஞ்சாலி அசுவத்தாமனைத் தக்கபடி பழி வாங்கச் சூள் உரைத்தாள். மிக்க வலிவு உடைய வீமன் அவனைத் தாக்க விரைந்தான். அவனுக்குப் பக்கத் துணையாக அருச்சுனனும் கண்ணனும் பின் தொடர்ந்தனர்.

அசுவத்தாமன் வியாசரின் பின்னர் சென்றுமறைந்து இருந்தான்; மூவரைக் கண்டு அச்சம் கொண்டு அவசரப்பட்டுத் தருப்பைப் புல் ஒன்றைக் கிள்ளி அதனை பிரம்ம அத்திரமாக மாற்றி அவர்களை நோக்கி ஏவினான். கண்ணன் கட்டளையை ஏற்று அருச்சுனன் அவ்வம் பினைத் தன் அத்திரம் கொண்டு தாக்கினான். அதுவும் பிரம்ம அத்திரமாக இருந்தது. இரண்டும் மோதிக்கொண்டால் உலகம் அழியும் என்பதால் நாரதனும் வியாசனும் அவற்றைத் தவிர்க்குமாறு வேண்டினர். திரும்பப் பெறும் ஞானம் அசுவத்தாமன் கற்றிலன். ஆகையால் அவன் செயலற்றவன் ஆகிவிட்டான், அருச்சுனன் மட்டும் திரும்பப் பெற்றுக் கொண்டான். அசுவத்தாமன் விட்ட அம்பு பாண்டவரின் வமிச வாரிசுகளைக் கருவோடு அழித்தது. அபிமன்யுவின் மனைவி உத்தரை வயிற்றில் உதயமாகிக் கொண்டிருந்த கருவை மட்டும் கண்ணன் காப்பாற்றி விட்டான். அவனே பரீட்சித்து மன்னன் என்ற பெயரில் வாரிசாக வரமுடிந்தது.

அவன் தான் செய்த தவறுக்கு ஈடாகத் தன் சிரசில் இருந்த மணியை அறுத்து எறிந்தான். கன்னனுக்குக் கவச குண்டலங்களைப்போல அது அவனுக்குத் தற்காப்பு அளித்தது. அதை இழந்தபின் மணி இழந்த நாகம் ஆனான். அம் மணியைத் திரெளபதியின் கையில் சேர்த்தனர். அவள் ஒருவாறு சினம் அடங்கினாள். அசுவத்தாமன் சமுதா யத்தில் அனைவராலும் ஒதுக்கப்பட்டுப் பித்தம் பிடித் தவன்போல் அலைந்து அழிந்தான். கல்லெறிப்பட்டுக் கல்லறையை அடைந்தான்.

தருமன் தம்பியரின் துணையோடு பதினைந்து ஆண்டுகள் ஆட்சியை மேற்கொண்டான். அவன் பரா மரிப்பில் திருதராட்டிரனும் காந்தாரியும் ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். திருதராட்டிரன் தன் வாழ்வில் வெறுப்புற்றுக் காட்டுக்குச் சென்று தவ வாழ்க்கை மேற்கொள்ள விரும்பினான். அவனுக்குத் துணையாகக் காந்தாரியும் சென்றாள். கண் பார்வை மறுத்துவிட்ட இருவருக்கும் துணையாகக் குந்தியும் உடன் சென்றாள். சஞ்சய முனிவரும் அவர்களோடு சென்றிருந்தார். அங்கே சிலகாலம் தங்கி இருந்தார்கள்.

காட்டில் ஒரு நெருப்புப் பற்றிக் கொண்டு இவர்களைச் சூழ்ந்து கொண்டது. அதிலிருந்து தப்பித்து வாழ திருதராட்டிரன் விரும்பவில்லை. மூவரும் தீயினுக்கு இரை யாயினர்; சஞ்சயன் மட்டும் சாக விரும்பவில்லை, அவர்கள் இறுதி வாழ்வுவரை துணையாக இருந்து பின் இமயமலைச் சாரல் சென்று தவம் செய்யத் தொடங்கினான்.

துவாரகையில் கண்ணன் முப்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். யாதவ குலத்துப் படைத் தலைவர் களுக்குள் கட்சிகள் ஏற்பட்டன. துரியனைச் சார்ந்தவரும் பாண்டவரைச் சார்ந்தவரும் என இரு கட்சியினர் கிளைத் தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அழிவைத் தேடிக் கொண்டனர்.

பலராமன் இவற்றையெல்லாம் கண்டு மனம் நொந்து யோக நிலையில் மனத்தைச் செலுத்திப் பின் உயிர் விட்டான், கண்ணன் நெருங்கியவரை எல்லாம் இழந்து பின் கால் போன போக்கில் நடந்து கடற்கரையை அடைந் தான். தானும் உயிர் வாழ்தல் தேவையில்லை என்று முடிவுக்கு வந்தவனாய்த் தரையில் படுத்தான்; உறக்கம் அவனை அனைத்துக் கொண்டது. அவ்வழியே வந்த வேடுவன் ஒருவன் அவன் கால்களை மான் குளம்புகள் என நினைத்து அம்புவிட்டு அவன் உயிரை மாய்த்தான். சாவு என்பது மேலோன் கீழோன் என்ற பேதம் காட்டாமல் சம நீதியோடு இயங்கியது.

துவாரகையில் யாதவர்கள் தம்மைத் தாம் தாக்கிக் கொண்டு அழிந்த செய்தியும், கண்ணன் மறைந்த செய்தியம் அறிந்து பாண்டவர்களும் திரெளபதியும் வாழ்க்கையில் வெறுப்புற்றுத் தவவாழ்க்கையில் நாட்டம் செலுத்தினர். தம் பேரப்பிள்ளையாகிய பரீட்சித்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு இமயமலை நோக்கிச் சென்றனர்.

வழிப்பயணத்தில் ஒருவர் பின் ஒருவராக உயிர் நீத்து உலக வாழ்க்கையினின்று விடுதலை பெற்றனர் இறுதியில் தருமனும் துறக்க உலகம் சேர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மாபாரதம்/அவல_முடிவுகள்&oldid=1063085" இலிருந்து மீள்விக்கப்பட்டது