திரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்/திரைக்கவித் திலகம்

விக்கிமூலம் இலிருந்து

திரைக்கவித் திலகம்

கவிஞர் மருதகாசி

திரை இசைப் பாடல்களைத்

திவ்யப் பிரபந்தமாய் வழங்கியவர்!

அமுதப் பிரவாகமாய் என் இதயத்தில்

அலைமோதிய அவரது பாடல்களை

இன்றும் நான் நினைவு கூர்கிறேன்.

"நீலவண்ணக் கண்ணா வாடா"-இந்தப் பாடல்தான் அந்த நாளில் என் இதயத்தைத் தாலாட்டியது.

"சமரசம் உலாவும் இடமே" - இந்தப் பாடல்தான் அந்த நாளில் எனக்கு வாழ்வின் தத்துவத்தை அறிமுகப் படுத்தியது.

"நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே" - இந்தப் பாடல்தான் அந்த நாளில் என் நெஞ்சத்தை உருக வைத்தது.

நான் ரசித்த திரையிசைப் பாடல்கள் இப்படிப் பலநூறு பாடல்கள் ஆகும்.

அப்பொழுதெல்லாம் இந்தப் பாடல்களைப் படைத்த பாடலாசிரியர் யார் என்று பெயர் கேட்டுத் தெரிந்து கொண்டதில்லை.

ஒரு சந்தர்ப்பத்தில் நான் மிகவும் ரசித்த பாடல்கள் பலவற்றைப் படைத்த பிரம்மா மருதகாசி அவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்ட பொழுது, என்னிடம் பச்சையப்பன் கல்லூரியில் ஆராய்ச்சி செய்ய வந்த செல்வி இரா. வைஜயந்தியிடம், கவிஞர் மருதகாசி அவர்களின் திரையிசைப் பாடல்களைத் திரட்டி ஆய்வு செய்யுமாறு, வழிகாட்டினேன். அந்த ஆய்வும் வெற்றி பெற்றது. தமிழுலகம் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி "குருவிக் கரம்பை சண்முகம் தன் பள்ளிப் பருவத்தில் எவருடைய திரையிசைப் பாடல்களை அதிகமாக ரசித்தானோ, அவருடைய பாடல்களைத்தான்; ஆம்! கவிஞர் மருதகாசியின் பாடல்களைத்தான் பிற்காலத்தில் தனது மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்ய வைத்தான்!” என்பதுதான்.

கவிஞர் மருதகாசி திரையிசைப்பாடல் உலகின் கம்பர். வயல்களையும் பேச வைத்தவர்.
ஏர்களையும் பாட வைத்தவர்.

"வாராய்! நீ வாராய்!" என இசையுலகை நோக்கி நம்மை அழைத்தவர்! தென்றல் காற்றில் நம்மையும் நம் செவிகளையும் உலவ வைத்தவர். "திரைக் கவித்திலகம்" கவிஞர் அ.மருதகாசி இந்நூலைப் புரட்டியபொழுது,

"வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே" என்ற பாடலை முணுமுணுத்தவாறே எங்கள் ஊர் ஆற்றங்கரையின் வழியே நான் நடந்துபோன நாட்கள் ஞாபகம் வருகின்றன.

கடந்த காலத்தில் நான் கேட்டு மகிழ்ந்து வளர்ந்த பாடல்கள், இதோ இப்பொழுது, இங்கே ஒரு தொகுப்பாக வந்திருப்பதைக் காணும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த மகிழ்ச்சியை ஒவ்வொரு தமிழனும் பங்கிட்டுக் கொள்வான் என்பது உறுதி.


சென்னை. இப்படிக்கு

14-12-81. குருவிக்கரம்பை சண்முகம்